வெளியே
மழை 'நச நச’ என்று பெய்து கொண்டிருக்கும்போதும், மழையில் நனைந்துவிட்டு
வீட்டுக்குள் நுழைந்து உட்காரும்போதும்... "கரகரப்பா, சூடா ஏதாவது செஞ்சு
கொடேன்... ப்ளீஸ்'' என்று குடும்பத்தினர் கோரிக்கை வைப்பது இந்த சீஸனில்
வாடிக்கையான ஒன்றுதான். இந்த கோரிக்கையை சிறப்பாக நிறைவேற்றி, வீட்டில்
உள்ளவர்களை குஷியில் ஆழ்த்த உதவும் வகையில் 30 வகை 'கரகர மொறுமொறு’
ரெசிப்பிக்களை இங்கே வழங்குகிறார், சமையல்கலை நிபுணர்
எஸ்.ராஜகுமாரி.
’இந்த ரெசிப்பிக்கள் எண்ணெய் பட்சணங்கள் என்பதால்,
ஜீரணத்துக்காக இஞ்சி, பூண்டு, ஒமம், பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை
ஆகியவற்றை சேர்த்துள்ளேன். இந்த ஸ்நாக்ஸ்களை அளவுடன் சாப்பிட்டு, வளமுடன்
வாழுங்கள்'' என்கிறார் ராஜகுமாரி.
மிளகாய் பஜ்ஜி
தேவையானவை: கடலை
மாவு ஒரு கப், அரிசி மாவு 4 டேபிள்ஸ்பூன், பஜ்ஜி மிளகாய் 6,
மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை,
எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு தேவைக்கேற்ப.
செய்முறை:
அடிகனமான வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு,
மிளகாய்த்தூள், பேக்கிங் பவுடர், பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து
இட்லி மாவு பதத்துக்குக் கரைக்கவும். பஜ்ஜி மிளகாயை அதில் தோய்த்து,
காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
ஸ்டஃப்டு பஜ்ஜி
தேவையானவை: கடலை
மாவு ஒரு கப், அரிசி மாவு 4 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் 3
டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை,
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் பொரிப்பதற்குத்
தேவையான அளவு, உப்பு தேவைக்கேற்ப.
ஸ்டஃப் செய்ய: மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயம், மெல்லியதாக நறுக்கிய வாழைக்காய், மெல்லியதாக நறுக்கிய உருளைக்கிழங்கு தலா 10 வில்லைகள்.
செய்முறை:
அடிகனமான வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். காய்கறிகள் தவிர மற்ற
அனைத்தையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். முதலில் உருளை
வில்லை, அதன் மேலே வெங்காயம், மேலே வாழைக்காய் வைத்து மாவில் தோய்த்து
எண்ணெயில் பொரித்தெடுக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைத்து ஸ்டஃப்பிங்
பிரிந்து விடாதவாறு பார்த்து எடுக்கவும்).
