சிசேரியன் சிக்கலுக்கு சிறப்பான தீர்வுகள் !--ஹெல்த் ஸ்பெஷல்,

ஒருநாள் வலியை பொறுக்கலாம்... வாழ்நாள் வலியை தவிர்க்கலாம் சிசேரியன் சிக்கலுக்கு சிறப்பான தீர்வுகள் ! 'சென்னையைப் பொறுத்தவ...


ஒருநாள் வலியை பொறுக்கலாம்... வாழ்நாள் வலியை தவிர்க்கலாம்

சிசேரியன் சிக்கலுக்கு சிறப்பான தீர்வுகள் !



'சென்னையைப் பொறுத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளைவிட, இப்போது சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கிறது!’
- அதிர்ச்சி தர வேண்டிய இச்செய்தி, 'அப்படியா..?’ என்கிற சம்பிரதாய விசாரணையுடன் அடுத்த வேலையை நோக்கி நகர வைக்கிறது. அந்தளவுக்கு சிசேரியன் பிரசவத்துக்குப் பழகிவிட்டார்கள் மக்கள்!
''முன்பெல்லாம் பதினைந்து, இருபது சதவிகித சிசேரியன் கேஸ்களை அட்டெண்ட் பண்ணிட்டு இருந்த நாங்க, இப்ப ஐம்பது சதவிகித கேஸ்களை அட்டெண்ட் பண்றோம்'' என்று சிசேரியனின் 'விஸ்வரூபம்' பேசும் சென்னை, எழும்பூர் மகப்பேறு மருத்துவ நிலையத்தின் முண்னாள் இயக்குநர் டாக்டர் மோகனாம்பாள்,
''சிசேரியன் பிரசவங்கள் அதிகரிச்சு இருக்குனு சொல்ற அதேநேரத்துல, பிரசவ சிக்கல்களால ஏற்படுற தாய், சேய் இறப்பு சதவிகிதம் இப்போ ரொம்பவே குறைஞ்சுருக்கு. அதேபோல, சிரமமான பிரசவங்களால ஃபோர்செப்ஸ் போட்டு குழந்தையை எடுக்கறது, சிலசமயம் குழந்தையோட மூளைவளர்ச்சி பாதிப்படைய காரணமா ஆயிடும். இப்போ, அதுமாதிரியான குழந்தைகளின் சதவிகிதமும் குறைஞ்சுருக்கு. இதுக்கெல்லாம் சிசேரியன் மருத்துவ சிகிச்சைக்குதான் நன்றி சொல்லணும்'' என்றும் நெகிழ்கிறார்.
'பிரசவம் என்பதே, பிற உயிரினங்களைப் போல, இயல்பாகத்தான் நடக்க வேண்டும். அப்படியிருக்க... எதற்காக அது சிசேரியனாக மாறவேண்டும்?' என்பதைப் பற்றி பேசிய டாக்டர்,
''தாய்க்கு நீர்வற்றிப் போறது, குழந்தை பெருசா இருப்பது, அம்மாவோட இடுப்பு எலும்பு விரிவடையாம இருப்பது, கர்ப்பவாய் திறக்காமல் இருப்பது, அம்மாவின் வயது 35-க்கும் மேல் இருப்பது, டயாபடீஸ், பி.பி. இருப்பது... இதுபோன்ற காரணங்களில் ஏதாவது ஒன்றினால், சுகப்பிரசவ வாய்ப்பு ஆபத்தாகும். அப்படிப்பட்ட சமயங்கள்லதான் சிசேரியன் மூலமா குழந்தை பத்திரமா வெளியில எடுக்கப்படுது'' என்று காரணங்களை விளக்கினார்.
தொடர்ந்து பேசிய டாக்டர் மோகனாம்பாள், ''மருத்துவக் காரணங்கள் தவிர, வேறு சில காரணங்களும் இப்போ சிசேரி யனைத் தீர்மானிக்குது. சில மருத்துவர்கள், சிரத்தை எடுத்து சுகப்பிரசவம் பார்க்கறதுக்கு... சுலபமா சிசேரியன் பண்ணிடலாம்னு நினைக்கறாங்க. அதில் கிடைக்கிற பணமும் அவங்களோட இந்த போக்குக்குக் காரணம். கூடவே, இப்போ எல்லாம் பிரசவ நேரத்துல பெண்ணோட அம்மா, மாமியார், கணவர்னு யாராவது ஒருத்தரை லேபர் வார்டுக்குள்ள விடலாம்னு அரசாங்கமே சொல்லுது. அப்படி வர்றவங்க அந்தப் பொண்ணோட பிரசவ வேதனையைப் பார்க்க முடியாம, 'ஐயோ வேண்டாம்... சிசேரியனே பண்ணிடுங்க...’னு டாக்டர்களை வற்புறுத்துறது பல இடங்கள்ல நடக்குது. இப்படி குடும்பத்தினரோட வேண்டுகோள், வற்புறுத்தலால சுகப்பிரசவமா நிகழவேண்டியது... சிசேரியன் ஆயிடுற ஹிஸ்டரி நிறைய'' என்றார் கவலையுடன்.
'பிரசவ வலி என்பதை, இன்றைய பெண்கள் எதிர்கொள்ள மறுக்கிறார்கள்' என்றொரு குற்றச்சாட்டு இங்கே பரவியிருப்பது பற்றி மகப்பேறு மருத்துவர் கீதாஹரிப்பிரியாவிடம் கேட்டபோது... ''பிரசவ வலி என்பது உச்சகட்ட வலி. என்றாலும், அது பொறுத்துக் கொள்ளக்கூடிய வலிதான். இல்லைனா நம்ம பாட்டிகளும், அம்மாக்களும் எப்படி இத்தனை குழந்தைகள் பெத்திருக்க முடியும்..? கர்ப்ப காலத்துல 
