அழகழகாய்...
அசத்தல் டிப்ஸ்
வெயில்காலம்
என்றாலே, வெளியில் அலைபவர்களுக்குதான் இம்சை அதிகம். கசிந்துருகும்
வியர்வை, பிசுபிசுப்பு, துர்நாற்றம், நா வறட்சி, தோல் கருத்தல், கண்
சோர்வு, பாத வெடிப்பு என ஏராளமான பிரச்னைகள் வந்து வாட்டும். 'எப்படா
முடியும் இந்தக் கோடை!’ என ஏங்கவைத்துவிடும்.
''வெயிலில் அதிகம் அலைபவர்கள், சில முன்னெச்சரிக்கை
விதிகளையும் வழிமுறைகளையும் பின்பற்றினால் போதும்... எரிச்சலும் புலம்பலும்
இன்றி, கத்தரி வெயிலைக் கடந்துவிடலாம்'' என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்
யாழினி மற்றும் ஆயுர்வேத அழகுக் கலை நிபுணர் அஞ்சலி. இந்தக் கூட்டணி தரும்
எளிமையான அழகு ரகசியங்கள்... இதோ!
சருமம்

வண்டியில் செல்பவர்கள், புளித்த தயிரை, கைகள், முகம், கழுத்து, தோள்பட்டை
என வெயில் படும் இடங்களில் தடவி, சில நிமிடங்கள் ஊறவிட்டு, கடலைமாவு
போட்டுக் கழுவுங்கள். இதைத் தினமும் வெளியில் போய்விட்டு வந்ததும்
செய்தால், அன்றன்று ஏற்படும் 'டேனிங்’ மாறி, தோலின் இயற்கை நிறம்
பாதுகாக்கப்படும்.

ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஏலாதி தைலத்தை வாங்கி,
குளிப்பதற்கு முன், உடலில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்துக்
குளிக்கலாம். வியர்வை நாற்றம் போயே போச்! முதல் நாள் இரவே
தேய்த்துக்கொண்டும், காலையில் குளிக்கலாம்.

அதிக நேரம் ஏ.ஸி அறையில் இருப்பவர்கள்கூட தேங்காய் எண்ணெய் தடவுவதுபோல்,
ஏலாதி தைலத்தைத் தடவிக்கொள்ளலாம். தோல் வறண்டு போகாமல் இருக்கும்.

தேன் நல்ல ப்ளீச்சிங் ஏஜென்ட். பப்பாளிப் பழத் துண்டுகளை அரைத்து, தேன்
மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தடவிக் கழுவினால், வறண்ட சருமம்,
'வழுவழு’ சருமமாக மாறும்.
கூந்தல்

அடிக்கடி தலை குளிப்பதால் உடல் வெப்பம் குறையும். 'செம்பருத்தியாதி தைலம்’
என்னும் ஆயுர்வேதத் தைலத்தைத் தலையில் தேய்த்து ஊறவைத்து, பாசிப்பயறு மாவு
தேய்த்து அலசிக் குளித்தால், கூந்தல் பிசுபிசுப்பு, வியர்வை வாடை நீங்கி,
நறுமணம் கமழும்.

விளக்கெண்ணெய் 5 முதல் 10 துளிகள், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் தலா ஒரு
டீஸ்பூன் எடுத்து, முடியின் வேர்க்கால்களில் படுவது போல அழுந்தத்
தேய்த்து, சீயக்காய் தூள் அல்லது பயத்த மாவு தேய்த்து அலசினால், முடி
உதிராது. வாரம் இருமுறை செய்யவேண்டும்.

தினம் ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடலாம்.
கண்கள்

கண்கள் சோர்வடையாமல் இருக்க, துளி விளக்கெண்ணெயைக் கண்களைச் சுற்றித் தடவலாம்.

வெள்ளரிக்காய் சாறு, தேன், மசித்த உருளைக்கிழங்கு - இவை எல்லாமே கண்களுக்குப் புத்துணர்ச்சி தரும்.

உபயோகித்த தேயிலைத்தூள் பைகளை (டீ பேக்ஸ்) ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துக்
கண்களின் மேல் 10 முதல் 20 நிமிடங்கள் வைத்தால், கண்கள் சோர்வு நீங்கி,
புத்துணர்வு பெறும்.
முகம்

ஜாதிக்காய், கிராம்பு... இரண்டையும் பொடித்து, பன்னீரில் குழைத்து 'பேக்’ போட்டுக் கழுவினால், பருக்கள் குறையும்.

கொத்துமல்லி, புதினா, துளசி, சிறிது வேப்பிலைக் கொழுந்து
இவற்றை அரைத்து,
எலுமிச்சை சாறு கலந்து, அரை ஸ்பூன் முல்தானிமட்டி சேர்த்து முகத்தில்
'பேக்’ போடவும். 20 நிமிடம் கழித்து, கழுவினால், முகத்தில் கரும்புள்ளிகள்
மறைந்து, பொலிவுடன் மின்னும்.

2 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் ஓட்ஸ் தூள், ஒரு டீஸ்பூன் பாதாம் தூள் - இந்த
மூன்றையும் கொஞ்சம் பாலில் குழைத்து, 'ஸ்கிரப்’ போல முகத்தில் போட்டுக்
கழுவினால், கருவளையம் மறைந்து, முகம் பளிச்சென மாறும். ஆனால், பாதாம்
சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். அவர்கள், பொடித்த ஓட்ஸ், பால் கலந்து
உபயோகிக்கலாம்.

கேரட்டை
அரைத்து, தேன், எலுமிச்சம்பழச் சாறு கலந்து, சிறிதளவு முல்தானிமட்டி
சேர்த்துக் குழைத்து, 'பேக்’ போடுங்கள். பிறகு குளிர்ந்த தண்ணீரால் கழுவி
வர, டீன் ஏஜ் பெண்களுக்கு கோடையில் முகத்தில் வரும் சிவப்புத் திட்டுகள்,
புள்ளிகள் மறையும்.

தக்காளி ஓர் அருமையான இயற்கை ப்ளீச்சிங் ஏஜென்ட். 2 ஸ்பூன் தக்காளிச்
சாறுடன், 2 துளிகள் எலுமிச்சம்பழச் சாறு கலந்து, முகத்தில் போட்டுச் சில
நிமிடம் கழித்துக் கழுவினால், நல்ல நிறம் கிடைக்கும். பருக்கள் குறைந்து,
முகம் பளிச்சிடும்.
பாதம்

உடலில் பித்தம் அதிகரிக்கும்போது, பாதத்தில் வெடிப்பு ஏற்படும். இதைத்
தவிர்க்க, வாரம் ஒருமுறை, தலை மட்டுமல்லாமல், உடல் முழுவதுக்கும்
நல்லெண்ணெய் தேய்த்து, ஊறவைத்துக் குளித்தால், உடல் குளிர்ச்சியாக
இருக்கும். பாதமும் பஞ்சு போல் மிருதுவாகும்.
Post a Comment