படர்தாமரைக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
டீ னியா (Tinea) என்ற பூஞ்சையினால் ஏற்படும் தோல் நோய்தான் படர்தாமரை. சிவந்த படைகள் உடலில் ஏற்படுவதுதான் ...
https://pettagum.blogspot.com/2013/03/blog-post_8671.html
டீனியா (Tinea) என்ற பூஞ்சையினால்
ஏற்படும் தோல் நோய்தான் படர்தாமரை. சிவந்த படைகள் உடலில் ஏற்படுவதுதான்
இதன் அறிகுறி. படர்தாமரை உடலின் கதகதப்பான மற்றும் ஈரப்பதம் நிறைந்த
இடங்களில் விரைவாகத் தாக்கும். தலை, அக்குள், தொடை இடுக்குகள் மற்றும்
பாதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தலையில் படர்தாமரை தாக்கும்போது
ஆங்காங்கே வழுக்கையான திட்டுகள் காணப்படும். படர்தாமரை நகங்களைப்
பாதிக்கும்போது நகங்கள் நிறம் மாறி எளிதில் உடையும். அக்குள் மற்றும்
தொடைப் பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்தும். இது ஒருவரிடம் இருந்து
மற்றவருக்கு எளிதில் பரவும் தொற்று நோய். இந்த நோயால்
பாதிக்கப்பட்டவர்களின் சீப்பு, முகச்சவர உபகரணங்கள், ஆடைகள் மூலமாகவும்,
கழிவறைகள், குளியலறைகள், நீச்சல்குளம் மூலமாகவும் பரவும். செல்லப்
பிராணிகள் மூலமாகவும் பரவும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
சீமை அகத்தி இலையை அரைத்துத் தேங்காய் எண்ணெயில் கலந்து பூசலாம்.
கடுக்காய்த் தோல், இந்துப்பு, கிரந்திதகரம், அறுகம்புல், கஞ்சாங்கோரை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, மோர்விட்டு அரைத்துப் பூசலாம்.
புங்கம் விதையை அரைத்துப் பூசலாம்.
பூண்டை அரைத்து தேன் சேர்த்துப் பூசலாம்.
அருகம்புல்லுடன் மஞ்சளை அரைத்துப் பூசலாம்.
நிலாவாரை இலையைக் காடி விட்டு அரைத்துப் பூசலாம்.
ஜாதிக்காயைத் தேன் விட்டு அரைத்துப் பூச, படர்தாமரை குணமாகும்.
சரக்கொன்றைத் துளிர், புளியந்துளிர், மிளகு சம அளவு எடுத்து, அரைத்துப் பூசலாம்.
பப்பாளி விதையைக் காடிநீர் விட்டு அரைத்துப் பூசலாம்.
சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச் சாறுவிட்டு அரைத்துப் பூசலாம்.
ஆகாயத் தாமரை இலையைக் காடி விட்டு அரைத்துப் பூசலாம்.
குந்திரிக்கம்
நல்லெண்ணெய் வெள்ளை மெழுகு வகைக்கு 32 கி எடுத்து சிறு தீயில் இட்டு,
உருக்கி, வடிகட்டி, ஆறிய பின் படர்தாமரை மீது பூசக் குணமாகும்.
யூகலிப்டஸ்
இலையில் உள்ள சினியோல், பிசைமின் ஆகிய வேதிப்பொருட்கள் படர்தாமரையை
உருவாக்கும் பூஞ்சையை அழிக்கின்றன. யூகலிப்டஸ் தைலத்தைப் படர்தாமரை மீது
பூசக் குணமாகும்.
துளசி இலையை உப்புடன் சேர்த்துப் பூசலாம்.
சிவனார்
வேம்பு இலையையும் பூவையும் அரைக் கைப்பிடி அளவு எடுத்து, சிதைத்து,
நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்த, படர்தாமரை
குணமாகும்.
மாதுளம் பழத்தோல், வல்லாரை இலை சம அளவு எடுத்து காடிவிட்டு அரைத்துப் பூசலாம்.
கிராம்பை நீர்விட்டு அரைத்துப் பூச, படர் தாமரை குணமாகும்.
லவங்கப் பட்டையை நீர் விட்டு மையாக அரைத்துப் பூசலாம். பட்டையில் உள்ள சின்னமால்டிஹைடு, படர்தாமரையை அழிக்கும்.
கடைப்பிடிக்க வேண்டியவை:
படர்தாமரை வராமல் தடுக்க தோல், நகங்கள், தலைமுடி ஆகியனவற்றைச் சுத்தமாகவும் உலர்வாகவும் பராமரிக்க வேண்டும்.
உலர்வான, தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
பிறர் பயன்படுத்திய ஆடைகள், உபகரணங்கள் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம்.
Post a Comment