இரட்டைச் சம்பளம் எப்படி திட்டமிடலாம்..?...சேமிப்பின் சிறப்பு,
கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது என்பதில் எந்த சந்...

https://pettagum.blogspot.com/2013/04/blog-post_8768.html
கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளில்
இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது என்பதில் எந்த
சந்தேகமுமில்லை. இந்தப் பொருளாதார வளர்ச்சியினால் சாதாரண மனிதர்கள் முதல்
அனைவரின் சம்பாத்தியமும் குறிப்பிட்டுச் சொல்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது.
பிற வளர்ந்த நாடுகளைப்போல நமது பொருளாதாரமும் வளர வளர, பெண்கள் வேலைக்குச்
சென்றோ அல்லது தொழில் செய்தோ சம்பாதிப்பதும் அதிகமாகி வருகிறது.
பல ஆண்டுகாலமாக ஒரு சம்பாத்தியமாக இருந்த வீடுகளில்
இன்று இருவர் சம்பாதிப்பது சகஜமாகிவிட்டது. ஒருவர் சம்பாதிக்கும்
வீடுகளிலும் மாதத்திற்கு ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பவர்கள்
இன்று பல லட்சம் பேர் இருக்கிறார்கள். மொத்தத்தில், உயர்மட்ட நடுத்தர
வர்க்கத்தினர் (அப்பர் மிடில் கிளாஸ்) குடும்பங்களின் எண்ணிக்கை இன்று நம்
நாட்டில் கணிசமாக அதிகரித்துள்ளது.
சம்பாத்தியம் உயர உயர செலவுகள் அதிகமானாலும், பலருக்கு
சர்ப்ளஸாக மிஞ்சி நிற்கும் தொகையும் அதிகமாகியுள்ளது. சர்ப்ளஸாக மிஞ்சி
நிற்கும் பணத்தைச் சேமிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாலும், அதிக
சர்ப்ளஸ் உள்ளவர்கள் இன்னும் அதிகமாகச் சேமிக்க / முதலீடு செய்ய
முடியும்.
இந்த வர்க்கத்தினருக்கு குறைந்தபட்ச தேவைகளான
குழந்தைகளின் கல்விச் செலவு, அன்றாட வீட்டுச் செலவுகள், வீட்டிற்கான
இ.எம்.ஐ போன்றவற்றை செலுத்திய பிறகு இருக்கும் மிச்சப் பணத்தை எவ்வாறு
திட்டமிடுவது? என இன்றைக்கு பல குடும்பஸ்தர்களின் மனதில்
இருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தான் இந்தக் கட்டுரை. அதிக
வருமானம்கொண்ட இந்த ஹை இன்கம் குடும்பத்தினர் எப்படி தங்கள் குடும்ப நிதித்
திட்டமிடலை செய்துகொள்ளலாம்? எந்தெந்த முதலீட்டுக்கு எவ்வளவு
முக்கியத்துவம் தரலாம் என்பது பற்றி விளக்கமாகவே சொல்கிறேன்.
என்ன செய்யவேண்டும்?
இன்ஷூரன்ஸ்!
அதிக வருமானம்கொண்ட இந்த ஹை இன்கம் குடும்பத்தினர்
பொதுவாக நன்றாகச் செலவழித்துப் பழகியிருப்பார்கள். அவர்களின் வீட்டுக் கடன்
அதிகமாக இருக்கும். ஆகவே, குடும்பத்தில் சம்பாதிக்கும் நபருக்கு
உயிரிழப்பு நேர்ந்தால்/ நோய்வாய்ப்பட்டால்/ முழுவதுமாகவோ அல்லது உடலின் சில
பாகங்கள் செயலிழந்தாலோ அவர்களின் வருவாய் பாதிக்கப்படும். அதுபோன்ற
சமயங்களில் நன்றாகச் செலவழித்துப் பழகிய குடும்பங்களுக்கு, அந்த
அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள பல காலமாகும். அப்போது ஏற்படும் நிதியிழப்பு
பேரிழப்பு ஆகும்.
