30 வகை கிராமத்து பலகாரங்கள்!
இதுவும் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்தாங்க.. 30 வகை கிராமத்து பலகாரங்கள்! பள்ளிக்கு விடுமுறை விட்டதுமே பாட்டி வீட்டுக்குப் பறந்தோடிப் போகும் உங்களின...
https://pettagum.blogspot.com/2011/05/30_26.html
இதுவும் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்தாங்க..
30 வகை கிராமத்து பலகாரங்கள்!
பள்ளிக்கு விடுமுறை விட்டதுமே பாட்டி வீட்டுக்குப் பறந்தோடிப் போகும் உங்களின் குழந்தைப் பருவம் ஞாபகம் இருக்கிறதா? புதிதாக உருவான தோழிகள் கூட்டத்துடன் விளையாடும் தாயமும், தாத்தா போடும் விடுகதைகளும், உட்கார்ந்தால் நின்றால், சிரித்தால், நடந்தால் வந்து விழும் சொலவடைகளும்.. இந்த லிஸ்ட்டில் கட்டாயம் இடம் பெறும் பாட்டியின் அன்பையும் ஆசையையும் குழைத்துச் செய்யப்பட்ட பலகாரங்களும்!
இன்றைய அவசர யுகத்தில் கிட்டத்தட்ட கேட்பதற்கே அபூர்வமாகி-விட்ட இதுபோன்ற கிராமத்துப் பலகாரங்களைத்தான் அவற்றின் பாரம்பரியம் மாறாமல் தனக்கே உரித்தான ஸ்பெஷல் கைப்பக்குவத்தில் கொடுத்திருக்கிறார் சமையல் திலகம் !
உங்கள் நாக்குக்கு மட்டுமல்ல.. உடலுக்கும் தெம்பூட்டும் இந்தப் பலகாரங்களை செய்து பரிமாறி, மகிழுங்கள்!
-------------------------------------------------------------------------------
கருப்பட்டி பணியாரம்
தேவையானவை: பச்சரிசி - 2 கப், கருப்பட்டி - இரண்டு டம்ளர், நெய் - சிறிதளவு.
செய்முறை: அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டி நிழலில் பதினைந்து நிமிடம் உலர்த்தவும். மிக்ஸியில் நைஸாக அரைத்து சலித்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். பாகு ஆறியதும் மாவில் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். தோசைக்கல் காய்ந்ததும், சிறிது மாவை எடுத்து தட்டி சுற்றிலும் நெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.
________________________________________
அசட்டு இனிப்பு முறுக்கு
தேவையானவை: பச்சரிசி மாவு - 2 கப், சர்க்கரை - அரை கப், தேங்காய்ப் பால் - ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தமாவு - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி மாவு, உளுத்தமாவு இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும். சர்க்கரையைப் பொடி செய்து அதனுடன் சேர்க்கவும். உப்பு, நெய் சேர்த்து தேங்காய்ப் பாலை சிறிது சிறிதாக விட்டு பிசையவும். முறுக்கு நாழியில் பிழிந்து மிதமான தீயில் வைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இது உப்பு, இனிப்பு என புது சுவையில் இருக்கும்.
________________________________________
ஓலைக் கொழுக்கட்டை
தேவையானவை: பதப்படுத்திய அரிசி மாவு - ஒரு கப், சர்க்கரை - அரை கப், தேங்காய் துருவல் - அரை கப், குழையாமல் வேக வைத்த பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசி மாவுடன் சர்க்கரை, தேங்காய் துருவல், வெந்த பாசிப்பருப்பு, நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு, அதில் சிறிது வெந்நீரை ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பத்து நிமிடம் ஆறவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிய ஓலைக்குள் நீளவாக்கில் வைத்து மற்றொரு ஓலைத் துண்டால் மூடி சிறு நூல் கொண்டு கட்டி விடவும். பிறகு, ஆவியில் வேக வைத்து, பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.
________________________________________
தேங்காய் பால் கருப்பட்டி ஆப்பம்
தேவையானவை: பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப், கருப்பட்டி (அ) வெல்லம் - ஒரு கப், தேங்காய்ப் பால் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், அவல் (அ) வெந்த சாதம் - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: அவலை தனியாக ஊற வைக்கவும். வெல்லம் தவிர, மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக ஊற வைக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கரைத்து புளிக்க வைக்கவும். 8 மணி நேரம் புளித்ததும், கருப்பட்டியை தட்டிப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைத்துக் கொள்ளவும். சூடாக இருக்கும்போது மாவில் விட்டு கரைத்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் ஒரு சிட்டிகை ஆப்பசோடா சேர்த்துக் கொள்ளலாம். தோசைக்கல்லில் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.
________________________________________
மசால் வடை
தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், துவரம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், பொடியாக நறுக்கிய புதினா - மல்லித்தழை - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
அரைத்துக் கொள்ள: பூண்டு - 4 பல், சோம்பு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1.
