எவ்வளவுதான்
ஆர்வத்துடனும், அக்கறையுடனும் சமைத்துப் பரிமாறினாலும்... டேஸ்ட்
பார்த்துவிட்டு, பல சமயங்களில் உதட்டைப் பிதுக்கும் பிள்ளைகளும், எந்தவித
உணர்ச்சியும்

காட்டாமல்
சாப்பிட்டுவிட்டு கைகழுவும் பெரியவர்களும், பிரியாணி செய்துகொடுத் தால்...
'வாவ்!’ என்று வாய்பிளப்பார்கள். அந்த அள வுக்கு வயது வித்தியாசமில்லாமல்
அனைவரையும் அள்ளி அள்ளி சுவைக்க வைக்கும் பிரியாணியில் 30 வகைகளை வாரி
வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி. இதுவரை அதிகம்
கேள்விப்பட்டிராத இளநீர் பிரியாணி, முருங்கைக் காய் பிரியாணி, பைனாப்பிள்
பிரியாணி ஆகிய வற்றுடன் உடல்நலத்துக்கு உற்ற துணையாய் கைகொடுக்கும்
வேப்பம்பூ பிரியாணி, நார்த்தங்காய் பிரியாணி போன்றவையும் இதில் அடங்கும்.
''அப்புறமென்ன... களத்தில் இறங்குங்கள்... உங்கள் நேசத்துக்கு உரியவர்களை
சமையல் கலையால் கட்டிப்போடுங்கள்!'' என்று ஆருயிர்த் தோழியாய், உற்சாகக்
குரல் கொடுக்கிறார் ராஜகுமாரி.
பைனாப்பிள் பிரியாணி
தேவையானவை:
பச்சரிசி - 2 கப், வில்லைகளாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 6, லெமன்
ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு கப், மில்க்மெய்ட் - அரை கப்,
நெய் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: பைனாப்பிளை
மிக்ஸியில் நைஸாக அரைத்து நீர் சேர்த்து சக்கையை வடிகட்டி, 2 கப் அளவு
சாறு தயாரித்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் பச்சரிசியை லேசாக வறுத்து,
ஒரு கப் தண்ணீர், அரை கப் மில்க்மெய்ட், பைனாப்பிள் சாறு சேர்த்து
குக்கரில் வேகவைக்கவும். சர்க்கரையுடன் ஒரு டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து
கொதிக்கவிட்டு பாகு வைக்கவும். அத்துடன் ஏலக்காய்த்தூள், லெமன் ஃபுட்கலர்,
நெய் சேர்த்து, சாதத்தையும் சேர்த்து எல்லாமாக ஒன்றுசேர்ந்து வந்ததும்
இறக்கவும்.
குறிப்பு: சர்க்கரைப் பாகுக்கு ஒரு டேபிள்ஸ்பூன் நீர் மட்டும் போதுமானது. அப்போதுதான் பாகு கெட்டிப்பதம் வரும்.
தக்காளிக் காய் - பழம் பிரியாணி
தேவையானவை: பாசுமதி
அரிசி - 2 கப், தக்காளிக்காய், தக்காளிப்பழம், பச்சை மிளகாய் - தலா 2
(நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
பெரிய வெங்காயம் - ஒன்று, பிரெட் ஸ்லைஸ் - 2, முந்திரித் துண்டுகள் - 4,
சீரகம் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை - 3 டேபிள்ஸ்பூன், நெய் -
2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வெந்நீரில் தக்காளிப்பழத்தைப் போட்டு 5 நிமிடம் வைத்திருந்து, தோலை
உரித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக
அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, நீளவாக்கில்
நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, நறுக்கிய தக்காளிக்காயையும் சேர்த்து
வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, 3 கப் நீர் விட்டு,
அரிசியைக் களைந்து சேர்த்து... தக்காளி விழுது, உப்பு சேர்த்து குக்கரை
மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியை
வறுக்கவும். பிரெட் ஸ்லைஸ்களை துண்டுகளாக்கி வறுக்கவும். குக்கரில் ஆவி
வெளியேறியதும், சாதத்துடன் முந்திரி, பிரெட் துண்டுகள் சேர்க்கவும்.
மல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ள வெங்காய தயிர்ப்பச்சடி ஏற்றது.
கோலா உருண்டை பிரியாணி
தேவையானவை: பாசுமதி
அரிசி - 2 கப், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு
விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை, சோம்பு, லவங்கம், கசகசாவை வறுத்துப் பொடித்த
பொடி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கஸ¨ரி மேத்தி (காய்ந்த
வெந்தயக்கீரை - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 3 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
கோலா உருண்டை செய்ய: கடலைப்பருப்பு - ஒரு கப்,
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் -
சிட்டிகை, சோம்பு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, பெரிய வெங்காயம் -
ஒன்று (நறுக்கவும்), கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு
தேவையான அளவு.
செய்முறை: கோலா
உருண்டை செய்யக் கொடுத்துள்ளவற்றை (வெங்கா யம், கொத்தமல்லி, உப்பு
நீங்கலாக) அரை மணி நேரம் ஊறவைத்து, கொர கொரப்பாக அரைக்கவும். இத்துடன்
நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்துக் கலக்கவும். இந்தக்
கலவையை சிறிய உருண்டை களாக உருட்டவும். வாணலியில் எண் ணெயைக் காயவைத்து,
உருண்டை களைப் பொரித்து எடுத்து வைக்கவும்.
பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் 3
டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி,
நறுக்கிய தக்காளி, அரைத்த பட்டை மசாலா பொடி, இஞ்சி - பூண்டு விழுது
சேர்த்து வதக்கி, கஸ¨ரிமேத்தி, உப்பு சேர்க்கவும். இதனுடன் ஊறவைத்த
பாசுமதி அரிசி சேர்த்து மூன்றரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு
விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளியேறியதும் பொரித்த கோலா
உருண்டைகளைச் சேர்த்துக் கலந்துவிடவும்.
இளநீர் பிரியாணி
தேவையானவை:
பாசுமதி அரிசி - ஒரு கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, காய்ந்த
திராட்சை - தலா 2 டேபிள்ஸ்பூன், இளநீர் - ஒரு கப், இளநீர் வழுக்கை
(ஒன்றிரண்டாக அரைத்தது) - ஒரு கப், மில்க்மெய்ட் - கால் கப், உப்பு - ஒரு
சிட்டிகை.
செய்முறை:
பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவிடவும். முந்திரி, காய்ந்த திராட்சையை
நெய்யில் வறுக்கவும். குக்கரில் அரிசியைச் சேர்த்து இளநீர், அரைத்த இளநீர்
வழுக்கை, மில்க்மெய்ட் ஆகியவற்றை ஊற்றி, உப்பு சேர்த்து வேகவிடவும். ஒரு
விசில் வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
தேவைப்பட்டால், சூடாக இருக்கும்போதே பொடித்த சர்க்கரை சேர்க்கலாம்.
மசாலா முந்திரி பிரியாணி
தேவையானவை: பாசுமதி
அரிசி - 2 கப், கடைகளில் கிடைக்கும் முழு மசாலா முந்திரி - 15, பட்டை,
பிரிஞ்சி இலை, சோம்பு, கசகசா, லவங்கம் சேர்த்து வறுத்து அரைத்த பொடி - ஒரு
டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க: தோல் நீக்கிய வேர்க்கடலை,
தேங்காய் துருவல் - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 4, முந்திரித்
துண்டுகள் - 6, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: பாசுமதி
அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, 3 கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து உதிர்
உதிராக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு
வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக
பொடிக்கவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் பட்டை மசாலா பொடி சேர்க்கவும். மீதமுள்ள
எண்ணெயை வாணலியில் ஊற்றி, மசாலா முந்திரியை லேசாக வறுத்து, வடித்த சாதத்தை
அதில் போட்டுப் புரட்டி, பொடித்து வைத்த பொடியைத் தூவி இறக்கவும்.
சிறுவர்கள் விரும்பும் இந்தப் பிரியாணி, காலையில் செய்தால் மாலை வரை நன்றாக இருக்கும்.
மாங்காய் பிரியாணி
தேவையானவை:
பாசுமதி அரிசி - 2 கப், முற்றிய கிளிமூக்கு மாங்காய் - ஒன்று, வறுத்த
வேர்க் கடலை - 3 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் -
ஒன்று, கொத்தமல்லித் தழை - 6 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
பாசுமதி அரிசி யுடன் உப்பு, மூன்றரை கப் நீர் சேர்த்து உதிர் உதிராக
வேகவைத்துக் கொள்ளவும். மாங்காயை நன்றாகக் கழுவி, கொட்டையை நீக்கி தோலுடன்
சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை நறுக்கி மாங்காயுடன்
சேர்த்து, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, மல்லித்தழையை சேர்த்து
மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும் (நீர் விட வேண்டாம்... நைஸாகவும்
அரைக்கக் கூடாது). வாணலியில் எண்ணெய் ஊற்றி... காய்ந்த மிளகாய், வறுத்த
வேர்க்கடலை மற்றும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, வெந்த
சாதத்தைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை.
நூடுல்ஸ் பிரியாணி
தேவையானவை: கடைகளில்
கிடைக்கும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் (பிளெய்ன்) - 2 கப் (ஒரே சீராக
உடைத்தது), பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ் (எல்லாம் சேர்ந்தது)
- ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்
தழை - சிறிதளவு, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக்கொள்ள: துருவிய தேங்காய் - கால் கப்,
பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, சோம்பு - ஒரு டீஸ்பூன், கஸ¨ரி
மேத்தி (காய்ந்த வெந்தயக்கீரை) - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரைக்கக்
கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்
ஊற்றி... முதலில் காய்கறிகளை வதக்கி, பின்னர் நூடுல்ஸை சேர்த்து வதக்கி,
முக்கால் கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வெந்ததும்
(இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும்), அரைத்த விழு தினைச் சேர்க்கவும். ஒரு
கொதி வந்ததும் எல்லாமாகச் சேர்த்து வெந்துவிடும். அப்போது எலுமிச்சைச்
சாற்றினை விட்டு கலந்து, கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.
விருப்பப்பட்டால், இஞ்சி - பூண்டு விழுதை வதக்கி சேர்க்கலாம்.