உருளைக்கிழங்கு கட்லெட்
தேவையானவை:
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) ஒரு கப், ரஸ்க் தூள் 6 டேபிள்ஸ்பூன்,
உருளைக்கிழங்கு 200 கிராம், கேரட் துருவல் 6 டேபிள்ஸ்பூன், பொடியாக
நறுக்கிய பச்சை மிளகாய் 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை 2
டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் ஒன்று, மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன். உப்பு,
எண்ணெய் தேவையான அளவு,
செய்முறை:
உருளைக்கிழங்கை நான்காக நறுக்கி... மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து
வேகவிடவும். வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு... நறுக்கிய
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கேரட் துருவல் சேர்த்து,
வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சேர்த்து மேலும் வதக்கி, கொத்தமல்லித்
தழை சேர்த்து இறக்கவும். ஆறியதும் நீளவாக்கில் உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும். கான்ஃப்ளார் மாவில் சிறிதளவு உப்பு
சேர்த்து, நீர் விட்டு கெட்டியாக கரைத்து, உருட்டி வைத்த கலவையை அதில்
தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
மிக்ஸ்டு வெஜ் கட்லெட்
தேவையானவை: கார்ன்ஃப்ளார்
(சோள மாவு) ஒரு கப், ரஸ்க் தூள் 6 டேபிள்ஸ்பூன், பீட்ரூட் 2, ஊறவைத்த
பச்சைப் பட்டாணி அரை கப், வெங்காயம் ஒன்று, பச்சை மிளகாய் 3,
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
பீட்ரூட்டைத் தோல் சீவி சிறிய கட்டங்களாக நறுக்கி, சிறிதளவு உப்பு சேர்த்து
வேகவிடவும். வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, ஊறவைத்த பச்சைப் பட்டாணி,
மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதில் வேகவைத்த பீட்ரூட் சேர்த்து
வதக்கி, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். ஆறியதும் கெட்டியான வட்டமாக
தயார் செய்யவும். கடாயில் எண்ணெயைக் காயவைக்கவும். கார்ன்ஃப்ளாருடன் உப்பு,
நீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்து, வட்டமாக தயார் செய்து வைத்தவற்றை
தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
தவலை வடை
தேவையானவை:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, புழுங்கல் அரிசி தலா அரை
கப், தேங்காய்த் துருவல் அரை கப், மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், பச்சை
மிளகாய் 2, கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, நறுக்கிய கொத்தமல்லித் தழை 2
டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, உப்பு தேவைக்கேற்ப,
எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: அரிசி,
பருப்புகளை ஒரு மணி நேரம் ஊறவைத்து... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து
கொரகொரப்பாக, கெட்டியாக அரைத்து, பெருங்காயத்தூள், மிளகுத்தூள் சேர்த்து,
தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையும் சேர்த்துக்
கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவினைக் கரண்டியால் எடுத்து,
காய்ந்துகொண்டிருக்கும் எண்ணெயில் ஊற்றவும். (அடுப்பை 'சிம்’மில்
வைக்கவும்). ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
பட்டாணிப் பருப்பு வடை
தேவையானவை:
பட்டாணிப் பருப்பு 200 கிராம், கடலைப் பருப்பு 50 கிராம், அரிசி ஒரு
டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் ஒன்று, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லி தலா ஒரு டேபிள் ஸ்பூன், நறுக்கிய இஞ்சித்
துண்டுகள் ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் 2, உப்பு தேவைக்கேற்ப,
எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை:
பட்டாணிப் பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி மூன்றையும் ஒரு மணி நேரம்
ஊறவைத்து, உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக,
கொரகொரப்பாக அரைக்கவும். நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை,
கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து வடைகளாகத் தட்டவும். கடாயில் எண்ணெயைக்
காயவைத்து, தட்டிய வடைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
முட்டைகோஸ் கேரட் வடை
தேவையானவை:
உடைத்த கறுப்பு உளுந்து ஒன்றரை கப், பச்சை மிளகாய் 2, நறுக்கிய
முட்டைகோஸ் அரை கப், நறுக்கிய கேரட் 4 டேபிள்ஸ்பூன், நறுக்கிய
வெங்காயம் கால் கப், துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன், நறுக்கிய
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் அரை
டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை:
கறுப்பு உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைத்து, தோல் போகக் கழுவி... உப்பு, பச்சை
மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் எண்ணெய் தவிர மற்ற
எல்லாவற்றையும் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை
வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.
புதினா கார மசால்வடை
தேவையானவை:
கடலைப்பருப்பு ஒரு கப், உளுத்தம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்,
பட்டாணிப்பருப்பு 3 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை,
சோம்பு ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 3, நறுக்கிய புதினா 6
டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை:
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பட்டாணிப்பருப்பு மூன்றையும் ஒரு மணி
நேரம் ஊறவைத்து... உப்பு, பெருங்காயத்தூள், சோம்பு, காய்ந்த மிளகாய்
சேர்த்து கரகரப்பாக அரைத்து, புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்துப்
பிசையவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு
பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: பருப்புகளை ஊறவைக்கும்போதே மிளகாயையும் அதில் சேர்த்து ஊறவைத்தால், மிளகாய் எளிதில் அரைபடும்.