செய்முறை: கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் ஊறிய கடலைப்பருப்பை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள கடலைப்பருப்புடன் துவரம்பருப்பை சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்த பொருட்களை ஓன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெய் நீங்கலாக எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும், மிதமான தீயில் மெல்லிய வடைகளாக தட்டிப் போட்டு, இருபுறமும் திருப்பி நன்கு வேக விட்டு எடுக்கவும்.
________________________________________
முருங்கைக்கீரை இனிப்பு அடை
தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், உருவிய முருங்கைக்கீரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வெல்லம் - அரை கப், பொடியாக நறுக்கிய தேங்காய் - கால் கப், விருப்பப்பட்டால் சுக்குப் பொடி - ஒரு சிட்டிகை, நெய் - தேவையான அளவு.
செய்முறை: முருங்கைக்கீரை, ராகி மாவுடன் ஏலக்காய்த்தூள்,பொடியாக நறுக்கிய தேங்காய், சுக்குப்பொடி சேர்த்து கலக்கவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும், சூடாக வடிகட்டி மாவில் ஊற்றி, நன்றாக பிசைந்து கொள்ளவும். வெல்லத் தண்ணீர் போதவில்லையென்றால், அதில் சுடுநீரை சேர்த்துக் கொள்ளலாம். ஒரு பிளாஸ்டிக் ஷீட் (அ) வாழை இலையின் மேல் பிசைந்த மாவை சிறிது எடுத்து தட்டவும். தோசைக்கல் காய்ந்ததும் அதில் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு, மிதமான தீயில், இருபுறமும் திருப்பி போட்டு, வெந்ததும் எடுக்கவும்.
________________________________________
ஆட்டி செய்யும் கொழுக்கட்டை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு - ஒரு டீஸ்பூன், ஜவ்வரிசி - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, சர்க்கரை - 2 டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, ஜவ்வரிசி, பாசிப்பருப்பு மூன்றையும் தனித் தனியே ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை ஆட்டுக்கல்லில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடைசியில் ஆட்டுக்கல்லை கழுவி அந்த தண்ணீரில் அரைத்த மாவுடன் கரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் ஊறிய ஜவ்வரிசி, பாசிப்பருப்பு, தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்க்கவும். கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தை வெடிக்கவிட்டு, மாவை ஊற்றி மிதமான தீயில் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். மாவு உருண்டு திரண்டு வந்ததும், இறக்கி ஆற வைத்து கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
________________________________________
புட்டரிசி நீர் கொழுக்கட்டை
தேவையானவை: புட்டரிசி - ஒரு கப், தேங்காய்ப் பால் - அரை கப், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு, விருப்பப்பட்டால் சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: புட்டரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து வெண்ணெய் போல் அரைத்து, சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைத்துக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும், கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி, சுற்றிலும் நெய் ஊற்றி நன்றாகக் கிளறி, கெட்டியாக வேக வைத்துக் கொள்ளவும். வெந்ததும் இறக்கிவைத்து ஆற விட்டு சிறு உருண்டைகளாக உருட்டவும். அடுப்பில் 3 டம்ளர் தண்ணீரைக் கொதிக்கவைத்து, உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும். வெந்ததும், தேங்காய்ப் பாலை விட்டு சீரகம் போட்டு, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்கவும்.
தண்ணீருடன் சாப்பிட சுவையாக இருக்கும் இந்தக் கொழுக்கட்டை.
________________________________________
சிலோன் புட்டு
தேவையானவை: பச்சரிசி - 2 கப், தேங்காய் துருவல் - அரை கப், முளைகட்டிய பாசிப்பயறு - அரை கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, நிழலில் உலர்த்தவும். பிறகு, நைஸ் ரவையாக அரைத்து லேசாக வறுத்து சலித்துக் கொள்ளவும். சிறிது தண்ணீரில் உப்பை கரைத்து, வறுத்த மாவில் தெளித்து, பயறு, தேங்காய் துருவல் சேர்த்து பிசறிக் சல்லடையினால், சலித்து இட்லி தட்டில் வைத்து வேக விடவும். அல்லது குழாய் புட்டு குழலில் முதலில் பிசறிய மாவு, தேங்காய், பயறு என்ற வரிசையில் சேர்த்து, மூடி போட்டு ஆவியில் வேக விடவும்.
இதை அப்படியே சாப்பிடலாம்.
________________________________________
சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், சர்க்கரை வள்ளிக்கிழங்கு துருவல் - அரை கப், பச்சைமிளகாய் - 2, சின்ன வெங்காயம் - 5 முதல் 6, சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது, நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஊற வைத்து நைஸாக அரைத்து கொள்ளவும். அரைக்கும்போதே கறிவேப்பிலை, நெய் நீங்கலாக எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து தோசைக்கல் காய்ந்ததும் வட்டமாக தட்டி சுற்றிலும் நெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.