ஸ்பெஷல் பிரியாணி
தேவையானவை:
பாசுமதி அரிசி - 2 கப், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது
காரத்துக்கேற்ப), பூண்டு - 4 பல், தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் -
ஒரு சிட்டிகை, சோம்பு, கிராம்பு, கசகசா, பிரிஞ்சி இலை, மராட்டி மொக்கு
ஆகியவற்றை வறுத்துப் பொடித்த பொடி - ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 2,
கேரட், உருளைக்கிழங்கு, நூல்கோல் - தலா ஒன்று, நீளவாக்கில் நறுக்கிய பீன்ஸ்
- கால் கப், ஊறவைத்த பச்சைப் பட்டாணி - 4 டேபிள்ஸ்பூன், சிறிய சதுரங்களாக
வெட்டிய பிரெட் - கால் கப், நெய் - 4 டீஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: தேங்காய் துருவல் - முக்கால் கப்,
உதிர்த்த புதினா இலைகள் - அரை கப், உதிர்த்த கொத்தமல்லி இலைகள் - கால் கப்,
தக்காளி - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, உடைத்த முந்திரித் துண்டுகள் -
10, பச்சை மிளகாய் - 4.

செய்முறை:
கேரட், நூல்கோல், உருளைக்கிழங்கு, வெங்காயத்தை நீள வாக்கில்
நறுக்கிக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும்.
பாசுமதி அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊறவிடவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி
காய்கறிகளை வதக்கி, இறுதியில் பூண்டை நசுக்கி சேர்த்து வதக்கவும். இதனுடன்
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, 3 கப் தண்ணீர் விட்டு... அரைத்து
வைத் துள்ள மசாலா விழுது, உப்பு சேர்த்து, பிறகு அரிசியை சேர்த்து குக்கரை
மூடிவிடவும். ஆவி வந்ததும் வெயிட் போடுமுன் குக்கரைத் திறந்து, ஊறவைத்த
பச்சைப் பட்டாணி, தயிர், மசாலா பொடி சேர்த்து மீண்டும் ஒரு கிளறு கிளறி,
குக்கரை மூடி, வெயிட் போடவும். ஒரு விசில் வந்ததும் குக்கரை ஆஃப்
செய்துவிடவும். வாணலியில் நெய் ஊற்றி பிரெட் துண்டுகளை வதக்கவும். ஆவி
வெளியேறியதும் குக்கரைத் திறந்து பிரியாணியில் பிரெட் துண்டுகளைச் சேர்த்து
துண்டுகள் உடைந்துவிடாமல் கிளறிவிடவும்.
ஹோட்டலின் சுவையை மிஞ்சும் இந்த பிரியாணியை நாம்
வீட்டிலேயே செய்து பார்ட்டிகள் மற்றும் வீட்டு விசேஷங்களில் பரிமாறி
அசத்தலாம். குருமா, இதற்கு ஏற்ற சைட்டிஷ்.
நாரத்தங்காய் பிரியாணி
தேவையானவை: ஜாதி
நார்த்தங்காய் சாறு - 6 டேபிள்ஸ்பூன் (கசப்பில்லாததாக இருக்க வேண்டும்)
பச்சரிசி - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - ஒன்று,
கேரட் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், ஊறவைத்த பச்சைப் பட்டாணி - 3
டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் - 3,
வெந் தயம் - கால் டீஸ்பூன் (மொத்தம் 10 இருந்தால் போதும்) எள் - ஒரு
டீஸ்பூன், மிளகு - 10, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை:
பச்சரிசியை வெறும் வாணலியில் வறுத்து... உப்பு, 2 கப் நீர் சேர்த்து,
பட்டாணியையும் சேர்த்து உதிர் உதிராக வேகவிடவும். அரை டீஸ்பூன் எண்ணெயில்
வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் சற்றுக் கொரகொரப்பாகப்
பொடிக்கவும். வாணலியில் மீதியுள்ள எண்ணெயை விட்டு, நறுக்கிய பச்சை மிளகாய்,
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் போட்டு, கேரட் துருவல் சேர்த்து லேசாக
வதக்கி, வறுத்து அரைத்த பொடியைத் தூவி இறக்கிவிடவும். இதனுடன்
நார்த்தங்காய் சாறு சேர்க்கவும். பிறகு, உதிர் உதிராக வடிந்த சாதத்தைச்
சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
கலர்ஃபுல்லான இந்த நார்த்தம்பழ பிரியாணி, வயிற்றுக் கோளாறுகள் மற்றும் வாய்க் கசப்பை போக்கும்.
பாகற்காய் - மேத்தி பிரியாணி
தேவையானவை:
நீளமான பாகற்காய் - 2, பாசுமதி அரிசி - ஒரு கப், கஸ¨ரி மேத்தி (காய்ந்த
வெந்தயக்கீரை ) - 4 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பொடித்த
வெல்லம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, உப்பு -
தேவைக்கேற்ப.
அரைக்க: தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2.
செய்முறை:
தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். பாகற்காயை வட்ட
வட்டமாக நறுக்கி, ஒரு தட்டில் வைத்து... வெல்லம், மஞ்சள்தூள், சிறிதளவு
உப்பு சேர்த்து கால் மணி நேரம் ஊறவிடவும். பிறகு நன்றாகக் கழுவி
அலசிவிடவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி... நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம்,
தக்காளியை வதக்கி, ஒன்றரை கப் நீர் ஊற்றி, அரிசி சேர்த்து... உப்பு, அரைத்த
தேங்காய் விழுது, பாகற்காய், கஸ¨ரி மேத்தி சேர்த்துக் கலக்கவும். பிறகு,
குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
குறிப்பு: பாகற்காய்,
கஸ¨ரி மேத்தி இரண்டும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.
