நாட்டுக்கோழி வளர்க்கும்
பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும்
ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக
மட்டுமில்லாமல், கிராமப்புற மக்களின் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும்
பயன்படுகிறது.
நாட்டுக்கோழிகளை ஏழைகள், பெண்கள்
மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரும் எந்த சிரமமும் இன்றி வளர்கலாம்.
பெரும்பாலும் விட்டிலுள்ள அரிசிகுருணை, எஞ்சியுள்ள தீவனப்பொருட்கள், வயல்
வெளிகளில் உள்ள புழு பூச்சிகள் போன்றவற்றை உண்டு நாட்டுக்கோழிகள்
வளர்க்கப்படுகின்றன.
புறக்கடையில் வளர்க்கப்படும்
கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல்
வளர்க்கப்படுகிறது. அதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால்
உற்பத்தி திறன் குறைந்து காணப்படுகிறது. எனவே சரியான முறையில் சரிவிகித
தீவனம் கொடுத்து நோய் தடுப்பு முறைகளையும் பின்பற்றி வளர்தோமானால் நாட்டுக்
கோழி வளர்ப்பு அதிக இலாபமான தொழிலாக வளர்சியடயும்.
நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள நன்மைகள்:
வீட்டில் எளிதாக கிடைக்கும்
தானியங்களை கொண்டும் தோட்டங்களில் பச்சை புற்களை மேயிந்தும் வளரக்கூடியது.
சந்தையில் எப்போதும் நல்ல விற்பனை வாய்ப்புடன் அதிக விலையுள்ள இறைச்சி
அதிகமாக தேவைப்படும் ருசியான முட்டைகள் குறைவான செலவில் அதிக லாபம் தரும்
தொழில். அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யும் தொழில். அதிக நோய் எதிர்ப்பு
சக்தி கொண்டது. சுய வேலைவாய்ப்புக்கு ஏற்ற தொழில். கிராமப்புற
பெண்களுக்கேற்ற நல்ல பகுதி நேர வேலை வாய்ப்பு. நாட்டுக் கோழிகளின் அடை
காக்கும் தன்மை. குஞ்சுகளை பாதுகாத்து வளர்க்கும் தன்மை சிறந்த உர மதிப்பு
எச்சம்.
நாட்டுக்கோழி இனங்கள்:
நம் இந்தியாவில் மட்டும் 18 கோழி இனங்கள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் 7 கோழியினங்கள் உள்ளன.
1.குருவுக்கோழி,
2.பெருவிடைக்கோழி,
3.சண்டைக்கோழி அசில்கோழி,
4.கடக்நாத் என்னும் கருங்கால் கோழி,
5.கழுகுக்கோழி அல்லது கிராப்புக்கோழி என்னும் நேக்கட் நெக்,
6.கொண்டைக்கோழி,
7.குட்டைக்கால் கோழி.
8.உயர்ரக நாட்டுக்கோழி இனம்
நந்தனம்கோழி ஆராய்ச்சி நிலையத்தில்
நந்தனம் ஒன்று மற்றும் நந்தனம் இரண்டு என்ற இருவகை உயரினக் கோழிகள்
உற்பத்தி செய்தனர். ஆந்திர மாநிலத்தில் வனராஜா என்ற உயரினக்கோழியை உற்பத்தி
செய்தனர். பெங்களூரு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கிரிராஜா
மற்றும் சுவர்ணதாரா என்னும் உயரினக் கோழிகளை உற்பத்தி செய்து புறக்கடை
முறையில்கோழி வளர்ப்பதற்காக நமக்கு கொடுத்துள்ளனர்.
கோழிகள் தேர்வு:
நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும்
சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில்
கவனமுள்ளவையாகவும் இருக்கும் வேகமான நடை, வேகமான ஓட்டம், தேவைக்கேற்ப சில
மீட்டர்கள் தூரம் பறத்தல், சில நேரங்களில் கொக்கரித்தல், கூவுதலுமாக இருக்க
வேண்டும். பொதுவாகச் சேவல்கள் இனச்சேர்க்கையில் பிரியமுள்ளவைகளாய்
இருக்கும். நல்ல அகலமான நெஞ்சம், நீண்ட உடலமைப்பும் நல்ல சேவலுக்கு
உதாரணமாகும். கோழியின் சுகத்தை கொண்டைல் பார் என்பார்கள். நல்ல சிவந்த
பளிச்சென்ற கொண்டை நல்ல சுக தேகத்தைக் குறிக்கும். கால்கள் மஞ்சள் கலந்த
பழுப்பு நிறத்துடன் இருக்க வேண்டும். நம் நாட்டு சூழலுக்கேற்ப வளரக்கூடிய
ப்ரம்மா ரகக்கோழிகளை தேர்ந்தெடுப்பது நல்லது. தேவையான அனைத்து
உணவுச்சத்துக்களும் அடங்கிய சரிவிகிதத் தீவனத்தையே எப்பொழுதும் உபயோகிக்க
வேண்டும். தீவனத் தொட்டியில் போதுமான இடவசதி, கோழிகளுக்குக் கிடைக்கும்
வண்ணம் தேவையான எண்ணிக்கையில், தீவனத் தொட்டிகளை வைக்க வேண்டும். தீவனத்
தொட்டியின் மேற்புற விளிம்பு, கோழிகளின் முதுகுப்புறத்திற்கு இணையான
நேர்கோட்டில் இருக்கும்படி வயதுக்கு ஏற்ப தீவனத்தொட்டியின் உயரத்தை மாற்றி
அமைத்துவர வேண்டும். சரிவர அமைக்கப்பட்ட தீவனத் தொட்டிகளை மட்டுமே
உபயோகிக்க வேண்டும். அரைக்கப்பட்ட தீவனத்தைத் தொடர்ந்து பல நாட்களுக்குச்
சேமித்து வைக்கக்கூடாது. தீவன மூடைகளை ஒரு அடி உயரம் உள்ள மரச்சட்ட
அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி உயரம் உள்ள
மரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி தள்ளி
இருக்கும்படிதான் அடுக்கி சேமிக்க வேண்டும்

நாட்டுக் கோழி வளர்ப்பு முறைகள்
மேய்ச்சல் முறை / புறக்கடை வளர்ப்பு
ஒரு சென்ட் பரப்பளவில் 200 கோழிகள் வளர்கலாம். போதுமான நிழல், பசுந்தீவனம், தீவனம், தண்ணீர் கிடைக்கப் பெறுமாறு செய்திடல் வேண்டும்.
