ரவா இடலி இது பெங்களூரு ஸ்பெஷல்---சமையல் குறிப்புகள்
தென்னிந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுக் காரர்களை மயக்கும் அம்சங்களில் இட்லியும் ஒன்று. என்ன மாயமோ தெரியவில்லை. தென்னிந்தியா தாண்ட...

https://pettagum.blogspot.com/2012/05/blog-post_9280.html
தென்னிந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுக் காரர்களை மயக்கும் அம்சங்களில் இட்லியும் ஒன்று. என்ன மாயமோ தெரியவில்லை. தென்னிந்தியா தாண்டி வேறு எங்கேயும் இட்லியை இட்லியாக அவித்தெடுக்க முடியவில்லை. மல்லிப்பூ பதமும், வடிவமும், சுவையும் நம் மண்ணுக்கே உரித்தான கைப்பக்குவம். சகதி மணம் மாறாத தானியங்கள், தட்பவெப்பம், தண்ணீர் ருசி என இதற்கு பல காரணங்களைச் சொல்கிறார்கள். வெளிநாடுகளில் ஏகப்பட்ட வரவேற்பு இருப்பதால் இட்லியை அவித்து, பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யமுடியுமா என்று பலகோடி ரூபாய் செலவில் தஞ்சாவூரில் ஆய்வு செய்து வருகிறார்கள். சாத்தியமானால் ஊருக்கு ஊர் இட்லி தொழிற்சாலைகள் முளைத்துவிடும்.இட்லி விஷயத்தில் நம்மைவிட கர்நாடக மக்கள் ஏகப்பட்ட பரிச்சார்த்த முயற்சிகளை செய்து பார்த்திருக்கிறார்கள். இலை இட்லி, பனை ஓலை இட்லி, கப் இட்லி என விதவிதமான இட்லிகள் அங்கே கிடைக்கின்றன. ரவா இட்லியும் அப்படியான ஒரு பரிச்சார்த்த முயற்சிதான்.பெங்களூரு நகரில், லால்பாக் பூங்கா அருகில் உள்ள ‘மாவெல்லி டிபன் ரூம்’, மல்லேஸ்வரத்தில் உள்ள ‘ஹல்லி மனே’, பசவனக்குடி, ஃபுல் டெம்பிள் சாலையில் உள்ள ‘ஹல்லி தின்டி’, இதே பகுதியில் உள்ள ‘சௌத் தின்டி’ போன்ற பாரம்பரிய உணவகங்களில் இதை ருசிக்கலாம். கேரட்டும், கொத்தமல்லியும் மேலே வண்ணக்கோலமிட, பஞ்சுப்பொதி போல குவிந்திருக்கும் ரவா இட்லியை பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறது. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. தனியாகவே சாப்பிடலாம் போலிருக்கிறது.ரவா இட்லியை அறிமுகப்படுத்தியது 1924ல் தொடங்கப்பட்ட Ôமாவெல்லி டிபன் ரூம்Õதானாம். இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் நாடெங்கும் அரிசித்தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்த சூழ்நிலையைச் சமாளிக்க கோதுமையை தூளாக்கி, அரிசிக்குப் பதில் அந்த ரவையைக் கொண்டு இட்லி அவித்து விற்பனை செய்துள்ளார்கள். இப்படித்தான் ரவை இட்லி பிறந்துள்ளது. சுவை வித்தியாசமாக இருக்கவே, காலப்போக்கில் ரவா இட்லி அந்த உணவகத்துக்கே தனிப்பட்ட அடையாளமாகி விட்டது.ரவா இட்லிக்குத் தேவை, 1கிலோ ரவா, அரைகிலோ உளுந்து, 50 கிராம் கடலைப்பருப்பு, நன்கு புளித்த 100 மிலி தயிர், 50 கிராம் பச்சைமிளகாய், கடுகு, உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கேரட்.
உளுந்தை அரைத்துக் கொள்ளவேண்டும். ரவையை நிறம்மாறும் பதத்துக்கு வறுத்து, உளுந்து மாவோடு உப்புச் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவேண்டும். சட்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கேரட் சீவலைப் போட்டுத் தாளித்து, தயிரை ஊற்றி கலக்கி, கரைத்து வைத்துள்ள மாவில் ஊற்றிக்கொள்ள வேண்டும். விரும்பினால் முந்திரித் துண்டுகளைச் சேர்க்கலாம்.பின்னர் வழக்கம் போல இட்லித்தட்டில் ஊற்றி அவிக்க வேண்டியதுதான். இட்லி வெந்ததும் பரவுகிற வாசனை பசியைத் தூண்டும். சூடாக சாப்பிடுவதே சுவை. கூடவே, தேங்காய் சட்னியும், உருளைக்கிழங்கு குருமாவும் இருந்தால்... ஆஹா... ஓஹோ... பேஷ்... பேஷ்.
Post a Comment