இந்த இழப்பை சரிசெய்வதற்கு போதுமான அளவு காப்பீடு
எடுத்துக்கொள்வது அவசியம். ஆண் / பெண்ணின் ஆண்டுச் சம்பாத்தியத்தைப் போன்று
குறைந்தது 10 மடங்கு ஆயுள் காப்பீடு, போதுமான அளவு மருத்துவக் காப்பீடு
மற்றும் விபத்துக் காப்பீடு போன்றவற்றை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எமர்ஜென்ஸி பணம்!
பொதுவாக, ஹை இன்கம் குரூப்பில் இருப்பவர்களுக்கு வேலை
பளு மற்றும் அழுத்தம் அதிகமாக இருக்கும். மேலும், வேலையில் தவறுகள்
நிகழும்போது இவர்கள் அத்தவறுகளைச் செய்திருக்காவிட்டால்கூட, அதற்கான
பொறுப்பை ஏற்கவேண்டிய நிலையில் இருப்பார்கள். மொத்தத்தில், இந்த
குரூப்பிற்கு வேலையில் உள்ள ரிஸ்க் அதிகம். ஆகவே, போதுமான அளவு எமர்ஜென்ஸி
பணம் இவர்கள் கையில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு வேலை போனால், பிடித்தமான
இன்னொரு வேலை கிடைப்பதற்கு எப்படியும் ஆறு மாத காலம் ஆகிவிடும். ஆகவே,
உங்களின் ஆவரேஜ் மாதாந்திர செலவுகளைப் போல் ஆறு மடங்கை எமர்ஜென்ஸிக்காக
வைத்துக்கொள்வது நல்லது. சற்று அதிக வருமானத்தை விரும்புவோர், இப்பணத்தை
மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள லிக்விட் அல்லது அல்ட்ரா ஷார்ட்டேர்ம்
திட்டங்களில் முதலீடு செய்துகொள்ளலாம். அல்லது வங்கி டெபாசிட்களில்
வைத்துக்கொள்ளலாம்.
வேலையை விடப் போறீங்களா?
சில குடும்பங்களில் பெண்கள், குழந்தைகள் பள்ளிச்
செல்லும் வயது வரும்பொழுது குழந்தைகளின் நலனுக்காக வேலையைவிட்டு வீட்டில்
இருக்க விரும்புவார்கள். அப்படி ஒரு யோசனை இருப்பின், சில ஆண்டுகளுக்கு
முன்பே இதற்காகத் திட்டமிடுவது நல்லது. ஒருவர் சம்பாத்தியத்தில் குடும்பம்
நடத்திப் பழகவேண்டும். மேலும், வீட்டுக் கடன் மற்றும் பிற கடன்களை
முழுவதுமாக அடைத்துவிடுவது நல்லது. இரு சம்பளமாக இருக்கும்பொழுதே
எதிர்காலத் தேவைகளுக்கான முதலீட்டை சற்று தீவிரமாக (அக்ரெஸிவ்-ஆக) ஆக்கிக்
கொள்ளுங்கள்.
பிஸினஸ் செய்ய ஆசை!
இரு சம்பாத்தியம் இருக்கும் இன்னும் சில
குடும்பங்களில், ஆண் அல்லது பெண் வேலையை விட்டுவிட்டு சொந்தமாகத் தொழில்
தொடங்க ஆசைப்படுவார்கள். சுயமாகத் தொழில் துவங்கும்பொழுது ஒரு சம்பாத்தியம்
குறைவதுடன், புதிதாக தொழில் துவங்கி அதை அடுத்த இரண்டு, மூன்று
வருடங்களுக்கு நடத்துவற்கான பணமும் தேவைப்படும். இந்த ஆசையும் சற்று
முன்னதாகவே திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது.