மித தீவிர முறை
கொட்டில்
கலந்த மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது ஒரு சென்ட் பரப்பளவில் 700
கோழிகள் வளர்க்கலாம். கோழிகள் புழு , பூச்சி , தானியங்கள் , இலை, தழைகளை
உண்டு வாழும்.
தீவிர முறை
கோழிகளை தரை கூண்டு அல்லது பரண் மேல் விட்டு வளர்ப்பது.
கூண்டு முறை
கம்பிகள் பின்னப்பட்ட கூண்டுகளில் குஞ்சுகள் முதல் கோழிகள் வரை வளர்ப்பது.
“மெய்ச்சல்ல வளர்ந்தாதான் அது நாட்டுக் கோழி ”
தமிழ்நாடு
கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் திண்டுக்கல் பயிற்சி மைய தலைவர்
மற்றும் துணைப் பேராசிரியர் பீர் முகமதுவிடம், நாட்டுக் கோழி வளர்ப்பு
பற்றி கேட்டபோது, “பிராய்லர் கோழிகளைத் தவிர்த்துவிட்டு நாட்டுக் கோழிகளை
வளர்க்குற விஷயம் கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா, லேயர்,
பிராய்லர் தீவனத்தைக் கொடுத்து நாட்டுக் கோழிகளை மொத்தமா அடைச்சு வெச்சு
வளக்குறப்போ பிராய்லருக்கும் நாட்டுக் கோழிக்கும் வித்தியாசமே இல்லாமப்
போயிடும். கம்பெனித் தீவனங்களில் வளர்ச்சி ஹார்மோன்களைத் தூண்டி
விடுறதுக்காக சில வேதிப்பொருட்கள கலக்குறாங்க. அதனால பல பிரச்னைகள்
வருதுன்றது எல்லோருக்குமே தெரியும். கம்பெனித் தீவனத்தைச் சாப்பிடுற எந்தக்
கோழியா இருந்தாலும், அதுங்களுக்கு ரசாயன பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.
அந்தக் கோழி கறியைச் சாப்பிடற மனிதர்களுக்கும் பாதிப்புகள் வரத்தான்
செய்யும். அதில்லாம நாட்டுக் கோழிகளுக்கு நோய்த் தாக்குதல்
இருக்காதுங்கிறது சரிதான். ஆனா, மேய்ஞ்சு, திரிஞ்சு இரையெடுக்குற
கோழிகளுக்குத்தான் நோய் வராது. மொத்தமா அடைச்சு வெச்சா, கண்டிப்பா நோய்த்
தாக்குதலுக்கு உள்ளாகும். அப்புறம் அதுக்கான மருந்து, ஊசினு போடறப்ப…
பழையபடி பிராய்லர் கோழி கணக்காத்தான் இருக்கும். இயற்கைச் சூழல்ல மேயவிட்டு
வளர்த்தாதான் அது முழுமையான நாட்டுக் கோழி. மண்ணைக் கிளறி, கரையான், புழு
பூச்சிகளைப் பிடிச்சு சாப்பிட்டு வளர்ற கோழிகளுக்குத்தான் இயற்கையான சுவை
இருக்கும். தோட்டங்கள்ல விவசாயத்தோட உபத் தொழிலா நாட்டுக் கோழி
வளர்ப்பையும் விவசாயிகள் செய்தா… போதுமான அளவுக்கு நாட்டுக் கோழிங்க
கிடைக்க ஆரம்பிச்சுடும். கிராமங்கள்ல வீட்டுக்கு வீடு வளர்க்கலாம்.
புறக்கடை முறையில வீட்டுக்குவீடு நாட்டுக் கோழிங்க வளர்க்குறதை எங்க துறை
மூலமா ஊக்கப்படுத்திக்கிட்டிருக்கோம். கொஞ்சம் பெரிய அளவுல வளர்க்கணும்னு
நினைக்கறவங்க, தனித்தனியா 75 சதுரடி இருக்குற கொட்டகைகள்ல, 10 பெட்டைக்கு 2
சேவல்ங்கிற விகிதத்துல வெச்சு நாமளே தீவனத்தைத் தயார் பண்ணிக் கொடுத்து
வளக்கலாம். அந்தக் கோழிகள் மேயுறதுக்காக வலை அடிச்சு கொஞ்ச இடத்தை
ஒதுக்கிக் கொடுக்கலாம். அப்பதான் தரமான நாட்டுக் கோழிகளை உருவாக்க
முடியும். இந்த முறையில அடை வெச்சே வருஷத்துக்கு எண்ணூறு குஞ்சுகளை
உற்பத்தி பண்ண முடியும். இதுபத்தின தொழில்நுட்பம் தேவைப்படுறவங்க எங்க
ஆராய்ச்சி மையத்துக்கு வந்து தெரிஞ்சுக்கலாம்” என்று அழைப்பு வைத்தார்.
