ரசிக்க.. ருசிக்க.. 30 வகை ரவை ரெசிபிகள்!

ரசிக்க.. ருசிக்க.. 30 வகை ரவை ரெசிபிகள்! இல்லத்தரசிகளின் ஆபத்பாந்தவன் ரவை. திடீரென்று தோழி-களோடு வந்து ‘‘ம்மா பசிக்குது..’’ என்று ஹாலிலிருந...

ரசிக்க.. ருசிக்க.. 30 வகை ரவை ரெசிபிகள்! இல்லத்தரசிகளின் ஆபத்பாந்தவன் ரவை. திடீரென்று தோழி-களோடு வந்து ‘‘ம்மா பசிக்குது..’’ என்று ஹாலிலிருந்து கூப்பாடு போடும் மகளை ஒரு பக்கம் திட்டிக் கொண்டே இன்னொரு பக்கம் ரவை டின்னைத்தான் கையில் எடுப்பீர்கள். ஆனால், அந்த அவசரத்துக்கு உப்புமாவோ கேசரியோ மட்டுமே செய்ய முடிந்து, ‘நல்லா செஞ்சு போட முடியலையே..’ என்கிற ஒரு குற்ற உணர்வும் உள்ளுக்குள் வாட்டி எடுக்கும். இனி அதற்கெல்லாம் அவசியமே இல்லை. உங்களுக்காகவேதான் ரகம் ரகமான சுவைகளில் ரகளையான ரெசிபிகளை ரவையில் கொடுத்திருக்கிறார் ‘சமையல் திலகம்’ . இனி என்ன.. அசத்துங்கள்! ------------------------------------------------------------------ ரவா தேங்காய்ப் பால் கேசரி தேவையானவை: ரவை - ஒரு கப், கெட்டியான தேங்காய்ப் பால் - 2 கப், தண்ணீர் - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - கால் கப், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி - 8, ஆரஞ்சு (அ) சிவப்பு கலர் - ஒரு சிட்டிகை. செய்முறை: கடாயில் எண்ணெய், நெய் கலந்து ஊற்றி, காய்ந்ததும் அதில் முந்திரி, ரவையை போட்டு வறுத்துக் கொள்ளவும். ஒரு கப் தேங்காய்ப் பாலுடன் தண்ணீர் கலந்து சூடாக்கவும். அதில் வறுத்த முந்திரி, ரவையை கொட்டி, கொதிவரும் நிலையில் ஒரு கப் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கிளறவும். பிறகு கலர் சேர்த்து, வெந்ததும் சர்க்கரையைக் கொட்டிக் கிளறவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கவும். ________________________________________ சேமியா-ரவா கேசரி தேவையானவை: ரவை - ஒரு கப், சேமியா - அரை கப், சர்க்கரை - இரண்டரை கப், நெய் - அரை கப் (விருப்பப்பட்டால் எண்ணெய் பாதி சேர்க்கலாம்), முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஆரஞ்சு அல்லது சிவப்பு கலர் - ஒரு சிட்டிகை, பால்கோவா - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு ரவை, சேமியாவை தனித்தனியே வறுக்கவும். மீதியுள்ள நெய்யை காய வைத்து அதில் முந்திரியைப் போட்டு நிறம் மாறாமல் வறுத்து சேமியா, ரவையை சேர்க்கவும். பிறகு, 4 டம்ளர் தண்ணீரை நன்றாகக் கொதிக்க விட்டு, ரவை - சேமியா கலவையில் ஊற்றி, வேக விடவும். கலர் சேர்த்து வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து எல்லாம் ஒன்றாக சேர்ந்து வரும்போது இறக்கி ஏலக்காய்த்தூள், பால்கோவா கலந்து பரிமாறவும். ________________________________________ ரவா சோமாஸ் தேவையானவை: மேல் மாவுக்கு: மைதா - அரை கப், ரவை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு. பூரணத்துக்கு: ரவை - அரை கப், துருவிய கொப்பரை தேங்காய் - கால் கப், பொடியாக நறுக்கிய முந்திரி - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரைத்தூள் - அரை கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், திராட்சை - 10 முதல் 15, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. செய்முறை: எண்ணெய் நீங்கலாக மேல் மாவுக்கு கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கெட்டியாகப் பிசைந்து ஈரத்துணியால் மூடி வைக்கவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் ரவையை நன்கு வாசனை வரும்வரை வறுக்கவும். மீதி நெய்யில் தேங்காய், முந்திரி, திராட்சையை வறுக்கவும். ஆறிய பிறகு ஏலக்காய்த் தூள், சர்க்கரைத்தூள் சேர்த்து எல்லாவற்றையும் கலந்து வைக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை