வாட்டி எடுத்த வாடல்... வாடி நின்ற விவசாயிகள்... வாட்டத்தைப் போக்கிய விவசாயி!

வாட்டி எடுத்த வாடல்... வாடி நின்ற விவசாயிகள்... வாட்டத்தைப் போக்கிய விவசாயி! மரம் இளஞ்சிவப்பாகவும், ஓலைகள் மஞ்சள் நிறமாகவும் மாறி, காய...

வாட்டி எடுத்த வாடல்... வாடி நின்ற விவசாயிகள்... வாட்டத்தைப் போக்கிய விவசாயி! மரம் இளஞ்சிவப்பாகவும், ஓலைகள் மஞ்சள் நிறமாகவும் மாறி, காய்கள் கீழே விழுந்து விடுகின்றன. 1,000 காய்கள் வெட்டிய தோப்பில் 100 காய்கள்தான் கிடைக்கின்றன. செஞ்சிலந்தியிலிருந்து கூன்வண்டு வரைக்கும் விரட்டியடிக்கும் சேங்கொட்டை! நெய்யாறு தண்ணியை வச்சித்தான் எங்க பொழப்பு ஓடிகிட்டிருந்தது. இந்த ஆத்துல வந்த தண்ணியையும் 5 வருஷத்துக்கு முன்னயே கேரள அரசு நிப்பாட்டிடுச்சு. பொழப்புக்கு வேற வழியில்லாம, இருக்குற தண்ணியை வச்சி, தென்னையைப் போட்டுட்டு, பொழப்பை ஓட்டிகிட்டிருந்தோம். கொஞ்சநாளா 'மஞ்சள் நோய்'னு ஒண்ணு வந்து தென்னையைப் புண்ணாக்கி, மரமும் பட்டுப்போயிடுது. எங்க பகுதியில மட்டும் கிட்டத் தட்ட 500 ஏக்கருக்கும் மேல இப்படி பாதிக்கப்பட்டு கிடக்கு. என்னென்னவோ செய்து பார்த்தும் சரிகட்ட முடியல. இதுக்கு ஏதாச்சும் வழியிருந்தா சொல்லுங்க?'' என்று நம்மைத் தொடர்பு கொண்டு கேட்டார் கன்னியாகுமரி மாவட்டம், விளவங் கோடு தாலூகா, முன்சிறை ஊராட்சி ஒன்றியத் தலைவர் பிரேம்குமார். உடனடியாக அவரைச் சந்தித்தோம். இந்த ஒன்றியத்துக்குட்பட்ட, விளவங் கோடு, கொல்லங்கோடு, ஆறுதேசம், ஏழுதேசம், மெதுகும்பல், குளப்புறம் உள்ளிட்ட பல கிராமங்கள் இதனால் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக சொன்ன பிரேம்குமார் மற்றும் பத்மநாபன் ஆகியோர், பைங்குளம் பகுதியைச் சேர்ந்த மாதவன்தம்பி என்பவருடைய தோட்டத்துக்கு முதலில் அழைத்துச் சென்றனர். "எங்க பகுதி விவசாயிகளை வாழ வைக்கிறதே தென்னைதான். வீட்டுத் தோட்டத்துலகூட குறைஞ்சது அஞ்சி தென்னையாவது நிக்கும். நான் நாலு ஏக்கர்ல நட்டிருக்கேன். நல்ல மகசூலும் கிடைச்சுது. இப்பம் ரெண்டு வருஷமா மஞ்சள் நோயோட தாக்கத்துனால நிறைய தென்னை மரங்க பட்டுப் போச்சு. அதனால மகசூல் பாக்கறதே அரிதா இருக்கு" என்று சொன்ன மாதவன்தம்பி, நோயைப் பற்றி விவரித்தார். "1,000 காய் வெட்டுன தோப்புல, இப்பம் 100 காய்தான் கிடைக்குது?'' "தென்னையோட அடிபாகத்துல இருந்து ஒரு வகையான கிருமி பரவுது. இதனால மரமே காவி நிறத்தில (இளஞ்சிவப்பு) மாறிடுது. தென்னை ஓலைங்க மஞ்சள் நிறத்துக்கு மாறிடறதோட, புடிச்ச காயும் விழுந்து போகுது. அடுத்த மகசூலுக்கு காயே பிடிக்கறதில்ல. பட்டுப்போன மரத்துக்கு மாற்றா புதுசா நட்ட கன்னுகூட, இந்த நோய் வந்து பட்டுப் போச்சு. என்னோட நாலு ஏக்கர் தென்னையில 250 மரத்துக்கும் மேல பட்டுப் போச்சு. ஏக்கருக்கு 1,000 தேங்காய் வெட்டுன தோப்புல இன்னிக்கு நூறுகாய்தான் கிடைக்குது. வெட்டுன தேங்காயைக்கூட வியாபாரிங்க, வாங்க மாட்றாங்க. அந்த அளவுக்கு காய் மோசமா இருக்கு" என்றவர், தேங்காயை எடுத்து நம்மிடம் காட்டியவாறே, "இந்த