உணவே மருந்து ! சீரகம்
சீர் + அகம் = சீரகம். அகத்தை அதாவது நமது இரைப்பையை சீராக இயங்க வைக்கும் ஓர் முக்கியமான உணவு பொருள் சீரகம். காரச் சுவையுடைய சீரகம், ஜீரணத்தை ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_05.html
சீர் + அகம் = சீரகம். அகத்தை அதாவது நமது இரைப்பையை சீராக இயங்க வைக்கும் ஓர் முக்கியமான உணவு பொருள் சீரகம். காரச் சுவையுடைய சீரகம், ஜீரணத்தை தூண்டும் இயல்புடையது. மேலும் பல மருத்துவ குணங்கள் சீரகத்தில் நிறைந்துள்ளது. பித்த நோய்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், அதிக உடல் சூடு, பசியின்மை இப்படி பல நோய்களுக்கு சீரகம் சிறந்த மருந்தாகிறது. பசியை தூண்டும் குணம் இதற்கு இருப்பதால் பல மருந்துகளில் சீரகம் ஒரு முக்கிய பொருளாக இடம் பெற்றிருக்கிறது.
இரண்டு தேக்கரண்டி சீரகத்தை நன்கு வறுத்து ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்க வைத்து, வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து மாதவிடாய் காலங்களில் இளம் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு கொடுக்க, வலி சிறிது நேரத்திலேயே குறைந்து விடும். பசி மந்தம், மற்றும் உணவு ஜீரணமாகாமல் இருப்பவர்கள் சீரகம் கொதிக்க வைத்த நீரை அடிக்கடி இளம் சூட்டில் பருகி வர, பசி ஏற்பட்டு ஜீரணம் ஒழுங்காகும். உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் சீரகத்தண்ணீரை இளம் சூட்டுடன் உணவிற்கு பத்து நிமிடத்திற்கு முன்பும், உணவு உண்டு பத்து நிமிடத்திற்கு பின்பும் அருந்த, உணவு நன்கு ஜீரணமாகி, கொழுப்புகள் உடலில் தங்காமல் இருக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் எரிச்சல், நீர்கட்டு, நீர்கருக்கு போன்றவற்றிற்கு சீரக தண்ணீரை அருந்த, விரைவில் நிவாரணம் உண்டாகும்.
சீரகம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் இயல்புடையது. ரத்த அழுத்த நோயாளிகள் தினம் ஒரு தேக்கரண்டி சீரகம் சாப்பிட, ரத்த அழுத்தம் சீராகும். பிரசவித்த பெண்களுக்கு இது மிக சிறந்த மருந்தாகிறது. சீரகத்தை வறுக்கும் பொழுது நறுமண எண்ணைய் வெளிவரும். அப்பொழுது நீர் ஊற்றி கொதிக்க வைத்து அந்த நீரை பருகும் பொழுது சீரகத்தின் பலன் அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்கள், இந்த சீரக நீரை பருக தாய்ப்பால் பெருகும். கருப்பை பலப்படும். குழந்தை பெற்றதால் கருப்பையில் உண்டான அழற்சி நீங்கும். சீரகத்தில் இரும்பு சத்தும், மங்கனீசிய சத்தும் நிறைந்து உள்ளன. இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் பிரண வாயுவை நம் உடலில் உள்ள செல்களுக்கு அளித்து புத்துணர்ச்சியளிக்கின்றது. மேலும் ஈரலை நன்கு வேலை செய்ய தூண்டி, நம் உடலில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது.
சீரக பொடி:
சீரகம் - 100 கிராம்
எலுமிச்சம்பழம் - 2
மிளகு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: சீரகத்தை எலுமிச்சம்பழ சாற்றில் கிளறி நிழலில் காய வைத்து உலர்த்தி நன்கு காய்ந்ததும், பொடி செய்து கொள்ளவும். மிளகை வறுத்து பொடி செய்து சீரகப்பொடியுடன் உப்பு கலந்து வைத்துக் கொள்ளவும். சூடான சாதத்துடன் சிறிது நெய் கலந்து சாப்பிட்டு வர உணவு, நன்கு ஜீரணமாகும். வறட்சி நீங்கும். நோய்வாய்ப்பட்டு பத்திய உணவு உண்பவர்கள், அறுவை சிகிச்சை செய்து படுக்கையில் இருப்பவர்கள், சீரகப் பொடி சாற்றுடன் பாசிப்பருப்பு கலந்த காய்கறி கூட்டு கலந்து சாப்பிட, உணவு நன்கு ஜீரணமாகி விரைவில் குணம் உண்டாகும்.
சீரக ரசம்:
சீரகம் - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
- 10 நிமிடம் நீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும்.
புளி - சிறிய எலுமிச்சை அளவு
கடுகு- 1 தேக்கரண்டி
நெய்- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- கைப்பிடி அளவு
பெருங்காய பொடி - 1/4 தேக்கரண்டி
தேவையான அளவு - உப்பு.
செய்முறை: புளியை கரைத்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்க வேண்டும். சீரகம், துவரம்பருப்பு, மிளகாய் வற்றல் அரைத்து கொதிக்கும் புளி நீரில் கலந்து, மிதமான தீயில் கொதிக்க வைத்து, உப்பு, பெருங்காய பொடி கலந்து கொள்ளவும். தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும். மிக சுவையான சீரணத்தை தூண்டும் ரசம், பிரசவித்த பெண்கள் சாப்பிட உணவு எளிதில் ஜீரணமாகும். எண்ணெய் தேய்த்து குளித்த அன்று இந்த ரசம் சாப்பிடலாம். பத்திய சாப்பாட்டிற்கு உகந்த ரசம்.
Post a Comment