தேவைப்பட்டால், சிறிதளவு இஞ்சி, பூண்டு வதக்கி பிரியாணியில் சேர்க்கலாம்.
புதினா - மல்லி பிரியாணி
தேவையானவை: பச்சரிசி
- 2 கப், புதினா, கொத்தமல்லி - தலா ஒரு சிறிய கட்டு, தேங்காய்த் துருவல் -
கால் கப், பச்சை மிளகாய் - 2, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, இஞ்சி -
பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு -
தேவைக்கேற்ப.
செய்முறை:
வெறும் வாணலியில் பச்சரிசியை வறுக்கவும். புதினா, கொத்தமல்லியைச் சுத்தம்
செய்து தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். குக்கரில்
எண்ணெய் விட்டு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து
வதக்கி... இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கி, 3 கப் நீர்
விட்டு அரிசி, உப்பு, அரைத்து வைத்த புதினா - கொத்தமல்லி விழுதை சேர்த்து
நன்றாகக் கலக்கி, குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
அதிக செலவில்லாத இந்த பிரியாணி, அசத்தலான சுவையில் இருக்கும்.
பப்பாளி - கொய்யா - பேரீச்சை பிரியாணி
தேவையானவை: பாசுமதி
அரிசி - ஒரு கப், லெமன் ஃபுட் கலர் - சிறிதளவு, நெய் - 3 டேபிள்ஸ்பூன்,
பால் - அரை கப், பால்கோவா - 100 கிராம், சர்க்கரை - அரை கப், உடைந்த
பாதாம், முந்திரித் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு
சிட்டிகை, நறுக்கிய பப்பாளி, கொய்யா, விதை நீக்கிய பேரீச்சை (எல்லாம்
சேர்த்து) - ஒரு கப்.
செய்முறை: பாசுமதி
அரிசியை 15 நிமிடம் ஊறவிடவும். அரை கப் சர்க்கரையில் ஒரு டேபிள்ஸ்பூன்
நீர் விட்டு கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சவும். குக்கரில் அரை கப் பால்,
ஒரு கப் நீர் விட்டு அரிசியை சேர்த்து வேகவிடவும். ஒரு விசில் வந்ததும்
இறக்கி, ஆவி வெளியேறியதும் சர்க்கரைப் பாகு சேர்த்துக் கிளறி, பால்கோவா,
ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். முந்திரி, பாதாமை நெய்யில் வறுத்து சேர்த்து
மேலும் கிளறி, ஃபுட் கலர் சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும். சூடாக
இருக்கும்போதே நறுக்கிய பழங்களைச் சேர்த்துக் கிளறவும்.
சௌசௌ பிரியாணி
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், சென்னா (கொண்டைக் கடலை) - 4 டேபிள்ஸ்பூன்
(ஊறவைக்கவும்), மீல்மேக்கர் (டிபார்ட் மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 8,
பெரிய வெங்காயம் - ஒன்று, கேரட் துருவியில் துருவிய சௌசௌ - ஒரு கப், தயிர் -
அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
கேரட் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், உடைத்த முந்திரி - 2 டேபிள் ஸ்பூன், சிறிய
சதுரங்களாக வெட்டிய பிரெட் துண்டுகள் - 8, நெய் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய்
- 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: தக்காளி - ஒன்று, தேங்காய்த் துருவல் -
கால் கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2,
கொத்தமல்லித் தழை - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு.
செய்முறை: அரைக்க
கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும். மீல்மேக்கரை 20 நிமிடம் ஊற
வைக்கவும். பச்சரிசியை வெறும் வாணலியில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய்
ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, சௌசௌ துருவல், கேரட் துருவல்
சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள் போட்டு மேலும் வதக்கவும். ஊறவைத்த
மீல்மேக்கரிலிருந்து நீரைப் பிழிந்து எடுத்துவிட்டு இதனுடன் சேர்த்துக்
கிளறவும். அரைத்து வைத்த விழுதை சேர்த்து வதக்கி, அரை கப் தயிரில் ஒரு கப்
நீர் சேர்த்துக் கலந்து... அரிசி, சென்னா, உப்பு சேர்த்து எல்லாவற்றையும்
நன்றாக கலக்கவும். பிறகு குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும்.
ஆவி வெளியேறியதும், வாணலியில் நெய் விட்டு முந்திரி, பிரெட் துண்டுகளை
வறுத்து பிரியாணியில் சேர்த்துக் கலந்துவிடவும்.
முளைகட்டிய பயறு பிரியாணி
தேவையானவை: பாசுமதி
அரிசி - 2 கப், முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப், இஞ்சி - பூண்டு
விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மெல்லியதாக நறுக்கிய முட்டைகோஸ், குடமிளகாய்,
ஸ்பிரிங் ஆனியன் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், சோயா சாஸ் - ஒரு
டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 3
டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பாசுமதி
அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, பிறகு சிறிதளவு உப்பு, மூன்றரை கப் நீர்
சேர்த்து உதிர் உதிராக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு
நறுக்கிய காய்கறிகள் போட்டு வதக்கி, முளைகட்டிய பயறு சேர்த்து மேலும்
வதக்கி (முளை உடைந்துவிடாமல்), இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, சோயா சாஸ்
சேர்த்து இறக்கிவிடவும். சாதத்தை அதில் சேர்த்துக் கிளறி மல்லித்தழை தூவி
அலங்கரிக்கவும்.