உருளைக்கிழங்கு மசாலா போண்டா
தேவையானவை: கடலை
மாவு அரை கப், மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் ஒரு
சிட்டிகை, அரிசி மாவு 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப,
எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
மசாலா செய்வதற்கு:
உருளைக்கிழங்கு 150 கிராம், கேரட் துருவல் 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் தலா 2,
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
நான்காக நறுக்கிய உருளைக் கிழங்குடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து
வேகவிடவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி... நறுக்கிய
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கேரட் துருவல் சேர்த்துக்
கிளறி, வெந்த உருளைக்கிழங்கை தோல் உரித்து சேர்த்து வதக்கவும். ஆறியதும்
கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து, பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக
உருட்டி வைக்கவும்.
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள்,
பெருங்காயத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, நீர்விட்டு கெட்டியாகக்
கரைக்கவும். செய்து வைத்த உருண்டைகளை, இந்தக் கரைசலில் தோய்த்து காயும்
எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
மிளகு போண்டா
தேவையானவை: வெள்ளை
முழு உளுந்து ஒரு கப், பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, மிளகுத்தூள் ஒரு
டீஸ்பூன், பச்சை மிளகாய் ஒன்று, பல்லு பல்லாக கீறிய தேங்காய் 3
டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, உப்பு தேவைக்கேற்ப,
எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: உளுந்தை
40 நிமிடம் ஊறவைத்து... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, நைஸாக
அரைத்து, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், கீறிய தேங்காய், கறிவேப்பிலை
சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை பெரிய பெரிய
போண்டாக்களாகப் பொரித்து எடுக்கவும்.
கீரை வடை
தேவையானவை: முழு
உளுந்து ஒரு கப், பச்சை மிளகாய் 2, நறுக்கிய முளைக்கீரை, பசலைக்
கீரை தலா ஒரு கப், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான
அளவு.
செய்முறை: முழு
உளுந்தை முக்கால் மணி நேரம் ஊறவைத்து உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து
கெட்டியாக அரைக்கவும். இதனுடன் கீரைகளைச் சேர்த்துப் பிசைந்து வடைகளாகத்
தட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
பாகற்காய் சிப்ஸ்
தேவையானவை: பெரிய
பாகற்காய் 4, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, நசுக்கிய பூண்டு ஒரு
டேபிள்ஸ்பூன், கடலை மாவு 5 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), மஞ்சள்தூள் ஒரு
சிட்டிகை, தயிர் 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப,
எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை:
பாகற்காயை வட்டவட்டமாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், தயிர் சேர்த்துப் பிசிறி
15 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு தண்ணீர் விட்டுக் கழுவி நீர்போக பாகற்காயை
வடிகட்டவும். (இப்படிச் செய்வதால் கசப்பு தெரியாது). வடிகட்டிய
பாகற்காயுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள்,
நசுக்கிய பூண்டு சேர்த்து, சிறிதளவு நீர் சேர்த்துப் பிசிறவும். கடாயில்
எண்ணெயைக் காயவைத்து, பாகற்காயைப் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெயை
வடியவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
வெஜிடபிள் சமோசா
தேவையானவை: மைதா
மாவு 250 கிராம், உருளைக்கிழங்கு 250 கிராம், பச்சைப் பட்டாணி 50
கிராம், பச்சை மிளகாய் இஞ்சி விழுது ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு
டீஸ்பூன், முந்திரித் துண்டுகள் 10, சீரகம், சோம்பு தலா ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித் தழை 2 டேபிள்ஸ்பூன், கரம்மசாலாத்தூள் ஒரு
டீஸ்பூன், வனஸ்பதி 50 கிராம், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: பச்சைப்
பட்டாணி மற்றும் கழுவி, நறுக்கிய உருளைக்கிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து
குழையாமல் வேகவிட்டு எடுத்து, நீரை வடிகட்டி வைக்கவும். வனஸ்பதியை லேசாக
சூடாக்கி... மைதா, உப்பு, சீரகத்தூள் சேர்த்து, நீர் விட்டு பூரி மாவு
பதத்தில் பிசைந்து, எட்டு பாகங்களாக செய்து, நீளவாக்கில் தேய்க்க வேண்டும்.
