'மலிவு விலையில் மாரடைப்புக்கு மருந்து!
'மலிவு விலையில் மாரடைப்புக்கு மருந்து! உ லக அளவில், மனித உயிர் குடிக்கும் அபாயகரமான நோய்களில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது '...
உலக அளவில், மனித உயிர் குடிக்கும் அபாயகரமான நோய்களில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது 'மாரடைப்பு!’ -இது பழைய செய்தி என்றாலும், 'இந்தியாவில், மாரடைப்பைத் தடுக்கும் மலிவு விலை மருந்துகளை ஏழைகள்கூட வாங்குவது இல்லை!’ என்ற பேரதிர்ச்சி செய்தியை வாசிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று! இந்தியாவில், யாரும் மாரடைப்புக்கு மருந்து சாப்பிடுவது இல்லையா? அல்லது மலிவு விலை மருந்து கிடைப்பதே மருத்துவர்களுக்குத் தெரியவில்லையா? தெரிந்தாலும் நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கவில்லையா? என பல கேள்விகளைக் கிளப்பியிருக்கிறது இந்த ஆய்வு.
நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றவர்களைக் காட்டிலும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு விகிதம் அதிகம். எனவே, 'ஒருவருக்கு நீரிழிவு இருப்பது உறுதியானால், அவருக்கு மாரடைப்பு வருவதைத் தடுப்பதற்கான சிகிச்சையையும் சேர்த்தே அளிக்க வேண்டும்’ என்கிறது அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன்! இதுகுறித்து 'நீரிழிவு மருத்துவ நிபுணர்’ டாக்டர் கருணாநிதியிடம் பேசினோம். ''இந்த ஆய்வின் முடிவு நூற்றுக்கு நூறு சரி! ஆனால், நம்மூரைப் பொறுத்தவரை எந்த நோய் வந்தாலும் முதலில், கை மருந்து, அடுத்ததாக மெடிக்கல் ஷாப் என 'தனக்கு தானே மருத்துவம்’ செய்துகொள்கிறார்கள். முடியாத பட்சத்தில்தான் சிறப்பு மருத்துவர்களை அணுகுகிறார்கள். இதுபோல், நோய் முற்றிய நிலையில் வருபவர்களுக்கு ஆரம்பக் கட்ட சிகிச்சைகள் பலனளிக்காது. அறுவை சிகிச்சை மாதிரியான உச்சகட்ட சிகிச்சை முறைகளைத்தான் செய்தாக வேண்டும். மருத்துவ விழிப்புணர்வு மக்களிடையே இருந்தால், ஆரம்பக்கட்டத்திலேயே விலை குறைந்த மருந்து களால், மாரடைப்பை சரி செய்துவிட முடியும்!'' என்று நம்பிக்கை ஊட்டியவர் தொடர்ந்து, ''பெரும்பாலும் மரபு ரீதியாகவே இந்தியர்களின் ஜீன்களில் கடத்தப்படும் இந்நோய்க்கு அதிகம் பலியாவது ஆண்கள்தான். பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனானது மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால், நீரிழிவு பாதிப்பு உள்ள பெண்களுக்கும், மெனோபாஸ் காலகட்டத்தை எட்டிய (ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு தடைபட்டு விடுவதால்) பெண்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் ஆண்களுக்கு நிகராகவே இருக்கிறது.
ஒரு குடும்பத் தலைவருக்கு மாரடைப்பு வந்தால், பின்னாளில் வாரிசுக்கும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நாற்பது வயதில், குடும்பத்தைப் பொருளாதார ரீதியாக வழி நடத்திச் செல்லும் பொறுப்பில் இருக்கும் குடும்பத் தலைவரை இந்நோய் தாக்கும்போது மனதாலும், மருத்துவச் செலவுகளாலும் ஒட்டுமொத்தக் குடும்பமே நிலைகுலைந்து போய்விடுகிறது. மாரடைப்பை சரிசெய்யக்கூடிய அறுவை சிகிச்சை செலவுகள் சாதாரண மருத்துவமனைகளிலேயே லட்சங்களில்தான் ஆரம்பிக்கிறது. எனவே, இந்நோய் பாதிப்பு உள்ள குடும்ப உறுப்பினர்கள் தங்களது முப்பது வயதில் இருந்தே வருடத்துக்கு ஒருமுறை கட்டாயமாக 'கொலஸ்ட்ரால் டெஸ்ட்’ (fasting lipid profile) எடுத்துக் கொள்ளவேண்டும். இதில், 'எல்.டி.எல். கொலஸ்ட்ரால்’ அளவுக்கு அதிகமாக இருந்தாலோ அல்லது 'ஹெச்.டி.எல். கொலஸ்ட்ரால்’ அளவு குறைவாக இருந்தாலோ உடனடியாக சிறப்பு மருத்துவரை அணுகுவது நல்லது.
Post a Comment