30 வகை ஸ்நாக்ஸ்'--30 நாள் 30 வகை சமையல்

வகை ஸ்நாக்ஸ் ! 'சாப்பாடு’ என்றால் வாயை மூடிக் கொள்பவர்கள்கூட... 'ஸ்நாக்ஸ்’ என்றால் 'ஆ...' என்று வாயைத் திறந்து விடுவார்கள்....

வகை ஸ்நாக்ஸ் ! 'சாப்பாடு’ என்றால் வாயை மூடிக் கொள்பவர்கள்கூட... 'ஸ்நாக்ஸ்’ என்றால் 'ஆ...' என்று வாயைத் திறந்து விடுவார்கள். அத்தகையோரின் ஆவலை மேலும் மேலும் தூண்டும்விதமாக... '30 வகை ஸ்நாக்ஸ்'களை இங்கே சமைத்திருக்கிறார் சமையல் கலைஞர் ஸ்வீட் டைமண்ட் கட்ஸ் தேவையானவை: மைதா மாவு - கால் கிலோ, சர்க்கரை - 100 கிராம், பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன், வெனிலா எஸன்ஸ் - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் வெனிலா எஸன்ஸ் ஆகியவற்றுடன் சூடான எண்ணெயையும் (ஒரு குழி கரண்டி) ஊற்றி, புட்டு மாவு போல் நன்கு பிசிறிக் கொள்ளவும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். 10 அல்லது 15 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு, கடாயில் எண்ணெயைக் காய வைத்துக் கொள்ளவும். மாவை எடுத்து பெரிய பெரிய உருண்டையாக உருட்டி, சிறிது கனமாக தேய்த்துக் கொள்ளவும். இதை ஒரு கத்தி மூலம் டைமண்ட் வடிவில் அல்லது சதுரவடிவில் கட் செய்து, காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுக்கவும். ஆற வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்தால், நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாமல் இருக்கும். ----------------------------------------------------------------------- முந்திரி உருண்டை தேவையானவை: பச்சரிசி - கால் கிலோ, உளுத்தம்பருப்பு - 50 கிராம், பச்சைப் பயறு - கால் கிலோ, ஏலக்காய் - 3, வெல்லம் - 300 கிராம் (பொடித்துக் கொள்ளவும்), சர்க்கரை - 50 கிராம், தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்), எள் - 25 கிராம், முந்திரி - 25 கிராம் (பொடியாக உடைத்துக் கொள்ளவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பச்சரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியாக ஊற வைத்து தோசை மாவு போல் அரைத்து வைக்கவும். பச்சைப் பயறை வறுத்து ஆற வைத்து, மிக்ஸியில் நைஸாக பொடித்து வைக்கவும். எள்ளை வெறும் வாணலியில் வறுத்தெடுக்கவும். தேங்காய் துருவலை சிறிது நேரம் வதக்கி பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். பொடித்த வெல்லத்தை பாத்திரத்தில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு பெரிய தாம்பாளம் அல்லது பேசின் எடுத்து வறுத்து பொடித்த பச்சைப் பயறு மாவு, வறுத்த எள்ளு, வதக்கிய தேங்காய், பொடித்த முந்திரி, தூள் செய்த ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும். பின்னர் வெல்லக் கரைசலை இதனுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதனை கோலி உருண்டைகள் போல பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். அரைத்த பச்சரிசி - உளுத்தம்பருப்பு மாவில் சிறிது உப்பு சேர்க்கவும். பின் மூன்று மூன்று உருண்டைகளாக மாவில் முக்கியெடுத்து, காய்ந்த எண்ணெயில் போட்டு நன்கு வெந்தவுடன் எடுத்து ஆற வைத்து சாப்பிடவும். இது உள்ளே மென்மையாகவும் வெளியே மொறுமொறுப்பாகவும் இருக்கும். --------------------------------------------------------------------------- கீரை வடை தேவையானவை: உளுத்தம்பருப்பு - கால் கிலோ, பொடியாக நறுக்கிய கீரை - ஒரு கப் (அரைக்கீரை முளைக்கீரை, சிறுகீரை இதில் ஏதேனும் ஒன்று), பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: உளுத்தம்பருப்பை ஊற வைத்து அரைக்கவும். அதனுடன் நறுக்கிய கீரை, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் மாவை வைத்து நடுவில் ஆள் காட்டி விரலால் ஓட்டை செய்யவும். காய்ந்த எண்ணெயில் போட்டு, வெந்தவுடன் திருப்பிப் போட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும். தேங்காய் சட்னி இதற்கு ஏற்ற சைட் டிஷ். -------------------------------------------------------------------------- டோனட்ஸ் தேவையானவை: மைதா மாவு - கால் கிலோ, ஈஸ்ட் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - கால் கிலோ, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஈஸ்ட், உப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும். இதை