இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள்! அமுத மொழிகள்
இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள்! அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப்(ரலி) நான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் சொல்லைக் கேட்டிருக்கிறேன். ""நீ...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_815.html
இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள்!
அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப்(ரலி)
நான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் சொல்லைக் கேட்டிருக்கிறேன். ""நீங்கள் அல்லாஹ்வின் மீது சரியான முறையில் நம்பிக்கை வைத்து அவனையே சார்ந்திருந்தால் அவன் உங்களுக்கு
உணவளிப்பான். குருவிகளுக்கு உணவளிப்பது போல்! அவை காலை நேரத்தில் உணவு தேடிய வண்ணம் தம் கூடுகளை விட்டுப் புறப்படுகின்றன. அப்போது அவற்றின் வயிறுகள் மெலிந்து காலியாக இருக்கின்றன. மாலையில் தம் கூடுகளுக்கு திரும்பி வரும்போது அவற்றின் வயிறுகள் நிரம்பியிருக்கின்றன.'' (திர்மிதி)
அறிவிப்பாளர்: ஸஅத்(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
""தனக்காக அல்லாஹ் நிர்ணயிப்பதை
(விதிப்படி கிடைக்கும் வாழ்வாதாரத்தை) ஏற்றுத் திருப்தி கொள்வதும் அதனைப் போதுமானதாக்கிக் கொள்வதும் மனிதனின் நற்பேறாகும். அல்லாஹ்விடம் நன்மையைக்கோரி இறைஞ்சாமல் இருப்பது மனிதனின் துர்பாக்கியமாக்கும். அல்லாஹ்வின் கட்டளையைக் குறித்தும்
தீர்ப்பைக் குறித்தும் அதிருப்தி கொள்வது மனிதனின் துர்பாக்கியமேயாகும். (திர்மிதி)
இறைநம்பிக்கையாளனின் பொறுப்பாளன் அல்லாஹ்வே ஆவான்.
இதன் கருத்து: ""அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வருவது எல்லாமே நன்மையானது தான். அல்லாஹ் எந்நிலையில் என்னை வைக்கிறானோ அதனைக் குறித்து நான் திருப்தியாக மகிழ்ச்சியாகவே இருக்கின்றேன் என்று இறைநம்பிக்கையாளன் நம்பிக்கை வைக்கின்றான். தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறான். பின்னர் தன் விவகாரத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகிறான். மேலும், ""இறைவா! பலவீனமான அடியானாகிய நான் இந்தப் பணியை ஆற்றிட முழுமையாக பயிற்சி செய்து விட்டேன். நான் பலவீனனாகவும், சக்தியற்றவனாகவும் இருக்கின்றேன். இந்தப் பணியில் உள்ள குறைபாட்டை நீ நிறைவு செய்து விடு! நீ மிகைத்தவன்; ஆற்றலுடையவன்!''.
அறிவிப்பாளர்: அனஸ்(ரலி)
ஒருமனிதர் வினவினார்: ""அல்லாஹ்வின் தூதரே! நான் ஒட்டகத்தைக் கட்டி வைத்துவிட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை(தவக்குல்) வைப்பதா? அல்லது அதனைக் (கட்டாமல்)
அப்படியே அவிழ்த்துவிட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதா?'' . அதற்கு அண்ணலார், ""அதனை நீர் கட்டிவைத்து பிறகு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையும்,'' என்று கூறினார்கள்.
விளக்கம்: ஒரு பொருளை அடைந்திட என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளவேண்டுமோ அவை அனைத்தையும்
முழுமையாகச் செய்து முடித்து விட்டு,""நான் என்னால் முடிந்த முயற்சிகளையெல்லாம் செய்து முடித்துவிட்டேன்'' என்று இறைஞ்ச வேண்டும். இதுதான் அல்லாஹ்வையே நம்பி அவனையே முழுக்க முழுக்கச் சார்ந்து நின்று, அவனிடமே நம் பொறுப்புக்களை ஒப்படைப்பது "தவக்குல்' எனும் பண்பாகும்.
அறிவிப்பாளர்: அம்ருப்னு ஆஸ்(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
""மனிதனின் உள்ளம் ஒவ்வொரு கணவாயிலும் அலைந்து திரிந்த வண்ணமிருக்கின்றது. எவன் தன் உள்ளத்தைக் கணவாய்களில் தடுமாறித் திரிந்திட அனுமதிக்கின்றானோ, அவனை எந்தக் கணவாய் அழித்து நாசமாக்கி விடுகின்றது என்பது பற்றி அல்லாஹ்வுக்குக் கவலை இல்லை. எந்த மனிதர் அல்லாஹ்வையே நம்பி அவனையே சார்ந்து விடுகின்றாரோ அல்லாஹ் அவரை அந்தக் கணவாய்களிலிருந்தும், பாதைகளிலிருந்தும், தடுமாறி அலைவதிலிருந்தும், அழிந்து போவதிலிருந்தும் காப்பாற்றுவான்''.
விளக்கம்: மனிதன் அல்லாஹ்வைத் தன் பொறுப்பாளனாகவும், பாதுகாவலனாகவும் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அவனது உள்ளம் எப்போதும் திகைப்பிலாழ்ந்தும்
கவலையுடனும் இருக்கும். பல்வேறு வகைப்பட்ட உணர்வுகளின் உறைவிடமாக இருக்கும். ஆனால், உள்ளத்தை அல்லாஹ்வின்பால் திருப்பிவிடும் மனிதனுக்கு மன ஓர்மை கிடைக்கும்.
Post a Comment