ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 4 சளி இருமலுக்கு ஸ்பெஷல் காபி!
ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 4 சளி இருமலுக்கு ஸ்பெஷல் காபி! சித்த மருத்துவர் கு.சிவராமன் ஹெல்த் ...
https://pettagum.blogspot.com/2014/02/4.html
ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 4
சளி இருமலுக்கு ஸ்பெஷல் காபி!
சித்த மருத்துவர் கு.சிவராமன்
ஹெல்த் / உணவு / குடும்பம் / அழகு / ஃபிட்னெஸ்
'ஹலோ டாக்டர் பாட்டி! குட்மார்னிங்.. காலையிலேயே கிச்சன்ல என்ன செய்றீங்க?'
''ம்ம். ராத்திரியெல்லாம் உன் அண்ணன் லொக்லொக்குனு இருமிட்டு இருந்தான்... அதுதான் அவனுக்கு 'ஸ்பெஷல் காபி’ போடுறேன் செல்லம்'
'ஸ்பெஷல் காபியா? கூர்க்கில் விளையுதா?'
'ம்ம்... நம்ம வீட்டுத் தோட்டத்தில்தான். இந்த
நாட்டுக்கு காபி வந்து 200 வருஷம் ஆயிடுச்சு. அதுக்கு முன்னால் நாம
அவங்கவங்க வேலைக்கு ஏத்தமாதிரி 'கஸ்டம் மேட்’ காபிதான் குடிச்சோம்? அந்த
ஸ்பெஷல் காபியைத்தான் உங்க அண்ணனுக்கு செஞ்சுட்டு இருக்கேன்...'
'அய்யய்யோ... கஷாயமா பாட்டி?'
'என்ன, 'அய்யய்யோ கஷாயம்?’ நீ உறிஞ்சிக் குடிக்கிற
ரசமும் கஷாயம்தான். நீ காலேஜ்ல அரட்டை அடிச்சிட்டே குடிக்கிற டீயும்
கஷாயம்தான். எந்த ஒரு தாவரத்தோட நல்ல மருத்துவ குணங்களையும் உடனடியா
எடுக்கிற வழி கஷாயம்தான். 'Aqueous decoction’ ன்னு இன்னைக்கு அறிவியல்
சொல்றதை, நம்ம முப்பாட்டன் என்னைக்கோ செஞ்சிருக்காங்க தெரியுமா?'
'ஓ... பிரமாதமா மணக்குது இந்த ஸ்பெஷல் காபி..? அப்படி இதுல என்னல்லாம் சேர்த்திருக்கே?'
'வீட்டுக்குப் பின்னால வளர்ற துளசி, கற்பூரவல்லி,
தூதுவளைக் கொடி கூடவே, நம்ம வீட்டு சமையல் அறையில் எப்பவும் வெச்சிருக்கிற
அதிமதுரம், அரத்தை, மிளகு, பனை வெல்லம்... இதுதான்.
சளி, இருமல் சட்டுனு
போக்கிடும். துளசி, அரத்தையோட வாசமும், கற்பூரவல்லி, மிளகோட காரமும், பனை
வெல்லத்தோட சுவையும் சேர்த்துத்தான் இந்த காலை ஸ்பெஷல் பானத்தைத்
தயாரிக்கணும்.
மிளகை ஒன்று ரெண்டாப் பொடிச்சுக்கணும். இதுகூட இலையையெல்லாம்
சுத்தமாக் கழுவி, சின்னத் துண்டா நறுக்கிச் சேர்க்கணும். அதிமதுரம்,
அரத்தையை நீளவாக்கில் நல்லா நசுக்கியும் போடணும்.
''என்ன அளவுல சேர்க்கணும் பாட்டி?''
''இலையெல்லாம் ஒரு கைப்பிடி, அரத்தை, அதிமதுரம்
சேர்த்து ஒரு கைப்பிடி, மிளகு ஒரு ஸ்பூன் போட்டு, ரெண்டு டம்ளர் தண்ணீர்
வீட்டு, ஒரு டம்ளரா வத்தினதும், கடைசியாக ஒரு ஸ்பூன் பனை வெல்லம் போட்டு
சூட்டோட ஆத்திக் குடிக்கணும்.'