சின்ன சின்ன பூரிகளாக இட்டு, நடுவில் இந்த பூரணத்தை வைத்து, தண்ணீர் தொட்டு மடித்து அரை வட்டமாக மூடவும். எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ________________________________________ ரவா பூண்டு உப்புமா தேவையானவை: ரவை - ஒரு கப், சின்ன வெங்காயம் - ஒரு கப், பூண்டு - 10 பல், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி, பச்சைமிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, கடுகு -- அரை டீஸ்பூன், உளுந்து - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு (விருப்பப்பட்டால்) - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, எண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பூண்டு, வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு, சற்று பொன்னிறமானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் விழுது, தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு, ரவை சேர்த்து நன்கு வதக்கவும். 3 டம்ளர் தண்ணீரை சிறிது உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து ரவை கலவையில் கொட்டிக் கிளறவும். தீயைக் குறைத்து மூடி போட்டு 10 நிமிடம் வேக விட்டு இறக்கவும். குறிப்பு: ரவையை ஆறவிடாமல், வறுத்தவுடன் நன்கு கொதிக்கும் தண்ணீரை சேர்க்க வேண்டும். ரவையில் தண்ணீர் ஊற்றும்போது தீ அதிகமாக இருக்க வேண்டும். தண்ணீர் ஈர்த்து கெட்டியானதும், தீயைக் குறைக்க வேண்டும். ________________________________________ ரவா சீடை தேவையானவை: பச்சரிசி - 2 கப், ரவை - கால் கப், ஜவ்வரிசி - அரை கப், பச்சைமிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், புளித்த தயிர் - ஒரு கப், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எள் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசியை ஊற வைத்து, நிழலில் உலர்த்தி சற்று ஈரத்துடன் இருக்கும்போதே மெஷினில் கொடுத்து அரைக்கவும். இந்த மாவை, வெறும் கடாயில் குறைந்த தீயில் வறுக்கவும். (கோல இழை போடும் பதத்தில்) இறக்கி, ஆற விட்டு நன்கு சலிக்கவும். ஜவ்வரிசி, ரவையுடன் தயிர் சேர்த்து, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 5 முதல் 6 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் சலித்த மாவுடன் அரைத்து சேர்க்கவும். பெருங் காயத்தூள், பச்சைமிளகாய் விழுது, உப்பு, எள் (விருப்பப்பட்டால் நெய் சேர்க்கலாம்) சேர்த்துப் பிசைந்து உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். ________________________________________ ரவை தட்டை தேவையானவை: புழுங்கல் அரிசி -- 2 கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், ரவை - கால் கப், வறுத்து அரைத்து சலித்த உளுத்தமாவு - கால் கப், புளித்த தயிர் - அரை கப், பச்சைமிளகாய் விழுது - ஒன்றரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எள் - ஒரு டீஸ்பூன், நெய் அல்லது வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், ஊற வைத்த கடலைப்பருப்பு (விருப்பப்பட்டால்) - கால் கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: புழுங்கல் அரிசியை ஊற வைத்து நைஸாக அரைக்கவும். நன்றாக அரைப்பட்டு எடுக்கும்போது ரவையையும் போட்டு நைஸாக அரைக்கவும். தேவையான தண்ணீர், புளித்த தயிர் விட்டு கெட்டியாக இட்லி மாவு பதத்தில் எடுக்கவும். மாவுடன் நெய் (அ) வெண்ணெய், உளுத்தமாவு, பச்சைமிளகாய் விழுது, பெருங்காயத்தூள், எள், கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை மாவையும் போட்டு பிசையவும். சின்ன சின்ன தட்டைகளாக தட்டி பொரித்தெடுக்கவும். ________________________________________ ரவா பொங்கல் தேவையானவை: ரவை - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், பால் - ஒரு கப், மஞ்சள் தூள் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை, பெருங் காயத்தூள் - அரை டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன், முந்திரி - 8, கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - கால் கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாசிப் பருப்புடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும். எண்ணெய் மற்றும் சிறிது நெய் சேர்த்து காய வைத்து, அதில் மிளகு, சீரகத்தைச் சேர்க்கவும். பொரிந்ததும் இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் ரவையை சேர்க்கவும். ரவை நன்றாக வறுபட்டதும் பால், 3 டம்ளர் கொதிக்கும் தண்ணீர், வெந்த பாசிப்பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு, நெய் சேர்த்துக் கிளறவும். தீயைக் குறைத்து மூடி வைத்து, 10 நிமிடம் கழித்து இறக்கவும். ________________________________________ ரவா தக்காளி பாத் தேவையானவை: ரவை - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், தக்காளி விழுது - கால் கப், பச்சைமிளகாய், இஞ்சி விழுது - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், உளுந்து - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுந்து, சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி விழுது சேர்த்து, வதங்கியதும் ரவையை சேர்த்து வறுக்கவும். 2 கப் கொதிக்கும் நீரை ரவையில் ஊற்றி தக்காளி விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். ரவை வெந்ததும் மல்லித்தழை, கறிவேப்பிலை தூவி பரிமாறவும். ________________________________________ ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் ரவா கேசரி தேவையானவை: ரவை - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப் (விருப்பப்பட்டால் சிறிது அதிகம் சேர்க்கலாம்), முந்திரி, பாதாம், வெள்ளரி விதை, சாரபருப்பு - கால் கப், பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் - ஒரு டேபிள்ஸ்பூன், திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன், ஆரஞ்சு அல்லது சிவப்பு கலர் - ஒரு சிட்டிகை, நெய் - கால் கப், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன். செய்முறை: கடாயில் எண்ணெய், நெய் கலந்து காயவைத்து முந்திரி, பருப்பு வகைகளை சேர்த்து வறுக்கவும். அதனுடன் ரவை சேர்த்து நன்றாக வறுத்ததும், 3 கப் கொதிக்கும் தண்ணீரை ரவையில் ஊற்றவும். சிட்டிகை கலர் சேர்த்து ரவை வெந்ததும், சர்க்கரை பேரீச்சம்பழம், திராட்சை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து வரும்போது ஏலக்காய்த்தூள் போட்டு கிளறி இறக்கவும். குறிப்பு: எல்லா பருப்புகளையும் கடைசியாக சேர்த்தும் செய்யலாம். ________________________________________ ரவா கட்லெட் தேவையானவை: ரவை - ஒரு கப், கடலைமாவு - அரை கப், பொடியாக நறுக்கிய காய்கறிகள் - கால் கப், கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய காய்கறிகள், புதினா, மல்லித்தழை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். உடனே, ரவையை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். தண்ணீரை நன்றாக கொதிக்க விட்டு ரவை கலவையுடன் சேர்க்கவும். தீயைக் குறைத்து வேக விடவும். கடலைமாவைக் கரைத்து ரவை கலவையில் விட்டு, கரம்மசாலா தூள், எலுமிச்சை சாறு சேர்த்து சுருளக் கிளறி, இறக்கி ஒரு தட்டில் கொட்டி சமப்படுத்தவும். ஆறியதும் துண்டுகளாக்கி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். ________________________________________ ரவா