குறிப்பு: புரோட்டீன் சத்து நிறைந்த இந்த பிரியாணியை மிகவும் விரைவில் தயார் செய்துவிடலாம்.
காராமணி - பூண்டு பிரியாணி
தேவையானவை: பச்சரிசி
- 2 கப், உலர்ந்த காராமணி - கால் கப் (ஊறவைக்கவும்), நீளமான பச்சை காராமணி
- 50 கிராம், சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 10 பல், தக்காளி - ஒன்று,
குடமிளகாய் - பாதியளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4
டேபிள்ஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, கொத்தமல்லி தழை - சிறிதளவு, உப்பு -
தேவைக்கேற்ப.
செய்முறை:
வெறும் வாணலியில் பச்சரிசியை வறுத்து வைக்கவும். குக்கரில் எண்ணெய்
விட்டு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, குடமிளகாயை வதக்கி,
அத்துடன் ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கிய பச்சைக் காராமணியை சேர்த்து
வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளி,
தோல் சீவி நறுக்கிய இஞ்சியை சேர்க்கவும். இதில் மூன்றரை கப் நீர் விட்டு
உப்பு, அரிசி, உலர்ந்த காராமணி சேர்த்து குக்கரை மூடவும். ஒரு விசில்
வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளியேறியதும் கொத்த மல்லித்தழை தூவி
அலங்கரிக்கவும்.
தேவைப்பட்டால், காய்கறிகளை வதக்கும்போது ஒரு டீஸ்பூன் சீரகம் அல்லது அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்து வதக்கலாம்.
நெல்லிக்காய் பிரியாணி
தேவையானவை:
பெரிய நெல்லிக்காய் - 15, பாசுமதி அரிசி - ஒன்றரை கப், துருவிய தேங்காய் -
கால் கப், பச்சை மிளகாய் - 3, வேர்க்கடலை - 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்
தழை - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: பாசுமதி
அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, 3 கப் நீர் சேர்த்து உதிர் உதிராக சாதம்
வடித்துக் கொள்ளவும். நெல்லிக்காயை கேரட் துருவியில் துருவவும் (கொட்டையை
நீக்கிவிடவும்). வாணலியில் எண்ணெய் ஊற்றி, நீளவாக்கில் நறுக்கிய பச்சை
மிளகாயை வதக்கி, வேர்க்கடலை சேர்த்து, துருவிய நெல்லிக்காய், துருவிய
தேங்காய் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்த்து இறக்கிவிடவும். வெந்த
சாதத்தை வதக்கிய கலவையில் சேர்த்துப் புரட்டி உதிர் உதிராகக் கிளறவும்.
கொத்த மல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.
பரங்கிக்காய் பிரியாணி
தேவையானவை:
பாசுமதி அரிசி - 2 கப், தோல் சீவி, கேரட் துருவியில் துருவிய பரங்கிக்காய்
(பழம் கூடாது) - ஒரு கப், எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி -
சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: புதினா - 6 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை - 4
டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப், வேர்க்கடலை - கால் கப்,
பச்சை மிளகாய் - 3, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, மஞ்சள்தூள் - சிட்டிகை,
சின்ன வெங்காயம் - 6.
செய்முறை: பாசுமதி
அரிசியை 15 நிமிடம் ஊறவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக
அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பரங்கிக்காய் துருவலை வதக்கி,
பின்னர் அரைத்த விழுதை பச்சை வாசனை போக வதக்கி, மூன்றரை கப் நீர் விட்டு,
உப்பு சேர்த்து, அரிசி சேர்த்து கிளறி குக்கரை மூடவும். ஒரு விசில்
வந்ததும் இறக்கிவிடவும்.
ஹைதராபாத் வெஜ் பிரியாணி
தேவையானவை:
பாசுமதி அரிசி - 2 கப், தயிர் - ஒன்றரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு
டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் -
ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட்,
நூல்கோல் (எல்லாம் சேர்ந்து) - ஒரு கப், கொத்தமல்லி - சிறிதளவு, நெய் - 2
டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: பச்சை மிளகாய் - 6, முந்திரிப்பருப்பு - 4,
சின்ன வெங்காயம் - 10, பட்டை, கிராம்பு, ஏலக்காய் (மூன்றும் சேர்த்து) -
ஒரு டேபிள்ஸ்பூன், புதினா, கொத்தமல்லி (இரண்டும் சேர்த்தது) - கால் கப்.
செய்முறை: அரைக்கக்
கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியை 15 நிமிடம்
ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் - நெய் விட்டு சூடாக்கி... நறுக்கிய
வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், நூல்கோல் போட்டு வதக்கி, இறுதியில்
இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கி, பாசுமதி அரிசியையும்
உப்பையும் சேர்த்து, தயிருடன் ஒரு கப் தண்ணீர் விட்டுக் கலக்கி சேர்த்து,
குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளியேறியதும்
எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.