________________________________________
மசால் வடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், புளித்த தயிர் - ஒரு கப், சின்ன வெங்காயம் - 10, மோர் மிளகாய் - 4 முதல் 5, கறிவேப்பிலை - சிறிது, கடுகு - அரை டீஸ்பூன், உளுந்து - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தயிர் சேர்த்து அரைத்து நீர்க்க கரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மோர் மிளகாயை இரண்டாக கிள்ளிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், மோர்மிளகாயை போட்டு, நிறம் மாறியதும், கடுகு, உளுந்து சேர்க்கவும். உளுந்து பொன்னிறமானதும், அதில் கரைத்து வைத்துள்ள மாவை சேர்த்துக் கிளறவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கவும்.
________________________________________
இனிப்பு சீயம்
தேவையானவை: மேல் மாவுக்கு : பச்சரிசி - அரை கப், உளுந்து - அரை கப், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.
பூரணத்துக்கு: பாசிப்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கி வறுத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக ஊற விடவும். பாசிப்பருப்பை குழையாமல், மலர வேக வைக்கவும். தண்ணீரை முற்றிலும் வடித்து, அதில் சர்க்கரை, தேங்காய் சேர்த்து எல்லாம் சேர்ந்தாற் போல் வரும்வரை கிளறவும். முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, ஆற வைத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பூரணம் ரெடி. ஊற வைத்த அரிசி, உளுந்தை, வடைக்கு அரைப்பது அரைத்து, கடைசியில் உப்பு சேர்த்து எடுக்கவும். எண்ணெய் காய்ந்ததும், செய்து வைத்த உருண்டையை, மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
________________________________________
கப்பக்கிழங்கு பணியாரம்
தேவையானவை: கப்பக்கிழங்கு துருவல் - 2 கப், மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்துருவல் - அரை கப், வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், நெய் - சிறிதளவு, சர்க்கரை - விருப்பத்துக்கு கேற்ப.
செய்முறை: கப்பகிழங்கு துருவலுடன், தேங்காய், சர்க்கரை, மைதா மாவு வெனிலா எசன்ஸ் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். குழிப்பணியார குழியில் சிறிது நெய் விட்டு, அரைத்த மாவை சிறிது சிறிதாக ஊற்றவும். மிதமான தீயில் மூடி போட்டு நன்கு வேக விடவும். மறுபுறம் திருப்பி நன்கு வேக வைத்து எடுக்கவும்.
முதல் நாள் செய்து மறுநாள் சாப்பிட டேஸ்ட்டியாக இருக்கும்.
________________________________________
சர்க்கரை அதிரசம்
தேவையானவை: பச்சரிசி - 2 கப், சர்க்கரை - ஒண்ணேகால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியை களைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து, மெஷினில் கொடுத்து பொடியாக அரைக்கவும். சர்க்கரையில் அரை கப் அளவு தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து இளம்பாகாக காய்ச்சவும் (தன்ணீருக்குள் விட்டு எடுத்து பார்த்தால் உருட்ட வரும்). பிறகு இறக்கி, அரைத்த மாவைக் கொட்டி ஏலக்-காய்த்தூள், நெய் சேர்த்துப் பிசையவும். ஆற வைத்து அதிரசம் போல் தட்டி, எண்ணெயில் பொரித்-தெடுக்கவும்.
________________________________________
அச்சு முறுக்கு
தேவையானவை: மைதா - ஒரு கப், சர்க்கரை - அரை கப், தேங்காய் பால் - ஒரு கப், வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன் (அ) ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறுப்பு எள்ளு - ஒரு டேபிள்ஸ்பூன், ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை.
செய்முறை: மைதாமாவுடன் எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு நீர்க்க கரைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், அதில் அச்சு முறுக்கு கரண்டிகளை வைத்து சூடாக்கவும். இந்த சூடான கரண்டிகளை மாவில் முக்கால் பாகம் மூழ்கும் அளவுக்கு நனைக்கவும். ஒட்டி கொண்ட மாவுடன், திரும்பவும் கரண்டியை எண்ணெயில் விடவும். ஒட்டிய பாகம் வெந்து வெளியில் வந்துவிடும். திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும்.
சர்க்கரை சேர்ப்பதால் ‘சட்’டென்று கருகிவிடும். மிதமான தீயில் வேகவிடவேண்டும்.
________________________________________
கம்பு வடை
தேவையானவை: கம்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா அரை கப், புழுங்கல் அரிசி - கால் கப், பச்சைமிளகாய் - 4 அல்லது 5, இஞ்சி - ஒரு துண்டு, கறிவேப்பிலை - சிறிது, பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கம்பை நன்றாக களைந்து அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கவும். உளுந்து, கடலைப்பருப்பை ஒன்றாக ஊற வைக்கவும். கம்பு, அரிசியை கெட்டியாக அரைத்து பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கடைசியில் ஊறிய உளுந்து, கடலைப்பருப்பை அதில் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் வெங்காயம் சேர்த்து பிசைந்து சின்ன சின்ன வடைகளாக தட்டிப் பொரித்தெடுக்கவும்.
இந்த வடை சூடாக சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும்.
Post a Comment