அல்வா தேவையானவை: ரவை - அரை கப், நெய் - ஒரு கப், சர்க்கரை - 2 கப், பால் - 4 கப், பொடி யாக நறுக்கி வறுத்த பாதாம், முந்திரி - கால் கப். செய்முறை: பாதாம், முந்திரி நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் கடாயில் ஒன்றாக சேர்த்து நன்கு சுருளக் கிளறவும். இறக்கும் போது பாதாம் முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கவும். ________________________________________ ரவா-ஓட்ஸ் கீரை அடை தேவையானவை: ரவை - முக்கால் கப், ஓட்ஸ் - அரை கப், கோதுமைமாவு - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - -அரை கப், பச்சைமிளகாய் - 3 அல்லது 4 (பொடியாக நறுக்கியது), பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கீரை - ஒரு கப், சோம்பு பொடி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ரவையை லேசாக எண்ணெய் விட்டு வறுக்கவும். ஓட்ஸையும் லேசாக வறுத்துக் கொள்ளவும். இதனுடன் மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கல் காய்ந்ததும், மாவை தடியாக ஊற்றி, இருபுறமும் நன்றாக வேக விட்டு எடுக்கவும். குறிப்பு: மாவு அதிக தண்ணீரை இழுத்து கெட்டியாகி விட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம். ________________________________________ கோதுமை ரவை கொழுக்கட்டை தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுந்து - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு, பொடித்துக் கொள்ள: துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3. செய்முறை: பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை ரவை போல் பொடித்துக் கொள்ளவும். நெய் காய்ந்ததும், கோதுமை ரவையை வாசனை வரும் வரை வறுக்கவும். வறுத்த ரவையுடன் பொடித்துள்ள பொருட்களைச் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறி வேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அதில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் உப்பு, தேங்காய் துருவல், கோதுமை ரவை கலவையை சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து தீயைக் குறைத்து 10 நிமிடம் நன்கு வேக விடவும். வெந்ததும் இறக்கி, சற்று ஆற விட்டு சிறு கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும். குறிப்பு: ரவையை இரண்டு முறை வேக வைப்பதால் மிகவும் மிருதுவாக இருக்கும். ________________________________________ ரவா-தேங்காய்ப் பால் பாயசம் தேவையானவை: பால் - 3 கப், கெட்டியான தேங்காய்ப் பால் - ஒரு கப், ரவை - அரை கப், சர்க்கரை - விருப்பத்திற் கேற்ப, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன். செய்முறை: நெய் காய்ந்ததும் அதில் முந்திரியை நிறம் மாறாமல் குறைந்த தீயில் வறுத்தெடுக்கவும். மீதமுள்ள நெய்யில் ரவையை கொட்டி வறுத்துக் கொள்ளவும். பாலை நன்றாகக் காய்ச்சி, வறுத்த ரவையில் சேர்க்கவும். ரவை வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். இது சற்று நீர்க்க வந்த பின்பு கெட்டிப்படும். இறக்கி வைத்து ஏலக்காய்த்தூள், தேங்காய்ப் பால் சேர்த்து பரிமாறவும். ________________________________________ சோள ரவை சாதம் தேவையானவை: முழு வெள்ளை சோளம் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சோளத்தை லேசாக தண்ணீர் தெளித்துப் பிசிறி வைக்கவும். 10 நிமிடம் கழித்து மிக்ஸியில் (விப்பர் பிளேடை பயன்படுத்தவும்) சோளத்தை ஒன்றிரண்டாக உடைத்து ஒரு தட்டில் கொட்டவும் (லேசாக தட்டினால் உமி பறந்துவிடும்). 