கவிதைத்துளிகள்! தனிமை இராத்திரி..
தனிமை இராத்திரி... - ப்ரியசகி தனிமை இராத்திரி.. அரையிருளாய் எரியும் வண்ண விளக்கு நடுங்கும் நிழலுடன் நனைந்த நான் அரைகுறையாய் துவட்டிய து...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_633.html
தனிமை இராத்திரி... - ப்ரியசகி
தனிமை இராத்திரி..
அரையிருளாய் எரியும் வண்ண விளக்கு
நடுங்கும் நிழலுடன் நனைந்த நான்
அரைகுறையாய் துவட்டிய துண்டை
உன் அவசரக் குளியலுக்கு அபகரித்துப் போவாய்
முதுகின் பின்னால் உன் குறும்புப் புன்னகை
என் இடைதழுவும் விரல்நகங்களில் தெரியும்
கழுத்தில் முடி விலக்கும் உன் மூச்சுக்காற்று
நீ கவனமாய் ரசிப்பதை எனக்கு உணர்த்தும்
நேற்று இரவு தொடக்கம் எண்ணி
பதறும் மனம் வெட்கப்பட்டு
அடுத்து என்ன ஆவல் கொண்டு
தயங்கும் விரல் நகர்த்தையில்
எப்போதும் போல் அவகாசம் தந்து
நீ இப்போதும் என் அவஸ்தை ரசிப்பாய்
எட்டித் தள்ளும் என் பொய்க்கோபம்
உன்னைத் தோல்வி ஏற்று தொடரச் செய்யும்
மணவறை முதல்தொடுகைப் போல்
மறுபடியும் என்னை சிலிர்க்கச் செய்யும்
கொதிப்பாய் வரும் இரு மூச்சு ஓசை
அமைதி இரவின் நிசப்தம் கலைக்கும்
இருவர் மட்டுமான ஏகாந்தம்
இப்போது மட்டும் ரொம்பப் பிடிக்கும்
ஈரக்கூந்தல் சிந்தும் முத்துத்துளிகள்
உன் மார்பில் பட்டுத் தெறிக்கும்
அணைத்த பொழுது நாணம் போல்
அதுவும் மெல்ல மறைந்து போகும்
உன் இரவுக் குளியலின் சோப்பு வாசம்
விடியல் பொழுதில் என்மீது வீசும்
ஒவ்வொரு விடியல் பிறக்கையிலும்
நானும் புதிதாய் பிறந்திடுவேன்
எத்தனை நாள் பிறப்பாய் என்று
இறைவன் பொறுமை இழந்தானோ
இனிக்கும் இரவு நினைவுகளை
சோம்பல் காலையில் டீயுடன் அருந்தி
பறக்கும் முத்தம் கொடுத்தே
அன்றும் பணிக்கு உற்சாகமாய் சென்றாய்
எதற்கோ எங்கோ சென்ற நீ
இரட்டை கோபுரச் சரிவில் சிக்கி
இரண்டு நாட்கள் சென்ற பின்பு
என்னிடம் கட்டிக் கொடுக்கப்பட்டாய்
ஆறடி கட்டிலும் போதாது என்ற நீ
மூன்றடி பையுக்குள் அடங்கியது எப்படி!
இறுகப் பற்றிய செல்போனில்
கடைசியாய் என்னை ஏன் அழைத்தாய்?
இடிந்த கட்டிடம் சுமை தாளாமல்
பகிர்ந்துகொள்ள என்னை அழைத்தாயோ
இல்லை இறுதி மூச்சில் இமை மூடி
நேற்று இரவுநாடகம் நினைத்தாயோ
என்ன அவசரம் என்னவனே..
எண்ணிவிடும் பொழுதுகள் மட்டும்
என்னுடன் இருந்துவிட்டு
எத்தனையோ மாற்றங்களை
என்னுள்ளே விதைத்துவிட்டு
அத்தனையும் ஏமாற்றங்களாய்
விளைய விட்டது நியாயமா?
இனிமை ராத்திரிகள் இனி இல்லையென
பொய்யாய்கூட நீ சொன்னது இல்லை
தனிமை இராத்திரிகள் கொடுமை கணவா
உன் நினைவுகள் மட்டும் போதாது
இனி நீயில்லை என்னும் நிஜம்
என்னையும் மெல்லக் கொல்லும்
- ப்ரியசகி
Post a Comment