ஈரமான துணியால் மூடி, ஒரு மணி நேரம் வைக்கவும். இப்போது மாவு நன்கு உப்பி இருக்கும். இதை பெரிய பெரிய உருண்டைகளாக செய்து மீண்டும் 15 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு, ஒரு ஒரு உருண்டையாக பூரி கட்டையால் மெதுவாகத் தேய்க்கவும். ஒரு சிறு மூடியால் நடுவில் அழுத்தினால் மெதுவடை போல் ஓட்டை வரும். இதுபோல் எல்லாவற்றையும் செய்யவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக எடுத்து, மீதியுள்ள சர்க்கரையில் அழுத்தி எடுக்கவும். (மேல்புறம் மட்டும்). --------------------------------------------------------------------- பீட்ஸா தேவையானவை: மைதா மாவு - கால் கிலோ, ஈஸ்ட் - 20 கிராம் (பவுடர்), சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. மேலே அலங்கரிக்க: குடமிளகாய், பெங்களூர் தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (சதுரமாக நறுக்கி கொள்ளவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சீஸ் - ஒரு பாக்கெட் (துருவிக் கொள்ளவும்), ஓரிகானோ (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி - சில்லி சாஸ் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா மாவு, ஈஸ்ட், சர்க்கரை, உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு போளி மாவு பதத்தில் பிசைந்து, ஈரத் துணியால் மூடி குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் பொங்கிய மாவை எடுத்து, மறுபடியும் பிசைந்து பெரிய பெரிய உருண்டைகளாக்கி வைக்கவும். 'அவன்’ ட்ரேயில் வெண்ணெய் தடவவும். உருண்டைகளை பீட்ஸா பேஸ் (பூரி வடிவில் கனமாக) போல இட்டு ட்ரேயில் வைக்கவும். எல்லா உருண்டைகளையும் இதுபோல் செய்யவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு அதனுடன் பச்சை மிளகாய், பாதியளவு ஓரிகானோ, உப்பு, பாதியளவு சீஸ் சேர்த்துக் கிளறவும். பிறகு, ட்ரேயில் இருக்கும் பீட்ஸா பேஸ் மீது வெண்ணெய், தக்காளி - சில்லி சாஸ் தடவி, மீதி சீஸ், ஓரிகானோ வைத்து, முள்கரண்டியால் பதிய வைக்கவும். பிறகு காய்கறி கலவையைச் சேர்த்து, சீஸ் தூவி. 'அவன்’-ல் 180 டிகிரியில் 7 நிமிடம் வைத்து எடுத்து பரிமாறவும். ---------------------------------------------------------------------- சாக்லேட் பாப்கார்ன் தேவையானவை : பாப்கார்ன் சோளம் - ஒரு கப், குக்கீஸ் சாக்லேட் - 50 கிராம், வெண்ணெய் (அ) நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - சிறிதளவு, செய்முறை : ஒரு பாத்திரத்தில் சாக்லேட்டை பொடித்துப் போடவும். வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கொதிக்கும்போது சாக்லேட் உள்ள பாத்திரத்தை அதன் மேல் வைத்து சாக்லேட்டை ஆவியில் உருக வைக்கவும். உருக ஆரம்பித்ததும் இறக்கி நெய் (அ) வெண்ணெய் சேர்ந்து கட்டியில்லாமல் கிளறவும். குக்கரில் எண்ணெய் விட்டு, பாப்கார்னைப் போட்டு, உப்பு சேர்த்து மூடியால் மூடிவிடவும். பொரிந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டவும். பிறகு, தயாரித்த சாக்லேட் சிரப்பை வடிகட்டி மூலம் பாப்கார்ன் மேல் விடவும். நன்கு குலுக்கி சீராக பரவ விடவும் இதனை ஒரு பிளாஸ்டிக் டப்பாவின் போட்டு வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம். --------------------------------------------------------- வாழைப்பூ வடை தேவையானவை: வாழைப்பூ - ஒன்று (பெரியது), பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று, சோம்பு - அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை - 100 கிராம் (நைஸாக பொடி செய்து கொள்ளவும்), கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாழைப்பூவை நரம்பு, தோலை எடுத்துவிட்டு ஆய்ந்து நறுக்கி, நீர் மோரில் போடவும். பிறகு, நீர் மோரை வடித்து, நறுக்கிய வாழைப்பூவில் உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்து, தண்ணீரை வடிகட்டவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி - பூண்டு விழுது, சோம்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பொடித்த பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். மாவை வடை போல் தட்டி... கடாயில் எண்ணெய் சூடானதும் போட்டு