குளிர் கால 'சூடான’ விருந்து இதோ...! சமையல் குறிப்புகள்!!
கொள்ளு பொங்கல் பச்சரிசி ஒரு கப் என்றால் கால் கப் கொள்ளு எடுத்து வறுத்துக்கொள்ள வேண்டும். அரிசி, கொள்ளு, உப்பு, சிட்டிகை மஞ்சள்தூள் ச...
https://pettagum.blogspot.com/2013/12/blog-post_4107.html
கொள்ளு பொங்கல்
பச்சரிசி ஒரு கப் என்றால் கால் கப் கொள்ளு எடுத்து
வறுத்துக்கொள்ள வேண்டும். அரிசி, கொள்ளு, உப்பு, சிட்டிகை மஞ்சள்தூள்
சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு, குக்கரில் வைத்து, குழைய வேகவிட்டு
எடுக்கவும். ஒரு ஸ்பூன் நெய்யில் சிறிது மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய
இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் சேர்த்துச் சுடச்சுட சாப்பிட
வேண்டும். விருப்பப்பட்டால், முந்திரியை நெய்யில் வறுத்துக் கொட்டிக்
கலந்துகொள்ளலாம்.
கொள்ளு சூப்
ஒரு கைப்பிடி கொள்ளை நான்கைந்து மணி நேரம் அல்லது இரவு
முழுவதும் ஊறவைத்து, குக்கரில் தண்ணீர் சேர்த்து, குழைய வேகவைக்கவும். அரை
ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் இவற்றைப் பொடிக்கவும். வெங்காயம், சிறிய
தக்காளி தலா ஒன்று எடுத்து நறுக்கிக்கொள்ளவும். இவற்றுடன் நசுக்கிய
நாலைந்து பூண்டை, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகச்சேர்த்து நன்கு மசித்துவிட
வேண்டும். இதில் தேவையான தண்ணீர் சேர்த்து, மீண்டும் கொதிக்கவைத்து இறக்கி,
பச்சைக் கொத்துமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு, மேலாக ஒரு ஸ்பூன்
நெய்விட்டு, அருந்த வேண்டும்.
கொள்ளு உடலுக்கு உஷ்ணம் தரும். கொழுப்பைக் கரைக்கும் குணம்கொண்டது. ஆஸ்துமா, சளி, இருமல், காய்ச்சல் இருப்பவர்களுக்கு நல்லது.
மிளகுக் குழம்பு
மிளகு, வெந்தயம் தலா ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு,
துவரம்பருப்பு தலா ஒரு டேபிள்ஸ்பூன், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை இவை
எல்லாவற்றையும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயில் வறுத்து, கொரகொரப்பாக
அரைத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் அளவு புளியைக் கரைத்துவைக்கவும்.
நல்லெண்ணெயில் கடுகு, சீரகம் போட்டுத் தாளித்து, தேவைப்பட்டால் சிறிது
பூண்டு போட்டு வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும்.
கொதிக்கும்போது அரைத்துவைத்திருக்கும் பொடியைப்போட்டு, குழம்பு வற்றி
வந்ததும், ஒரு துண்டு வெல்லம் சேர்த்து இறக்கவும்.
சூடான சாதத்தில் போட்டுப்பிசைந்து சாப்பிட்டால், சளி, காய்ச்சல் சட்டென மறையும்.
தனியாப்பொடி
100 கிராம் தனியா, 25 கிராம் சிவப்பு மிளகாய், கிராம்பு
4 அல்லது 5, பட்டை ஒரு துண்டு, தேவைக்கேற்ப உப்பு, சீரகம் ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் ஒரு சிறிய துண்டு இவை எல்லாவற்றையும் சிறிது நல்லெண்ணெய் விட்டு,
தனித்தனியாக வறுத்து, ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்துவைத்துக்கொள்ளவும்.
சூடான சாதத்தில் நெய் அல்லது எண்ணெய் விட்டு, இந்தப் பொடியைப்போட்டுப்
பிசைந்து சாப்பிடலாம்.
செரிமானக் கோளாறுகள் சரியாகும். உடம்புக்கு சூடு
தரக்கூடியது. சளி, காய்ச்சல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு, வாய்க்கும்
வயிற்றுக்கும் நல்ல உணவு.
கண்டதிப்பிலி ரசம்
10 முதல் 20 கிராம் கண்டதிப்பிலி (நாட்டுமருந்துக்
கடையில் கிடைக்கும்), மிளகு, துவரம்பருப்பு, தலா அரை டீஸ்பூன், ஒரு
டீஸ்பூன் சீரகம், 2 காய்ந்த மிளகாய், புளி பெரிய நெல்லிக்காய் அளவு.
புளியைக் கரைத்துவைக்கவும். கண்டதிப்பிலி,
துவரம்பருப்பு, சீரகம், மிளகு, துவரம்பருப்பு, மிளகாய் ஆகியவற்றை வறுத்து,
ஆறவைத்து கொரகொரப்பாக அரைத்து, புளித்தண்ணீரில் போட்டுக் கரைத்துக்
கொதிக்கவைக்கவும். நன்கு கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து, உப்பு,
கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
சூடாகக் குடிக்கலாம். சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம்.
உடம்புவலி, காய்ச்சல், மூட்டுவலி, ஜலதோஷம் எல்லாவற்றுக்கும் சிறந்த நிவாரணி.
முடக்கத்தான் தோசை
ஒரு கப் முடக்கத்தான் கீரையைக் கழுவி, நன்கு மைய
அரைத்துக்கொள்ளவும். 2 கப் அரிசியை ஊறவைத்து உப்பு, ஒரு ஸ்பூன்
வெந்தயம்சேர்த்து அரைக்கவும். காரம் தேவைப்பட்டால் அரைக்கும்போது 10 மிளகு
சேர்த்து அரைக்கலாம். அரிசி மாவுடன், அரைத்த கீரை விழுதைச் சேர்த்துக்
கலந்து, அரை மணி நேரம் வைத்திருந்து தோசையாக ஊற்றி, சட்னியுடன்
சாப்பிடலாம்.
மூட்டுவலி, முழங்கால்வலி, உடம்புவலி என எல்லா வலிகளையும் போக்கும் அற்புதமான உணவு இது.
இஞ்சித் தொக்கு
20
கிராம் இஞ்சியைத் தோல் சீவி, துருவி, துளி எண்ணெய்விட்டு வதக்கி
அரைத்துக்கொள்ளவும். 2 டீஸ்பூன் மல்லி (தனியா), 4 மிளகாய் சேர்த்து
வதக்கவும். ஒரு டீஸ்பூன் தேங்காயையும் வறுத்துக்கொள்ளவும். தனியா, மிளகாய்,
தேங்காய் மூன்றையும் அரைத்துக்கொள்ளவும். சிறிது எண்ணெய்விட்டு, கடுகு,
உளுத்தம்பருப்பு தாளித்து, புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றிக்
கொதிக்கவிடவும். கொதிக்கும்போது, தேங்காய், மல்லி, மிளகாய் அரைத்த விழுது,
இஞ்சி விழுது, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். எண்ணெய்
பொங்கிவரும்போது, துண்டு வெல்லம் சேர்த்து இறக்கவும்.
சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
இந்தக் குளிருக்கு இதமான உணவு இஞ்சி. அஜீரணம், வலிகளைப்
போக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். சளி, இருமல், ஜலதோஷம்
இருப்பவர்களுக்கு கைகண்ட மருந்து.
Post a Comment