உடல், மனம் தொடர்பான பிரச்னைகள் நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. அதிலும் குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்...
உடல், மனம் தொடர்பான பிரச்னைகள் நாளுக்குநாள்
அதிகரிக்கின்றன. அதிலும் குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு
கூடுதல் வேலை, பொறுப்பு, அவசரங்கள் போன்றவற்றால் உடல்ரீதியான பிரச்னைகள்
உற்சாகத்தை இழக்கவைத்துவிடும். மன அழுத்தம், வயிற்று வலி, மலச்சிக்கல்,
கழுத்து வலி, தலை வலி, உடல் பருமன், முதுகு வலி போன்ற பாதிப்புகளும்
அதிகரிக்கின்றன. எடுத்ததற்கு எல்லாம் மாத்திரை- மருந்து என்று ஓடும்போது
இன்னும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். நடைப் பயிற்சி, ஜிம்,
வீர விளையாட்டுக்கள் என பலவிதமான உடற்பயிற்சிகள் இருந்தாலும், யோகாவில்தான்
உடல், மனம், உளவியல், மூச்சு எனப் பல நிலைகளின் செயல்பாடுகளை சீராக
வைத்திருக்கமுடியும். குறுகிய நேரத்தில் பயிற்சி செய்தாலும் தொடர்ந்து
செய்யும்போது பல நன்மைகள் கிடைக்கின்றன.
சின்னச் சின்னப் பிரச்னைகளுடன், ஆரோக்கியக் குறைபாடு
உள்ளவர்களுக்கு ஆரோக்கியம் அளிக்கும் வகையில் இந்த யோகா பயிற்சி
திட்டமிடப்பட்டுள்ளது. பெரும் பிரச்னை உள்ளவர்கள் யோகா சிகிச்சை மூலம் பலம்
கிடைக்கும்.
யோகாவுக்குத் தயாரானதும் வேறு எண்ணங்கள், உணர்வுகளில்
இருந்து வெளிவந்து, சிறிது நேர அமைதிக்குப் பின் பயிற்சிகளைத் தொடங்கினால்,
கூடுதல் பலன் கிடைக்கும்.
ஆரம்ப நிலை
இரு கால்களுக்கு இடையில், சமமான இடைவெளிவிட்டு
நிற்கவும். கைகள், உடலை ஒட்டிய நிலையில் இருக்கட்டும். பார்வை, நேராக
இருக்க வேண்டும். இந்த அமைதியான நிலையில் இருந்து மூச்சை
உள்ளிழுக்கும்போது, இரு கைகளையும், முன்புறமாக மேலே தூக்கவேண்டும். கைகள்
தலையை நெருங்கும்போது முதுகெலும்பு சற்று வளையும். இந்த நிலையிலிருந்து
ஓரிரு வினாடிகளுக்குப் பின் மூச்சை வெளியேவிட்டபடி கைகள் பழைய நிலைக்கு வர
வேண்டும். இதுபோல் ஆறு முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: உள்மூச்சு - வெளிமூச்சு செயல்பாடுகள்
அதிகரிக்கும். மார்பு விரிவடைந்து, இதயப் பகுதி நன்கு வேலை செய்யும்.
முதுகெலும்பு பின்பக்கமாக வளைவதால், உடலில் தெம்பு கூடும். எண்ண ஓட்டங்கள்
குறையும். இது, ஆசனங்கள் செய்ய உடலைத் தயாராக்கும். கைகளில் இறுக்கம்
குறையும்.
வீரபத்ராசனம் தழுவல்
சமமாக நின்ற நிலையில், ஒரு காலை முன்பக்கமாக வைக்கவும்.
மற்றொரு காலின் பாதத்தைச் சற்று வெளிப்புறமாகத் திருப்பி, வசதியாக நிற்க
வேண்டும். இந்த நிலையிலிருந்து, மூச்சை உள்ளிழுத்தபடியே முன் கால் முட்டியை
மடக்கி கைகளைச் சற்று மடக்கி, நெஞ்சுப் பகுதியை விரிக்க வேண்டும். ஓரிரு
வினாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியேவிட்டபடி கையை கீழ்ப் பக்கம் கொண்டுவர
வேண்டும். முட்டியை நேராக்க வேண்டும். இதேபோல் இடது, வலது என இரு பக்கமும்
முறையே ஆறு தடவை செய்ய வேண்டும்.
பலன்கள்: முதுகெலும்பு பின்புறமாக வளைவதால், உடலுக்கு
ஆற்றல் கிடைக்கும். கீழ் முதுகு நன்றாக வேலை செய்யும். முதுகெலும்பு
வலுவடையும். மேல் உடலில் இருக்கும் வலி குறையும். வீரர்களுக்கான ஆசனத்
தழுவல் என்பதால், புதுத் தெம்பு கிடைக்கும். அலுவலகத்தில் சுறுசுறுப்புடன்
வேலைசெய்ய உடலைத் தயார்படுத்தும்.
உத்தானாசனத்தின் தழுவல்
இரண்டு கால்களையும் அருகருகில் வைத்து, சமமான
இடைவெளியுடன் நேராக நிற்க வேண்டும். மூச்சை உள்ளிழுத்தபடி, இரு கைகளையும்
முன்புறமாக உயர்த்தித் தலைக்கு மேல் கொண்டுசெல்ல வேண்டும். பார்வை நேராக
இருக்க வேண்டும். ஓரிரு வினாடிகளுக்குப் பின் மூச்சை வெளியேவிட்டவாறு, முன்
பக்கமாக குனிய வேண்டும். முடிந்தால், கீழ் முதுகிலிருந்து குனிவதைத்
தொடங்கலாம். கைகளை இரு பாதங்களின் பக்கவாட்டில் வைக்கவேண்டும். கால்களை
சற்று மடித்துக்கொள்ளலாம். ஓரிரு வினாடிகளுக்குப் பிறகு, மூச்சை
உள்ளிழுத்தபடி உடலை நிமிர்த்தி, கைகளைத் தலைக்கு மேல் கொண்டுசெல்ல
வேண்டும். பிறகு மூச்சை வெளியேவிட்டபடி கைகளைத் தொடக்க நிலைக்குக் கொண்டுவர
வேண்டும். இதுபோல் ஆறு முறை நேர்த்தியாக செய்யுங்கள்.
பலன்கள்: முதுகு, இடுப்பு, கழுத்து, தொடை பகுதிகள்
நன்கு வேலை செய்கின்றன. இதனால் இந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக
இருக்கும். மூச்சை விட்டபடி செய்வதால் ஓர் அமைதியை உணரலாம். வயிறு
சம்பந்தமானப் பிரச்னைகள் குறையும்.
Post a Comment