தேவை பம்பாய் ரவை - அரை கிலோ அரிசி மாவு - 100 கிராம் மைதா மாவு - 2 மே.க. பச்சை மிளகாய் - 10 அல்லது தேவைப்படி கறிவேப்பிலை - 5, 6 ஆர்க்குகள் க...

தேவை
பம்பாய் ரவை - அரை கிலோ
அரிசி மாவு - 100 கிராம்
மைதா மாவு - 2 மே.க.
பச்சை மிளகாய் - 10 அல்லது தேவைப்படி
கறிவேப்பிலை - 5, 6 ஆர்க்குகள்
கொத்துமல்லித் தழை - இரண்டு கைப்பிடிகள்
வெங்காயம் - கால் கிலோ அல்லது மேலும்
உப்பு - 2 தே.க. அல்லது தேவைப்படி
தோசை வார்க்க எண்ணெய் - தேவைப்படி
நெய் - 1 மே.க.
சீரகம் - 2 தே.க.
இஞ்சி - தோல்சீவி அரிந்தது - 2 மே.க.
கடுகு - அரைத் தேக்கரண்டி
பெருங்கயப் பொடி - 1 தே.க.
ரவை, அரிசி மாவு, மைதா மாவு ஆகியவற்றைத் தோசை மாவு நெகிழ்வுக்கு நீர்க்கக் கரைத்து உப்புப் போட்டு வைக்கவும்.
காரம் வேண்டுபவர்கள் பச்சை மிளகாயை அப்படியே அரிந்து அதில் போடலாம். காரத்தைக் குறைக்க விரும்புபவர்கள் பச்சை மிளகாயைக் கடுகின் தாளிப்பில் சேர்த்துக் கறிவேப்பிலையுடன் வதக்கி மாவில் கொட்டவும். இத்தாளிப்பில் சீரகத்தையும் சேர்த்துக் கொள்ளவும். பிறகு, தோல் சீவிப் பொடிப் பொடியாக அரிந்த இஞ்சி, கொத்துமல்லித் தழை, பொடிப்பொடியாக அரிந்த வெங்காயம், உப்பு, பெருங்காயம், உருக்கிய நெய், ஆகியவற்றையும் மாவுடன் கலந்து குறைந்தது ஆறு மணி நேரமாவது அப்படியே வைக்கவும்.
கரைத்த மாவு தோசைமாவின் நெகிழ்வுக்கும் சற்றுக் குறைவாகவே - அதாவது அதிகமாய் நீர்த்து - இருப்பது நல்லது.
அப்போதுதான் தோசை மெல்லியதாக வார்க்க வரும், சுவையும் கூடும். மொத்தையான ரவா தோசை சுவாயாக இருக்காது.
ரவாதோசையைத் திருப்பிப் போட்டு வேகவிட வேண்டியதில்லை. எனினும் பின் புறமும் சிலர் வேகவைப்பார்கள். அவரவர்விருப்பம்.
ரவா தோசையின் மாவு தோசைக்கல்லில் ஊற்றி இழுத்து வார்க்க வராது. கல்லின் ஓரத்திலிருந்து ஊற்றிக்கொண்டே அதன் மையத்துக்கு வரவேண்டும். எனவே, மாவு நீர்க்க இருக்க வேண்டியது அவசியம். ரவா தோசையை வார்க்கும் போது ஒவ்வொரு முறையும் மாவை அதன் அடி வரையில் கலக்கிய பிறகு வார்க்க வேண்டும். ஏனெனில், ரவை மொத்தையாக ஏனத்தின் அடியில் தங்கும். அரிசிமாவும், மைதாமாவும் மேலே மிதக்கும்.
வெங்காயம் சேர்க்காமலும் ரவா தோசை செய்யலாம். இது அதிக முறுமுறுப்பாக இருக்கும்.
Post a Comment