சமையல் குறிப்புகள்! ஆட்டு ஈரல் கிரேவி
ஆட்டு ஈரல் கிரேவி தேவையான பொருட்கள்: ஆட்டு ஈரல் - கால் கிலோ வெங்காயம் - இரண்டு (பெரியது) தக்காளி - 1 1/2 + பாதி (பெரியது) இஞ்சி பூண்டு விழ...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_243.html
ஆட்டு ஈரல் கிரேவி
தேவையான பொருட்கள்:
ஆட்டு ஈரல் - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு (பெரியது)
தக்காளி - 1 1/2 + பாதி (பெரியது)
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி (தேவைக்கு)
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி (பட்டை, ஏலம், கிராம்பு)
பச்சைமிளகாய் - ஒன்று
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஈரலில் மேலிருக்கும் மெல்லிய தோலை அகற்றி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி அதில் உப்பு, சிறிது வினிகர் சேர்த்து இரண்டு நிமிடம் ஊற வைத்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும்.
வாயகன்ற வாணலி ஒன்றில் ஒரு மேசைகரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
லேசாக இஞ்சி பூண்டு விழுது நிறம் மாறியதும் பொடியாக நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கின ஒன்றரை தக்காளியை சேர்த்து கிளறவும், மீதி உள்ள பாதி தக்காளியை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.
தக்காளி வதங்கியதும் சுத்தம் செய்து தண்ணீர் வடித்து வைத்துள்ள ஈரலை சேர்க்கவும். ஈரல் சேர்த்ததும் ஒரு நிமிடம் நன்கு ஒரு சேர கிளறவும்.
மசாலா வகைகள் (மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, கரம்மசாலா) அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு நிமிடம் முடி போட்டு சிம்மில் வைக்கவும்.
கடைசியாக அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் மீதமுள்ள எண்ணெயை சேர்த்து நன்கு கிளறவும்.
தீயின் அளவை குறைத்து வைத்து மூன்று நிமிடம் கிரேவியை திக்காக விடவும்.அதிக நேரம் வைத்து ஈரலை வேக வைத்தால் ரொம்ப கட்டியாகிடும்.
சுவையான ஆட்டு ஈரல் கிரேவி ரெடி. அறுசுவையில் 600க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள திருமதி. ஜலீலா அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது. இந்த குறிப்பினை அவர் நான்கு ஐந்து முறை செய்து பார்த்து அனைவருக்கும் பிடித்திருந்ததால் இதை நம்முடனும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நாம் ப்ளையின் சாதம், மோர்குழம்புடன் (அ) சாம்பார் இவற்றுடன் தொட்டுக் கொள்ள செய்யலாம்.
ரொட்டி, சப்பாத்தி, பரோட்டாவிற்கும் பொருந்தும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. பிள்ளை பெறும் நேரத்திலும், பிள்ளை பெற்றதும் குறையும் இரத்தத்தின் அளவை அதிகப்படுத்தும்.
இதை சுட்டு சாப்பிட்டால் ரொம்ப நன்றாக இருக்கும். சீக்கிரம் வெந்துவிடும், ஆகையால் கரியை தீமூட்டி எல்லாம் சுட தேவையில்லை. அப்படியே மிளகுதூள் உப்பு தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு கம்பியில் கோர்த்து கேஸ் அடுப்பிலேயே சுடலாம்.
இந்த ஈரலை பல வகையாக செய்யலாம். கீரைசோறு என்னும் ஸ்பேர் பாட்ஸ் ரைஸும் தயாரிக்கலாம்.
Post a Comment