மாடுகளுக்கு எந்த நேரத்தில் கருவூட்டல் செய்யலாம்?

பிறந்து 12 மாதங்கள் கடந்த கன்றுகளை, கிடாரிகள் என்று அழைக்கப்படும். வளரும் சீதோஷ்ண நிலை, இனத்தின் தன்மை, ஊட்டச்சத்து இவற்றைப் பொறுத்து, ...

பிறந்து 12 மாதங்கள் கடந்த கன்றுகளை, கிடாரிகள் என்று அழைக்கப்படும். வளரும் சீதோஷ்ண நிலை, இனத்தின் தன்மை, ஊட்டச்சத்து இவற்றைப் பொறுத்து, கலப்பின கிடாரிகள் 8-லிருந்து 18-வது மாதத்திற்குள் பருவத்துக்கு வந்துவிட வேண்டும். இதில் நாட்டு மாட்டு கிடாரிகள் பருவத்துக்கு வருவதற்கு 24 மாதங்கள் ஆகும். இந்த மாதங்களுக்குள் பருவத்துக்கு வரவில்லையென்றால், அந்தக் கிடாரிக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

உடனே, அதற்குத் தகுந்த மருத்துவத்தை அளிக்க வேண்டும். பொதுவாக, பருவ சுழற்சி காலம் 21 நாள்களுக்கு ஒருமுறை வரும். சினை பருவத் தருணம் 18 மணிநேரத்திலிருந்து 24 மணிநேரம் வரை இருக்கும். இதில் கோடைக்காலத்தில் சினைப் பருவத்தருணம் ஏறக்குறைய 18 மணி நேரமாகவும் குளிர்காலத்தில் 24 மணி நேரமாகவும் இருக்கும். அதற்குள் இயற்கை அல்லது செயற்கை முறையில் கருவூட்டல் செய்துவிட வேண்டும்.
கிடாரியானது பருவத்துக்கு வரும்போது அதன் உடல் எடையைக் கருத்தில்கொண்டு, கருவூட்டல் செய்வது அவசியம். அதாவது, கிடாரியின் எடை தாயின் எடையிலிருந்து மூன்றில் இரண்டு பங்கு இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு மாடு 300 கிலோ எடையில் இருக்கிறது என்றால் கிடாரியின் எடை 180- லிருந்து 200 கிலோ இருக்க வேண்டும். இந்த எடை விகிதம் வரவில்லையென்றால் சினை ஊசி போடக் கூடாது.

ஏனெனில், இந்த கிடாரிகளுக்கு இடுப்பெலும்பு சரியான வளர்ச்சி பெற்றிருக்காது. கன்று போடுவதற்கு இடுப்பெலும்பு நன்றாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் கன்றுகளை எளிதாக ஈனும். எனவே, மாடுகளில் அதன் எடை அவசியமானது. என்னுடைய அனுபவத்தில் 200 மாடுகளுக்குச் சிசேரியன் செய்து கன்றுகளை எடுத்திருக்கிறேன். அவற்றில் 70 மாடுகள் இடுப்பெலும்பு வளர்ச்சி பெறாததால், கன்று ஈனுவதற்குச் சிரமப்பட்டவை. அதனால், கருவூட்டல் செய்வதற்கு முன்பு, அந்தக் கிடாரியின் எடையை அறிந்து கருவூட்டல் செய்ய வேண்டும்.
சினைப் பருவத் தருணத்தைக் கண்டறிவது எப்படி?

எருமையோ, பசுவோ சினைப் பருவத் தருணத்துக்கு வந்துவிட்டால் சில அறிகுறிகளைக் காட்டும். மாடுகளின்மீது தாவும் அல்லது மற்ற மாடுகளைத் தன்மீது தாவ அனுமதிக்கும். தீவனம் எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டாது. வாலைத் தூக்கிக்கொண்டே இருக்கும். அடிக்கடி கத்திக்கொண்டே இருக்கும். அதுவும் அடிவயிற்றிலிருந்து கத்தும். இனப்பெருக்க உறுப்பிலிருந்து கண்ணாடி போன்ற வழவழப்பான திரவ ஒழுக்கு வழியும். இதை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அழைப்பார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் ‘முடை அடிக்குது’ என்றும், விழுப்புரம் மாவட்டத்தில் ‘மாசி அடிக்குது’ என்றும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘அழுக்கு அடிக்குது’ என்றும், நாமக்கல் மாவட்டத்தில் ‘கொழ அடிக்குது’ என்றும், தஞ்சாவூர் மாவட்டத்தில் ‘வழுவு அடிக்குது’ என்றும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘மாசி ஆடுது’ என்றும் சொல்வார்கள்.

மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டவுடன் முதல் 8 மணி நேரத்தை (முன் சினைப் பருவத் தருணம்) விட்டுவிட வேண்டும். அதேபோன்று கடைசி 8 மணி (சினைப் பருவத் தருணத்தின் கடைசி நிலை) நேரத்தை விட்டுவிட வேண்டும். இடையிலுள்ள 8 மணி நேரத்தில் (மைய சினைப் பருவத் தருணம்) சினை ஊசி போட வேண்டும். இந்த இடைப்பட்ட 8 மணிநேரத்தில்தான் கருப்பையில் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். அந்த நேரத்தில் விந்தணுக்கள் உள்ளே நுழையும்போது, அதனோடு பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமிகள் கருப்பைக்குள் நுழைய வாய்ப்புள்ளது. இந்த நோய்க்கிருமிகளின் தாக்குதலை இது தடுத்துவிடும்.

இந்த நேரத்தைக் கடந்து கருவூட்டல் செய்யும்போது நோய்க்கிருமிகள் தாக்க வாய்ப்புள்ளது. கருவூட்டலை எப்போது செய்ய வேண்டும் என்பதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பருவ அறிகுறிகள் காலையில் தென்பட்டால் மாலையிலும் மாலையில் தென்பட்டால் காலையிலும் கருவூட்டல் செய்ய வேண்டும்.

அதேபோன்று முதல் 8 மணி நேரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற சந்தேகம் வரலாம். இனப்பெருக்க உறுப்பிலிருந்து வழியும் திரவ ஒழுக்கு நீர் போன்று தரையில் விழுந்து, ஓடக்கூடியதாக இருந்தால் அது முதல் 8 மணி நேரத்தில் இருக்கிறது என்று அர்த்தம். அதேபோல் சளி போன்ற கட்டியான திரவ ஒழுக்கு இருந்தால் அது சினைப் பருவத் தருணத்தின் கடைசி நிலை. இனப்பெருக்க உறுப்பின் வெளிப்புறத்திலிருந்து தரையை நோக்கி நூல் போன்று தொங்கிக் கொண்டிருக்கும். அதுதான் மைய சினைப் பருவத் தருணம்.

இதை இன்னொரு முறையிலும் கண்டறியலாம். வெல்லப்பாகைத் தொட்டுப் பார்ப்பதுபோல், பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கிடையே இரண்டு சொட்டு ஒழுக்குத் திரவத்தை வைத்து, பிறகு விரல்களைப் பிரித்தால், திரவமானது நெகிழ்வுத் தன்மையுடன் (விரல்களை ஒட்டிக்கொண்டே 10-லிருந்து 20 சென்டிமீட்டர் நீளத்துக்கு நூல்போல் இருக்கும்) இருந்தால், அது மைய சினைப் பருவத் தருணம் என்று அறிந்துகொள்ளலாம்.
மாடுகளைக் கருவூட்டல் செய்யுமிடத்துக்கு அழைத்துப் போகும்போது வெயில் நேரத்திலோ, அடித்தோ, உதைத்தோ அழைத்துச் செல்லக் கூடாது. அங்கே சென்றவுடன் அவசரகதியில் கருவூட்டல் செய்யக் கூடாது. ஏனென்றால், மாடுகள் தூரத்திலிருந்து வந்திருக்கும். வந்த இடத்தில் பயம், மிரட்சி இருக்கும். அப்போது ‘அட்ரினலின்’ என்ற ஹார்மோன் சுரந்து கருப்பைக்குச் செல்கிற ரத்தக் குழாய்களை (நாளங்கள்) சுருங்கச் செய்துவிடுவதால், மூளையிலிருந்து சுரக்கும் ஆக்கிடோசின் கருப்பைக்குச் சென்று சேராது. இதனால், கருப்பையின் சுருங்கி விரியும் தன்மை பாதிக்கப்பட்டு, உள்ளே செலுத்தும் விந்தணுக்களானது கருக்குழலுக்குச் செல்வதில் பாதிப்பு ஏற்படும். இதனால், கரு பிடிக்காமல் போய்விடுவதற்கு வாய்ப்புண்டு. அதனால், அரைமணிநேரம் கழித்தே கருவூட்டல் செய்ய வேண்டும். கருவூட்டல் செய்த பிறகு, உடனே மாடுகளை அழைத்துச் செல்லக் கூடாது, 15 நிமிடங்கள் ஓய்வு கொடுத்த பிறகே அழைத்துச் செல்ல வேண்டும்.