தேங்காய்ப்பால் - கோஃப்தா பிரியாணி
தேவையானவை: பாசுமதி
- 2 கப், தேங்காய்ப்பால் - ஒன்றரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு
டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் - ஒன்று,
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), எண்ணெய் - 2
டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
கோப்ஃதா தயாரிக்க: துருவிய பனீர் - கால் கப், வேகவைத்த
உருளைக்கிழங்கு - கால் கப், உடைத்த முந்திரித்துண்டுகள் - 10, சோள மாவு -
கால் கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்
தழை, துருவிய கேரட் - தலா 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவை
யான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: புதினா, கொத்தமல்லி (சேர்த்து) - அரை
கப், தக்காளி - ஒன்று, பச்சை மிளகாய் - 3, பட்டை சோம்பு கசகசா (மூன்றும்
சேர்த்து) - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கோஃப்தா
தயாரிக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாக சேர்த்து, நீர் விட்டுப் பிசைந்து
உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்
உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும். அரைக்கக்
கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி... இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து
மேலும் வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, அரைத்த மசாலா
விழுது சேர்க்கவும். ஊறிய பாசுமதி அரிசியை இதனுடன் சேர்த்து ஒன்றரை கப்
தேங்காய்ப்பால், 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடவும். ஒரு
விசில் வந்ததும் இறக்கிவிடவும். பிறகு, பிரியாணியுடன் பொரித்து வைத்துள்ள
கோஃப்தாக்களைச் சேர்த்துக் கிளறிவிடவும்.
உலர் மொச்சை பிரியாணி
தேவையானவை: பாசுமதி
அரிசி - 2 கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உலர்ந்த மொச்சைக்கொட்டை - அரை
கப் (ஊறவைக்கவும்), சிறிய சதுரவடிவில் நறுக்கிய பிரெட் துண்டுகள் - 10,
நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக்கொள்ள: தக்காளி - 2, மிளகாய்த்தூள் - 3
டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
கொத்தமல்லித் தழை - கால் கப்.
செய்முறை: அரைக்கக்
கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியை 15 நிமிடம்
ஊறவிடவும். குக்கரில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை
வாசனை போக வதக்கவும். இதில் மூன்றரை கப் நீர் விட்டு... உப்பு, மஞ்சள்தூள்,
அரிசி, ஊறவைத்த மொச்சைக்கொட்டை சேர்த்து ஒரு விசில் வந்ததும் இறக்கி
விடவும். ஆவி வெளியேறியதும், வாணலியில் நெய் விட்டு பிரெட் துண்டுகளை
வறுத்துச் சேர்க்கவும்.
கேரட் - சென்னா பிரியாணி
தேவையானவை: பச்சரிசி
- 2 கப், கறுப்பு கொண்டைக்கடலை - அரை கப் (ஊறவைக்கவும்), கேரட் - 2, இஞ்சி
- பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று,
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பச்சை மிளகாய் -
2, மீல்மேக்கர் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 8, தேங்காய்ப்
பால் (முதல், இரண்டாம், மூன்றாம் பால் எல்லாம் சேர்த்து) - ஒரு கப், ,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு -
தேவைக்கேற்ப.
செய்முறை: கேரட்,
வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். மீல் மேக்கரை 20
நிமிடம் ஊறவைக்கவும். பிறகு, நீரைப் பிழிந்து வடியவிடவும். பச்சரிசியை
வெறும் வாணலியில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு நீளவாக்கில்
நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மீல் மேக்கர்,
இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள்,
மஞ்சள்தூள், உப்பு, அரிசி சேர்த்து, இரண்டரை கப் தண்ணீர், ஒரு கப்
தேங்காய்ப்பால் விட்டு குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி...
கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.
பச்சை வேர்க்கடலை பிரியாணி
தேவையானவை: பச்சரிசி
- 2 கப், பச்சை வேர்க்கடலை - ஒரு கப் (ஊறவைக்கவும்), தக்காளி, பெரிய
வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம்
- ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை -
சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, குடமிளகாய் - பாதியளவு, எண்ணெய் - 4
டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வெங்காயம், தக்காளி, குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். பச்சரிசியை
வெறும் வாணலியில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, சீரகம்
தாளித்து... நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து,
தேங்காய்த் துருவல், நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும். இதனுடன் இஞ்சி -
பூண்டு விழுது,
மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி... மூன்றரை கப் நீர்,
உப்பு, அரிசி, ஊறவைத்த வேர்க்கடலை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து
குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளி யேறியதும்
கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.
முருங்கைக்காய் பிரியாணி
தேவையானவை: பாசுமதி
அரிசி - 2 கப், நறுக்கிய முருங்கைக்காய் துண்டுகள் - 12, தயிர் - ஒரு
டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, மிகச்சிறிய
சதுரங்களாக வெட்டிய பனீர் - கால் கப், நெய் - 3 டீஸ்பூன், எண்ணெய் - 6
டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு - தலா 10
(ஊறவைக்கவும்), பூண்டு - 5 பல், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, மஞ்சள்தூள் -
ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப),
தனியாத்தூள், சர்க்கரை - தலா ஒரு டீஸ்பூன். தக்காளி - ஒன்று.
