தேவையுள்ளோருக்கு உதவுங்கள் !அமுத மொழிகள்
தேவையுள்ளோருக்கு உதவுங்கள் ! அறிவிப்பாளர்: அபூதர்(ரலி) நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன்: ""எந்தச் செயல் சிறந்தது...? ...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_3020.html
தேவையுள்ளோருக்கு உதவுங்கள் !
அறிவிப்பாளர்: அபூதர்(ரலி) நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன்: ""எந்தச் செயல் சிறந்தது...? தரமானது....?'' அண்ணல் நபி(ஸல்): ""இறைவன் மீது நம்பிக்கை கொள்வதும், இறைவழியில் அறப்போர் புரிவதும்!'' நான்: ""எத்தகைய அடிமைகளை விடுவிப்பது சிறந்தது...?'' அண்ணல் நபி(ஸல்): ""விலை அதிகமாயிருக்கின்ற, தம் உரிமையாளனின் பார்வையில் சிறந்தவர்களாயிருக்கின்ற அடிமைகளை விடுவிப்பது சிறந்தது!'' நான்: ""என்னால் அது இயலவில்லையெனில்?'' அண்ணல் நபி(ஸல்): ""ஒரு பணியைச் செய்பவனுக்கு நீர் உதவி புரியும்; அல்லது தன் பணியைச் சரிவர செய்ய முடியாதவனின் வேலையை நீர் செய்து கொடும்!'' நான்:""அதுவும் என்னால் முடியவில்லையென்றால்...?''
அண்ணல் நபி(ஸல்):""மக்களுக்குத் துன்பம் தராதீர்! இது உமக்கு தர்மமாகத் திகழும்; இதற்காக உமக்கு நற்கூலி கிடைக்கும்!'' (புகாரி, முஸ்லிம்) விளக்கம்: அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதன் கருத்து, ஏகத்துவ மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாகும். ஜிஹாத்- அறப்போரின் பொருள், சத்திய மார்க்கத்தை அழித்திட நினைப்போரை எதிர்த்துப் போராடுவதாகும். எதிரிகள் சத்திய மார்க்கத்தை, சத்திய அழைப்பாளர்களை அழித்திட வாளை ஏந்தினால், தானும் வாளேந்தி, ""எங்கள் உயிர்களையும், உங்கள் உயிர்களையும் விட சத்திய மார்க்கமே உயர்வானது; நீங்கள் அழித்திட முனைந்தால் நாங்கள் உங்களை
மாய்த்திடுவோம், அல்லது அதனைப் பாதுகாக்கும் முயற்சியில் மாய்ந்து விடுவோம்,'' என்று பிரகடனம் செய்வது ஓர் இறைநம்பிக்கையாளனின் கடமையாகும். அரபு நாட்டில் அன்று அடிமை முறை அமலில் இருந்தது. அக்காலத்தில் நாகரிகச் சமுதாயங்கள் அனைத்திலும் இந்தச் சாபக்கேடு நிலவி வந்தது. இஸ்லாம் வருகை தந்தபோது அடக்குமுறைக்கு ஆளான, தாழ்த்தப்பட்ட மனிதர்களை மேம்படுத்துவதற்காகவும், மனிதகுல சகோதரத்துவத்தில் அவர்களை இணைப்பதற்காகவும் அடிமைகளை விடுவிப்பதை தன் சீர்திருத்தத்தின் ஓர் அம்சமாக ஆக்கிக் கொண்டது. அதனைமாபெரும் நற்செயல் என்று கூறியது. தேவையுள்ளோருக்கு உதவி புரிவதும், ஒரு மனிதன் செய்ய முடியாத அல்லது வகை தெரியாமல் செய்கின்ற பணியை முடித்துக் கொடுப்பதும் சிறந்த நற்செயலாகும். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ""ஒரு மனிதன் இஸ்லாத்தைத் தழுவிய ஓர் அடிமையை விடுதலை செய்வானாயின் அவ்வடிமையின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக அம்மனிதனின் ஒவ்வோர் உறுப்பையும் அல்லாஹ், நரக நெருப்பிலிருந்து
விடுவிப்பான்!''
Post a Comment