அடிகனமான வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சோம்பு சேர்த்து,
வெடித்ததும் முந்திரி சேர்த்து, பிறகு பச்சை மிளகாய் இஞ்சி விழுது
சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள், முந்திரி போட்டுக்
கிளறவும். வெந்த உருளைக்கிழங்கு (தோல் உரிக்கவும்), பட்டாணியை சேர்த்து
வதக்கி இறக்கி, கொத்தமல்லித் தழை தூவி வைக்கவும்.
நீளமாகத் தேய்த்த மாவினை முக்கோணம் மாதிரி செய்து,
வெந்த கலவையில் 3 ஸ்பூன் உள்ளே வைத்து மூடி சமோசாக்கள் செய்துவைக்கவும்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை 'சிம்’ மில் வைத்து, செய்துவைத்த
சமோசாக்களை பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: சமோசாக்கள் மூழ்கும் அளவுக்கு எண்ணெய் இருக்க வேண்டும்.
குணுக்கு
தேவையானவை: துவரம்பருப்பு,
கடலைப்பருப்பு தலா அரை கப், உளுந்து 3 டேபிள்ஸ்பூன், புழுங்கல் அரிசி 2
டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை,
உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: அரிசி,
பருப்புகள், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து ஒரு மணி நேரம்
ஊறவைத்து... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிப் போட்டு
பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: 2 டேபிஸ்பூன் தேங்காய்த் துருவல், சிறிதளவு கறிவேப்பிலையை மாவில் சேர்த்தும் செய்யலாம்.
ஸ்வீட் பால்ஸ்
தேவையானவை: மைதா மாவு ஒரு கப், வெள்ளை ரவை 2 டேபிள்ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை, வெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
ஸ்டஃப்பிங்குக்கு:
துருவிய தேங்காய் ஒரு கப், பொடித்த சர்க்கரை அரை கப்,
ஏலக்காய்த்தூள் சிட்டிகை, டூட்டி ஃப்ரூட்டி, உலர்திராட்சை, உடைத்த
முந்திரித் துண்டுகள் தலா 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: மைதா,
ரவை, உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து, நீர் விட்டு சப்பாத்தி மாவு
பதத்தில் பிசைந்து, 20 நிமிடம் ஊறவிடவும். துருவிய தேங்காயை வெறும்
வாணலியில் வறுத்து சர்க்கரை, ஏலக்காய்த்தூள், டூட்டி ஃப்ரூட்டி, முந்திரி,
திராட்சை சேர்த்து, தேங்காய் சூட்டிலேயே எலுமிச்சை அளவு (அ) பெரிய
நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிசைந்த மைதா மாவினை
சிறிய உருண்டைகளாக எடுத்து, சிறிய சப்பாத்திகளாக இட்டு, இனிப்பு உருண்டையை
அதில் வைத்து, பிரிந்து விடாதவாறு மூடவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து
(அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்), செய்து வைத்த உருண்டைகளைப் போட்டு
பொரித்து எடுக்கவும்.
மட்ரி
தேவையானவை: கோதுமை
மாவு கால் கப், மைதா மாவு முக்கால் கப், பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை,
ஓமம் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் பொரிப்பதற்கு
தேவையான அளவு.
செய்முறை: மைதா
மாவு, கோதுமை மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர், ஓமம், நீர் சேர்த்துப்
பிசைந்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு மாவை சற்றே தடிமனான
சப்பாத்திகளாக இட்டு, பாட்டில் மூடியால் 'கட்’ செய்யவும். கடாயில்
எண்ணெயைக் காயவைத்து, 'கட்’ செய்து வைத்தவற்றைப் பொரித்து எடுக்கவும்.
