அன்பு காட்டும் ஓர் அறக்கட்டளை --உபயோகமான தகவல்கள்
அன்பு காட்டும் ஓர் அறக்கட்டளை நிவாரணம் மட்டுமல்ல நிம்மதியும் ! மார்பக மற்றும் கர்ப்பப்பை, கர்ப்பவாய் ...

''பொறுத்துக் கொள்ள முடியாத அந்த கேன்சர் வலியை, நாங்கள் குறைக்கிறோம்!'' என்றபடி மருத்துவ சேவையாகவே அப்பணியைச் செய்து கொண்டிருக்கிறது சென்னை யில் உள்ள, 'லஷ்மி வலி மற்றும் ஆதரவுமருத்துவ அறக்கட்டளை' (Lakshmi Pain and Palliative Care Trust).
'காலணிகளை அணிந்தபடியே உள்ளே வரவும்!’ என்று கிளினிக் முகப்பில் எழுதப்பட்டிருக்கும் வாசகமே, அந்த மையம் காட்டும் அரவணைப்பின் ஆழத்தை நன்றாகவே புரிய வைக்கிறது.
''ஒருமுறை... முதுகுவலியால துடிச்சு போனாங்க அப்பா. பல இடங்கள்ல தொடர்ந்து ட்ரீட்மென்ட் கொடுத்தும், குணப்படுத்த முடியல. கேரள மாநிலம், கோழிக்கோடுல இருக்கற 'பெயின் அண்ட் பாலியேடிவ் சொஸைட்டி’யில் சிகிச்சை எடுக்க வெச்சு, வலியைக் குறைச்சு சரிப்படுத்தினோம்.
- அழகாக ஆரம்பிக்கும் அறக்கட்டளையின் 'டிரஸ்டி', டாக்டர் மல்லிகா திருவதனன், கடந்த 2000-ல் தொடங்கிய மையம் இது. இதைத் தொடங்குவதற்கு முன், ஆஸ்திரேலியா சென்று முறையே 'டிப்ளமா இன் பாலியேடிவ் மெடிசின் கோர்ஸ்’ பயிற்சி பெற்றே தொடங்கியிருக்கிறார்.
''இன்னிக்கு இருக்கற நோய்கள்ல, 40 சதவிகித நோய்கள்... முறையான ஆதரவு இல்லாத காரணத்தினாலேயே அதிகரிச்சதுதான். நோயுற்றவங்களுக்கு கொடுக்கப்படும் மனரீதியான ஸ்பெஷாலிட்டி ரொம்பவே முக்கியம். கேன்சர் மாதிரியான நோய்கள்ல தொடர்ந்து இருக்குற வலியே... மிகப் பெரிய வியாதி. சர்ஜரி, மாத்திரை இதுங்களால மட்டும் அதுக்கான தீர்வைக் கண்டுட முடியாது. கனிவான அரவணைப்பு ரொம்ப அவசியம். அதனை மருத்துவர்கள்தான் கொடுக்க முடியும். அதைச் சரியா செய்றோம்கிற திருப்தி... எங்களுக்கு நிறையவே உண்டு!''
- அக்கறையோடு பகிர்ந்தார்.
டிரஸ்டிகளில் ஒருவரான டாக்டர் சுபத்ரா, ''நோய்கூட இருந்துட்டுப் போகட்டும். ஆனா... உயிர் நோக வைக்கிற இந்த வலியைக் குறைக்க முடியாதா..?னு வேதனையோடு புலம்புறவங்களுக்கு, நாங்க கொடுக்கற வலி நிவாரண சிகிச்சைதான் இந்த கிளினிக்கோட சிறப்பு. ட்ரீட் மென்ட்டுக்காக இங்க வர்றவங்கள முதல்ல மனம்விட்டு பேசச் செய்வோம். அந்த நேரம் அவர்களுக்கு வலி இருக்கும்பட்சத்தில்... குறிப்பிட்ட சில வலிநிவாரணிகளை கொடுத்து, ரிலீஃப் செய்றோம் (இந்த மாத்திரைகள், எல்லா மருந்துக் கடைகளிலும் கிடைக்காது). தொடர்ந்து வலி, வாந்தினு இருந்தா... பரிசோதனை செய்து, உரிய மருந்து, மாத்திரை களைக் கொடுப்போம்.
கேன்சர்னு தெரிஞ்சதுமே மருந்து, மாத்திரை எடுத்துக்கறதுதான் நல்லது. ஆனா, நோய் முத்தின நிலையில வர்றவங்கதான் ஜாஸ்தி. வசதியற்ற ஏழைகளுக்கு இலவசமாவே சிகிச்சை தர்றோம். வசதியுள்ளவங்க, விருப்பப்பட்டு பணம் கொடுப்பாங்க. இதைத் தவிர... எங்களோட இந்தப் பணியைப் பாராட்டி சில டிரஸ்ட்கள், நெருக்கமான நண்பர்கள்னு பலரும் உதவுறாங்க. இப்பணியை இன்னும் விரிவுபடுத்தி, கிராமம் கிராமமா விழிப்பு உணர்வை உண்டாக்கவும், இது சார்ந்த எஜுகேஷன் புராஜெக்ட்ஸ் செய்யவும் திட்டமிட்டிருக்கோம். அதுக்கு... இன்னும் பல கரங்கள் இணையணும்னு விரும்புகிறோம்!''
- எதிர்பார்ப்போடு சொன்னார் சுபத்ரா.
இங்கே சிகிச்சை பெரும் பலரின் பாராட்டுதல்களும், இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றே தோன்றுகிறது. ''மூணு வருஷமா மார்பகப் புற்றுநோயால அவதிப்பட்டுக்கிட்டு இருக்கேன். வலி கதறி அழ வைக்கும். இந்த கிளினிக் பத்தி தெரியவந்தப்போ, 'பெரிய பெரிய ஹாஸ்பிட்டல்ல எல்லாம் பார்க்காததையா இங்க பார்த்துடப் போறாங்க’னு நினைச்சுதான் வந்தேன். ஆனா... இவங்க கொடுத்த மாத்திரையும், எம்மேல காட்டின அக்கறையும் ரெண்டே நாள்ல வலியை குறைய வெச்சுருக்கு. ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் நிம்மதியை உணர்றேன். எங்க குடும்ப நிலைமையைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, இலவசமா மருத்துவம் பார்க்கறாங்க. இப்போ பத்து நாட்களுக்கு ஒருமுறை இங்க வந்து போயிட்டு இருக்கேன். இவங்களுக்கு இந்த ஜென்மம் முழுக்க நான் நன்றி சொல்லணும்னு தோணுது!''
என்று உருகுகிறார்... சென்னையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்து.
Post a Comment