முன்பெல்லாம் மாடுகளுக்குக் கருவூட்டல் செய்யும்போது, மாடுகளுடைய கருப்பையின் வெளிப்புறத்தில் விந்தானது சேகரிக்கப்படும். இதனால், விந்து வெளியேறுவதற்கு வாய்ப்பிருந்தது. அதனால், மாடுகளை உடனே படுக்கவிடாமல், கயிற்றைத் தூக்கிக் கட்டிவிடுவார்கள் விவசாயிகள். தீவனம், தண்ணீர் கொடுக்கமாட்டார்கள். அந்த நேரத்தில் அது சரியாக இருந்தது. தற்போது கருப்பையின் மையப்பகுதியிலேயே விந்தணுக்கள் கொண்டுசென்று செலுத்தப்படுகிறது. அதனால், பழைய முறைகளைக் கையாளத் தேவையில்லை. மாடுகளை வழக்கம்போல் விட்டுவிடலாம். வெயில் நேரமாக இருந்தால், குளிர்ந்த நீரை மாட்டின்மீது தெளித்துவிட்டால் போதும்.

இதை முறையாகக் கடைப்பிடித்து, கருவூட்டல் செய்தால், மாடுகள் எளிதில் சினைக்கு வந்துவிடும். உலக அளவில் செயற்கை முறை கருவூட்டல் செய்வதன்மூலம் 40%தான் சினைப்பிடிக்கின்றது. அதை 80% வரை உயர்த்த வேண்டும். அதற்கு மேற்கண்ட முறைகளைச் சரியாகக் கையாண்டால் சினைப்பிடிக்கும் விகிதத்தை அதிகரிக்கலாம்.

- கறக்கும்

தீவன மேலாண்மைக்கு மொபைல் செயலி...

மொபைல் செயலி குறித்துக் கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்குநர் ரமேஷ் சரவணகுமார் பேசியபோது, “மாடு வளர்ப்பில் தீவன மேலாண்மை முக்கியமானது. அதிக தீவனமும் கொடுக்கக் கூடாது. அதேசமயம் குறைந்தளவும் கொடுக்கக் கூடாது. எவ்வளவு எடையுள்ள மாடுகளுக்கு, எவ்வளவு தீவனம் கொடுக்க வேண்டும். அதேபோன்று எத்தனை லிட்டர் பால்கொடுக்கும் மாடுகளுக்கு, எவ்வளவு தீவனம் கொடுப்பது என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம். பாரம்பர்யமாக மாடு வளர்ப்போருக்கு, எப்போது, எவ்வளவு தீவனம் கொடுக்க வேண்டும் என்பது தெரியும்.
ஆனால், புதிதாக மாடு வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு வசதியாகத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் ‘ஃபீட் கால்குலேட்டர்’ (Feed Calculator) என்ற பெயரில் மொபைல் செயலியை வெளியிட்டுள்ளது. இதில் எவ்வளவு எடையுள்ள மாட்டுக்கு எவ்வளவு தீவனம் கொடுக்கலாம், எத்தனை லிட்டர் பால் கறக்கும் மாட்டுக்கு எவ்வளவு தீவனம் வழங்கலாம் என்ற விவரங்கள் இருக்கும்.

அதேசமயம் கலப்புத் தீவனங்கள் தயாரிப்பதற்கான முறைகளும் இதில் விளக்கப்பட்டுள்ளன. கூகுள் பிளே ஸ்டோருக்குச் சென்று, அங்கே ‘டனுவாஸ் ஃபீட் கால்குலேட்டர்’ (TANUVAS-Feed Calculator) என்று ஆங்கிலத்தில் டைப் செய்தால், இந்தச் செயலி காட்டும். அதை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். இதை இணைய வசதி இல்லாத நேரத்திலும் (ஆஃப்லைனில்) பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.”

மாடுகளின் எடை

1. ஜெர்சி கலப்பின மாடு, 350-450 கிலோ வரை.
2. ஹோல்ஸ்டின் பிரீஷியன் (எச்.எஃப்), 450-550 கிலோ வரை.
3. சிவப்பு சிந்தி, 300-350 கிலோ வரை
4. சாஹிவால், 300-400 கிலோ வரை.
5. தார்பார்க்கர், 400-450 கிலோ வரை.
6. காங்கேயம், 350-450 கிலோ வரை.


வெச்சூர், கொல்லிமலை போன்ற உயரம் குறைவான சிறிய வகை மாடுகள்,

130-150 கிலோ வரை.

இதில் தாயின் எடையில் கிடாரிகள் 60 சதவிகிதம் இருந்தால், அந்தக் கிடாரிகளுக்குத் தாராளமாகக் கருவூட்டல் செய்யலாம்.

Related

கால்நடை வளர்ப்பு 5532908614658843250

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Sunday - Mar 30, 2025 6:14:38 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item