நோயை எங்க பகுதிகள்ல 'மஞ்சள் நோய்'னும் 'கேரளாவுல வாடல் நோய்'னும் சொல்றாங்க. என்னதான் மருந்து அடிச்சாலும், மரங்களைக் காப்பாத்த முடியலை'' என்றார் வருத்தத்தோடு. அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான தென்னை விவசாயிகள், இதேபாணியில் தங்களது வருத்தத்தைத் தெரிவித்ததோடு, "தென்னையை காப்பாத்த எதாவது வழியிருந்தா சொல்லுங்க'' என்று கோரிக்கை வைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள பிச்சினிக்காடு கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி லெனினிடம் இந்தப் பகுதி விவசாயிகளின் வேதனையைத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட பகுதிக்கு கையோடு அழைத்துச் சென்றோம் (இவர், தென்னையைத் தாக்கிய தஞ்சாவூர் வாடல் நோய்க்கு இயற்கை மருந்து கண்டுபிடித்து குணப்படுத்தி, மகசூல் பார்ப்பது குறித்து ஜூன் 25, 2009 தேதியிட்ட இதழில் கட்டுரை வெளியாகியிருக் கிறது). 'பைங்குளம்' பகுதி விவசாயி களிடம் அவரை அறிமுகப்படுத்தவும், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், பாதிக்கப்பட்ட தோட்டங்களுக்கு அவரை அழைத்துச் சென்றனர். 'புழு, பூச்சிகளோட வேலைதான்!' தென்னந்தோப்புகளைச் சுற்றிப் பார்த்தவர், "உங்க பகுதியில தாக்கியிருக்கிறது 'தஞ்சாவூர் வாடல் நோய்' இல்ல. இது வேறு ரகமான வாடல் நோய். தென்னை ஓலைங்க பச்சை நிறமாவே இல்லை. இதெல்லாம் கண்ணுக்குத் தெரிஞ்ச, தெரியாத சின்னச்சின்ன பூச்சி, புழுக்களோட வேலைதான். பூச்சிங்க அரிச்சது னாலதான், ஓலைங்க பச்சையம் இல்லாம வெளிறிப்போய் இருக்குது" என்று சொல்லி கொண்டிருக்கும்போதே, "இல்லைய்யா எங்க தென்னையில இதுவரைக் கும் புழு, பூச்சிகளை நாங்க பார்த்ததே கிடையாது. எறும்பைதான் பார்த்திருக்கோம்'' என்று இடையில் புகுந்தார் விஜயகுமாரன் தம்பி. உடனே தென்னை ஓலையை பிடித்து இழுத்த லெனின், அதில் புழுக்களின் கூட்டையும், புழு இருந்ததற்கான அடையாளத்தையும் காட்டிவிட்டு, தொடர்ந்தார். செஞ்சிலந்தியிலிருந்து கூன்வண்டு வரைக்கும் விரட்டியடிக்கும் சேங்கொட்டை! "பூச்சிகளோட தாக்கத்தைக் குறைச்சாலே தென்னை செழிப்பா வளர்ந்துரும். இதுக்காக நீங்க ரசாயன உரமெல்லாம் போடவேண்டிய அவசியம் இல்லை. சேங்கொட்டையே போதும் (சலவை துணியில் குறி போட பயன்படும் ஒருவகை கொட்டை. நாட்டுமருந்துக் கடைகளில் இது கிடைக்கும்). சேங்கொட்டைய ஒரு வாரம் தண்ணியில ஊற வைச்சா... அது மென்மையா யிடும். அந்த நேரத்துல சேங்கொட்டையைக் கையால எடுக்கக் கூடாது. அப்படி எடுத்தா கையில புண் வந்துரும். கரண்டியில எடுத்து ஒரு வயசுள்ள தென்னைக்கு ஒரு அடி தள்ளி ஒரு சேங்கொட்டையும், ரெண்டு வயசுள்ள தென்னைக்கு ரெண்டடி தள்ளி ரெண்டு சேங்கொட்டையும், மூணு வயசுள்ள தென்னைக்கு மரத்துலருந்து மூணடி தள்ளி மூணு சேங்கொட்டையும், நாலு வயசுள்ள தென்னைக்கு நாலடி தள்ளி நாலு சேங்கொட்டையும் அதுக்கும் மேல வயசுள்ள தென்னைகளுக்கு 5 சேங்கொட்டையும் மரத்தை சுத்திலும் ஒரு ஜான் ஆழத்துல வெச்சுப் பாருங்க... செஞ்சிலந்தி