ஆடு, பிராய்லர் கோழி, மீன் என
பல்வேறு இறைச்சி வகைகள் இருந்தாலும், அசைவ பிரியர்கள் அதிகம் விரும்புவது
நாட்டுக் கோழியை தான். அதன் சுவையே தனி. பண்ணை அமைத்து இக்கோழிகளை
கவனத்துடன் வளர்த்தால், நல்ல லாபம் குவிக்கலாம்’ என்கிறார் ஈரோடு நஞ்சை
ஊத்துக்குளி ரூஸ்டர்ஸ் கேட்சர்ஸ் நிர்வாக இயக்குனர் பாலு. அவர் கூறியதாவது:
நாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளது. ஆனால்
தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய
இத்தொழிலை முறையாக மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும். பொதுவாக
கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பது வழக்கம். விற்பதற்காக
வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இதையே தொழிலாக செய்தால்
நல்ல பார்க்கலாம்.
கிராமப்புற விவசாயிகள் விவசாய
நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி
வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் பராமரிப்புக்கு
செலவிட்டால் போதும். நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து
வாங்கி வந்து வளர்க்கலாம். முட்டையாக வாங்கி, கருவிகள் மூலம் நாமே பொரிக்க
செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர்
மெஷின், அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் தேவைப்படும்.
பராமரிப்பு முறைகள் பண்ணை வைக்கும் இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற
பறவைகளை அண்ட விடக்கூடாது. அந்நிய பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு பறவை
காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பண்ணைக்குள் மரம் வளர்க்கக் கூடாது.
செடி, கொடிகள் இல்லாமல் இருப்பது கோழிகளுக்கு நல்லது. பண்ணைகளுக்கு அருகில்
அதிக சத்தம் வரும் வெடிகளை வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால், மற்ற சத்தங்கள்
கோழிகளை பாதிக்காது.
முதல் 48 நாட்களுக்கு புரோட்டீன்
அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு தர வேண்டும். 48 நாட்களுக்கு
பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கலந்து கொடுக்கலாம். எடை
அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை தண்ணீரில்
கலந்து கொடுக்கலாம். கேரட், பெரியவெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கி
தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை
வகையை பொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால்
தீவனச்செலவு குறையும். கறியின் ருசியும் அதிகரிக்கும்.
வளர்ப்பது எப்படி?
அதிகம் காற்று புகாத நான்கு பக்க
சுவர் உள்ள அறையில், 30 அடி நீளம், 2 அடி உயரம் உள்ள கெட்டியான தகடால் வட்ட
வடிவில் வளையம் அமைக்க வேண்டும். குஞ்சுகள் இரவு நேரங்களில் குளிரை
தாங்குவதற்காக, வளையத்துக்குள் ஒரு அடி உயரத்தில் 100 வாட் பல்புகள் 4
பொருத்த வேண்டும். வெயில் காலங்களில் 300 குஞ்சுகளுக்கு 100 வாட் பல்பு
மூன்றும், குளிர்காலத்தில் நான்கும் பொருத்தினால் தேவையான அளவு வெப்பம்
இருக்கும். வட்டத்துக்குள் 2 இஞ்ச் உயரத்துக்கு நிலக்கடலைதோல் போட்டு சீராக
பரப்பி, அதன்மேல் பேப்பர் விரிக்க வேண்டும். அதனுள் தீவனத்தொட்டி மற்றும்
தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும். அதற்குள் 300 குஞ்சுகளை வளர்க்கலாம்.
தினசரி பேப்பரை மாற்ற வேண்டியது அவசியம். அறையில் 20 நாட்கள் வளர்த்த
பின்னர், நல்ல காற்றோட்டம் உள்ள பண்ணைக்கு மாற்ற வேண்டும். அங்கு தரையில்
நிலக்கடலைதோல் அல்லது தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரை
முதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகி விடாமல்
இருக்க அடிக்கடி கிளறி விட வேண்டும்.
கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு
கொத்துவதை தவிர்ப்பதற்காக, 20 முதல் 30 நாட்களுக்குள்ளாக குஞ்சுகளின்
மூக்கு நுனியை வெட்ட வேண்டும். இங்கு 60 நாட்கள் வளர்க்க வேண்டும்.
மொத்தமாக 80 நாட்கள் பூர்த்தியானதும், சேவல்களை உடனடியாக விற்பனைக்கு
அனுப்பலாம். கோழிகளை கூடுதலாக 10 முதல் 20 நாட்கள் வரை வளர்த்த பின்னர்
விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.
குஞ்சு
பொரிப்பு பண்ணையில் வளர்க்கப்படும் தாய்க்கோழி இடும் முதல் 2 முட்டைகள்
குஞ்சு வளர்ப்புக்கு தகுதியற்றது. இதர முட்டைகளில் எடை குறைவு, ஒழுங்கற்ற
அமைப்புள்ள முட்டைகளை தவிர்க்க வேண்டும். மற்ற முட்டைகளை இன்குபேட்டர்
மெஷினில் 18 நாட்கள் 99.6 டிகிரி சென்டிகிரேடு வெப்பம், 70 டிகிரி
சென்டிகிரேடு ஈரப்பதம் உள்ளவாறு வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் 10 ஆயிரம்
முட்டைகளை வைக்கலாம். பின்னர் கேட்சர் மெஷினில் 3 நாள் வைத்தால் முட்டைகள்
பொரிந்து குஞ்சுகள் வெளிவரும்.