பொரித்தெடுக்கவும். -------------------------------------------------------------------------- வெங்காய சமோசா தேவையானவை: மைதா மாவு - கால் கிலோ, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. வெங்காய மசாலா தயாரிக்க: பெரிய வெங்காயம் - அரை கிலோ, பச்சை மிளகாய் - 5 , கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, சோம்பு - ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் - காரத்துக்கேற்ப, மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி தனியே வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் உப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து, பின்னர் தண்ணீர் சேர்த்து பூரி மாவு போல் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். சிறிது நேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி தேய்ப்பது போல் மெல்லியதாக தேய்த்து அதன் மேல் மாவைத் தூவவும். இன்னொரு உருண்டையும் எடுத்து இதே போல் தேய்த்து அதன் மேல் வைத்து மறுபடியும் நன்கு மெல்லியதாக தேய்க்கவும். இதனை தோசைக் கல்லில் (எண்ணெய் ஊற்றாமல்) போட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு தனியே எடுத்து விடவும். பின் கத்தியால் நீளவாக்கில் கட் செய்து வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும் (வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்க வேண்டாம்). பிறகு, உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும் இப்போது நீளவாக்கில் கட் செய்த துண்டை எடுத்து முக்கோண வடிவில் மடித்து ஆற வைத்த வெங்காய மசாலாவை உள்ளே வைத்து மூடிவிடவும். மூடுவதற்கு தண்ணீர் அல்லது மைதா பேஸ்ட் உபயோகிக்கவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, செய்து வைத்துள்ள சமோசாவைப் போட்டு பொன்னிறமானவுடன் எடுத்து ஆற வைத்து, சாஸ் அல்லது புதினா தயிர் சட்டியுடன் சேர்த்துச் சாப்பிடவும். ------------------------------------------------------------------- ஆலு போஹா தேவையானவை: கெட்டி அவல் - கால் கிலோ, உருளைக்கிழங்கு - 100 கிராம், பச்சை மிளகாய் - காரத்துக்கு ஏற்ப, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று, பொடியாக நறுக்கிய மாங்காய் - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி-பூண்டு - ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: அவலை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு அலசி, சிறிது நேரம் ஊற வைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் தாளித்து... இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். பிறகு, வெங்காயம், பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் சேர்த்து கிழங்கு வேகும் வரை வதக்கவும். அதில் உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய மாங்காய் சேர்த்து நன்கு வதக்கவும் (விருப்பப்பட்டால் துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய குடமிளகாய் சேர்க்கலாம்). இறக்கும் சமயத்தில் ஊற வைத்த அவல், எலுமிச்சைச் சாறு சேர்த்து சிறிது நேரம் கிளறி, கொத்தமல்லி சேர்த்து இறக்கி, சூடாகப் பரிமாறவும். ------------------------------------------------------------------ இட்லி சில்லி வறுவல் தேவையானவை : இட்லி - 10 (துண்டுகளாக நறுக்கவும்), குடமிளகாய் - ஒன்று, பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப, சோயா சாஸ் - 3 டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, கெச்சப் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டுப் பல், வினிகர், சிவப்பு சில்லி சாஸ், கொத்தமல்லி இலை - சிறிதளவு, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், மைதா - ஒரு கப், சோள மாவு - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை : ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். இட்லித் துண்டுகளை இதில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து வைக்கவும். வேறொரு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தட்டிய பூண்டு போட்டு வதக்கி, சதுரமாக நறுக்கிய குடமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். இதனுடன் சிறிது