நன்றாகச் சம்பாதிக்கும்பொழுதே, உங்களின் எதிர்காலத்
தேவைகளான ரிட்டையர்மென்ட், குழந்தைகள் கல்வி மற்றும் திருமணத்திற்கான
முதலீடுகளை சற்று தீவிரமாக, குறுகிய காலகட்டத்தில் செய்துகொள்ளுங்கள்.
அவ்வாறு செய்வதால் பிற்காலத்தில், நீங்கள் வேலையை விட்டு தொழில் செய்ய
செல்வதற்கு வசதியாக இருக்கும். மேலும், பெண்கள் வேலையை விட்டுவிட்டு,
குழந்தைகளுடன் வீட்டில் இருப்பதற்கும் வசதியாக இருக்கும்.
வரியைச் சேமிக்க!
ரிஸ்க் இல்லாத முதலீடுகள்!
1. பி.பி.எஃப்.!
பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் நிரந்தர வருமானம் தரக்கூடிய
திட்டங்களில் ஓர் அருமையான முதலீடு ஆகும். செய்யும் முதலீடு, வரும் வட்டி
மற்றும் மெச்சூரிட்டி ஆகிய மூன்றுக்குமே வரி கிடையாது. வருடத்திற்கு நபர்
ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்தை முதலீடு செய்துகொள்ளலாம். கணவன்,
மனைவி ஆகிய இருவரும் இரண்டு கணக்குகளை ஆரம்பித்து, இத்திட்டத்தில்
உச்சபட்ச தொகையை முதலீடு செய்து வரலாம். இதற்கு 80சி பிரிவின் கீழ்
வரிவிலக்கும் கிடைக்கும்.
2. எஃப்.எம்.பி. திட்டங்கள் !
மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள எஃப்.எம்.பி. திட்டங்கள்
வங்கி எஃப்.டி.களைப்போல் செயல்படும். இன்றைய பணவீக்கத்தோடு ஒப்பிடுகையில்,
வருமான வரி மிகக் குறைவாக செலுத்தினால் போதும். ஏனெனில், ஒரு
வருடத்திற்குமேல் முதலீடு செய்யும்போது, பணவீக்கத்தை அட்ஜஸ்ட் செய்தபிறகு
உள்ள வருமானத்திற்கு 20% வரி கட்டினால் போதும். அல்லது வரும்
வருமானத்திற்கு 10% வரி கட்டினால் போதும்.
3. கிரெடிட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் திட்டம் !
எஃப்.எம்.பி. திட்டங்கள் குறிப்பிட்ட காலகெடுவிற்குள்
வந்து, குறிப்பிட்ட காலத்தில் முதிர்ச்சி அடையும். அவ்வாறில்லாமல்
மியூச்சுவல் ஃபண்டுகளிலேயே எப்பொழுது வேண்டுமானாலும் முதலீடு செய்து,
எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேறக்கூடிய கிரெடிட் ஆப்பர்ச்சூனிட்டீஸ்
திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டுகளில் 15-18 மாதங்கள்
லாக்-இன் இருக்கும். ஓர் ஆண்டிற்கு மேல் முதலீட்டில் இருந்துவரும்
லாபத்திற்கு, பணவீக்கத்திற்கான அட்ஜஸ்ட்மென்ட் செய்தபிறகு 20% வரி
கட்டினால் போதும்.
4. டீப் டிஸ்கவுன்ட் பாண்ட் !
மேலே கூறிய வரி வரம்பிலேயே வரக்கூடிய நபார்டு
வெளியிடும் டீப் டிஸ்கவுன்ட் (ஜீரோ கூப்பன்) பாண்டுகளிலும் முதலீடு
செய்யலாம். இந்த பாண்டுகள் பொதுவாக 10 வருட காலத்திற்கு
வெளியிடப்படுகின்றன.
5. டாக்ஸ் ஃப்ரீ பாண்டு !