இருந்தே பெண்களுக்கு, 'அது பீரியட்ஸ் நேரத்தில் அனுபவிக்கிற வலியைப் போலவே கொஞ்சம் பெரிய வலி...’னு பிரசவவலி குறித்த அச்சத்தை அகற்றி, 'அதிகபட்சம் 12 மணி நேர வலியைப் பொறுத்துக்கிட்டா... ஒரே நாள்ல எழுந்து நடந்துடலாம், சிசேரியன்னா... மூணு மாசத்துக்கு ஓய்வு எடுக்கறதோட, அறுவை சிகிச்சையோட பின்விளைவுகளையும் அனுபவிக்கணும்’னு அதைப் பத்தின விழிப்பு உணர்வை ஏற்படுத்தணும். இப்போ பிரசவங்கள் நவீனமாயிடுச்சு. சுகப்பிரசவத்துக்கே வலியைக் குறைக்க முதுகுல ஒரு ஊசி போடப்படுது. அதனால, சீரான உடல் நிலையோட, 'நம்மால் முடியும்’ என்ற மனவலிமையை வளர்த்துக்கிட்டா, சுகப்பிரசவம் சாத்தியம்!'' என்று எளிதாக புரிய வைத்தார்.
''கர்ப்ப காலத்துல இருந்தே உணவுல சில வரைமுறைகளைக் கடைப்பிடிச்சா, தாய் - சேய் நலம் சீரா இருக்கிறதோட, அது சுகப்பிரசவத்துக்கும் வழி வகுக்கும்!'' என்று சொல்லும் கடலூர், மூலிகை வைத்தியர், அன்னமேரி பாட்டி... அந்த உணவுகளில் சிலவற்றை பட்டியலிட்டார் இப்படி -
''ஆரம்ப மாதங்கள்ல வாய்வு அதிகம் உள்ள பதார்த்தங்களான வாழைக்காய், உருளைக்கிழங்கு, இறால்மீன் எல்லாம் சாப்பிடக் கூடாது. கர்ப்பமான நாள் முதல், பிரசவமாகுற வரைக்கும்... முருங்கை இலை, சின்ன வெங்காயம், சீரகம் எல்லாத்தையும் சேர்த்து சூப் வெச்சு சாப்பிட்டு வந்தா... சுகப்பிரசவமாகும். மூணாவது மாசம் முதல், பிரசவமாகற வரைக்கும் வெந்தயக்கஞ்சி சாப்பிடறது சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். வெந்தயம் ஒரு ஸ்பூன், அரிசி ரெண்டு ஸ்பூன் உடைச்சுப் போட்டு கஞ்சியா காய்ச்சி... பால் சேர்த்து, மூணு நாளைக்கு ஒரு தடவை சாப்பிடலாம்.
5-வது மாசத்துல இருந்து எலுமிச்சை அளவு வெண்ணெயை, ஒரு டம்ளர் கொதிநீர்ல கலந்து காலை அல்லது மதிய வேளையில சாப்பிடலாம். 7-வது மாசத்துக்குப் பிறகு, வடகத்தை பொரிச்சி, அதில ஒரு டம்ளர் தண்ணிவிட்டு கொதிக்க வெச்சு அரை டம்ளரானதும் குடிக்கலாம். இதை வாரத்தில 2 நாள் செஞ்சுட்டு வந்தா சுகப்பிரசவமாகும்.
கர்ப்ப காலங்கள்ல சிலருக்கு கை - கால் வீக்கம் வரும். இதுக்கு நெல்லிக்காய்,முருங்கைக்காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள்ஸ்பூன் பெருஞ் சீரகத்தை சட்டியில போட்டு வறுத்து வெடிச்சதும் தண்ணிவிட்டு காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். பத்து குப்பைமேனி இலையை மென்னு சாப்பிடலாம்... இதெல்லாம் வீக்கத்தை வடிச்சுடும். இந்த நேரத்துல கருஞ்சீரகம், அன்னாசிப்பழம், வெல்லம் சாப்பிடக் கூடாது. அது கருவைக் கலைக்கலாம்.
பிரசவ நாள் நெருங்கினதும் சிலருக்கு அடிக்கடி வயிறு வலி வரும். அது சாதாரண வலியா இருக்கலாம். அஞ்சு வெத்திலை, ஒரு ஸ்பூன் ஓமம், 3 பூண்டு எடுத்து, ஓமத்தை வறுத்து அது வெடிச்சதும் நசுக்கிய பூண்டு, பிய்த்துப்போட்ட வெத்திலை எல்லாத்தையும் போட்டு ஒண்ணரை டம்ளர் தண்ணி விட்டு கொதிக்க வெச்சி, முக்கா டம்ளரானதும் எலுமிச்சை அளவு வெண்ணெய் இல்லைனா பனைவெல்லத்தை சேர்த்துக் குடிச்சா... சாதாரண வலியா இருந்தா நின்னுடும். வலி தொடர்ந்தா, ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய நேரம் வந்தாச்சு!'' என்று அழகாகப் பேசி முடித்தார் அன்னமேரி பாட்டி!

Related

ஹெல்த் ஸ்பெஷல் 7198843088834740088

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item