அம்மா ரெசிபி!...நார்த்தங்காய் குழம்பு!
''வருடங்கள் ஓடினாலும், என் அம்மாவின் கைமணத்தில் ருசித்துச் சுவைத்த உணவுகளை இன்று நினைத்தாலும், நாவி...
https://pettagum.blogspot.com/2013/06/blog-post_3895.html
''வருடங்கள் ஓடினாலும், என் அம்மாவின் கைமணத்தில்
ருசித்துச் சுவைத்த உணவுகளை இன்று நினைத்தாலும், நாவில் நீர் ஊறும். அப்படி
அருமையாய் குழம்புகளைசெய்து அசத்துவார். அவரது சமையல், மருத்துவக் குணம்
நிறைந்ததாக இருக்கும். இன்றும் நோய் நொடியில்லாமல் நான் ஆரோக்கியமாக
இருப்பதற்கு, அம்மாவின் கைமணம்தான் காரணம். இந்தக் குழம்பை வெல்லம்
சேர்த்து பச்சடியாகச் செய்யலாம். ஜீரணத்துக்கு நல்லது. வாய் கசப்பைப்
போக்கும்.'' என்கிற மயிலாப்பூரைச் சேர்ந்த ஜானகி ரங்கநாதன், நார்த்தங்காய்
குழம்பு செய்யும் முறையை விவரித்தார்.
தேவையான பொருட்கள்: ஜாதி நார்த்தங்காய் - 1, சாம்பார்
பொடி - ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, பெருங்காயம், புளி, உப்பு - தேவையான
அளவு, துவரம்பருப்பு - ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: பாதி நார்த்தங்காயை நறுக்கிச் சாறு பிழிந்து
அரை ஸ்பூன் உப்புப் போட்டு தனியாக வைக்கவும். மீதி நார்த்தங்காயை
பொடிப்பொடியாக நறுக்கி, கல் சட்டியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம்,
வெந்தயம், துவரம்பருப்பு போட்டு வறுத்து, நார்த்தங்காயைப்போட்டு
வதக்கவும். நன்றாக வதங்கியதும் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, புளியைக்
கரைத்துவிட்டு பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு இறக்கி,
நார்த்தங்காய்ச் சாறை விடவும். கடைசியில் கறிவேப்பிலைபோட்டு இறக்கவும்.
சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு, இந்தக் குழம்பு சேர்த்துச் சாப்பிடலாம்.
டயட்டீஷியன் குந்தலா ரவி:
வயிற்றுப் புழு, வயிற்று புண்ணைப் போக்கும். பசியைத் தூண்டும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாய்க் கசப்பு, குமட்டல், வாந்தி
நிற்கும். ரத்தம் சுத்தமடையும். வாதம், பித்தம் நீங்கும்.
வாயுப் பிரச்னை இருந்தால், ஒரு நார்த்தங்காய் துண்டை எடுத்து
வாயில்போட்டு மென்று தின்றால், வாயுக் கோளாறு உடனே சரியாகும்.
Post a Comment