
மஞ்சள்,
ஆரஞ்சு, வெள்ளை, ஊதா என பல நிறங்களில் மின்னும் சாமந்திப் பூ, சருமத்தை
பாதுகாத்து, கூந்தல் பிரச்னையையும் தவிடு பொடியாக்கிவிடும். இப்படி அழகு
பலன்களை அள்ளித் தரும் சாமந்திப் பூவுக்கு சாமரமே வீசலாம். இந்த இதழில்
சாமந்திப் பூவின் சகல அழகு குறிப்புகளையும் பார்ப்போம்.

3 கப் தண்ணீரில் 5 சாமந்திப் பூவைப் போட்டு நன்றாகக் கொதிக்க வையுங்கள்.
தண்ணீர் அரை கப் அளவுக்கு 'திக்'காக வற்றிவிடும். இந்தத் தண்ணீரை ஐஸ்
க்யூப் டிரேக்களில் நிரப்பி, ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். ஐஸ் க்யூப்களை
ஒரு துணியில் சுற்றி, முகத்தில் ஒற்றி எடுங்கள். தொய்வடைந்த தோலையும்
தூக்கி நிறுத்தி இழந்த இளமையைத் திருப்பித் தரும்.

சாமந்திப்பூ கொதிக்க வைத்த தண்ணீர் ஒரு கப் எடுத்துக்கொண்டு, அதில்
ஃபிரெஷ் ஆவாரம் பூ ஒரு கப் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்குங்கள்.
ஒரு காட்டன் துணியால் இந்தத் தண்ணீரைத் தொட்டு முகத்தில் ஒற்றி எடுங்கள்.
முகத்தில் உள்ள திட்டுக்கள், கரும்புள்ளிகள் நீங்கி, நல்ல கலர் கிடைக்கும்.

உலர்ந்த சாமந்தி, உலர்ந்த ஆவாரம் பூ இரண்டையும் தலா அரை கப் எடுத்து
பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்த பவுடரை பாலில் கலந்து முகத்தில் பூசி வர,
மாசு - மரு இல்லாமல் முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.

துலுக்க சாமந்தி - 5, சர்க்கரை - அரை கப், ஜாதிக்காய், மாசிக்காய் தலா
5... இவற்றைத் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை உடல்
முழுவதும் நன்றாகத் தேய்த்துக் குளியுங்கள். மாதம் ஒரு முறை இப்படிக்
குளிப்பதால் தோலில் இறந்த செல்கள் நீங்கி, புது செல் உருவாகி மேனி பளபளவென
மின்னும்.

ஒரு கிலோ நல்லெண்ணெயைக் காய்ச்சி, அதில் 25 மஞ்சள் சாமந்திப் பூவைப்
போட்டு உடனே, அடுப்பை அணைத்துவிடுங்கள். இதை அவ்வப்போது வெயிலில் வைத்து
எடுங்கள். குழந்தையை தலைக்குக் குளிப்பாட்டும்போதெல்லாம் இந்த எண்ணெயைத்
தடவிக் குளிப்பாட்டுங்கள். நன்றாகத் தூங்குவதுடன், தோலும் நல்ல கலராக
மாறும்.

அருகம்புல் பவுடர், மஞ்சள் சாமந்தி பவுடர், பால் பவுடர் ஆகியவற்றை தலா அரை
கப் எடுத்து தண்ணீர் விட்டுக் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை ஒரு நாள்
விட்டு ஒரு நாள் முகத்தில் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவினால்
'ப்ளீச்' செய்தது போல் முகம் 'பளிச்'சென பிரகாசிக்கும்.

செம்பருத்தி
இலை - 10, புங்கங்காய் தோல் - 4, மஞ்சள் சாமந்தி, துலுக்க சாமந்தி தலா -
5... இவற்றைச் சேர்த்து அரைத்து, வாரம் ஒரு முறை உச்சி முதல் பாதம் வரை
தேய்த்துக் குளித்து வர, கூந்தல் சூப்பர் சுத்தமாகவும், தோல் மிருதுவாக
மாறும்.

சாமந்திப் பூக்கள் 20 எண்ணிக்கை எடுத்து தண்ணீரில் ஊற வையுங்கள். 5 முறை
தண்ணீரை மாற்றிக் கொண்டே இருங்கள். பிறகு வடித்து, பூக்களை மட்டும்
அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை, சீயக்காயுடன் கலந்து தலையில்
தேய்த்துக் குளியுங்கள். தலை அரிப்பு, பொடுகு, முடி கொட்டுவது போன்ற
பிரச்னைக்கு தன்னிகரில்லா தீர்வு கிடைக்கும்.
======================================================================
"மலச்சிக்கலுக்கு மருந்து..."
டாக்டர் ஜீவா சேகர், நேச்சுரோபதி மருத்துவர், சென்னை:
"சாமந்திப் பூ முறையற்ற உடல் உஷ்ணத்தைப் போக்கி பலத்தைத் தருகிறது.
சாமந்திப் பூக்கள் 20 எண்ணிக்கை எடுத்து வெந்நீரில் போட்டு மூடி, 15
நிமிடம் கழித்து வடிகட்டுங்கள். இதை தினமும் 2 டீஸ்பூன் குடித்துவர,
மலச்சிக்கல் குணமாகும். முறையற்ற மாதவிடாய் கோளாறும் சரியாகும். வயிறு
உப்புசம் நீங்கும்.
பூவை கடாயில் போட்டு சூடாக்கி, துணியில் கட்டி வீக்கம் ஏற்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் உடனடியாக வீக்கம் குறையும்.
மூலிகைக் கடைகளில் சாமந்திப் பூவில் தயாரித்த 'மதர் டிஞ்சர்'
விற்கப்படுகிறது. இதை, அடிபட்ட புண்ணில் தடவினால் சீக்கிரம் ஆறி விடும்.
அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் 2 துளி உள்ளுக்கு சாப்பிட்டு வர, அல்சர்
குணமாகும். ஒரு சில வகை கேன்சர் நோய்க்கும் இது மருந்தாக பயன்படுகிறது.
காதடைப்பு இருந்தால், காதில் ஒரு துளி விட்டுக்கொண்டால் போதும். உடனடியாக
சரியாகிவிடும்.
Post a Comment