'வாவ்... 'இருமலுக்கு சித்தரத்தை.. இதயத்துக்கு செம்பரத்தை’ன்னு முன்னாடி ஒரு ஹைக்கூ கவிதை சொல்லுவியே.. அந்த சித்தரத்தை தானே!'
'ஆமாம்டீ... சித்தரத்தை இருமல் போக்கும். அதிமதுரம்
வறட்டு இருமலைத் தணிச்சு, தொண்டையை இதமாக்கும்.
இருமலுக்கு பின்னாடி, வைரஸ்
சேட்டை பண்ணிச்சுன்னா துளசி, அதைக் கட்டுப்படுத்தும். கற்பூரவல்லி
தொண்டைப்பகுதியில் உட்கார்ந்துக்கிட்டு, சேட்டை பண்ற பாக்டீரியாவைத்
துரத்தும்.
மிளகு, நம்ம எல்லை ராணுவம் மாதிரி. நோய் எதிர்ப்பாற்றலைக்
கொடுக்கும். மொத்தத்துல இந்த காம்பினேஷன் சளி, இருமல் போக்கும்
சகலகலாவல்லவன். ரெண்டு வேளை குடிச்சா, மூணே நாள்ல சளி, இருமலையும் போக்கும்
இந்த மருந்து.'
'சூப்பர் பாட்டி. எதிர் வீட்டு அக்கா பையன் மூக்கு ஒழுகிட்டு, இருமிக்கிட்டே இருக்கானே... அவனுக்கும் இதைக் குடுக்கலாமா?'
'நேத்தே ரெசிபியை அவகிட்ட சொல்லிட்டேன். ஆனால், அந்த
குட்டிப் பயல் கொஞ்ச நாளா மெலிஞ்சிட்டே வர்ற மாதிரி இருக்கு. பிரைமரி
காம்ப்ளக்ஸா இருக்குமோனு தோணுது. அதான் குடும்ப டாக்டரை ஒரு எட்டு
பார்த்துட்டு வரச் சொல்லியிருக்கேன்.
குழந்தைங்களுக்கு வருஷத்துக்கு 23
தடவை சளி இருமல் வந்தா பயப்பட வேண்டியதில்லை. ஆனா, மாசம் முழுக்க இருந்தா
பிரைமரி காம்ப்ளக்ஸ் இருக்குதானு பார்க்கணும். நிறைய குழந்தைங்களுக்கு
சரியா அதைச் சோதிக்காம விட்டுடறாங்க!
'ரொம்ப அப்டேட்டடா இருக்கியே பாட்டி. இந்தப் பிரச்னைக்கு மருந்தோட நாம என்னல்லாம் செய்யணும்?'
''ஆறு மாசம், ஒன்பது மாசம்னு டாக்டர் தர்ற மருந்தோட,
குழந்தையோட நோய் எதிர்ப்பாற்றலுக்கு சத்தான உணவும் கொடுக்கணும்.
வாரம் மூணு
நாள் காலையில் சத்துமாவுக் கஞ்சி தரணும். வாரம் ரெண்டு நாள் இரவு, மிளகு
ரசம் கொடுக்கணும்.
மதிய சாப்பாட்டுல தூதுவளை ரசம், மணத்தக்காளி வற்றலும்
செஞ்சு கொடுக்கணும்.
தினம் மாலை நேரத்துல வாழைப்பழம், அப்பப்ப நிலக்கடலை
மிட்டாய், பொட்டுக்கடலை, காய்ந்த திராட்சை, தேங்காய்ப்பூ கலந்து,
நொறுக்குத்தீனியாக் கொடுக்கணும்.
வாரத்துக்கு ரெண்டு நாள், ஒரு ஸ்பூன் தேனை
எடுத்து, அதில் அஞ்சு மிளகைப் பொடிச்சுப் போட்டு, லேசாகச் சூடு செய்து,
ஒரு சங்கு வெந்நீரில் கலந்து இளஞ்சூட்டுடன் குழந்தைக்கு இரவு வேளையில்
கொடுக்கணும்.'
''இருமல், சளிக்கு கைகண்ட மருந்துன்னா, அது என் பாட்டி வைத்தியம்தான்!''
Post a Comment