செய்முறை: அரைக்கக்
கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியை 15 நிமிடம்
ஊறவைக்கவும். குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு... நறுக்கிய
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, உப்பு சேர்த்து, அரைத்த விழுதைப்
போட்டு வதக்கி... மூன்றரை கப் நீர் விட்டு, அரிசி, தயிர் சேர்த்து குக்கரை
மூடிவிடவும். ஆவி வந்ததும், குக்கரைத் திறந்து முருங்கைக்காயைச் சேர்த்து
வெயிட் போடவும் (முருங்கைக்காயை முதலிலேயே சேர்த்தால் கரைந்துவிடும்). ஒரு
விசில் வந்ததும் இறக்கிவிடவும் வாணலியில் 3 டீஸ்பூன் நெய், 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் இரண்டையும் சேர்த்து நறுக்கிய பனீரைப் பொரித்து எடுக்கவும்.
குக்கரைத் திறந்து, பொரித்த பனீர் துண்டுகளைச் சேர்த்துக் கிளறிவிடவும்.
ஸ்வீட் கார்ன் - பச்சைப் பட்டாணி பிரியாணி
தேவையானவை: பாசுமதி
அரிசி - 2 கப், ஸ்வீட் கார்ன் முத்துக்கள்- ஒரு கப், பச்சைப் பட் டாணி -
அரை கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் - ஒன்று, நறுக்கிய
பூண்டுப் பற்கள் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு -
தேவைக் கேற்ப.
அரைக்க: காய்ந்த மிளகாய் - 6, துருவிய மாங்காய்,
துருவிய தேங் காய் - தலா 8 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித் தழை - 6 டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு.
செய்முறை: அரைக்கக்
கொடுத் துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற
வைத்து, மூன்றரை கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைத்துக்
கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி... நறுக்கிய வெங்காயம்,
பூண்டு சேர்த்து வதக்கி, அரை கப் நீர் விட்டு, உப்பு, மஞ்சள்தூள் போட்டு,
பச்சைப் பட்டாணி, ஸ்வீட்கார்ன் சேர்த்து வேகவிடவும். முக்கால் பதம்
வெந்ததும் அரைத்த விழுதினைச் சேர்த்து, நீர் வற்றும் வரை கிளறவும்
(பட்டாணி, கார்ன் குழைத்துவிடக் கூடாது). பிறகு, உதிர் உதிராக வடித்த
சாதத்தைக் போட்டுக் கிளறிவிடவும்.
பட்டாணி - பீன்ஸ் - உருளை பிரியாணி
தேவையானவை: பாசுமதி
அரிசி - 2 கப், பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), நறுக்கிய பீன்ஸ்,
உருளைக்கிழங்கு, ஊறவைத்த பச்சைப் பட்டாணி (சேர்த்து) - ஒரு கப், மஞ்சள்தூள்
- ஒரு சிட்டிகை, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: சின்ன வெங்காயம் - 10, பூண்டுப் பற்கள் - 5,
தக்காளி - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தேங்காய்த் துருவல் - கால்
கப், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, முந்திரித்
துண்டுகள் - 4.
செய்முறை: பாசுமதி
அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக
அரைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பீன்ஸ்,
உருளைக்கிழங்கு இவற்றை வதக்கி மஞ்சள்தூள், உப்பு, அரிசி சேர்த்து மூன்றரை
கப் தண்ணீர் விட்டு, அரைத்த விழுதைச் சேர்த்து குக்கரை மூடிவிடவும். ஆவி
வந்ததும், பட்டாணியைச் சேர்த்துக் கிளறி 'வெயிட்’ போடவும். ஒரு விசில்
வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளியேறியதும் கூக்கரைத் திறந்து நன்கு
கிளறிவிடவும்.
காஷ்மீரி வெஜிடபிள் புலாவ்
தேவையானவை: பாசுமதி
அரிசி - 2 கப், பெரிய வெங் காயம் - 2, நறுக்கிய பீன்ஸ், காலிஃப்ளவர்,
உருளைக்கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணி (எல்லாம் சேர்த்து) - ஒரு கப்,
இஞ்சி - பூண்டு விழுது, தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு
டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), கரம்
மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பால் - 2 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ -
சிறிதளவு, முந்திரி, திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சை - அரை
மூடி, பிரியாணி இலை, ஏலக்காய் - தலா ஒன்று, கிராம்பு - 2, பட்டை - சிறிய
துண்டு, ஆப்பிள் துண்டுகள், பைனாப்பிள் துண்டுகள், கொட்டை நீக்கிய ஆரஞ்சு
சுளைகள் (சேர்த்து) - அரை கப், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், நெய் - 2
டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பாசுமதி
அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊறவிடவும். நெய்யில் முந்திரி, திராட்சையை
வறுத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் நெய் விட்டு, சூடானதும் பிரியாணி
இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து... நறுக்கிய வெங்காயம்
மற்றும் காய்கறிகளைப் சேர்த்து வதக்கி... இறுதியில் இஞ்சி - பூண்டு விழுது
சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள்,
மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும். அத்துடன் ஊறவைத்த
அரிசி, உப்பு சேர்த்து மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடிவிடவும்.
ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி வெளியேறியதும் பாலில் குங்குமப்பூவைக்
கரைத்து ஊற்றவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, எலுமிச்சைச் சாறு
சேர்க்கவும். எல்லாமாகச் ஒன்று சேரும்படி நன்றாக கிளறிவிடவும். இறுதியில்,
பழங்களை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
கீரை பிரியாணி
தேவையானவை: பச்சரிசி
- 2 கப், ஆய்ந்து, சுத்தம் செய்து, நறுக்கிய முளைக்கீரை - 2 கப், துருவிய
தேங்காய், கொத்தமல்லித் தழை - தலா கால் கப், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு
டீஸ்பூன், உடைத்த முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடைகளில் கிடைக்கும்
மசாலா வேர்க்கடலை - 3 டேபிள்ஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
செய்முறை: பச்சரியை
வெறும் வாணலியில் வறுத்து, சிறிதளவு உப்பு சேர்த்து, மூன்றரை கப் நீர்
விட்டு உதிர் உதிராக வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு முளைக்கீரை,
கொத்தமல்லித் தழையை வதக்கி, தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கவும். இதை
நீர் விடாமல் மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். வாணலியில்
தேங்காய் எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை வறுத்து...
முந்திரிப்பருப்பு, மசாலா வேர்க் கடலை சேர்த்துக் கிளறி... அரைத்த கீரை,
உப்பு சேர்த்து இரண்டு முறை புரட்டி அடுப்பை அணைத்துவிடவும். உதிர் உதிராக
வடித்த சாதத்தை இதனுடன் சேர்த்துக் கிளறிவிடவும்.
குறிப்பு: முளைக்கீரைக்குப் பதில் அரைக்கீரை, சிறுகீரை சேர்க்கலாம்.
கோதுமை ரவை புலாவ்
தேவையானவை: கோதுமை
ரவை - ஒரு கப், பெரிய வெங்காயம், கேரட், குடமிளகாய் - தலா ஒன்று, இஞ்சி -
பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், ஊறவைத்த பச்சைப் பட்டாணி - 3
டேபிள்ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 4
டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: சோம்பு, கசகசா (இரண்டும் சேர்ந்து) - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், தக்காளி - ஒன்று.
செய்முறை: அரைக்கக்
கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, நறுக்கிய
வெங்காயம், குடமிளகாய், கேரட் சேர்த்து வதக்கி... கோதுமை ரவையையும்
அதனுடன் சேர்த்து வதக்கி, இறுதியில் இஞ்சி - பூண்டு விழுது போட்டு
வதக்கவும். இதில் ஒன்றரை கப் நீர் விட்டு, உப்பு, அரைத்து வைத்த விழுது
சேர்த்து, நன்றாகக் கலக்கி குக்கரை மூடிவிடவும். ஆவி வந்ததும் குக்கரைத்
திறந்து பச்சைப் பட்டாணி சேர்த்து மூடி, 'வெயிட்’ போட்டு ஒரு விசில்
வந்ததும் இறக்கிவிடவும். மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.
கலர்ஃபுல் குடமிளகாய் பிரியாணி
தேவையானவை: பாசுமதி
அரிசி - 2 கப், பச்சை, சிவப்பு, மஞ்சள் குடமிளாய் (நறுக்கியது) - தலா அரை
கப், எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க: துவரம்பருப்பு - கால் கப்,
உளுத்தம்பருப்பு - கால் கப்புக்கு கொஞ்சம் குறைவாக, பெருங்காயத்தூள் - ஒரு
சிட்டிகை, தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
பாசுமதி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து மூன்றரை கப் தண்ணீர், சிறிதளவு உப்பு
சேர்த்து உதிர் உதிராக வேகவைக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண் ணெய்
விட்டு துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து
வறுத்து, இறுதியில் தேங்காய்த்துரு வலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
இதை மிக்ஸியில் பொட்டு உப்பு சேர்த்து, சற்றுக் கொரகொரப்பாக பொடிக்கவும்.
மூன்று வண்ண குடமிளகாய்களை தனித்தனியாக, மீதமுள்ள
எண்ணெயில் வதக்கவும். ஒவ்வொன்றுடனும் 2 டேபிள்ஸ்பூன் பொடித்து வைத்த பொடியை
சேர்க்கவும். ஒவ்வொரு குடமிகாய் கலவையுடனும் உதிர் உதிரான சாதத்தைச்
சேர்ந்துக் கலக்க வும். பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணத் தில் குடமிளகாய்
சாதங்களை மூன்று அடுக்காக அடுக்கி பரிமாறவும்.
வேப்பம்பூ பிரியாணி
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உலர்ந்த வேப்பம்பூ - கால் கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வேப்பம்பூவை சிறிதளவு எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும். பச்சரிசியை வெறும்
வாணலியில் வறுத்து... ஒரு கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப்பால், உப்பு,
வேப்பம்பூ சேர்த்து வேகவிட வும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். இது
உடல் நலத்துக்கு பெரிதும் உதவும்.
குறிப்பு: வேப்பம்பூ,
தேங்காய்ப்பால் இரண்டையும் தொடர்ந்து சாப்பிட்டால்... வயிற்று வலி
மற்றும் வயிற்றுப் பூச்சிகள் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம். தற்போது
வேப்பம்பூ சீஸன் என்பதால், அதை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
Post a Comment