டிப்ஸ்! வீட்டுக்குறிப்புக்கள்
டிப்ஸ்! பிளாஸ்டிக் கவர்களை திறக்கும்போது ஒட்டிக் கொண்டு பிரிக்க முடியாமல் படுத்தும். இதற்கு ஒரு சுலப வழி இருக்கிறது. கட்டை விரல் மற்றும் ந...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_3430.html
டிப்ஸ்!
பிளாஸ்டிக் கவர்களை திறக்கும்போது ஒட்டிக் கொண்டு பிரிக்க முடியாமல் படுத்தும். இதற்கு ஒரு சுலப வழி இருக்கிறது.
கட்டை விரல் மற்றும் நடுவிரல் நுனிகளை ஈரப்படுத்திக் கொண்டு சொடக்குப்போடுவது போல கவரின் மேல் பாகத்தில் சுண்டி விடுங்கள். இதற்கு மேலும் பிடிவாதம் பிடிக்குமா அந்த கவர்கள்?
பர்ஃபி, மைசூர்பாகு போன்ற ஸ்வீட்கள் செய்யும்போது, அவற்றின் மேலே அலங்காரமாக வைக்கிற பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவை சரியாக ஒட்டிக்கொள்ளாமல் கீழே விழுந்து அசடு வழிய வைக்கிறதா?
நெய் தடவிய தட்டில் முதலிலேயே இவற்றைத் தூவி, பிறகு ஸ்வீட் கலவையை இவற்றின் மேலே கொட்டி, ஆற விட்டு, துண்டுகள் போட்டால்... இவை நன்றாக ஒட்டிக் கொள்ளும். பிறகு ஸ்வீட் துண்டுகளை எடுத்து கீழ் பாகம் மேலே வரும்படி திருப்பி அடுக்கி வைக்கலாம். பெருமிதப் புன்னகை பூக்கலாம்!
பூரி செய்யும்போது, மாவை பெரிய சப்பாத்தியாக இட்டு, ஒரு கத்தி கொண்டு குறுக்கே கூட்டல் குறி (+) போல வெட்டினால் ஒரே சமயத்தில் நான்கு முக்கோண பூரிகள் ரெடி. இப்படி பூரி தயாரித்தால் வித்தியாசமான வடிவத்தில் பூரி அமைவதோடு நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.
வெண்முறுக்கு (அல்லது தேன்குழல்) செய்யும்போது, ஒரு டம்ளர் அரிசி மாவு, அரை டம்ளர் பொட்டுக்கடலை மாவு இவற்றுடன் தேவையான அளவு புளித்த மோர், உப்பு, காரம் சேர்த்துப் பிசைந்து பிழிந்தால்... லேசான புளிப்புச் சுவையுடன், கரகரப்பான முறுக்கு அருமையாக இருக்கும்.
பூ கட்டுவதற்கு வாழை நார்கள் எளிதாகக் கிடைப்பதில்லை. நூலில் கட்டினால் பூக்களின் காம்புகள் அறுந்துவிடுகின்றன. இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரு எளிய வழி இருக்கிறது. வீட்டில் சிமெண்ட் வாங்கிய பை இருந்தால், அதன் நூலைப் பிரித்து செண்டாக சுற்றி வைத்துக் கொண்டு, அந்த பிளாஸ்டிக் நூலில் பூ கட்டுங்கள். உறுதியாகவும் அழகாகவும் இருக்கும்.
Post a Comment