முதல் கூன் வண்டு வரை எல்லாம் காணாமப்போயிடும்" என்று லெனின் சொன்னதும் ஆச்சர்யத்தில் விழியை விரித்தனர் விவசாயிகள். தொடர்ந்தவர், ''நீங்க, தென்னையை நடுறப்பவே முறையா நடல. இந்த மரங்கள்லாம் தானாவே முளைச்சு வந்தது மாதிரி இருக்குது. ஒரு தென்னைக்கும், அடுத்த தென்னைக்கும் கண்டிப்பா 25 அடி இடைவெளி இருக்கணும். உங்க பகுதிகள்ல ரொம்ப குறைவாகத்தான் இடைவெளி விட்டிருக்கீங்க. அதனால தென்னைக்கு தேவையான சூரியஒளி கிடைக்கறதுலயும் சிரமம் இருக்குது. எதிர்காலத்துல இடைவெளி விஷயத்துல கவனமா இருங்க" என்று சொன்னார். "குரும்பை பிஞ்சு உதிர்ந்துடுதேய்யா... அது மாற வழி இருக்கா" என்று எதிர்பார்ப்போடு கேட்டனர் விவசாயிகள். பஞ்சகவ்யா அடிச்சாலே பஞ்சா பறந்திடும் குருத்து அழுகல் ! "தோப்புல அங்கங்க தாவரக் கழிவுகளை தீ வெச்சு கொளுத்துறதை நிறுத்துங்க. இப்படி நீங்க கொளுத்துறதுனால மண்ணுல இருக்குற நுண்ணுயிரிகளெல்லாம் அழிஞ்சு போயிடும். அதனால நுண்ணுயிரிங்க பெருக்கத்துக்கு பொட்டாஷ் மொபலேசர் 100 மில்லிக்கு 1 லிட்டர் தண்ணி கலந்து தென்னை மரத்துலருந்து 4 அடி தள்ளி ஊத்தணும். இதனால நுண்ணுயிரிங்க பெருகும். குரும்பை, பிஞ்சு உதிர்தல் இதெல்லாம் படிப்படியா குறைய ஆரம்பிச்சுடும். குருத்து அழுகலைப் பொறுத்தவரை 'பஞ்சகவ்யா' அடிச்சாலே பஞ்சா பறந்துடும்'' என்று சொன்னதும்... பஞ்சகவ்யா தயாரிப்பது எப்படி என்ற கேள்வி வந்து விழுந்தது. அதைப்பற்றி தெளிவாகப் பாடமெடுத்த லெனின், "தயாரிச்ச பஞ்சகவ்யாவை ஒரு லிட்டருக்கு 30 லிட்டர் தண்ணியில கலந்து மரம் ஒண்ணுக்கு 2 லிட்டர் வீதம் குருத்துல தெளிக்கணும். இப்படி செய்தா... குருத்து சரியா வராத மரங்கள் வேகமா குருத்துவிடும். இது ஒரு சிறந்த வளர்ச்சியூக்கி. மஞ்சள் நிறமா மாறியிருக்குற ஓலையில இதைத் தெளிச்சா ஓலைங்க பசுமையா மாறும். குட்டையா இருக்கிற மட்டையும் நீளமா வளந்து ஒளிச் சேர்க்கைக்கு தேவையான இலைப்பரப்பு அதிகரிச்சி காய் பிடிப்புக் கூடும். அதோட, 'பென்சில் பாயின்ட்'னு சொல்லப்படுற, 'நுனி சிறுத்தல் நோய்' இருந்தாகூட போயிரும்'' என்ற லெனின், மண்ணைப் பற்றியும் விளக்கினார். மரமும் ஒரு உயிர்தான்ங்கிறத மறந்திடாதீங்க! "உங்க மண்ணுல பாஸ்பேட் சத்தும் குறைவா இருக்குது. 'பாஸ்போ பாக்டீரியா' கொடுக்குறது மூலமா மணிச்சத்து கிடைச்சி, தென்னையில மகசூலும் கூடும். கன்னியாகுமரி மாவட்டம் நல்ல மழை வசதியுள்ள மாவட்டம். ஈரப்பதம் அதிகமா இருக்குறதனால பூஞ்சண நோய் தாக்கியிருக்கு. அதனால்தான் இலையெல்லாம் மஞ்சள் நிறமா மாறிப்போயிருச்சு. இதுக்காக 'சூடோமோனஸ்' ஒரு மரத்துக்கு 200 கிராம் வீதம் போட்டா... பூஞ்சண நோயை விரட்டியடிச் சுடலாம்" என்று சொல்லிக் கொண்டிருந்தவரின் பார்வை, பக்கத்திலிருந்த மரத்தில் கொத்தி வைத் திருந்த அரிவாளின் மீது நிலைத்தது. சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தவர், பின் விவசாயிகளைப் பார்த்து, "இந்த மாதிரியெல்லாம் பண்ணாதீங்க. மரத்துல இப்படி அரிவாளை யெல்லாம், கொத்தி வைக்கக்கூடாது. மரமும் ஒரு