கேழ்வரகு புதினா குணுக்கு--சிறுதானிய சமையல்!!
சிறுதானிய சமையல் ஒரு காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும் உணவாக இருந்தன. இன்றைக்கோ... சிற்றுண்டியாகக்கூட சிறுதானியங்களைப் பா...
https://pettagum.blogspot.com/2013/12/blog-post_2164.html
சிறுதானிய சமையல்
ஒரு காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும் உணவாக இருந்தன. இன்றைக்கோ... சிற்றுண்டியாகக்கூட சிறுதானியங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அரிசி சாப்பிடுவதுதான் கௌரவம் என்கிற நினைப்பில், ஏழைகள்கூட சிறுதானியங் களை மறக்க ஆரம்பித்ததுதான்... இன்றைக்கு ஏழை, பணக்காரர் என்று அனைவருக்குமே பலவித நோய்களுக்கு முக்கிய காரணியாக மாறிவிட்டிருக்கிறது. இத்தகையச் சூழலில், சிறுதானியங்களை, நவீனச் சூழலுக்கு ஏற்ப, நாவுக்கு ருசியாக சமைத்துச் சாப்பிடுவதற்கு வழிகாட்ட வருகிறது... இந்த சமையல் பகுதி!
இந்த இதழில் பரிமாறுபவர்... சுதா செல்வகுமார்
கேழ்வரகு புதினா குணுக்கு
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - அரை கப்
பொட்டுக்கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
புதினா, மல்லி - ஒரு கட்டு
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
மிளகு, சீரகப் பொடி - ஒரு ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி-பூண்டு விழுது - அரை ஸ்பூன்
செய்முறை:
கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவுடன் உப்பு, மிளகு, சீரகப் பொடி பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கிய இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, தண்ணீருக்கு பதில், முழுக்க புதினா-மல்லிச் சாறு (நீர்விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்) சேர்த்துப் பிசைந்து, 15 நிமிடம் வைக்கவும். எண்ணெயைக் காயவிட்டு, கையால் இந்த மாவைக் கிள்ளி போட்டோ உருண்டையாகவோ போட்டு, வெந்ததும் எடுக்கவும்.
சென்னை, நீலாங்கரையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரும், திரைப்பட நடிகர் பசுபதியின் மனைவியுமான சூர்யா, சிறுதானியங்கள் குறித்து ரொம்பவே தெம்பாகப் பேசுகிறார்.
''வாரத்துல மூணு நாள் காலையில கூழ்தான் குடிக்கிறோம். கேழ்வரகு (ராகி), கம்பு, சாமை, தினை, குதிரைவாலி மற்றும் வரகரிசியை ஒரு மாசத்துக்கு பயன்படுத்துற அளவுல எடுத்துக்குவோம். எல்லாத்தையும் ஒண்ணா கலந்து, லேசா வறுத்து, மாவாக்கிக்குவோம். தினமும், ராத்திரியில கூழா காய்ச்சி வெச்சுடுவோம். காலையில இதுல மோர், உரிச்ச சின்ன வெங்காயம் கலந்து குடிப்போம். மதியம் வரை பசி தெரியாது. ராத்திரியில ராகி, கம்பு தோசை, கம்பு அடை, வரகு பொங்கல், தினை கிச்சடி இதையெல்லாம் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவோம்.
மூணுவேளையும் அரிசியை எடுத்துக்கறதால... அதிக உடல் எடை, நீரிழிவு நோய் எல்லாம் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. ஆனா, சிறுதானியங்கள்ல இதுமாதிரியான பிரச்னைகளே இல்ல. சிறுதானியங்கள வீட்டுல சமைக்க ஆரம்பிச்சாலே, வீட்ல இருக்கற எல்லாருமே தன்னால சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க'' என்று நம்பிக்கையூட்டுகிறார் சூர்யா.
Post a Comment