த்ரீ டேஸ்ட் பக்கர்வாடி
தேவையானவை:
மைதா ஒரு கப், புளி பேஸ்ட் ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் 6
டேபிள்ஸ்பூன், சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன், எள், சோம்பு தலா ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை:
மைதாவுடன் உப்பு, நீர் சேர்த்துப் பிசைந்து திக்கான சப்பாத்தியாக இட்டு,
மேலே புளி பேஸ்ட்டை தடவவும். வெறும் வாணலியில் தேங்காய்த் துருவல், சோம்பு,
எள் ஆகியவற்றை வறுத்துப் பொடித்து, மிளகாய்த்தூள், சர்க்கரை சேர்த்து,
சப்பாத்தி மேலே தூவி சுருட்டி, சப்பாத்தியின் இரு முனைகளை அழுத்திவிடவும்.
இதனை சிறிய சிறிய உருளைகளாக வெட்டவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து
உருளைகளாக வெட்டி வைத்தவறைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
இது புளிப்பு, காரம், இனிப்பு சுவையுடன் அசத்தல் டேஸ்ட்டில் இருக்கும்.
கார சோமாஸி
தேவையானவை: கோதுமை மாவு 3 கப், ரவை ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
மசாலா செய்வதற்கு:
உருளைக்கிழங்கு 200 கிராம், கேரட் துருவல் 4 டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப, ஊறவைத்த பச்சைப் பட்டாணி கால் கப், மஞ்சள்தூள்,
பெருங்காயத்தூள் தலா ஒரு சிட்டிகை, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை தலா
ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் ஒன்று, பச்சை மிளகாய் 2, எண்ணெய் 2
டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கோதுமை
மாவு, உப்பு, ரவையுடன் தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, 20 நிமிடம்
ஊறவிடவும். கழுவி, நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணியுடன்
உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேகவிடவும். வாணலியில் 2
டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து
வதக்கி, கேரட் துருவலயும் சேர்த்துக் கிளறி, வெந்த உருளை பட்டாணி,
பெருங்காயத்தூள் சேர்த்து மேலும் வதக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை
சேர்த்து இறக்கவும்.
பிசைந்த கோதுமை மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி,
சப்பாத்தியாக இட்டு... 2 டேபிள்ஸ்பூன் மசாலாவை உள்ளே வைத்து மூடி நன்றாக
அழுத்தி, சோமாஸிகளாக செய்யவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து செய்துவைத்த
சோமாஸிகளை பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: சோமாஸி
மேக்கரில் சிறிய சப்பாத்தியையும், மசாலாவையும் வைத்து மூடி, அழுத்தி
ஓரங்களில் வெளியே வருவதை எடுத்துவிட்டு, உள்ளே இருப்பதை எண்ணெயில் பொரித்து
எடுத்தால், அழகிய வளைவுகளுடன் ஓரங்கள் கண்கவரும் விதத்தில் இருக்கும்.
சோமாஸி பொரிக்கும்போது அடுப்பை 'சிம்’மில் வைத்து ஓரங்கள் பிரிந்து
விடாதவாறு பார்த்துப் பொரிக்க வேண்டும்.
தால் கச்சோரி
தேவையானவை: மைதா மாவு ஒரு கப், எண்ணெய் (மாவு பிசைய) 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
ஸ்டஃப்பிங்குக்கு:
பயத்தம்பருப்பு 6 டேபிள்ஸ்பூன், முழு உளுந்து கால் கப், கடலை மாவு ஒரு
டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, தனியாத்தூள், மிளகாய்த்தூள் தலா
ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி பச்சை மிளகாய் விழுது ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச்
சாறு ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: மைதா
மாவுடன் உப்பு, எண்ணெய் சேர்த்து, சிறிது சிறிதாக நீர் சேர்த்து, மாவு
இளகும் வரை கைகளால் பிசைந்து, ஈரம் போகாமல் இருக்குமாறு ஈரத்துணியால் மூடி
வைக்கவும். உளுந்து, பயத்தம்பருப்பை தனித்தனியே அரை மணி நேரம் ஊறவைத்து,
முதலில் உளுந்தை வேகவைத்து, பாதி வெந்ததும் பயத்தம்பருப்பையும் சேர்த்து
வேகவிட்டு எடுத்து வைக்கவும்.
வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி பச்சை
மிளகாய் விழுது சேர்த்து வதக்கி, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,
உப்பு சேர்த்து வதக்கி... வெந்த பருப்புகளையும் சேர்த்து, கடலை மாவையும்
சேர்த்துக் கிளறி இறக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித் தழை
சேர்க்கவும்.
பிசைந்து வைத்த மைதா மாவில் இருந்து சிறுசிறு
உருண்டைகளாக எடுத்து சிறிய பூரிகள் போல் திரட்டி, பருப்புக் கலவையை பெரிய
நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி, பூரியில் வைத்து, கைகளாலேயே மூடி,
தட்டவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்),
செய்து வைத்தவற்றைப் பொரித்து எடுக்கவும்.
வெங்காய பக்கோடா
தேவையானவை: கடலை
மாவு ஒரு கப், அரிசி மாவு 4 டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் ஒரு கப்,
நறுக்கிய பச்சை மிளகாய் ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் ஒரு
சிட்டிகை, இஞ்சித் துருவல் ஒரு டீஸ்பூன், லேசாக தோலுடன் நசுக்கிய
பூண்டு 6 பற்கள், கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, உப்பு தேவைக்கேற்ப,
எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: கடலை
மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், வெங்காயம், பச்சை மிளகாய்,
இஞ்சித் துருவல் ஆகியவற்றை சேர்த்துப் பிசிறவும். 5 நிமிடங்கள் ஊறவிடவும்.
வெங்காயத்தில் உள்ள தண்ணீர் ஊறி மாவுடன் சேர்ந்திருக்கும். 4 டேபிள்ஸ்பூன்
சூடான எண்ணெயை இதில் விட்டுக் கலக்கவும். பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர்
மட்டும் சேர்த்துப் பிசையவும். மாவை காய்ந்த எண்ணெயில் கிள்ளிப் போடவும்.
வெந்ததும் எடுத்து எண்ணெயை வடியவிடவும். பூண்டு, கறிவேப்பிலையை ஒரு
டேபிள்ஸ்பூன் எண்ணெயில் பொரித்து, பக்கோடாவில் கலந்துவிடவும்.
மரவள்ளி குச்சி சிப்ஸ்
தேவையானவை: கெட்டி
யான மரவள்ளிக்கிழங்கு 2,மிளகாய்த்தூள் ஒரு
டேபிள்ஸ்பூன்,பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் தலா ஒரு சிட்டிகை,
உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
மரவள்ளிக் கிழங்கை தோல்சீவி அரைவேக்காடாக வேகவைத்து, நடுவில் உள்ள குச்சியை
எடுத்துவிட்டு, மெல்லிய குச்சிகளாக நறுக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள்
சேர்த்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, நறுக்கிய
மரவள்ளிக் கிழங்கை பொரித்து எடுக்கவும். எண்ணெயை வடிய விட்டு, சூட்டுடனேயே
மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் குலுக்கிவிடவும்.
ஒரு ஆர்க்கு கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து இதனுடன் சேர்க்கலாம்.
நேந்திரங்காய் மசாலா சிப்ஸ்
தேவையானவை:
நேந்திரங்காய் 2, கார்ன்ஃப்ளார் (சோள மாவு) 3 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் தலா ஒரு
சிட்டிகை, எண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை:
எண்ணெயைக் காயவிடவும். நேந்திரங்காய்களை வில்லைகளாக அரிந்து உப்பு,
கார்ன்ஃப்ளார், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து,
சிறிதளவு நீர் விட்டுப் பிசறி, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
தேவைப்பட்டால், கறிவேப்பிலையை பொரித்துச் சேர்க்கலாம்.
கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர்
தேவையானவை:
கார்ன்ஃப்ளேக்ஸ் (மிக்ஸர் கார்ன்ஃப்ளேக்ஸ் என்று கடைகளில் கேட்டு வாங்க
வேண்டும்) 2 கப், பொட்டுக்கடலை, வேர்க்கடலை தலா 3 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன், முந்திரித்
துண்டுகள் ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை 2 ஆர்க்கு,
உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: கடாயில்
எண்ணெயைக் காயவைத்து, கார்ன்ஃப்ளேக்ஸை பொரித்து எடுத்து (சில நிமிடங்களில்
பொரிந்துவிடும்), எண்ணெயை வடியவிடவும். கடாயில் மீதமுள்ள எண்ணெயை
வடிகட்டிவிட்டு, 3 டேபிள்ஸ்பூன் மட்டும் வைத்து வேர்க்கடலை, முந்திரித்
துண்டுகள், பொட்டுக்கடலை, கறிவேப்பிலையை வறுத்து, கார்ன்ஃப்ளேக்ஸில்
சேர்க்கவும். சூட்டுடனே உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக்
கிளறி குலுக்கிவிடவும். காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
மைதா ஸ்வீட் சிப்ஸ்
தேவையானவை: மைதா
மாவு ஒரு கப், பொடித்த சர்க்கரை அரை கப், ஏலக்காய்த் தூள் ஒரு சிட்டிகை,
எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு, ஆரஞ்சு ஃபுட் கலர் ஒரு சிட்டிகை.
செய்முறை: மைதா
மாவுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பிசைந்து, ஃபுட்கலர்
சேர்த்து, நீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, சப்பாத்தியாகத்
தேய்க்கவும். இதை சிறிய சிறிய மூடிகளால் 'கட்’ செய்து, காயும் எண்ணெயில்
போட்டு பொரித்து எடுக்கவும்.
மசாலா பாப்கார்ன்
தேவையானவை:
மக்காச்சோளம் (பாப்கார்ன் செய்வதற்கு என்றே காய்ந்த மக்காச்சோளம்
கிடைக்கும். அதைத்தான் வாங்க வேண்டும்) அரை கப், கரம்மசாலாத்தூள்,
மிளகுத்தூள் தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, தூள்
உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
அடிகனமான வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சிறிதளவு உப்பு,
மிளகுத்தூள், மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து சூடானதும் கைப்பிடி
அளவு மக்காச்சோளத்தைப் போட்டு மூடிவைக்கவும் (மேலே குமிழ் உள்ள மூடி).
படபடவென்று சத்தம் கேட்க ஆரம்பிக்கும். சோளம் பொரியும் சத்தம் அடங்கியதும்
இறக்கிவிட வேண்டும். இதேபோல் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பார்கார்ன்
தயாரிக்கவும்.
பட்டர் பாப்கார்ன் செய்வதானால் சிறிதளவு வெண்ணெய் சேர்க்கவும்.
மைதா பட்டர் பிஸ்கட்
தேவையானவை: மைதா மாவு 200 கிராம், வெண்ணெய் 100 கிராம், பொடித்த சர்க்கரை 75 கிராம், உப்பு, பேக்கிங் பவுடர் தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: மைதா
மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாகக் கலந்து பலமுறை சலித்துக்
கொள்ளவும். வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் கலந்து மிருதுவாகும் வரை
குழைக்கவும். இதனுடன் மைதா பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்துக் கலந்து
பிசையவும். இந்த மாவை சப்பாத்தி கல்லில் வைத்து வட்டமாக தட்டவும். இதனை
பாட்டில் மூடி அல்லது பிஸ்கட் அச்சினால் கால் அங்குல பருமன் அளவுக்கு
வட்டமாக வெட்டவும். வெட்டிய துண்டுகளை 'போர்க்’ (முள்கரண்டி) கொண்டு லேசாக
குத்திவிடவும்.
ஒரு தட்டில் நெய் தடவி, மேலே மைதா மாவு தூவி, செய்து
வைத்த துண்டுகளை இடைவெளிவிட்டு அடுக்கவும். அடிகனமான வாணலியில் மணலை
சூடுபடுத்தி, அதன் மேல் தட்டை வைத்து, இட்லி பானை மூடியால் அழுத்தி மூடவும்
(அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). 20 நிடத்துக்குப் பிறகு, வாசனை வர
ஆரம்பித்ததும் அடுப்பை அணைக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு
பிஸ்கட்டுகளை வெளியே எடுக்கவும்.