நாட்டுக்கோழி பராமரிப்பு
இளம் நாட்டுகோழி குஞ்சுகள் பராமரிப்பு ( 1 – 7 வாரம்)
குஞ்சுகளை
பெறுவதற்கு முன் கொட்டகைகளில் அடைப்பான்களை அமைக்க வேண்டும். ஒரு
அடைகாப்பானில் அதிகபட்சமாக 250 – 300 குஞ்சுகளை வைத்து வளர்க்கலாம். முதல்
வாரத்தில் 95 பாரன்கீட் என்றளவில் வெப்பம், பிறகு ஒவ்வொரு வாரமும் 5
பாரன்கீட் என்றளவில் வெப்பத்தை குறைத்து கொடுக்க வேண்டும். குஞ்சு பருவ
தீவனத்தை கொடுத்து வளர்க்க வேண்டும். சுடவைத்து ஆற வைத்த தண்ணீரை
குஞ்சுகளுக்கு கொடுக்க வேண்டும். நியோ மைசின், டாக்சி சைக்லின்,
செபலேக்சின் போன்ற கோழி குஞ்சுகளுக்கு நோய் பாதிப்பை தடுக்க கொடுக்கப்பட
வேண்டும்.
வளர் நாட்டுகோழி பராமரிப்பு (8 – 18 வாரம்)
இப்பருவத்தில்
கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் புரதசத்தின் அளவு சதவீதம் இருக்க
வேண்டும். எரிசக்தியின் அளவு 2700 கிலோ கலோரியாகவும் , நார் சத்தின் அளவு 8
சதவீதத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். 17 வது வார துவக்கத்தில்
பேன், செல் போன்ற வெளிப்புற ஒட்டுண்ணிகள் காணப்பட்டால் அதை ஒழிப்பதற்கு 1-2
மி.லி டெல்டா மெத்திரின் என்ற மருந்தை (பியுட்டாக்ஸ்) லிட்டர் தண்ணீர்
கலந்து கோழிகளின் தலைப்பகுதி தவிர முக்கி எடுத்தல் வேண்டும். மேலும்
கொட்டகைகளிலும் தெளித்து விட வேண்டும். இந்த மருந்து கோழிகளை வெயில்
அடிக்கும் மதிய வேளையில் மேற்கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றத்தின் போது
கோழிகளின் சுவாச கோளாறு ஏற்ப்பட்டால் என்ரோ பிலாக்சசின் மில்லி /கோழி என்ற
அளவு தண்ணீரில் கொடுக்க வேண்டும்.
முட்டையிடும் நாட்டுக்கோழி பராமரிப்பு ( 18 வாரம் முதல் )
ஒரு
கோழி ஒரு வருடத்தில் சுமார் 60 முதல் 80 முட்டைகள் வரை இடும். ஒரு
பருவத்தில் 12 – 18 முட்டைகள் இடும். கலப்பின நாட்டுக் கோழியான நாமக்கள்
கோழி 1 240 – 280 முட்டைகள் வரை இடும். இப்பருவத்தில் 18 சதவீத புரதமும்,
2700 கிலோ கலோரி எரிசக்தி தீவனம் அளித்தல் வேண்டும். ஒரு முட்டை கோழி
தினமும் 240 – 300 மி.லிட்டர் தண்ணீர் குடிக்கும்.
கோடைகால பராமரிப்பு
கோழிகள் தீவனம் இல்லாமல் பல
நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால் உயிர்வாழ
முடியாது. கோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை
காலங்களில் சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர்
பெரும்பங்காற்றுகிறது. வணிக அளவில் வளர்க்கப் படும் இறைச்சிக்கோழிகளுக்கு
அவை உண்ணும் தீவனத்தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவை. கோடையில் கோழிகளின்
உடலிலிருந்து கூடுதலாக வெப்பம், அவை விடும் மூச்சுக் காற்றின் மூலமே
வெளியேறுகிறது. பறவைகளைப் பொறுத்தமட்டில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாத
காரணத்தால் கூடுதலாக உண்டாகும் உடல்வெப்பத்தை வியர்வை மூலம் வெளியேற்ற
இயலாது. எனவே கோழிகளால் சுவாசக் காற்று மூலம்தான் உடல் சூட்டினை தணித்துக்
கொள்ள முடியும். இதற்காக கோழிகளுக்கு பெருமளவு தண்ணீர் தேவைப் படுகிறது.
கோடையில் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப அயர்ச்சியைக் குறைக்க தகுந்த
தண்ணீர் கொடுப்பதன் மூலம் குறைக்கலாம். இத்துடன் தாது உப்புக்களையும் போதிய
அளவு சேர்த்துக் கொடுத்தால் வெப்ப அயர்ச்சி குறைபாட்டை நீக்குவதுடன்
கோழிகளுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுகின்றன.
தண்ணீரில் நோய் உண்டாக்கும் கிருமிகளின் அளவைக் குறைக்க குளோரின் பவுடர்,
அயோடின் கலவைகள், ஹைட்ரஜன் பெர் ஆக்சைடு போன்றவற்றை பயன் படுத்தலாம். இதில்
குறைந்த செல வில் குளோரின் வாயுவைப்பெற 1000 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம்
வரை பிளீச்சிங் பவுடரைப் பயன்படுத்தலாம். அயோடின் தயாரிப்புகளை 10
லிட்டருக்கு 1 மிலி வீதம் பயன்படுத்தலாம். தரமற்ற குடிநீர் கோழிக்கு
ரத்தக்கழிச்சல், சால்மோனல்லோசிஸ், கோலி பேசில்லோசிஸ் போன்ற நோய்
பாதிப்புகளை உண்டாக்குவதுடன் அவற்றின் உற்பத்தி திறனையும் குறையச்
செய்கின்றன. முட்டையிடும் கோழிகள் முட்டையிட்டவுடன் அதிக அளவு தண்ணீரைக்
குடிக்கும். இரவு நேரங்களில் வெளிச்சத்துக்காகப் போடப்படும் விளக்குகளை
அணைப்பதற்கு முன்னும், அதிக தண்ணீர் அருந்தும். இறைச்சிக் கோழிகளைப்
பொறுத்தமட்டில் சூரிய ஒளி பட்டவுடன் அல்லது செயற்கையாக வெளிச்சம்
அளித்தவுடன் அதிக அளவு தண்ணீர் குடிக்கும். எனவே கோடையின் வெப்பத்
தாக்குதலை உணர்ந்து, தகுந்த அளவில், தரமுள்ள தண்ணீர் கோழிகளுக்கு வழங்க
வேண்டும்.
