கருணைக் கிழங்கு மசியல் 4 பேருக்கான அளவு கருணைக் கிழங்கு – 1/4 கிலோ / உள்ளங்கைப்பிடி கையகலம் இருக்கும் மூன்று நான்கு கிழங்குகள் புதுப...
4 பேருக்கான அளவு
கருணைக் கிழங்கு – 1/4 கிலோ / உள்ளங்கைப்பிடி கையகலம் இருக்கும் மூன்று நான்கு கிழங்குகள்
புதுப்புளி – சிறிய எலுமிச்சை அளவு - 100 ml தண்ணீரில் நன்றாக கரைத்து வடிகட்டி புளிஜலமாக்கி வைத்துக் கொள்ளவும்.
நீள வரமிளகாய் - 5-6 வறுத்தது
வெந்தயம் – 1/2 டீஸ்பூன் வறுத்தது
ஜீரகம் – 1 டீஸ்பூன் வறுத்தது
இஞ்சி – சிறு துண்டு - தோல் நீக்கித் துருவிக் கொள்ளவும் (வதக்க வேண்டாம்)
சின்ன வெங்காயம் - 10-15 வரை - வதக்கிக் கொள்ளவும்
கல் உப்பு – ஒரு டீஸ்பூன் கும்பாச்சியாக (Heap)
கறிவேப்பிலை
பச்சை கொத்தமல்லி
தாளிக்க:
நல்லெண்ணெய் – ஒரு பால் கரண்டி
கடுகு
செய்முறை:
கிழங்கை மண் போக நன்றாக அலம்பி, பீலரால் (peeler) தோல் சீவிக் கொண்டு, குக்கர் பத்திரத்தில் கழுநீர் விட்டு, கிழங்கைப் போட்டு மூன்று விசில் வரை விட்டு, வேகவைத்துக் கொள்ளவும். வெந்த கிழங்கை நன்றாக ஆறவைத்து கையால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
புளியை நீர்க்கக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
வறுத்த வெந்தயம், வரமிளகாய், ஜீரகம் எல்லாவற்றையும், கல் உப்போடு சேர்த்து பொடித்துக் கொண்டு, பின் வதக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து துருவியது போல, whipper-mode-டில் போட்டு அரைத்துக் கொள்ளவும். கரைத்த புளிஜலத்தாலேயே மிக்சியை அலம்பி ஊற்றிக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து, மசித்த கிழங்கு, அரைத்த விழுது, சேர்த்து புளிக்காய்ச்சலுக்கு எண்ணெய் கசிய கொதிக்க விடுவது போல கொதிக்க விடவும். ஆறினதும் தொகையல் பதத்துக்கு இறுகிக் கொள்ளும்.
பழைய கிழங்காக இருந்தால் மேல்தோலை சுரண்டினால் உள்ளே வெள்ளையாக இருக்கும். இதுதான் தொண்டையை அரிக்காது. மேல்தோலை நகத்தால் சுரண்டிப் பார்த்து சிவப்பாக இருந்தால் கிழங்கு புதியது என்று கண்டுபிடிக்கலாம். காரமல் அரிக்காமல் இருக்க கருணைக்கிழங்கை கழுநீரில் (அரிசி களைந்த தண்ணீர்) வேகவைக்க வேண்டும்.
Post a Comment