தானே தந்தானத்தானே.. தந்தானே.. தானே என்றொரு புயலை!--கவிதைத்துளிகள்
தானே புயல் என்றுதானே பெயரிட்டார்..இப்படித் தானே அழிவைக்கூட்டி வரும் என்று தானே எவரும் நினைக்காமல் இருந்து விட்டார்! வானோ வளியோ எது இணைந...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_8336.html
தானே புயல் என்றுதானே பெயரிட்டார்..இப்படித்
தானே அழிவைக்கூட்டி வரும் என்று
தானே எவரும் நினைக்காமல் இருந்து விட்டார்!
வானோ வளியோ எது இணைந்தது தெரியாத அச்சம்
தானே புயலின் வழியில் மிஞ்சியது வலிகளின் உச்சம்!
சீறிடும் காற்றில் சிதைந்தன வீடுகள்!
வீறிடும் காற்றில் விர்ரெனப்பறந்தன ஓடுகள்!
போரிட்டும் தாளாமல் வீழ்ந்தன மரங்கள்!
பீறிடும் கண்ணீர் துடைக்க மறந்தன கரங்கள்!
இடி மின்னல் பிறப்பிலே இழைந்தவள் நானென
கொடியாய்ப் பெய்யும் மழை பேயுருக்கொண்டு
அடியாய் அடித்ததில் கலங்கின நெல் முற்றிய
மடிகள் தாங்கி நின்ற அறுவடைப்பயிர்கள்!
பொங்கலை கொண்டாட போற்றி வளர்த்த நெல் பயிர்
பொங்கிய தானே புயலில் பொசுங்கிப் போயின கண்டு
போராடி நாளும் வளர்த்தவன் மார்பில் இன்று
போராட்டம்.. எப்படி இனி என் பொழப்பு என்று?
இழப்பதற்க்கு ஏதுமில்லை இனி என்றவர் நிலை காண்!
இரங்கி அனைவரும் உதவாவிட்டால் நாம் வாழ்ந்தது வீண்!
இயற்கை என் ஏட்டில் பாடம் படித்திட
இன்னும் நிறைய இருக்குதடா இரண்டுங்கெட்ட மனிதா!
என்றைக்கு நீ எனை உணர்ந்து எனைப் படித்து
நன்றாய் வாழும் வழி தெரிவாயோ
அன்றே உனக்கு அமைதியான வாழ்க்கையிருக்கு!
நின்று அது சொல்லும் பாடம் படித்தால் நமக்கு
என்று அழகான உலகமிருக்கு! நியாயம்தானே?
Thanks :vikatan
Post a Comment