குளிர்கால பராமரிப்பு
சிமென்ட் தரை கொண்ட கோழி வீட்டில்
மரத்தூள், மரஇழைப்பு சுருள், நெல் உமி, நிலக்கடலைத் தோல், கரும்பு சக்கை,
துண்டிக்கப்பட்ட மக்காச் சோளத் தக்கை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகித்து
கோழிகளை வளர்க்கலாம். ஆழ்கூளமாக உபயோகப்படுத்தும் பொருட்கள் நன்றாக ஈரத்தை
உறிஞ்சக்கூடியதாக இருக்க வேண்டும். மலிவு விலையில் உள்ளூரிலேயே கிடைக்கக்
கூடியதாக இருக்க வேண்டும். மற்றும் ஆழ்கூளத்தை கிளறிவிடும் போது காற்றில்
எளிதில் உலரக் கூடியதாக இருக்க வேண்டும். கோழி வளர்ப்பில் ஆழ்கூளப்
பராமரிப்பு மிகவும் முக்கியமான தாகும். கூளத்தை தினமும் நன்கு கிளறிவிட
வேண்டும். கோழி வீட்டின் காற்றோட்டம், கோழிகளின் வயது, எண்ணிக்கை, எடை
மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றினை பொருத்து ஆழ் கூளத்தில் ஈரப்பதம்
அதிகமாகி கெட்டியாகிவிடும். மேலும் அமோனியா வாயு உற்பத்தி ஆகி கோழிகளுக்கு
கண் எரிச்சல், சுவாச நோய்கள் பாதிப்பு ஆகியவை ஏற்படுவதோடு அல்லாமல் ரத்த
கழிச்சல் நோயும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதன் விளை வாக கோழிகளின் இறப்பு
விகிதம் அதிகமாவதோடு பாதிக்கப்பட்ட கோழிகள் சரியாக தீவனம் தண்ணீர்
சாப்பிடாமல், வளர்ச்சி குன்றி, எடையும் குறைந்து காணப் படும். ஆழ்கூளத்தில்
ஈரப்பதம் 25 விழுக்காட்டிற்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரம்
அதிகமானால் 100 சதுர அடிக்கு 8 முதல் 10 கிலோ சுண்ணாம்புத் தூள் கலந்து
தூவிவிட்டு கிளறிவிடுவது நல்லது. முதல் மூன்று வாரம் வரை ஆழ்கூளப் பொருளை 5
செ.மீ. உயரத்திற்கும் மூன்று வாரத்திற்குப் பிறகு 10 செ.மீ. உயரத்திற்கும்
கோழி வீட்டில் நிரப்ப வேண்டும். ஆழ்கூளத்தை ஒரு நாளைக்கு இரண்டு தடவை
கிளறிவிட வேண்டும்.
100 கோழிகளுக்கு சுமார் 25 லிட்டர்
குடிநீர் தேவைப் படும். இளம் கோழிக் குஞ்சு களுக்கு முக்கிய மான எதிரி
அசுத்த மான தண்ணீர் ஆகும். இளம் குஞ்சுகளின் ஆரம்பகால இறப்பு நல்ல குடிநீரை
உபயோகப் படுத்தாததினால் ஏற்படுகிறது. ஆகவே சுத்தமான குடிநீர் அளிக்க
வேண்டும். எந்த இடத்திலிருந்து குடிநீரை எடுக்கிறோமோ அந்த இடத்தில் எந்தவித
கலப்படமும் இல்லாமல் இருக்க வேண்டும். குறிப்பாக சாக்கடை கலப்படம் அல்லது
தொழிற்சாலை கழிவு கலக்க வாய்ப்பு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். ஆழ்கிணறு
நீராக இருந்தால் கொதிக்க வைக்காமல் அப்படியே நன்கு உபயோகிக்கலாம். அதே
சமயம் கிணற்று நீராக இருந்தால் அதனை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து
கொடுப்பது நல்லது. தரமான பிளீச்சிங் பவுடரை ஆயிரம் லிட்டருக்கு 4 முதல் 7
கிராம் என்ற அளவில் தண்ணீர் அளிப்பதற்கு 8 முதல் 10 மணி நேரத்திற்கு முன்பு
கலந்து அவ்வித நீரை கோழிகளுக்கு அளிக்கலாம். கிணறுகளில் பிளீச்சிங் தூள்
போடவேண்டுமென்றால் ஒரு கன அடி நீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் சேர்க்க
வேண்டும். குடிநீரை செம்பு, பித்தளை மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களில
வைத்திருந்து பின்னர் உபயோகப் படுத்தினால் குடிநீர் குளிர்ந்த நிலையில்
இருக்காது. இளம் வயது குஞ்சுகளுக்கு, சிறிதளவு தண்ணீர் வெதுவெதுப் பான
நிலையில் அளிக்க வேண் டும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக குளிர் காரணமாக
குடிநீர் குளிர்ந்து விடுவதால் அதை மாற்றி வெதுவெதுப்பான குடிநீர்
அளித்திட வேண்டும். அதேபோல் காலையில் குடிநீர் மாற்றும் பொழுதும்
புதிதாய்க் கொதித்து ஆறிய வெது வெதுப்பான குடிநீரையே அளிக்க வேண்டும்.