வினிகர், சோயா சாஸ், சிவப்பு சில்லி சாஸ் மற்றும் கெச்சப் சேர்த்துக் கிளறி, வறுத்த இட்லியைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கி, சூடாகப் பரிமாறவும். -------------------------------------------------------------------------------------- முந்திரி பிஸ்கட் தேவையானவை: மைதா மாவு - கால் கிலோ, பச்சை மிளகாய் - 100 கிராம், நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டு - 5 பல், பேக்கிங் பவுடர் - அரை டேபிள்ஸ்பூன், வறுத்த சீரகப்பொடி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை நறுக்கி நைஸாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதாவுடன், உப்பு, அரைத்த மசாலா விழுது, சீரகப்பொடி, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும். பிறகு, ஒரு டேபிள்ஸ்பூன் சூடான எண்ணெய் விட்டு மறுபடியும் பிசிறி, பூரி மாவு போல் பிசைந்து கொள்ளவும். இதை பெரிய உருண்டைகளாக செய்து சப்பாத்தி இடுவது போல் பெரியதாகவும், அதே சமயம் மெல்லியதாகவும் இடவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். தேய்த்து வைத்துள்ள மாவை, பாட்டில் மூடியால் வட்டமாக கட் செய்யவும். அதை முந்திரி வடிவ துண்டுகளாக கட் செய்யவும். இதை காயும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக ஆனவுடன் எடுத்து, ஆறியவுடன் சாப்பிட்டால், நன்கு மொறுமொறுப்பாக இருக்கும். ------------------------------------------------------------- ஃபிரெஞ்ச் ஃப்ரை தேவையானவை : உருளைக்கிழங்கு - கால் கிலோ, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை : உருளைக்கிழங்கை தோல் சீவி, கழுவி, நீளவாக்கில் நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு பாதி வெந்தவுடன் எடுத்து ஒரு துணியில் பரப்பி காயவிடவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, உருளைக்கிழங்கை அதில் போட்டு பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து உப்பு தூவவும் (லேசாக மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள் தூவியும் சாப்பிடலாம்). இதனை கெச்சப் உடன் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ------------------------------------------------------------------------- சோயா - பனீர் கட்லெட் தேவையானவை: சோயா சங்க்ஸ் (Soya Chancks- டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 100 கிராம், பனீர் - 150 கிராம், உருளைக்கிழங்கு (வேக வைத்தது) - 300 கிராம், பச்சைப் பட்டாணி (உரித்து, வேக வைத்தது) - 50 கிராம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - தலா ஒன்று, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, கரம் மசலாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்தூள் - காரத்துக்கேற்ப, மஞ்சள்தூள் - சிறிதளவு, வறுத்த சீரகப்பொடி - ஒரு டீஸ்பூன், ரொட்டித் தூள் - கால் கிலோ, சோள மாவு - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, சோயா சங்க்ஸை போட்டு அடுப்பை அணைத்துவிடவும். இதை வடிகட்டி கொஞ்சம்கூட தண்ணீர் இல்லாமல் எடுத்து ஆற வைத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி இறக்கவும். இதனுடன் துருவிய பனீர், மசித்த உருளைக்கிழங்கு, வேக வைத்த பட்டாணி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கலந்து வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, வறுத்த சீரகப்பொடி சேர்த்து வதக்கவும். சோயா சங்க்ஸ் கலவையை அதில் சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும். பிறகு ஆற வைத்து, பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சோள மாவு, சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் ரொட்டித் தூளை கொட்டவும். சோயா கலவை உருண்டையை கனமாக தட்டி, சோள மாவில் முக்கி எடுத்து, பின்னர் ரொட்டித் தூளில் புரட்டவும். எல்லாவற்றையும் இதேபோல் செய்து ஒரு பெரிய தட்டில் வைக்கவும். கடாயில் எண்ணெயக் காய வைத்து, செய்து வைத்துள்ள கட்லெட்டுகளைப் போட்டு பொரித்தெடுக்கவும். சாஸ் தொட்டு சாப்பிடவும். குறிப்பு: எண்ணெய் நன்கு சூடான பிறகுதான் கட்லெட்டுகளைப் போட வேண்டும். அடிக்கடி