டாங்கர் மாவு பச்சடி டாங்கர் மாவு என்றால் உளுத்த மாவுதான். ஏனோ இந்தப் பேரையே எங்கள் வீட்டில் சொல்லி வந்ததால் இப்படியே அழைத்தால்தான் தெ...
டாங்கர் மாவு என்றால் உளுத்த மாவுதான். ஏனோ இந்தப் பேரையே எங்கள் வீட்டில் சொல்லி வந்ததால் இப்படியே அழைத்தால்தான் தெரிகிறது.
வத்தக் குழம்பு, மிளகு குழம்பு, மிளகு ரசம், பொடி சாதங்கள் என்று எல்லாவற்றிற்கும் சுவை கூட்டும்.
தோல் நீக்கிய முழு உளுந்து - 100 கிராம்
புது தயிர் - ஒரு தம்ப்ளர் அளவு (200 மில்லி தோராயமாக)
ஜீரகம் - ஒரு டீஸ்பூன்
பொடி உப்பு - ஒரு டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன்
உடைத்த உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
நீள வரமிளகாய் - 2
பெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை அளவு
கருவேப்பிலை - ஒரு ஆர்க்கு
உளுந்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். நன்றாக ஆறின பிறகு மிக்சியில் நைசாக பொடித்துக் கொள்ளவும்.
பச்சையாகவே ஜீரகத்தை உள்ளங்கையில் வைத்து கொஞ்சம் நசுக்கி தேய்ப்பது போல செய்து விட்டு, தயிரில் போடவும்.
ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம் மாவை, ஒரு டேபிள் ஸ்பூன் பச்சை தண்ணீர் விட்டு, கட்டியில்லாமல் நன்றாக பிசறிக் கொண்டு, உதிர்த்து தயிரில் போட்டு வையுங்கள்.
[பொடியாகவே போட்டு கலக்கும் போது சிதறி விடுகிறது என்பதால் இப்படி செய்வது கலப்பதற்கு எளிதாக இருக்கு]
இந்தத் தயிரில் உப்பு போட்டு, fork-கால் நன்றாக கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும். மத்தால் கடைய வேண்டாம்.
[ஏனென்று தெரியவில்லை, ஆனால் எனக்கு எப்போதும் இந்த பச்சடி forkக்கால் கலந்து செய்யும் போது நன்றாக இருக்கிறா மாதிரியும், மத்தால் தயிரைக் கடைந்து விட்டால் வேறு சுவையிலும் இருக்கு. :)... ]
இந்தத் தயிரில் பெருங்காயப் பொடியை போட்டுவிட்டு, கலக்காமல் பெருங்காயத்தின் மேல், தாளித்துக் கொட்டுங்கள். (கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் பின் பொரித்த கருவேப்பிலை என)
மீண்டும் ஒரு முறை லேசாக fork-க்கால் கலந்து விடுங்கள்.
Post a Comment