சமையல் குறிப்புகள் ! சுவையான வடைகறி--கேப்பங்கூழ்--சொதி -- எப்படித் தயாரிப்பது?
சுவையான வடைகறியை எப்படி வீட்டிலேயே செய்வது ? ஒரு டம்ளர் கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் உப்பு, காய்ந்த மிளகாய்-6, பூண்ட...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_9833.html
சுவையான வடைகறியை எப்படி வீட்டிலேயே செய்வது?
ஒரு டம்ளர் கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் உப்பு, காய்ந்த மிளகாய்-6, பூண்டு பற்கள்-4, சிறிது சோம்பு எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றிடரண்டாக கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த மாவை சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொரித்துக் கொள்ளுங்கள். மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் சோம்பு, கிராம்பு, பூண்டைத் தாளித்து நான்கு சின்ன வெங்காயத்தை நைசாக நறுக்கிப் போட்டு வதக்குங்கள்.
அதனுடன் இரண்டு பெங்களூர் தக்காளியை நறுக்கிப் போட்டு, இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து மறுபடியும் வதக்கி, பிறகு பதினைந்து முந்திரியுடன் கசகசா ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து அரைத்த விழுதை வதக்கிய கலவையில் சேருங்கள்.
அதில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து சிறிது தண்ணீரும் ஊற்றி கொதிக்க விடுங்கள். நன்கு கொதித்ததும் அதில் பொரித்து வைத்த பக்கோடாவைப் போட்டு வேண்டிய அளவு திக் ஆனதும் இறக்குங்கள். அவ்வளவுதான்...
--------------------------------------------------------------------------------
திருநெல்வேலி பிள்ளைமார் வீட்டு ஸ்பெஷல் ‘‘சொதி’’யை எப்படித் தயாரிப்பது?
கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்ற காய்கறிகளை சமமாக எடுத்து நறுக்கி வேக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மூடி தேங்காயைத் துருவி திக்காகப் பால் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தண்ணீர் சேர்த்து இரண்டாம் மூன்றாம் பால் எடுங்கள். கடாயில் சிறிது தேங்காய் எண்ணெயை ஊற்றி சோம்பு நறுக்கிய வெங்காயம் பூண்டு, இஞ்சி, எட்டு கீறிய பச்சை மிளகாயைப் போட்டு வதக்குங்கள்.
பின்னர் அதில் உப்பு சேர்த்து மூன்றாம் பாலைவிட்டு கொதித்ததும் இரண்டாம் பால் விட்டு, கிளறி வேக வைத்த காய்கறியைச் சேருங்கள். நன்கு கொதி வந்ததும், திக்கான மூன்றாம் பாலை ஊற்றி கொதிக்க விட்டு இறக்குங்கள். படு ருசியான ‘‘சொதி’’ தயார்.
-----------------------------------------------------------------------------------------
ருசியான கேப்பங்கூழ் செய்வது எப்படி?
ஒரு டம்ளர் கேழ்வரகு மாவை தோசை மாவு பதத்திற்கு உப்புப் போட்டு கரைத்துக் கொண்டு ஒரு பாத்திரத்தில் திட்டமான அளவு தண்ணீர் ஊற்றி, சூடானதும் கரைத்து வைத்த கேழ்வரகு மாவை அதில் ஊற்றிக் கிளறவும். நன்கு பொங்கி வந்ததும். இறக்கி ஆற வைத்துச் சாப்பிடலாம்.
மற்றொரு முறையில் அரிசி அல்லது அரிசி நொய்யை வேக வைத்து, அதில் கேழ்வரகு மாவை ஊற்றிக் கிளறி வெந்ததும் இறக்கலாம். கேழ்வரகு மாவைக் கரைத்து 5 மணி நேரம் புளிக்க வைத்தும் கேப்பங் கூழ் செய்யலாம்.
Post a Comment