கிளறிவிடக் கூடாது. ----------------------------------------------------------------------- குழிபணியாரம் (இனிப்பு) தேவையானவை: கோதுமை மாவு, பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா ஒரு கப், பொடித்த முந்திரி - 10, பொடித்த ஏலக்காய் - 2, நெய் - தேவையான அளவு. செய்முறை: அடுப்பில் குழிபணியார சட்டியை வைத்து, நெய் ஊற்றி சூடு செய்யவும். கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் வெல்லத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி அதில் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதனை சூடாகிக் கொண்டிருக்கும் பணியார சட்டியில் ஒவ்வொரு குழியிலும் ஊற்றி, திருப்பிப்போட்டு இருபுறம் வெந்தவுடன் எடுக்கவும். சூடு ஆறியவுடன் பரிமாறவும். ------------------------------------------------------------------------ சோயா முறுக்கு தேவையானவை: சோயா மாவு - 50 கிராம், கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 100 கிராம், அரைக்கீரை (அ) பாலக்கீரை - ஒரு சிறிய கட்டு, ஓமம் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கீரையை சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, கீரையை போட்டு, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, வடிகட்டி ஆற வைத்து பச்சை மிளகாயுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மாவு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து... ஓமம், உப்பு, அரைத்த விழுது போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, முறுக்கு மாவு பதத்தில் பிசையவும். கடாயில் எண்ணெயைக் காய வைக்கவும். மாவை முறுக்கு அச்சில் போட்டு, தட்டில் சிறிய முறுக்குகளாக பிழிந்து, எண்ணெயில் போட்டு இருபுறமும் வெந்தவுடன் எடுத்து, ஆற வைத்து சாப்பிடவும். ------------------------------------------------------------------------- சோயா சுகியன் தேவையானவை: சோயா - 100 கிராம், உளுந்து - 50 கிராம், பச்சரிசி - 300 கிராம், கடலைப்பருப்பு - 250 கிராம், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய் - 2, தேங்காய் துருவல் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: 6 மணி நேரம் ஊற வைத்த சோயா, ஒரு மணி நேரம் ஊற வைத்த உளுந்து இரண்டையும் சேர்த்து அரைக்கவும். 4 மணி நேரம் ஊற வைத்த பச்சரியைத் தனியாக அரைக்கவும், அரைத்த மாவுகளை ஒன்றாக்கி, உப்பு சேர்த்து, இட்லி மாவு பதத்தில் கரைக்கவும். இந்த மாவை புளிக்க விடக்கூடாது. கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்து, ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். வெல்லத்தை பொடித்து பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு வடிகட்டவும் கடாயில் நெய் விட்டு துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி, அரைத்த கடலைப்பருப்பு, வெல்லக் கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டு, கிளறிக் கொண்டே இருக்கவும். கெட்டியானதும் இறக்கி ஆற வைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டில் வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் உருட்டிய உருண்டைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். ------------------------------------------------------------------------- தால் மிக்ஸர் தேவையானவை: பச்சைப் பயறு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, காய்ந்த பட்டாணி, கொள்ளு, கறுப்பு கொண்டைக்கடலை - தலா 100 கிராம், மிளகாய்த்தூள் - காரத்துக்கேற்ப, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 25 கிராம், பச்சை வேர்க்கடலை - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, பட்டாணி, கொள்ளு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக தண்ணீர் ஊற்றி முதல்நாள் இரவு ஊற வைக்கவும். மறுநாள் மாலை தண்ணீரை வடிகட்டி தானியங்களைத் தனித்தனியே துணியில் போட்டு நன்கு காயவிட வேண்டும். பிறகு கடாயில் எண்ணெயைக் காய வைத்து ஒவ்வொரு வகை பருப்பையும் போட்டு நன்கு வெந்தவுடன் வடிகட்டியில் போடவும். இவ்வாறு எல்லாவற்றையும் வறுத்து முடித்தவுடன்அதே எண்ணெயில் முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை போட்டு வறுத்தெடுத்து