காலையில் சில நேரங்களில் எட்டு மணி வரையிலும் குளிர் இருப்பதால் மிகவும்
கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குஞ்சுகள் அதிக அளவில் இறக்க
நேரிடும். இளம் குஞ்சுகளுக்கு கொடுக்கப்படும் செயற்கை வெப்பத்தின் கால அளவை
குளிர்காலங்களில் மேலும் இரட்டிப்பாக்கி 2 வாரங்கள் கொடுக்க வேண்டும். அதே
போல அடைகாப்பானின் மேல் உள்ள மின்சார பல்பின் வாட் அளவை குஞ்சுகளின்
தேவைக் கேற்ப அதிகப்படுத்த வேண்டும். மின்சார பல்பின் உயரத்தையும்
குஞ்சுகளின் நிலையை அறிந்து கூட்டவோ, குறைக்கவோ செய்ய வேண்டும். வீட்டின்
இரு பக்கங்களிலும் கோணிப்பைகளை திரையாக்கி சாரல் மற்றும் பனி உள்ளே வராமல்
இரவு முழுவதும் தொங்க விட வேண்டும். அதிக சக்தி வாய்ந்த மின் விளக்குகளை
இரவு முழுவதும் எரியவிட வேண்டும். மேற்கூறிய முறை களை முறை யாக
பின்பற்றினால் குளிர்காலத் தில் கோழிப்பண்ணை களில் எவ்வித பாதிப்பும் இல்லா
மல் பண்ணையை மேம்படுத் தலாம்
தீவன கலவைக்கு (100 கிலோ கிராம்) தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும்
1 மக்காச்சோளம் 40 கிலோ
2 சோளம் 7 கிலோ
3 அறிசிகுருணை 15 கிலோ
4 சோயா புண்ணாக்கு 8 கிலோ
5 மீன் தூள் 8 கிலோ
6 கோதுமை 5 கிலோ
7 அரிசித் தவிடு 12.5 கிலோ
8 தாது உப்புக் கலவை 2.5 கிலோ
9 கிளிஞ்சல் 2 கிலோ
மொத்தம் 100 கிலோ
புறக்கடையில்
வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே
கிடைக்கிறது. இதனை ஈடு செய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும்,
அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவு வெகுவாக குறைய
வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக்
கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.
மூலிகை மருத்துவம்
சின்ன சீரகம் 10 கிராம்
கீழாநெல்லி 50 கிராம்
மிளகு 5 கிராம்
மஞ்சள் தூள் 10 கிராம்
வெங்காயம் 5 பல்
பூண்டு 5 பல்
சிகிச்சை முறை (வாய் வழியாக)
சீரகம்
மற்றும் மிளகினை இடித்த பின்பு மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து இக்கலவையை
தீவனம் அல்லது அரிசி குருணையில் கலந்து கொடுக்கவும். மிகவும்
பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிறு சிறு உருண்டைகளாக உட் செலுத்தவேண்டும்.
கோழிகளுக்கு சிறந்த தீவனம் அசோலா
அசோலா
ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகள் அசோலாவைத் தங்கள் தோட்டங்களிலேயே வளர்த்து கால்நடை மற்றும்
கோழிகளுக்கு தீவனமாக வழங்குவதன் மூலம் நல்ல உற்பத்தி பெறலாம். இதுகுறித்து
விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் க. சுப்பிரமணியன் மற்றும்
உதவிப் பேராசிரியர் வெ. தனுஷ்கோடி கூறியது: “அசோலா தண்ணீரில் மிதக்கக்கூடிய
பெரணி வகையைச் சேர்ந்த தாவரமாகும். இதை விவசாயிகள் உயிர் உரமாக நெல்
வயலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். சமீபகாலமாக அசோலா ஓர் உன்னத கால்நடை
மற்றும் கோழித்தீவனமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 25 முதல் 30
விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளது. கால்நடைகளுக்குத் தேவையான அமினோ
அமிலங்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் ஆகிய
சத்துகள் இதில் உள்ளன. பீட்டாகரோடின் நிறமியானது வைட்டமின் ஏ உருவாவதற்கு
மூலப்பொருளாக உள்ளது. இச்சத்து உள்ளமையால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச்
சத்து அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அசோலா சாப்பிட்ட கோழியின் முட்டைகளை
நாம் உண்பது கண்பார்வைக்கு நல்லது. அசோலா உற்பத்தி முறைகள்: நிழல்பாங்கான
இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்தி அமைத்து,
பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் காகிதத்தை சீராக விரிக்கவும்.
பாலீத்தீன் காகிதத்தின் மேல் 2 செ.மீ. அளவுக்கு மண் இட்டு சமப்படுத்தவும்.
இதன்மேல் 2 செ.மீ. அளவுக்கு தண்ணீர் ஊற்றவும். பின் பாத்தி ஒன்றுக்கு 100
கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 5 கிலோ அசோலா தாய் வித்து இடவேண்டும்.
நாள்தோறும் காலை அல்லது மாலை வேளையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு
கலக்குவதால் மண்ணில் உள்ள சத்துகள் தண்ணீரில் கரைத்து அசோலாவிற்கு எளிதாக
கிடைக்கும். 15 நாள்களில் ஒரு பாத்தியில் (10 அடி நீளம், 2 அடி அகலம், 1
அடி ஆழம்) 30 முதல் 50 கிலோ அசோலா தாயாராகி விடும். மூன்றில் ஒரு பங்கு
அசோலாவை பாத்தியிலேயே விட்டு எஞ்சிய 2 பகுதியை அறுவடை செய்யலாம். 10
நாள்களுக்கு 1 முறை பசுஞ்சாணம் கரைப்பது நல்லது. பூச்சித்தொல்லை வந்தால் 5
மில்லி வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியில் தெளிக்கவும்.
