கஞ்சியில் இருக்கு ஆரோக்கிய ரகசியம்! சிறுதானிய உணவுகள்!!
கஞ்சியில் இருக்கு ஆரோக்கிய ரகசியம்! இன்றைய தலைமுறைக்கு கஞ்சி என்றால் என்ன என்றே தெரியாது. இட்லி, பொங்கல், பூரி, தோசை எனக் காலை உண...

https://pettagum.blogspot.com/2014/11/blog-post_40.html
கஞ்சியில் இருக்கு ஆரோக்கிய ரகசியம்!
இன்றைய தலைமுறைக்கு கஞ்சி என்றால் என்ன என்றே
தெரியாது. இட்லி, பொங்கல், பூரி, தோசை எனக் காலை உணவு மாறிவிட்டது. இந்த
ஞாயிற்றுக்கிழமை அரைத்த மாவில், அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை இட்லி, தோசை
சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதா என்கிற
கவலை இல்லாமல், வயிற்றை நிரப்புவது என்றாகிவிட்டது. இது மிக மிகத் தவறு.
எந்த நோயும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்த நம் முன்னோர்களின் முக்கிய உணவே
பாரம்பரிய தானியங்களில் செய்த கஞ்சியும் கூழும்தான். அது எல்லாம்
நோயாளிகளுக்கு என்று ஒதுக்கிவிட்டு ஜங்க் ஃபுட் தேடிப்போவது நாகரிகமாகத்
தெரியலாம். ஆனால் ஆரோக்கியமாக இருக்காது.
நோய் நம்மை நெருங்காமல் ஆரோக்கியமாக வைத்திருக்க
சிறுதானியக் கஞ்சியும் கூழும் உதவி செய்யும் என்கிறார் தேனி,
காமயகவுண்டன்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கே.சிராஜுதீன்.
மருத்துவர் சிராஜுதீன் பகிர்ந்துகொண்ட உணவுமுறையை
டாக்டர் விகடன் வாசகர்களுக்காக செய்து காட்டியிருக்கிறார் ஆப்பிள் மில்லட்
உணவகத்தின் செஃப் சுப்ரமணியன்.
கேழ்வரகுக் கூழ்
தேவையானவை:
கேழ்வரகு 200 கிராம், தண்ணீர் 4 டம்ளர், மோர் (அ) காய்ச்சிய பால் 3
டம்ளர், சின்ன வெங்காயம் 6, சீரகம் தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை தேவையான அளவு, பச்சை மிளகாய் 3, கடுகு ஒரு டீஸ்பூன்,
நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு, மல்லித்தழை தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகினை
நீரில் நன்றாக ஊறவைத்து, மெல்லியத் துணியில் கட்டி, முளைக் கட்டவும். முளை
விட்டதும், கடாயில் போட்டு வறுத்து, மிக்ஸியில் அரைக்கவும். இதில்,
கெட்டியாக இருக்கும் அளவுக்கு நீர் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவைக்கவும்.
கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, உரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு,
பொன்னிறத்தில் வதக்கி, கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும்.
கடைசியில் மோர் (அ) பால் சேர்த்து இறக்கவும்.
கேழ்வரகு பாதாம் கஞ்சி
தேவையானவை:
கேழ்வரகு 200 கிராம், பாதாம் பருப்பு 50 கிராம், தண்ணீர் 4 டம்ளர்,
மோர் 3 டம்ளர், சின்ன வெங்காயம் 6, சீரகம் தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை தேவையான அளவு, பச்சை மிளகாய் 3, கடுகு ஒரு டீஸ்பூன்,
நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு, மல்லித்தழை தேவையான அளவு.
செய்முறை:
கேழ்வரகினை நீரில் ஊறவைத்து, மெல்லிய துணியில் முளை கட்டவும். இதைக்
கடாயில் வறுத்து, மிக்ஸியில் அரைத்துக் கெட்டியாக இருக்கும் அளவுக்குத்
தண்ணீர் சேர்க்கவும். பாதாமை மிக்ஸியில் போட்டு அரைத்துச் சேர்க்கவும். இதை
நன்றாகக் கொதிக்கவைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, உரித்த சின்ன
வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக்
கொட்டவும். மோர் சேர்த்து இறக்கவும்.
சிறுதானியக் கஞ்சி
தேவையானவை: சாமை,
திணை, வரகு, சிவப்பரிசி, பாசிப்பருப்பு தலா 50 கிராம், மோர் (அ) காய்ச்சிய
பால் 3 டம்ளர், தண்ணீர் 4 டம்ளர், சின்ன வெங்காயம் 6 முதல் 8,
சீரகம் ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை தேவையான அளவு, பச்சைமிளகாய் 3,
கடுகு ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், மல்லித்தழை, உப்பு தேவையான
அளவு.
செய்முறை: சாமை,
தினை, வரகு, சிவப்பரிசி, பச்சைப்பருப்பு இவற்றைத் தனித்தனியாக கடாயில்
வறுக்க வேண்டும். சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு, நன்றாகக் குருணையாகப்
பொடிக்க வேண்டும். இதில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு
சேர்த்து, குக்கரில் 3 விசில் வந்ததும் இறக்கவும்.
கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, உரித்த சின்ன
வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, கடுகு,பச்சை மிளகாய் தாளித்துக்
கொட்டவும். பிறகு மோர் (அ) பால் சேர்க்கவும். இதேபோல், சிறுதானியங்களைத்
தனித்தனியாக கஞ்சி தயாரித்துப் பருகலாம்.
Post a Comment