3 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் உப்பை சேர்த்து நன்றாக கொதி வரும்போது சோள ரவையை சேர்க்கவும். குறைந்த தீயில் நன்கு தண்ணீரை இழுத்துக்கொள்ளும் வரை மூடி போட்டு வேக விடவும். அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விடவும். வெந்தவுடன் இறக்கி ஆற வைத்து சிறு உருண்டைகளாக பிடித்து தண் ணீரில் போட்டு வைக்க வும். மோர்க் குழம்பு, புளி குழம்பு, தயிர், உப்பு கார துவையலுடன் பரிமாறலாம். ________________________________________ ரவை உக்காரா தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், ரவை - முக்கால் கப், அரிசி மாவு - கால் கப், பொடித்த வெல்லம் - 2 கப், தேங்காய் துருவல் - கால் கப், முந்திரி - 8 முதல் 10, நெய் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன். செய்முறை: பாசிப்பருப்பை கடாயில் வாசனை வரும்வரை வறுத்து வேக விடவும். தண்ணீர் அதிகமாக இருந்தால் வெந்த பருப்பில் இருந்து தண்ணீரை வடித்து விடவும். வெல்லத்தை அரை கப் தண்ணீரில் கரைய விடவும். கடாயில் நெய் காய்ந்ததும் முந்திரி, ரவை, அரிசிமாவு மூன்றையும் ஒன்றாக சேர்த்து, நிறம் மாறி வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு தேங்காய் துருவலை சேர்த்து மேலும் 5 நிமிடம் நன்றாக வறுக்கவும். கரைத்த வெல்லத்தை கொதிக்க விட்டு வடிகட்டி, சேர்க்கவும். வெந்த பாசிப்பருப்பையும் சேர்த்துக் கிளறவும். 5 நிமிடத்தில் தண்ணீர் நன்கு இழுத்துக் கொள்ளும். ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். குறிப்பு: பாசிப்பருப்பு, வெல்லப்பாகு இரண்டையும் ஒன்றாக சேர்த்துக் கிளற வேண்டும். ---------------------------------------------------------------- ரவா தோசை தேவையானவை: அரிசி மாவு - ஒன்றரை கப், ரவை - அரை கப், மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது, மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: எண்ணெய் தவிர மற்ற பொருட்களை ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைத்துக் கொள்ளவும். தோசைக் கல் காய்ந்ததும், மாவை நன்கு கலக்கி, வீசினாற் போல் சுற்றிலும் ஊற்றவும். பிறகு தீயைக் குறைத்து, சுற்றிலும் எண்ணெய் விடவும். நன்றாக வெந்ததும் மடித்து எடுக்கவும். குறிப்பு: ஒவ்வொரு முறை தோசை மாவை ஊற்றும்போதும் தீயை அதிகப்படுத்தி, ஊற்றிய பிறகு தீயைக் குறைத்து வேக விட வேண்டும். திருப்பிப் போட வேண்டிய அவசியம் இல்லை. விருப்பப்பட்டால், வெங்காயத்தை பொடி யாக நறுக்கி கல்லின் மேல் தூவி, அதன் மேல் மாவை ஊற்றி வார்க்கவும். ------------------------------------------------------------------- ரவா துவரம்பருப்பு பாத் தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், வெங்காயம் - 2 (மெல்லியதாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), பச்சைமிளகாய் - 3 (கீறிக் கொள்ளவும்), பூண்டு - 4 பல் (நசுக்கிக் கொள்ளவும்), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் (விருப்பப்பட்டால்) - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, கடுகு - அரை டீஸ்பூன், உளுந்து - 2 டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ரவையை வாசனை வரும்வரை வறுக்கவும். மீதமுள்ள எண்ணெயை காய வைத்து கடுகு, உளுந்து, பட்டை தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாயை சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் தக்காளி, தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்கி இரண்டரை கப் தண்ணீர், வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்கும்போது வறுத்தெடுத்த ரவை சேர்த்து 5 நிமிடம் கிளறி, தீயைக் குறைத்து மூடி போட்டு, வெந்ததும் கிளறி இறக்கவும். குறிப்பு: துவரம்பருப்பை வேக வைத்த தண்ணீர் அதிகமாக இருந்தால், தண்ணீரை குறைத்து பருப்பு தண்ணீரை