ஏற்கெனவே வறுத்து வைத்துள்ள தானியங்களுடன் சேர்க்கவும் பிறகு, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயதூள், மிளகாய்த் தூள் (விருப்பப்பட்டால் தட்டிய பூண்டையும் வறுத்து போடவும்) சேர்த்து, நன்கு குலுக்கி ஆற வைத்து சாப்பிடவும். ------------------------------------------------------------------------ பனீர் பஜ்ஜி தேவையானவை: பனீர் - 200 கிராம் (சதுரமாக கட் செய்யவும்), கடலை மாவு - 100 கிராம், பச்சரிசி மாவு - 100 கிராம், மைதா மாவு - 100 கிராம், மிளகாய்த்தூள் - காரத்துக்கேற்ப, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, சீரகப்பொடி - இரண்டு டீஸ்பூன், பூண்டு - 4 பல் (தட்டியது), சோடா உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் சதுரமாக நறுக்கிய பனீருடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் குலுக்கவும். இன்னொரு பாதத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவு, மைதா மாவு மூன்றையும் சேர்த்து, அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, சீரகப்பொடி பெருங்காயத்தூள், தட்டிய பூண்டு, சோடா உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். எண்ணெயைக் காய வைக்கவும். பனீரை மாவில் முக்கி எண்ணெயில் போட்டு, வெந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும். ----------------------------------------------------------------------- சோயா 65 தேவையானவை: சோயா சங்க்ஸ் (Soya chunks- டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 100 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - காரத்துக்கேற்ப, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கெட்டித் தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு - 100 கிராம், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, சோயா சங்க்ஸை போட்டு அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து சோயா சங்க்ஸில் உள்ள தண்ணீரை நன்கு பிழிந்துவிட்டு, ஒரு பாத்திரத்தில் போடவும். கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் எண்ணெயைத் தவிர, மற்ற அனைத்தையும் அதனுடன் சேர்த்து பிசிறிக் கொள்ளவும் (தண்ணீர் சேர்க்கக் கூடாது). பிறகு, கடாயில் எண்ணெயைக் காய வைத்து சோயா சங்க்ஸை ஒவ்வொன்றாக ஒட்டாமல் போட்டு, வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும். ------------------------------------------------------------------------ பேபி கார்ன் ஃப்ரை தேவையானவை : பேபி கார்ன் - ஒரு பாக்கெட் (கழுவி, நீளமாக நறுக்கி கொள்ளவும்), சோள மாவு - ஒரு கப், மிளகாய்த்தூள் - காரத்துக்கேற்ப, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க விடவும். நறுக்கிய பேபி கார்னை போட்டு ஒரு நிமிடத்துக்குப் பிறகு எடுத்து ஆறவிடவும். இதில் உப்பு, மிளகாய்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து பிசிறவும். இதனை சோள மாவில் புரட்டவும். 5 நிமிடம் கழித்து, எண்ணெயைக் காயவைத்து, புரட்டிய கார்னை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். ------------------------------------------------------------------------ பர்கர் தேவையானவை : பர்கர் பன் - 4, பெரிய தக்காளி - 2 (வட்டமாக நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (வட்டமாக நறுக்கவும்), வெண்ணெய் - ஒரு டேபிஸ்பூன், மையோனீஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 3 பல் (நன்றாக தட்டிக்கொள்ளவும்), சீஸ் - நான்கு ஷீட், லெட்யூஸ் இலை - ஒரு கொத்து, தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: மையோனீஸ், பூண்டு இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். பன்னை சமமாக கட் செய்து வெண்ணெய் தடவி தோசைக் கல்லில் சிறிது நேரம் வைத்து எடுத்துக் கொள்ளவும் ஒரு பாதி பன்னில் முதலில் சீஸை வைத்து, அதன் மீது தக்காளி, வெங்காயம் வைத்து, (விருப்பப்பட்டால்) பனீர் கட்லெட் வைத்து, லெட்யூஸ் இலை நறுக்கி வைக்கவும் பன்னின் மறு பாதியின் உள்பக்கத்தில் மையோனீஸ் - பூண்டு கலவை தடவவும். இரண்டு துண்டுகளாக இருக்கும் பன்னை மூடி, தக்காளி