ஸ்பைஸி பப்பட் பீடா
தேவையானவை: கெட்டியான மசாலா அப்பளம் (மிளகு அப்பளம்) 6, எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு, லவங்கம் 6.
ஸ்டஃப்பிங்குக்கு:
தேங்காய் துருவல் 8 டேபிள்ஸ்பூன், வேர்க்கடலை 8 டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப, முந்திரித் துண்டுகள் 6, எள் ஒரு டேபிள்ஸ்பூன்.
மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப).
செய்முறை:
ஸ்டஃப்பிங்குக்கு கொடுத்துள்ளவறை வெறும் வாணலியில் லேசாக வறுத்து
மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும். அப்பளத்தின் இருபுறமும் லேசாக
தண்ணீர் தடவவும். ஒவ்வொரு அப்பளத்துக்குள்ளும் 2 ஸ்பூன் பொடித்த பொடியை
வைத்து பீடா மாதிரி மடித்து லவங்கத்தைக் குத்தி எண்ணெயில்
பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: இதற்கு கெட்டியான மிளகு அப்பளம்தான் ஏற்றது. அப்பளம் ஈரத்துடன் இருக்கும்போதே ஸ்டஃப்பிங்கை உள்ளே வைத்துவிடவேண்டும்.
முந்திரி பக்கோடா
தேவையானவை: கடலை
மாவு ஒரு கப், அரிசி மாவு 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் 2
டேபிள்ஸ்பூன், அரைத்த புதினா விழுது ஒரு டேபிள்ஸ்பூன், முழு முந்திரி 100
கிராம், உப்பு தேவைக்கேற்ப, நெய் ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: எண்ணெயைக் காயவைக்கவும். மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் பிசைந்து, அடுப்பை

சிம்’மில்
வைத்து, பிசைந்து வைத்த மாவை பக்கோடாக் களாக கிள்ளிப் போட்டு பொரித்து
எடுக்கவும். எண்ணெயை வடியவிட்டு காற்றுப்புகாத டப்பாவில்
பத்திரப்படுத்தவும்.
சேனை வேர்க்கடலை வறுவல்
தேவையானவை: சேனைக்
கிழங்கு 100 கிராம், வறுத்த வேர்க்கடலை 50 கிராம், தயிர் ஒரு
டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு (வறுக்கவும்),
உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: சேனைக்
கிழங்கை வேர்க்கடலை அளவுக்கு துண்டுகளாக்கி சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள்,
மிளகாய்த்தூள், தயிர் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு அலசி நீரை
வடியவிடவும் (இப்படிச் செய்வதால் கிழங்கின் காரல் போய்விடும்). பின்னர் இதை
உலரவிடவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து சேனைக்கிழங்கைப் பொரித்து
எடுத்து, எண்ணெயை வடியவிடவும். உப்பு, மிளகுத்தூள், வறுத்த வேர்க்கடலை,
வறுத்த கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து விடவும்.
உருளைக்கிழங்கு பிரெஞ்ச் ஃப்ரை
தேவையானவை:
உருளைக்கிழங்கு கால் கிலோ, மிளகுத்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாகப்
பொடித்தது), உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் பொரிப்பதற்குத் தேவையான அளவு.
செய்முறை:
உருளைக்கிழங்கை விரல் வடிவ கனத்துக்கு நறுக்கி, உப்பு சேர்த்து அரை
வேக்காடாக வேகவிடவும். தண்ணீரை வடித்து, உலரவிட்டு, பிறகு எண்ணெயில்
பொரித்தெடுக்கவும். எண்ணெயை வடியவிட்டு, சூட்டுடனே மிளகுப்பொடி சேர்த்து,
நன்றாகக் கலந்துவிடவும்.
Post a Comment