வீட்டிலே இருக்கிறார் வைத்தியர்! மருத்துவ டிப்ஸ்!!

வீட்டிலே இருக்கிறார் வைத்தியர்! மே ற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அரிய வகை மூலிகைகளைத் தேடிக் கண்டுபிடித்து எடுத்து வந்து வளர்ப்பதில்...

வீட்டிலே இருக்கிறார் வைத்தியர்!
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அரிய வகை மூலிகைகளைத் தேடிக் கண்டுபிடித்து எடுத்து வந்து வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டிவருபவர் சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராஜ். நெல்லை, பாபநாசத்தில் பல ஏக்கர் நிலத்தில் வீரமாமுனிவர் மூலிகைப் பண்ணையை நடத்திவருகிறார். இந்தப் பண்ணையிலிருந்து மூலிகைச் செடிகளை ஒரு லட்சம் பேருக்கும் மேல் கொடுத்து வளர்க்கச் செய்கிறார். பள்ளிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவன வளாகங்களில் இவரே மூலிகைச் செடிகளை நடவு செய்வதுடன் அதன் மருத்துவக் குணங்களை விளக்கி, அதனை அங்குள்ள ஊழியர்கள் பராமரிக்கும் சூழலை உருவாக்குகிறார்.

'உடல் ஆரோக்கியத்துக்காக ஒவ்வொரு வீட்டிலும் ஏதேனும் ஒரு மூலிகைச் செடி கட்டாயம் வளர்க்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி விழிப்புஉணர்வு பிரசாரம் செய்து வருபவரிடம், 'வீட்டுத் தொட்டிகளில் எந்த வகையான மூலிகைகளை வளர்க்கலாம்? அந்த மூலிகைகளின் மருத்துவப் பயன் என்ன?’ எனக் கேட்டோம்.  
'அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும்  மூலிகைகள் இருக்கும். தற்போது, பெருநகரங்களில் குடியிருப்பதற்கே சிறிய வீடுதான். இடப்பற்றாக்குறை காரணமாக மூலிகை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால், மக்கள் நினைப்பது போலச் செடிகளை வளர்ப்பதற்கு வீட்டின் முன்பாகவோ அல்லது பின்புறத்திலோ நிறைய இடவசதி தேவை இல்லை. சாதாரணப் பூந்தொட்டிகளில்கூடச் சில முக்கியமான மூலிகைகளை வளர்க்க முடியும். காய்ச்சல், தலைவலி, சிறிய காயம் போன்ற சின்னச் சின்ன உபாதைகளுக்கு ஆஸ்பத்திரிக்கு ஓட வேண்டிய அவசியம் இருக்காது. அதனால் வீட்டுக்கு ஒரு மூலிகையாவது இருந்தால் நோய்களில் இருந்து தப்ப முடியும். அதனை வலியுறுத்தியே எனது பயணம் தொடர்கிறது. இப்போது மக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருவதைப் பார்க்கையில், சீக்கிரத்தில் என் லட்சியத்தை எட்ட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது'' என்கிறார் உற்சாகமாக.
மஞ்சள் கரிசலாங்கண்ணி
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடித்த மூலிகை இது. மஞ்சள்காமாலைக்கு மிகச் சிறந்த மருந்து. வாரத்துக்கு இரண்டு நாள் இந்தக் கீரையில் சட்னி அல்லது துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும். சிறந்த கிருமிநாசினியும்கூட. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். கல்லீரலைப் பலப்படுத்தும். குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுத்திணறல், சளித்தொல்லை, ஆஸ்துமா போன்றவற்றையும் போக்கக்கூடியது.  கீரையை நன்றாகக் கழுவி, உலரவைத்து பொடி செய்து சிறிது சாப்பிட்டு வந்தால், உடல் பொன்நிறமாக மாறும். இலையைக் காய்ச்சி சாறு எடுத்துத் தலையில் தடவி வந்தால், இளநரை மறையும்.
வல்லாரைக் கீரை
வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்பு உள்ளிட்ட தாது உப்புக்கள் இதில் அதிகம். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கும் செயலைச் செய்யும் சக்தி இந்தக் கீரைக்கு இருப்பதால், ஞாபக சக்திக்கு முக்கியப் பங்காற்றுகிறது. உடல் புண்களைக் குணமாக்குவதுடன், மூளை சோர்வைப் போக்கும். நரம்புத் தளர்ச்சிக்கும், இதயத்தைப் பலப்படுத்தவும், தாது விருத்திக்கும் நல்லது. வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால், குடல் புண், குடல் நோய், வாய்ப்புண்கள், வாய் நாற்றம் போன்றவை நீங்கும். கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக் கூடாது.
பிரம்மி
கொடி வகையைச் சேர்ந்த மூலிகை. இதன் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. நரம்பு மண்டலத்தைத் தூண்டி சோர்வை நீக்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். சாஃப்ட்வேர் தொழிலில் பணிபுரிபவர்கள் இந்த மூலிகையை நிச்சயம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதனைச் சாறு எடுத்து நெய் சேர்த்து சாப்பிட்டுவந்தால், நினைவாற்றல் அதிகரிக்கும். இலைகளைக் கசாயம் செய்து குடித்தால், மலச் சிக்கல் தீரும். இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டுவந்தால், குரல் வளம் பெருகும். வேரை அரைத்துக் கொதிக்கவைத்து நெஞ்சில் பூசினால், நாள்பட்ட சளி சரியாகும்.