பல பொதுத்துறை முன்னணி நிறுவனங்கள் டாக்ஸ் ஃப்ரீ
பாண்டுகளை வெளியிடுகின்றன. இவை பொதுவாக 10/15 ஆண்டுகளுக்கு
வெளியிடப்படுகின்றன. இவற்றில் இருந்துவரும் வட்டி வருமானத்திற்கு, வரி
ஏதும் செலுத்த வேண்டாம்.
ரிஸ்க் உள்ள முதலீடுகள் !
இனி ரிஸ்க் உள்ள முதலீடுகள் பற்றி பார்ப்போம்.
1. பங்குச் சந்தை !
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளில்
முதலீடு செய்து, ஒரு வருடத்திற்கு மேல் வைத்திருந்தால், விற்கும்பொழுது
கிடைக்கும் லாபத்திற்கு எந்தவிதமான வரியும் செலுத்தவேண்டாம். மேலும்,
அப்பங்குகளில் இருந்து கிடைக்கும் டிவிடெண்டிற்கும் வரியில்லை.
2. மியூச்சுவல் ஃபண்ட் !
நேரடியாக பங்கு முதலீட்டில் விருப்பமில்லா தவர்கள்,
பங்கு சார்ந்த நல்ல டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் தாராளமாக
முதலீடு செய்யலாம். ஒரு வருடத்திற்கு மேல் முதலீடு செய்திருக்கையில், இந்த
முதலீட்டிலிருந்து வரும் வருமானத்திற்கும்,
டிவிடெண்டிற்கும் முதலீட்டாளர்கள் வரிச் செலுத்த வேண்டாம்.
3.ஆர்.ஜி.இ.எஸ்.எஸ். !
மேலே கூறிய இரண்டு ஆப்ஷன்களிலும், ஆண்டு மொத்த வருமானம்
ரூ.12 லட்சத்திற்குள் இருப்பவர்கள், முதன்முறையாக முதலீடு செய்யும்
ரூ.50,000-ற்கு வரிவிலக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு
'ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம்’ என்று பெயர்.
4. கோல்டு இ.டி.எஃப் !
கோல்டு ஃபண்டுகளுக்கும், கோல்டு இ.டி.எஃப்-ற்கும் நாம்
மேலே சொன்ன மியூச்சுவல் ஃபண்ட் கடன் திட்டங்களுக்கு கூறிய வரிகள்
பொருந்தும். பங்கு முதலீடு போலவே, கோல்டு முதலீடு ரிஸ்க் உள்ள முதலீடாகும்.
5. வீட்டுக் கடன் !
இரு சம்பளத்தில் இருப்பவர்கள் அல்லது அதிக வருமானத்தில்
இருப்பவர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட வீடுகள் வாங்கும்பொழுது, அந்த வீட்டுக்
கடனிற்காகச் செலுத்தும் வட்டி (எவ்வளவாக இருந்தாலும்), முனிசிபல் டாக்ஸ்
மற்றும் பராமரிப்புச் செலவைத் தங்கள் வருமானத்தில் இருந்து
கழித்துக்கொள்ளலாம். அதேசமயத்தில், அந்த வீட்டிலிருந்து வரும் வருமானத்தைக்
கணக்கில் காண்பிக்க வேண்டும். வாடகைக்கு விடாமல் வீடு காலியாக
இருந்தாலும், அந்த ஏரியாவில் அந்த வீட்டிற்கு என்ன வாடகை கிடைக்குமோ அதை
வருமானமாக காண்பிக்கவேண்டும்.
ஹிந்து அன்டிவைடட் ஃபேமிலி !