அசோலாவின் உற்பத்தி கோடை காலங்களில் சிறிது குறைந்தும், மழைக்காலங்களில்
அதிகரித்தும் காணப்படும். மூன்று அல்லது நான்கு பாத்திகள் அமைத்து தினமும்
அசோலாவை அறுவடை செய்து கால்நடை மற்றும் கோழிகளுக்குச் சத்து நிறைந்த
சுவைமிகுந்த உணவாகப் பயன்படுத்தலாம். அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர்
தீவனமாகவோ கோழிகளுக்குப் பயன்படுத்தலாம். அசோலாவை பச்சைத் தீவனமாக முதன்
முதலாகப் பயன்படுத்தும் பொழுது அவற்றை உண்பதற்கு தயக்கம் காட்டலாம்.
ஆகையால் ஆரம்பகட்டத்தில் அசோலாவைத் பிற அடர் தீவனத்துடன் கலந்து
கோழிகளுக்குப் தீவனமாகப் பழக்கப்படுத்த வேண்டும். அசோலாவின் பயன்கள்:
அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடை, அல்புமின், குளோபுலின் மற்றும்
கரோடின் அளவு, அடர் தீவனம் மட்டும் இடப்பட்ட கோழி முட்டையின் சத்தைவிட
அதிகமாக உள்ளது. இந்தியாவில் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும்
ஒருங்கிணைந்து பின்பற்றப்படுகிறது. அசோலா குறைந்த செலவுள்ள இடுபொருளாக
கால்நடை வளர்ப்பில் பயன்படுகிறது. மேலும், நெல் விளைச்சலில் இயற்கை உரமாக
செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது. எனவே, அசோலா ஒருங்கிணைந்த
பண்ணையத்தில் மிக முக்கியமான இடு பொருளாகும். பெரணி தாவரமான அசோலாவின்
வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம்
தேவைப்படுகிறது. ஆகையால் உயர்ந்த வெப்பநிலையில் அசோலாவின் வளர்ச்சி
தடைபடுவதால் உற்பத்தி குறைகிறது. ஆகவே, மிகவும் வறண்ட பகுதியில் இந்த
தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவது கடினமாகும்.
நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்
கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த
பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே
இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக
பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக்
கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக
வளர்ச்சியடையும். தேவையான பொருட்கள் 1. ஒரு பழைய பானை 2. கிழிந்த
கோணி/சாக்கு 3. காய்ந்த சாணம் 4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை,
காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள் கரையான் உற்பத்தி செய்முறை
மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு
வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து
வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான்
சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா
கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர்
கொடுக்கக்கூடாது. ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு
போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண்
பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை
பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை
காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில்
நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம். கரையான் செயலாற்றும் முறை இங்கு
குறிப்பிடும் கரையான் ஈர மரக்கரையானாகும். மேலும் கரையான் ஆடு,மாடுகளைப்
போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும்
நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு
நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சக்காளானையும்
பயன்படுத்திக்கொள்கிறது. பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான்
எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக
செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய
உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள்
தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத்
தின்று விடும். கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%,
மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன. சில வகை கரையானில்
வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து
வளர்ந்து எடை கூடுகிறது. கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த
தீவனமாக கரையான் அமைந்ததால், காலம் காலமாக தென் தமிழ்நாட்டு மக்களால்
கரையான் உற்பத்தி செய்யப்பட்டது. இச்செயல்பாடுகளை ஆய்விட்டபோது பல கூடுதல்
நன்மைகள் ஏற்படுவது தெரியவந்தது. நன்மைகள் கரையான் உற்பத்திக்கு என்று பானை
கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும்
மரங்களைத் தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை
கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை. பானையில் வைக்கும்
நனைந்த பொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிக பிடித்துள்ளன.
கரையானைப் பிடித்து அழிப்பதற்குப் பதில் கோழிக் குஞ்சுக்கு தீவனமாகக்
கொடுத்து விடுகிறோம். அடுத்து கரையானை ஒழிக்க கடுமையான பூச்சிக்
கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது அல்லவா?
முடிவாக கரையான் உற்பத்தி என்ற எளிய செலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால்
மூன்று பயன்கள் விளைகின்றன.
1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.
2. வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.
3. பூச்சிக் கொல்லிக்கு என்று செலவு கிடையாது.
பூச்சிக்
கொல்லி மருந்து தேவையில்லாததால் நமது சுற்றுப் புறச் சூழலும்
பாதுகாக்கப்படுகிறது. இன்றே செயல்படுங்கள், மாலை செயல்பட்டால் மறுநாள் காலை
உங்கள் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவையான கரையான் கிடைத்துவிடும்.
செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம்
குஞ்சு பொரிப்பகம் உபயோகித்தும்
நாட்டு முட்டைகளைப் பொரிக்கலாம். கோழியில் அடை வைப்பதைவிட இது இலகுவானது.
கோழிகள் வருடத்திற்கு 4 முறை குஞ்சுகள் பொரிக்கும். ஆனால் செயற்கை முறை
குஞ்சு பொரிப்பகம் அதை உபயோகிப்பவரின் திறமையைப் பொறுத்து 12 முறை
குஞ்சுகள் பொரிக்கலாம். இவற்றின் மூலம் அதிகமாகக் குஞ்சு பொரிக்க முடியும்.
குஞ்சுப் பொரிப்பகமானது, செயற்கை முறையில் தேவையான வெப்பம் மற்றும்
ஈரப்பதம் முட்டைகளுக்கு கொடுத்து குஞ்சு பொரிக்க உதவும் ஒரு இயந்திரமாகும்.
இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று அடை காப்பான் (Setter) மற்றொன்று
பொரிப்பன் (Hatcher) ஆகும்.
முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகரிக்க கோழி முட்டைஇட்டவுடன் அதை கீழ் கண்டவாறு பாதுகாக்க வேண்டும்.
அதாவது ஒரு இரும்பு சட்டியில் மணல்
பரப்பி தண்ணீர் தெளித்து அதன் மேல் கோணிப்பை போட்டு முட வேண்டும்
.முட்டைகளை இதன் மேல் வைத்து பருத்தி துணி கொண்டு முட வேண்டும்.இவ்வாறு
பாதுகாத்து வைக்கப்படும் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 97 சதவிகிதம்
வரை இருக்கும் .எனவே மேற்கூரிய முறையில் முட்டைகளை சேகரித்தால் அதிக
குஞ்சுகள் கிடைக்கும் . சரியான காற்றோட்டம், தட்பவெட்பநிலை, ஈரப்பதம்
முறையாக முட்டைகளை திருப்புதல் மட்டும் இல்லாமல் சுத்தமாக முட்டைகளையும்
மட்டும் பொரிபகத்தையும் பராமரிப்பதன் மூலம் குஞ்சு பொரிக்கும் திறனை
அதிகபடுத்த முடியும் .
நாட்டுகோழிகளின் நல மேலாண்மை
நாட்டு கோழிகளை தாக்கும் பொதுவான நோய்கள்
1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)
2) அம்மை நோய்
3) கோழி காலரா
4) சளி நோய்
5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் – ஈரல் நோய்
6) தலை வீக்க நோய்
7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள்
கோழிகளை
தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய்
கோழிகளை கோடை கால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக
பாதிக்கும் இதை கொக்கு நோய் என்றும் கூறலாம். இந்த நோய் தாக்கப்பட்ட
கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.இந்த நோய் தாக்கப்பட்ட
கோழிகள் தீவனம் எடுக்காது தண்ணீர் குடிக்காது வெள்ளையாகவும் பச்சையாகவும்
கழியும் எச்சம் இடும் பொது ஒரு காலை தூக்கிகொல்லும் ஒரு இறக்கை மட்டும்
செயல் இழந்து தொங்கும் தலையை முறுக்கி கொள்ளும் இறந்த கோழிகளை பரிசோதனை
செய்து பார்த்தால் இரைப்பையில் ரத்த கசிவு இருக்கும். வெள்ளை கழிச்சல் நோய்
வராமல் தடுக்க தடுப்பூசி அவசியம் போட வேண்டும்
கோழி
அம்மை நோய் இந்த நோய் பாதித்த கோழிகளில் முதலில் சிறு சிறு அம்மை
கொப்புளங்கள் கண் கொண்டை நாசிபகுதி செவி மடல் போன்ற இடங்களில் காணபடுகிறது
.பின்பு கொப்புளங்கள் ஏற்பட்ட இடங்களில் வடுக்கள் தென்படும். வாய் மற்றும்
தொண்டை பகுதிகளில் புண்கள் ஏற்படுவதால் தீவனம் உற்கொள்ள முடியாமல் கோழி
இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.இந்நோயை ஆறு வார வயதில் கோழி அம்மை தடுப்பு
ஊசி போட்டு கட்டுபடுத்தலாம்.
7 வது நாள் முட்டைக் கோழிகள் ஆர்
டி வி எப் 1 என்னும் இராணிகெட் நோய் தடுப்பு மருந்தினை கண்ணில் மற்றும்
மூக்கில் 2 சொட்டுகள் கொடுக்க வேண்டும்
14 வது நாள் ஐ பி டி தடுப்பு மருந்தை கண் சொட்டு மருந்தாக கொடுக்க வேண்டும்
3- வது வாரம் லசோட்டா என்னும் இராணிகெட் நோய் நோய் தடுப்பு மருந்தினை கண் சொட்டு மருந்தாக உபயோகிக்க வேண்டும்
5-
வது வாரம் மீண்டும் லசோட்டா மருந்தினை கொடுக்க வேண்டும் 6- வது வாரம் கோழி
அம்மை தடுப்பூசி இறக்கையில் தோலுக்கு அடியில்(0.5 மில்லி) செலுத்த
வேண்டும்
8- வது வாரம் ஆர் டி வி கே / ஆர் பி என்னும் நோய் இராணிகெட் நோய் தடுப்பூசியை இறக்கையில் தோலுக்கு அடியில் மில்லி செலுத்த வேண்டும்
18- வது வாரம் இராணிகெட் நோய் (ஆர் டி வி கே) நோய்க்கான தடுப்பூசியை மீண்டும் செலுத்த வேண்டும்
மூன்று
மாதங்களுக்கு ஒரு முறை குடி தண்ணிரில் லசோட்டா மருந்தினை கலந்து வைக்க
வேண்டும். லசோட்டா கொடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம்
செய்தல் வேண்டும் .
குறிப்பு:
தீவனம்
அல்லது தண்ணீரில் வைட்டமின் கலவை மருந்துடன் சிறிது சுன்னாம்புதூள் கலந்து
கொடுப்பதன் மூலம், முட்டைகளின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதுடன், தோல் முட்டை
இடுவதையும் தடுக்கலாம்.
நாட்டு கோழி பண்ணை அமைக்க, நாட்டு
கோழி குஞ்சுகள் கிடைக்கும் இடம் பற்றிய தகவல் பெறவும் இன்குபேட்டர்
தேவைக்கும். நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான ஆலோசனைகளும் தொடர்பு
கொள்ளவும்
Govindaraj.S
8190815622
Post a Comment