சாஸ் உடன் பரிமாறவும். ------------------------------------------------------------------------ சாண்ட்விச் பஜ்ஜி தேவையானவை: பிரெட் - 10 ஸ்லைஸ், கடலை மாவு - 150 கிராம், பச்சரிசி மாவு - 100 கிராம், மைதா மாவு - 100 கிராம், மிளகாய்த்தூள்- காரத்துக்துக்கேற்ப, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வறுத்த சீரகப்பொடி - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல் (தட்டியது), புதினா சட்னி - ஒரு கப், தக்காளி சட்னி - ஒரு கப், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஒரு பிரெட் துண்டின் உள்பக்கம் புதினா சட்னியும், அடுத்த பிரெட் துண்டின் உள்பக்கம் தக்காளி சட்னியும் வைத்து மூடிவிடவும். பின் இதனை நான்கு துண்டுகளாக செய்யவும். இதே போல் எல்லா பிரெட் துண்டுகளையும் செய்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவு, மைதா மாவு மூன்றையும் சேர்த்து, அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, வறுத்த சீரகப் பொடி பெருங்காயத்தூள், தட்டிய பூண்டு, ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு சூடானதும், ரொட்டித் துண்டை மாவில் தோய்த்துப் போட்டு, இருபுறமும் வெந்தவுடன் எடுத்து, சாஸ் உடன் பரிமாறவும். ---------------------------------------------------------------------------- குழிபணியாரம் (காரம்) தேவையானவை: பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப், உளுத்தம் பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - அரை கப், கார சட்னி அல்லது புதினா சட்னி - அரை கப், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பை ஊற வைத்து, அரைத்து, புளிக்க வைக்கவும் (அல்லது இட்லி மாவிலும் தயார் செய்யலாம்). மாவில் தேங்காய் துருவல். கார சட்னி அல்லது புதினா சட்னி, உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். பணியார சட்டியில் எண்ணெயைக் காய வைத்து, ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி மூடி, திருப்பி போட்டு, இருபுறம் வெந்தவுடன் இறக்கி, சூடாக சாப்பிடவும். ------------------------------------------------------------------- ஓம இலை பஜ்ஜி தேவையானவை: ஓம இலை (கற்பூரவள்ளி) - இரண்டு கைப்பிடி அளவு, கடலை மாவு - 100 கிராம், பச்சரிசி மாவு - 100 கிராம், மைதா மாவு - 100 கிராம், மிளகாய்த்தூள் - காரத்துக்கேற்ப, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, சீரகப்பொடி - இரண்டு டீஸ்பூன், பூண்டு - 4 பல் (தட்டியது), சோடா உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவு, மைதா மாவு மூன்றையும் சேர்த்து, அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, சீரகப்பொடி பெருங்காயத்தூள், தட்டிய பூண்டு, சோடா உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். ஓம இலையை (கற்பூரவள்ளி) இரண்டாக பிய்த்து, மாவில் முக்கி, கடாயில் எண்ணெய் சூடானதும் அதில் போட்டு, வெந்தவுடன் எடுத்து, சாஸ் உடன் சாப்பிடவும். சளித் தொந்தரவை குணமாக்கும் இந்த பஜ்ஜி. ------------------------------------------------------------------------ காலிஃப்ளவர் பக்கோடா தேவையானவை: காலிஃப்ளவர் (பெரியது) - ஒன்று, மிளகாய்த்தூள் - காரத்துக்கேற்ப, மஞ்சள்தூள் - சிறிதளவு, , கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 50 கிராம், சோள மாவு - 25 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: காலிஃப்ளவரை சிறிய சிறிய பூக்களாக பிய்த்து, கழுவி, கொதிக்கும் நீரில் சேர்த்து உப்பு போட்டு, நன்கு கொதித்ததும் எடுத்து, தண்ணீரை வடித்துவிடவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளவும் இந்த மாவை காலிஃப்ளவர் மேல் தூவி, நன்கு குலுக்கி, 5 நிமிடம் வரை வைக்கவும். பின்னர், கடாயில் எண்ணெயைக் காயவைத்து, காலிஃப்ளவரை போட்டு, நன்கு வெந்தவுடன் எடுத்துச் சாப்பிடவும். ------------------------------------------------------------------------------- சீஸ் வடை தேவையானவை: சீஸ் (துருவியது) - 100 கிராம், கடலைப்பருப்பு - கால் கிலோ, பெரிய வெங்காயம் - ஒன்று, நறுக்கிய பச்சை மிளகாய் - 4, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, சோம்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடலைப்பருப்பை