சேர்க்கலாம். ________________________________________ ரவா பூரி பாயசம் தேவையானவை: பால் - 4 கப், சர்க்கரை - ருசிக்கேற்ப, கண்டன்ஸ்ட் பால் - கால் கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. பூரி மாவுக்கு: ரவை - அரை கப், மைதா - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு. செய்முறை: ரவையுடன் மைதா, நெய், உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். அரை மணி நேரம் ஊறிய பிறகு மீண்டும் பிசைந்து, சிறிய பூரிகளாக இட்டு, எண்ணெய் காய்ந்ததும் பொரித்தெடுக்கவும். பொரித்த பூரிகளை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாலை அடுப்பில் வைத்து 15 நிமிடம் காய்ச்சி அதில் சர்க்கரை, கண்டன்ஸ்ட் பால் சேர்த்து மேலும் 15 நிமிடம் விடாமல் கிளறி கொதிக்க விடவும். பிறகு இறக்கி வைத்து பூரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும். குறிப்பு: விருப்பப்பட்டால், மெல்லியதாக சீவிய பாதாம் பருப்பை வறுத்து சேர்க்கலாம். ---------------------------------------------------------------------------- ரவா உளுந்துவடை தேவையானவை: உளுந்து - ஒரு கப், ரவை - அரை கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன், இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: உளுந்து, ரவையை தனித்தனியே ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் ஊறிய உளுந்தை நன்றாக கழுவி கிரைண்டரில் அரைக்கவும். பாதி அளவு அரைப்பட்டதும், ஊறிய ரவையை சேர்க்கவும். மெத்தென்று அரைத்து எடுக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய் விழுது, இஞ்சித் துருவல், கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு போட்டு பிசையவும். எண்ணெயை காய வைத்து, மெல்லிய வடைகளாக தட்டி பொரித் தெடுக்கவும். ________________________________________ ரவா பணியாரம் தேவையானவை: ரவை - ஒரு கப், சர்க்கரை - முக்கால் கப், எண்ணெய் - சிறிதளவு. செய்முறை: ரவை மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் கிரைண்டரில் அரைக்கவும். அரைக்கும் போதே சர்க்கரை சேர்க்கவும். வெண்ணெய் போல் அரைத்த பிறகு மாவை வழித்தெடுத்துக் கொள்ளவும். குழிவான கடாயில் எண்ணெய் தடவி, காய்ந்ததும் மாவை ஊற்றி எண்ணெயை சுற்றிலும் விடவும். திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும். குறிப்பு: மொறுமொறுப்பாக வேண்டுமானால், மேலும் 5 நிமிடம் விட்டு எடுக்க வேண்டும். மிதமான தீயில் செய்ய வேண்டும். அதிக தீயில் வைத்தால் கருகிவிடும். ________________________________________ ரவா லாடு தேவையானவை: ரவை - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், சர்க்கரைத்தூள் - ஒன்றே கால் கப், நெய் - தேவையான அளவு. செய்முறை: ரவையை ஒரு டீஸ்பூன் நெய் விட்டு வறுக்கவும். பாசிப்பருப்பை குறைந்த தீயில் நன்றாக வறுக்கவும். இரண்டையும் மெஷினில் கொடுத்து மாவாக அரைக்கவும். சர்க்கரைத்தூளையும் மாவையும் ஒன்றாகக் கலந்து, நெய்யை காய்ச்சி அதில் சிறிது சிறிதாக ஊற்றி, உருண்டை உருட்டும் பதத்தில் வந்ததும் நெய் ஊற்றுவதை நிறுத்தி விடவும். சூட்டோடு உருண்டைகளாக பிடிக்கவும். ________________________________________ ரவா இட்லி தேவையானவை: ரவை - ஒரு கப், தயிர் - ஒரு கப், தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், ஃப்ரூட் சால்ட் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுந்து - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சிறிது எண்ணெயை காய வைத்து ரவையை வறுத்து எடுக்கவும். கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, மல்லித்தழை, மிளகு, சீரகத்தை எண்ணெயில் தாளித்து ரவையை