நிலவேம்பு
சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலை சரிப்படுத்துவதிலும் மூலிகை முதல் பங்கு வகித்தது. கொடி போல் படரக்கூடிய மூலிகை. மூலிகையைப் பொடித்து, கசாயம் செய்து குடித்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மை இதற்கு உண்டு. பசியைத் தூண்டும். சாதாரண வைரஸ் காய்ச்சல் உள்பட அனைத்துக் காய்ச்சல்களையும் குணமாக்ககூடியது. வருமுன் தடுக்கவும் செய்யும்.
பிரண்டை
தொட்டியில் வளர்த்தால் அழகாகப் படர்ந்து நிற்கும். தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரண்டையின் தண்டை துவையல் அரைத்துச் சாப்பிடலாம். இதில் கால்சியம் அதிகம் இருப்பதால், வாரத்துக்கு இரண்டு நாட்கள் சாபிட்டு வந்தால், எலும்புகளும், பற்களும் வலிமை பெறும். மூட்டுவலிக்கு மிகவும் நல்லது. தீராத வயிற்றுப்புண், வயிற்று வலியைப் போக்கும். செரியாமை நோயைக் குணப்படுத்தும். உதடு, நாவில் ஏற்படும் புண்ணை விரைவாகக் குணப்படுத்தும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, உடல் வலியை சுகப்படுத்தும்.
திப்பிலிக்கொடி
திப்பிலி எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டுவந்தால், இருமல், தொண்டைக் கமறல், பசியின்மை, தாது இழப்பு ஆகியவை குணமாகும். இரைப்பை, கல்லீரல் வலுப்பெறும். தேமல் நோய் மறையும். திப்பிலிப் பொடி, கடுக்காய் பொடியை சம அளவில் கலந்து இலந்தைப்பழ அளவுக்கு இரண்டு வேளையாக மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இளைப்பு நோய் இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போகும்.
ஓமவல்லி
கற்பூரவள்ளி என்றும் அழைக்கப்படும். வீட்டுத் தொட்டியில் வளர்க்க எட்டு மாதங்கள் ஆகும். இலை கசப்பு சுவையும் காரத்தன்மையும் கொண்டது. இதன் இலை மற்றும் தண்டுப்பகுதி இருமல், சளி, ஜலதோஷத்துக்கு முக்கியமான மருந்து. இதன் இலையைச் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சீதள இருமல் நோய் தீரும். இலைச் சாறை நெற்றியில் பத்து போட்டால், தலைவலி நீங்கும். குழந்தைகளின் அஜீரண வாந்தி நீக்கும். கண் அழற்சிக்கும் உகந்தது. மனக் கோளாறை சரிசெய்யும் மருந்திலும் இந்த மூலிகை பயன்படுத்தப்படுகிறது. இலையைக்கொண்டு பஜ்ஜி சுட்டுச் சாப்பிடலாம்.
துளசி
வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகளில் துளசி முக்கியமானது. இதன் இலைகளில் இரண்டை நாள் தோறும் சாப்பிட்டுவந்தால், குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் வாழ்நாள் முழுவதும் வராது. கிருமிநாசினி.
துளசி இலையைப் போட்டு ஊறவைத்த தண்ணீரை தொடர்ந்து பருகி வந்தால், சர்க்கரை நோய் நம்மை நெருங்காது. குளிக்கும் நீரில் முந்தைய நாளே போட்டுக் குளித்தால், உடலில் வியர்வை நாற்றம் ஏற்படாது. மன இறுக்கம், ஞாபக சக்தி இன்மை, நரம்புக் கோளாறு, ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி துளசிக்கு உண்டு.
தூதுவளை
இதன் இலை, பூ, காய், வேர் என அனைத்துமே மருத்துவக் குணம்கொண்டது. தூதுவளை இலையைப் பறித்து வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால், உடலுக்கு வலுவை கூட்டும். இருமல், சளி நீங்கும். ஆண்மை சக்தியை அதிகரிக்கும்.
வாதப் பித்தத்தைச் சரிப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தி பலப்படும். தூதுவளையை நன்றாக அரைத்துத் தோசை மாவுடன் கலந்து அடை போலச் செய்து சாப்பிட்டால், ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். காது மந்தம், நமைச்சல், வயிறு மந்தம் போன்ற பிரச்னைகளுக்குச் சிறந்த மருந்து.
நொச்சி
கொசுக்கள் அருகில் வராது என்பதால், தமிழக அரசும் இதனை வீடுகளில் வளர்க்கும்படி பரிந்துரைக்கிறது. இலையைச் சூடான நீரில் போட்டு ஆவி பிடித்தால், தலைவலி, காய்ச்சல், சளித்தொல்லை, கை கால் வலி நீங்கும். இரவில் தலையில் வைத்துப் படுத்தால், தலைவலி, தலை நீர், தலை பாரம், நரம்பு வலி, கழுத்து வீக்கம், மூக்கடைப்பு போன்றவை குணமாகும். இதன் சாறை உடலில் இருக்கும் கட்டிகளின் மீது இரவு நேரத்தில் பற்று போட்டுவந்தால், கட்டிகள் மறைந்துவிடும். நொச்சி சாறைத் தேய்த்தால் நரம்பு பிடிப்பு, இடுப்பு வலி நீங்கும். இலைகளை அரைத்து மூட்டுகளில் கட்டினால், நாள்பட்ட மூட்டுவலி தொல்லையில்  இருந்து விடுபடலாம்.

Related

மூலிகைகள் கீரைகள் 9072850114111771062

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item