ஹெச்.யூ.எஃப் (ஹிந்து அன்டிவைடட் ஃபேமிலி) என்று ஒரு
சட்டம் உள்ளது. இதை இந்து, சீக்கியர், ஜெயின் மற்றும் புத்த மதத்தவர்
உருவாக்கிக்கொள்ளலாம். வருமான வரிக்கு ஹெச்.யூ.எஃப். ஒரு தனி அமைப்பாக
கருதப்படும். கணவன் கர்த்தாவாகவும், மனைவி மற்றும் குழந்தைகள்
உறுப்பினராகவும் கருதப்படுவர். இது தனி அமைப்பு என்பதால் இதற்கென்று பான்
கார்டு, பேங்க் அக்கவுன்ட் மற்றும் பிற முதலீடுகள் இருக்கலாம். தனிநபருக்கு
கிடைக்கும் வரிச் சலுகைகள் இதற்கும் உண்டு. நீண்டகால கண்ணோட்டத்தில் ஹை
இன்கம் குரூப்பில் உள்ளவர்களுக்கு இது நன்மையாக அமையும்.
உங்களின் வருமானத்தை நேரடியாக ஹெச்.யூ.எஃப்-ற்கு மாற்ற
முடியாது என்பதை நினைவில் கொள்க. ஆனால், ஹெச்.யூ.எஃப்-ல் இருந்து
பிரிந்துவந்த சொத்து, பாகப்பிரிவினை மூலம் வந்த சொத்துக்கள் போன்றவற்றை
இந்தக் கணக்கிற்குள் கொண்டுவரலாம். வருடத்திற்கு ரூ.50,000-ற்கு மேல்
ஹெச்.யூ.எஃப்-ற்கு அன்பளிப்பு வந்தால் அது வருமானமாக கருதப்படும். அவ்வாறு
வருமானமாக கருதப்பட்டாலும், ஆண்டிற்கு ரூ.2 லட்சத்திற்கு வரி விலக்கு
உள்ளது. மேலும், 80சி பிரிவின் கீழ், உரிய உபகரணங்களில் முதலீடு செய்தால்,
ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும். ஆக
வருடத்திற்கு, ரூ.3 லட்சம் வரைக்கும் வரி செலுத்தத் தேவையிருக்காது.
இதைப்போல் மைனர் குழந்தைகளுக்காக தனியாக டிரஸ்ட் அமைப்பது போன்ற செயல்களும்
வரி திட்டமிடலில் ஒரு பகுதியாகும்.
அதிக சொத்துக்கள் மற்றும் சம்பாத்தியம் உள்ளவர்கள்
பிரைவேட் டிரஸ்ட் அமைப்பது, எஸ்டேட் ப்ளானிங் செய்வது (நிலங்களை வாங்கிச்
சேர்ப்பது) போன்ற செயல்களையும், தேவைக்கேற்றாற்போல், கவனித்துக்கொள்வது
அவசியம்.
இரட்டைச் சம்பாத்தியத்தில் உள்ள குடும்பங்கள் பல, மாதம்
ரூ.30,000 - 50,000 சம்பாதிக்கும் கேட்டகிரியிலும் உள்ளன. அவர்களைப்
போன்றோருக்கு வருமான வரி குறைந்த அளவே செலுத்தவேண்டியிருக்கும் அல்லது
ஒழுங்காகச் சேமித்தால் (80சி பிரிவின் கீழ்), வரியே செலுத்தவேண்டிய
தேவையிருக்காது. இந்த கேட்டகிரியில் உள்ளவர்கள் போதுமான காப்பீடுகள்
எடுத்துக் கொள்வதோடு, தங்களது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை எதிர்காலத்
தேவைகளுக்காக சேமிப்பது அவசியம். பி.பி.எஃப்., ரெக்கரிங் டெபாசிட் மற்றும்
பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இவர்களுக்கு மிகவும் உகந்ததாக
அமையும்.
ஹை இன்கம் குடும்பத்தினருக்கு ஏற்றாற்போல் மூன்று
போர்ட்ஃபோலியோவைத் தந்திருக்கிறேன். உங்களுக்கேற்றத்தை பயன்படுத்தி, நலமடைய
வாழ்த்துக்கள்.
1 comment
i like
Post a Comment