ஊற வைத்து கரகரவென்று அரைத்துக் கொள்ளவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சோம்பு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக செய்து, நடுவில் துருவிய சீஸ் வைத்து மூடி, கொஞ்சம் கனமாக தட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு, இருபுறமும் நன்கு வெந்தவுடன் இறக்கி, சூடாகப் பரிமாறவும். ----------------------------------------------------------------------- கார முறுக்கு தேவையானவை: அரிசி மாவு - 200 கிராம், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா 50 கிராம், வனஸ்பதி (அ) நெய் - 50 கிராம், மிளகாய்த்தூள் - 25 கிராம், தனியாத்தூள் - சிறிதளவு, வறுத்த எள் (வெள்ளை) - ஒரு டேபிள்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் மூன்று மாவுகளுடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், எள், பெருங்காயத்தூள், வனஸ்பதி (அ) நெய் சேர்த்து நன்கு பிசைந்து, பிறகு தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து, இருபுறமும் வெந்தவுடன் ஆற வைத்து சாப்பிடவும். ---------------------------------------------------------------------------------- பானிபூரி தேவையானவை : பானிபூரி (சிறிய பூரி - டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் ரெடிமேடாக கிடைக்கும்) - ஒரு பாக்கெட், வேக வைத்த உருளைக்கிழங்கு - கால் கிலோ, புளி - 50 கிராம், வெல்லம் - 50 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கறுப்பு உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி, புதினா (ஆய்ந்து) - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, வறுத்த சீரகப்பொடி - 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு. செய்முறை: புளியைக் கரைத்து வடிகட்டி, ஒரு லிட்டர் அளவுக்கு தண்ணீராக வைத்துக் கொள்ளவும் இதனுடன் பொடித்த வெல்லம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், கறுப்பு உப்பு, அரைத்த புதினா - கொத்தமல்லி - பச்சை மிளகாய் விழுது, சீரகப்பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும். பூரியை எடுத்து நடுவில் ஒரு ஓட்டை போட்டு அதில் வேகவைத்த உருளைக்கிழங்கை வைத்து, புளிக்கலவை தண்ணீர் விட்டு அப்படியே சாப்பிடவும். தேவைப்பட்டால் இனிப்பு சட்னியுடன் பரிமாறலாம். ----------------------------------------------------------------------------- ஜவ்வரிசி வடை தேவையானவை: ஜவ்வரிசி - கால் கிலோ, நறுக்கிய வெங்காயம் - ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு (நறுக்கவும்), நறுக்கிய பச்சை மிளகாய் - 5, வறுத்த வேர்க்கடலை - 25 கிராம், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஜவ்வரிசியை சலித்து தண்ணீரில் கழுவி ஊற வைக்கவும். மென்மையானவுடன் மிக்ஸியில் சேர்த்து, உப்பு போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதை பாத்திரத்தில் சேர்த்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் ஒன்றிண்டாக பொடித்த வேர்க்கடலையை சேர்த்துப் பிசையவும். எண்ணெயைக் காய வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வெந்தவுடன் இறக்கி, சூடாகப் பரிமாறவும். -------------------------------------------------------------------------------- பனானா க்யூ தேவையானவை: கற்பூர வாழைப்பழம் - 10, பழுப்பு சர்க்கரை - 2 கப், எண்ணெய் - தேவையான அளவு, ஸ்கீவர்ஸ் (டிபர்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும் - அல்லது பெரிய டூத்-பிக் குச்சிகள்) - 10. செய்முறை: வாழைப்பழத்தை தோல் உரித்து முனைகளை கட் செய்து கொள்ளவும் பின்னர், கடாயில் வாழைப் பழம் மூழ்கும் அளவுக்கு எண்ணெய் ஊற்றி, நன்கு காய்ந்ததும் ஒவ்வொரு பழமாக முழுவதும் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பிறகு, அதன் மீது பழுப்பு சர்க்கரையைத் தூவி கொண்டே வரவும். சர்க்கரை, பழத்தின் மீது படிந்து, உருகி, பிரவுன் கலராக வரும்படி பொரித்தெடுக்கவும். பின்னர் ஸ்கீவர் (அ) டூத்-பிக் குச்சியை பழத்தில் குத்தி சாப்பிடவும்.

Related

30 நாள் 30 வகை சமையல் 7080140895006433096

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item