போட்டு திரும்பவும் வறுத்து ஆற விடவும். பிறகு உப்பு, தயிர், ஃப்ரூட் சால்ட், தக்காளி சாஸ் சேர்த்துக் கலக்கவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். குறிப்பு: மாவில் ஃப்ரூட் சால்ட் சேர்ப்பதால் பொங்கி வரும். குஷ்பூ இட்லி போன்று ருசியாக இருக்கும். ________________________________________ ரவா -டோக்ளா தேவையானவை: கடலைமாவு - ஒரு கப், ரவை - அரை கப், தண்ணீர் - ஒன்றரை கப், சிட்ரிக் ஆஸிட் (லைம் சால்ட்) - அரை டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், ஃப்ரூட் சால்ட் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது) - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை, தேங்காய் துருவல் - சிறிதளவு. செய்முறை: ரவையையும் கடலைமாவையும் கலந்து கொள்ளவும். இதில் சிட்ரிக் ஆஸிட், ஃப்ரூட் சால்ட், உப்பு சேர்த்து கலந்து, தண்ணீரை சேர்க்கவும். இட்லி குக்கரை தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக சூடானதும், இட்லி தட்டில் எண்ணெய் தடவி, ரவை கலவையை ஊற்றி குக்கரில் வைக்கவும். மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடங்கள் வேக விடவும். வெந்ததும் (கத்தியை விட்டு பார்த்தால் ஒட்டாமல் வரும்) எடுத்து ஆற வைத்து சிறு துண்டு களாக நறுக்கிக் கொள்ளவும். கடுகு, சீரகம் தாளித்து பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி.. சர்க்கரையும் தண்ணீரையும் ஒன்றாகக் கலந்து அதில் சேர்க்கவும். இது நன்கு கொதித்ததும், இறக்கி நறுக்கி வைத்துள்ள டோக்ளாக்களின் மேல் பரவினாற்போல் ஊற்றவும். மல்லித்தழை, தேங்காய் துருவலை தூவி அலங்கரிக்கவும். குறிப்பு: சர்க்கரை தண்ணீர் சேர்ப்பதால்,டோக்ளா தொண்டையை அடைக்காமல் இருக்கும். ________________________________________ ரவா போளி தேவையானவை: மேல் மாவுக்கு: மைதா - அரை கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள் - சிறிதளவு. பூரணத்துக்கு: ரவை - அரை கப், சர்க்கரை - முக்கால் கப், அரைத்த முந்திரி விழுது - 2 டேபிள்ஸ்பூன், கலர் - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - கால் கப், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: மைதாமாவுடன் உப்பு, மஞ்சள்தூள், நெய் சேர்த்து சற்று இளக்கமாக பிசையவும். மேல் மாவு ரெடி! எண்ணெய், நெய் கலந்து, சூடானதும் ரவையை கொட்டி வறுக்கவும். ஒன்றரை கப் கொதிக்கும் தண்ணீரை வறுத்த ரவையில் கொட்டி வேக வைக்கவும். ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கலர், ஏலக்காய்த்தூள், முந்திரி விழுது சேர்த்துக் கலந்து (இளகி மீண்டும் சேர்ந்து கொள்ளும் பதம்) இறக்கி ஆற விடவும். பூரணம் தயார். பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டையாக உருட்டி பூரணத்தை நடுவில் வைத்து மூடி தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும். ________________________________________ ரவா பக்கோடா தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், ரவை - அரை கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. தட்டிக் கொள்ள: பச்சைமிளகாய் - 3, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 5 பல், சோம்பு - ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2. செய்முறை: ரவையை சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். அரை மணி நேரம் ஊறியதும், அதனுடன் எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்களை ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். சின்ன பக்கோடாவாக பொரித்தெடுக்கவும். குறிப்பு: நன்றாகக் காய்ச்சிய ஒரு கரண்டி எண்ணெயை ஊற்றி பிசைந்து செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும். ________________________________________ ரவா நக்கெட்ஸ் தேவையானவை: ரவை - ஒரு கப், சோயா உருண்டை - 10, பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன், இஞ்சி, பூண்டு (நறுக்கியது) - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா - ஒரு டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், சாட் மசாலா - ஒரு டீஸ்பூன், கார்ன்ஃப்ளார், மைதா மாவு - தலா 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சோயாவை கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து பச்சைத் தண்ணீரில் அலசி பிழிந்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து நறுக்கிய பொருட்களை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு சோயாவை அதனுடன் சேர்க்கவும். 5 நிமிடம் வதங்கியதும் ரவையை சேர்க்கவும். இரண்டரை கப் கொதிக்கும் தண்ணீரை ரவையுடன் சேர்க்கவும். சாட் மசாலா சேர்த்து கிளறி இறக்கவும். ஆற வைத்து மைதா மாவு, கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்கு பிசைந்து, விருப்பப்பட்ட வடிவத்தில் செய்து எண்ணெயில் பொரித்தெடுக்க வும். குறிப்பு: எண்ணெய் நன்றாக காய வேண்டும். புகைய விடக் கூடாது. ________________________________________ ரவா-மைதா பூரி தேவையானவை: மைதா - ஒரு கப், ரவை - கால் கப் + ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மைதா, நெய், உப்பு, ரவை எல்லாவற்றையும் சேர்த்து பிசையவும். அரை மணி ஊறியதும், மீண்டும் பிசையவும் (விருப்பப்பட்டால் சோடா மாவு சிறிது சேர்க்கலாம்). பிறகு பூரிகளாக இட்டு பொரித்து எடுக்கவும். ஹோட்டல் பூரி போல் ‘புஸ்’ஸென்று வரும். ________________________________________ ரவா அப்பம் தேவையானவை: மைதா - ஒரு கப், ரவை - அரை கப், வெல்லம் - ஒரு கப், நன்கு பழுத்த பூவன்பழம் - 1, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை, நெய் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கி வறுத்த தேங்காய் துண்டுகள் - கால் கப். செய்முறை: மைதாவுடன் ரவை, ஏலக்காய்த்தூள், தேங்காய் சேர்க்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து உருக்கவும். பாகு உருகியதும், சூடாக இருக்கும்போதே வடிகட்டி, மைதா கலவையை சேர்க்கவும். வாழைப்பழத்தையும் நன்கு பிசைந்து, கடைசியில் ஆப்ப சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து, குழிப்பணியாரக் கல்லில் நெய் தடவி ஊற்றி எடுக்கவும். ________________________________________ ரவா பௌச் தேவையானவை: மேல் மாவுக்கு: ரவா - அரை கப், மைதா - அரை கப், ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. பூரணத்துக்கு: கொண்டக்கடலை - அரை கப், கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மேல் மாவுக்கு கொடுத் துள்ளவற்றை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். பாத்திரத்தில் மூடி வைத்து ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் நன்கு பிசைந்து மூடி வைக்கவும். ஊற வைத்த கொண்டக்கடலையை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்ததும், கரம்மசாலா தூள், எலுமிச்சை சாறு, பச்சைமிளகாய், மல்லித்தழை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மைதாமாவிலிருந்து சிறிது எடுத்து பெரிய பூரியாக இட்டு, நடுவில் சென்னா பூரணத்தை வைத்து விருப்பத்துக்கேற்ப மடித்து எண்ணெயில் பொரித்து பரிமாறவும். குறிப்பு: எண்ணெயில் பொரிக்க விருப்பமில்லாதவர்கள் ஆவியில் வேக வைத்து சூடாக இருக்கும்போதே சாப்பிட வேண்டும்.

Related

30 நாள் 30 வகை சமையல் 5632416621530057250

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item