மனக்கட்டுப்பாடு பெற்றவர்களுக்கும் வேண்டும்--அமுத மொழிகள்
மனக்கட்டுப்பாடு பெற்றவர்களுக்கும் வேண்டும் தங்கள் குழந்தைகளை கெட்ட பழக்கங்கள் தொற்றக்கூடாது என்று கருதும் பெற்றவர்கள் தாங்களும் அந்த பழக்கத...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_8812.html
மனக்கட்டுப்பாடு பெற்றவர்களுக்கும் வேண்டும்
தங்கள் குழந்தைகளை கெட்ட பழக்கங்கள் தொற்றக்கூடாது என்று கருதும் பெற்றவர்கள் தாங்களும் அந்த பழக்கத்தை விட வேண்டும். குழந்தை நன்றாக படிக்க வேண்டும், முதல் ராங்க் வாங்க வேண்டும் என எதிர்பார்க்கும் பெற்றோர் அவர்கள் "டிவி' பார்த்தால் கண்டிக்கிறார்கள். ஆனால், அவர்களால் அப்பழக்கத்தை விட முடியவில்லை. படிக்கும் குழந்தைகள் மீது கவனம் செலுத்தாமல், அவர்களை ஒரு அறையில் போட்டு பூட்டிவிட்டு, இவர்கள் "டிவி'யே கதி என கிடக்கிறார்கள்.
நபிகள் நாயகத்திடம் ஒரு பெண்மணி தன் உறவுப்பையனை அழைத்து வந்தார்.
""ஐயா! இந்தப் பையன் அளவுக்கதிகமாக இனிப்பு சாப்பிடுகிறான். இப்படி சாப்பிட்டால் உடல்நிலை கெட்டு விடும் என புத்திமதி சொல்லுங்கள்,'' என வேண்டிக் கொண்டார். நாயகம் அப்பெண்ணிடம், ""அம்மணி! தாங்கள் இப்போது அவனை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். மூன்று நாட்கள் கழித்து வாருங்கள்,'' என்றார்.
அப்பெண்ணும் மூன்று நாள் கழித்து நாயகத்தின் இல்லத்திற்கு வந்தார். அந்தப் பையனை அருகில் அழைத்த நாயகம், ""தம்பி! இனி இனிப்பை அதிகமாக சாப்பிடாதே. உடல்நிலை கெட்டுவிடும்,'' என்றார். அந்தப் பெண்ணுக்கோ கோபம்.
""இதை நீங்கள் அன்றே அவனிடம் சொல்லியிருக்கலாமே! இன்னொரு தடவை ஏன் என்னை அலைய வைத்தீர்கள்,'' என்றார்.
நாயகம் மிகவும் சாந்தமாக, ""அம்மா! தாங்கள் கோபிப்பது சரிதான். ஆனால்,அன்று நான் அவனுக்கு புத்திமதி சொல்லும் தகுதியில்லாமல் இருந்தேன். ஏனெனில் எனக்கே இனிப்பு பண்டம் சாப்பிடும் பழக்கம் அதிகமாக இருந்தது. இந்த மூன்றுநாளாக கஷ்டப்பட்டு முயன்று இனிப்பு பண்டம் பழக்கத்தை கைவிட்டேன். என்னிடமே அந்த வழக்கம் இருந்தபோது, எனக்கு மற்றவர்க்கு அறிவுரை கூறும் தகுதியில்லாதவன் ஆகி விடுகிறேன். எனவே தான் அன்று சொல்லவில்லை,'' என்றார். அப்பெண் ஆச்சரியப்பட்டார். இனியாவது குழந்தைகளை மட்டும் ரூமில் அடைத்து விட்டு, நீங்கள் தனியாக "டிவி' பார்க்கும் வழக்கத்தை கைவிடுவீர்களா? மனக்கட்டுப்பாடை வளர்த்துக் கொள்வீர்களா?
வயதான பெற்றவர்களைக் கவனியுங்கள்
உங்கள் வீட்டில் நாய் வளர்ப்பீர்கள், அது இளமையாக இருந்த காலத்தில் உங்கள் இல்லத்தை மிக பத்திரமாக பாதுகாத்திருக்கும். அதே நாய்க்கு சற்று வயதாகியோ, கைகால் அடிபட்டோ மூலையில் முடங்கி விட்டால் அதை வெறுக்கக்கூடாது. அதை துரத்த முயலக்கூடாது. அது உங்களுக்காக ஒரு காலத்தில் உழைத்த உழைப்பை எண்ணிப் பார்க்க வேண்டும். நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கேளுங்கள். ஒருமுறை நாயகம் மதினா நகரில் உலா வந்து கொண்டிருந்த போது தோட்டம் ஒன்றைக் கடந்து சென்றார். தோட்டத்திற்குள் ஒரு வயதான ஒட்டகம் நின்றது. அதன் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. நாயகம் ஒட்டகத்தின் அருகில் சென்றார். அதை அன்புடன் தடவிக் கொடுத்தார். அதன் கண்ணீரைத் துடைத்தார். அந்த ஒட்டகம் அவரை ஏக்கப் பார்வை பார்த்தது. அதன் வயிறு ஒட்டி உலர்ந்திருந்தது. சாப்பிட்டு சில நாட்களாவது ஆகியிருக்க வேண்டும். நாயகம் அதன் நிலையைப் புரிந்து கொண்டார். அவரது தோழர்களிடம், அந்த ஒட்டகத்திற்கு சொந்தக்ககாரரை அழைத்து வரச்சொன்னார். அவர் வந்ததும், ""இந்த ஒட்டகம் உங்களுடையது தானே,'' என்றார்.
அவர் "ஆம்' என தலையசைக்க, ""அப்படியானால், இதை கவனிக்காமல் ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள்?'' என்றார்.
""இதற்குத் தான் வயதாகி விட்டதே. இதனால் இனி எப்படி உழைக்க முடியும்?'' என்றார் சொந்தக்காரர்.
""அப்படி சொல்லாதீர்கள். இதன் இளமைக்காலத்தில் உங்களுக்காக எவ்வளவோ உழைத்து செல்வத்தை ஈட்டித் தந்திருக்கிறது. அந்த நன்றியை நீங்கள் மறக்கக்கூடாது. இதை பட்டினி போட்டு கொடுமை செய்தால் உங்களுக்கு கடவுள் கடுமையான தண்டனை தருவார்,'' என்றார் நாயகம். ஒட்டக சொந்தக்காரர் பேச முடியாமல் தலை குனிந்தார். பின்னர் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டேன் என உறுதியளித்தார்.
விலங்குகளுக்கு மட்டும் நாயகம் செய்த இந்த சேவை இக்காலத்தில் மனிதர்களுக்கும் பொருந்தும். நமது பெற்றோர் இளமையாக இருந்த காலத்தில் நமக்காக கடும் உழைப்பை ஈந்தனர். அவர்களே நமக்கு உணவும், உடையும், கல்வியும் அளித்தனர். அவர்களுக்கு வயதான பிறகு பிள்ளைகள் அந்த நன்றியைச் செலுத்த வேண்டும். அவர்களை ஆறுதலாக பார்த்துக் கொண்டால், அவர்களின் நல்லாசியுடன் இறுதிவரை இனிமையாக வாழ்வோம்.
Post a Comment