உயிரினம்தான்ங்கிறத மறந்துடாதீங்க. இப்படி அரிவாள் மாதிரியான ஆயுதங்களை வைச்சு, மரத்துல குத்துறப்ப, ஏற்படற குழிகள்லயே, புழுக்களும் பூச்சிகளும் ஜோரா தங்கிடுது" என்று உரிமையோடு கண்டித்தார். நிறைவாகப் பேசிய லெனின், "முக்கியமா நீங்க செய்ய வேண்டியது, மரத்தைச் சுத்தி சேங்கொட்டையைப் போடுங்க. அதோட பஞ்சகவ்யாவும் கொடுங்க. இது ரெண்டும் போட்டு ஆறு மாசம் ஆகட்டும். நல்ல மாற்றம் தெரியும். கண்டிப்பா அந்த சமயத்துல நானும் பார்க்க வருவேன்'' என்று நம்பிக்கையோடு சொன்னார். நன்றிப் பெருக்கோடு நம்மை சூழ்ந்து கொண்டு விவசாயிகளின் சார்பாகப் பேசிய பிரேம்குமார், "அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை 'பசுமை விகடன்' செஞ்சுட்டுருக்கு. எங்களுக்காக, தஞ்சாவூர்ல இருந்து விவசாயி லெனினைக் கூட்டிட்டு வந்து விளக்கியிருக்கீங்க. எங்க சங்கத்துல 50 உறுப்பினர்கள் இருக்கிறாங்க. எல்லாருக்கும் பிரதான விவசாயமே தென்னைதான். இங்க நாங்க கத்துக்கிட்டதை அவங்க அத்தனை பேருக்குமே விளக்கிச் சொல்லிக் கொடுக்குறதுதான் எங்க முதல் வேலை. இவ்வளவு தூரம் எங்களுக் காக வந்த லெனினுக்கும் பசுமை விகடனுக்கும் அதுதான் நாங்க காட்டுற நன்றியா இருக்கும்" என்று சொல்லி நெகிழ்ச்சி காட்டினார். பல்கலைக்கழகம் சொல்வதென்ன?! 'வாடல் நோய்' குறித்து முன்சிறை பகுதிக்குட்பட்ட, வேளாண்மை இணை இயக்குநர் கோலப்பனிடம் பேசியபோது, ''இது ஒரு வகையான பூஞ்சண நோய். வடிகால் வசதி ஏற்படுத்தாத தோப்புகளில்தான் அதிகமாக தாக்கியுள்ளது. இதன் காரணமாக இலைகள் மஞ்சள் நிறத்துடனும், அனலில் எரிந்தது போலவும் இருக்கும். இலைகளை வெட்டி விட்டு, மட்டைப் பகுதியில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் 'கார்பன் டாஸ்டின்' கலந்து தெளிக்கலாம். ஒரு லிட்டர் தண்ணீருடன் 2 கிராம் 'காப்பர் ஆக்ஸி குளோரைடு' கலந்தும் தெளிக்கலாம். ஒன்றிரண்டு மரங்கள் என்றால் இதைச் செய்யலாம். அதிகமான மரங்கள் என்றால் இது சாத்தியமில்லை. மாற்றாக, 100 கிராம் 'காப்பர் ஆக்ஸி குளோரைடு'டன் 40 லிட்டர் தண்ணீர் சேர்த்து, வேர் மூலமாகக் கொடுக்கலாம். வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்நோய்க்கு 'கிளைபோசிட்' 25 மி.லி., கிரோமோசின் 25 மி.லி. ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து வேரில் படுவது மாதிரி அடிப்பதற்கு பரிந்துரை செய்கிறது. பொதுவாக இதுபோல், பாதிக்கப்பட்ட தென்னைகளுக்கு 2 கிலோ 'சூப்பர் பாஸ்பேட், 4 கிலோ பொட்டாஷ், ஒன்றரை கிலோ யூரியாவை' உரமாகப் போடலாம். பாதிக்கப்பட்ட விவசாயிகள், வடிகால் வசதி ஏற்படுத்துவது அவசியம். இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்கள் வேப்பம் பிண்ணாக்கை மரம் ஒன்றுக்கு 10 கிலோ வீதம் போடலாம். வேளாண்துறையால் விநியோகிக்கப் படும் நுண்ணூட்ட உரங்களைப் போடுவதன் மூலமும் இதைக் கட்டுப்படுத்தலாம்'' என்று சொன்னார்.

Related

விவசாயக்குறிப்புக்கள் 689962121337853526

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item