கோடை கொண்டாட்டம்! 30 வகை சிப்ஸ்-வற்றல்- வடகம்
30 வகை சிப்ஸ்-வற்றல்- வடகம் வெயில் காலம் தொடங்கியாச்சு. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டாமா? கொளுத்தும் வெயிலில் காய வைத்து எடுக்க வத்த...

https://pettagum.blogspot.com/2011/06/30_04.html
30 வகை சிப்ஸ்-வற்றல்- வடகம்
வெயில் காலம் தொடங்கியாச்சு. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டாமா? கொளுத்தும் வெயிலில் காய வைத்து எடுக்க வத்தல், வடகம், சிப்ஸ் என 30 வகை 'நொறுக்ஸ்' விஷயங்களை நறுக்கென தந்திருக்கிறார் நங்கநல்லூர் பத்மா. வருடம் முழுதும் வைத்திருந்து சாப்பிட இந்த சீசனில் வடகம் தயாரித்துவிட்டால், பிறகு காய்கறி விலை ஏறினாலும் கவலையில்லைதானே!
------------------------------------------------------------------------
கொத்தவரங்காய் வற்றல்
தேவையானவை: கொத்தவரங்காய் - கால் கிலோ, உப்பு - தேவையான அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: கொத்தவரங்காயை நன்றாக அலசி, கொதிக்கும் தண்ணீரில் போட்டு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து லேசாக வேக விடவும். வெந்ததும் இறக்கி, தண்ணீரை வடிய விட்டு நன்றாக வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
இந்த வற்றலை எண்ணெயில் பொரித்து ரசம் சாதத்துடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
சுண்டைக்காய் வற்றல்
தேவையானவை: பச்சை சுண்டைக்காய் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, புளித்த தயிர் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4.
செய்முறை: பச்சை சுண்டைக்காயை லேசாக நசுக்கி வெயிலில் நன்றாக காய வைக்கவும். காய்ந்த மிளகாயில் உப்பு சேர்த்து அரைத்து தயிருடன் கலக்கவும். இதை காய வைத்த சுண்டைக்காயில் ஒரு நாள் ஊற விடவும். மீண்டும் வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
இந்த வற்றலை எண்ணெயில் வறுத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வற்றல் குழம்புக்கும் பயன்படுத்தலாம்.
--------------------------------------------------------------------------------
அவரைக்காய் வற்றல்
தேவையானவை: அவரைக்காய் - 2 கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவரைக்காயுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும். வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு வெயிலில் காய வைக்கவும்.
பொடி சாதம், ரசம் சாதத்துக்கு இந்த வற்றல் சூப்பர் சைட் டிஷ். குழம்பு, சாம்பார் செய்ய காய்கறி இல்லாதபோது இந்த வற்றலை போட்டு செய்யலாம்.
--------------------------------------------------------------------------------
தும்மட்டி வற்றல்
தேவையானவை: தும்மட்டிக்காய் - ஒன்றரை கப், (கோவைக்காயைவிட சிறிய அளவில் இருக்கும்), வெந்தயம் - கால் டீஸ்பூன், புளித்த தயிர் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தும்மட்டிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காய வைக்கவும். முந்தைய நாள் இரவே வெந்தயத்தை புளித்த தயிரில் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து காய வைத்த தும்மட்டிக்காயுடன் சேர்த்து கலக்கவும். இதை வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
எண்ணெயில் பொரித்து சாப்பிட.. உப்பு, புளிப்பு, காரத்துடன் நன்றாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
கத்தரிக்காய் வற்றல்
தேவையானவை: கத்தரிக்காய் - கால் கிலோ, புளித்தண்ணீர் - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கத்தரிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் நன்றாக காய வைத்து எடுக்கவும். இதில் புளித்தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பில் சிறிதுநேரம் கொதிக்க வைத்து வெந்ததும் தண்ணீரை வடித்து விடவும். மீண்டும் வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
இந்த வற்றலில் குழம்பு செய்தால் வாசனை ஊரைத்தூக்கும்.
--------------------------------------------------------------------------------
மணத்தக்காளி வற்றல்
தேவையானவை: மணத்தக்காளி - ஒரு கப், தயிர் - அரை கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மணத்தக்காளிக்காயை நன்றாகக் கழுவி, தயிரில் உப்பு சேர்த்து (தயிரைக் கொட்ட வேண்டாம்) நான்கு நாள் ஊற வைக்கவும். ஊறிய மணத்தக்காளியை எடுத்து பிழிந்து, வெயிலில் ஒருநாள் காய வைக்கவும். மீண்டும் அவற்றை ஏற்கனவே ஊற வைத்த தயிரில் போட்டு ஒரு நாள் வைத்திருக்கவும். அடுத்த நாள் அவற்றை வெளியில் எடுத்து இரண்டு நாள் நன்றாக காய வைத்து காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு மூடி வைத்தால் ஒரு வருடம் ஆனாலும் கெடாது.
நெய்யில் மணத்தக்காளி வற்றலை வறுத்து பருப்புத் துவையல், மிளகுச் சீரக ரசத்துடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
வெண்டைக்காய் வற்றல்
தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு சிறிய கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மிளகாய்த்தூள், தயிர் சேர்த்து கலந்து வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
வெண்டைக்காய் வற்றலை எண்ணெயில் பொரித்து அப்படியே சாப்பிடலாம்.
--------------------------------------------------------------------------------
காராமணி உளுந்து வற்றல்
தேவையானவை: சிவப்புக் காராமணி, உளுத்தம்பருப்பு - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு.
செய்முறை: காராமணி, உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து உப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதை பக்கோடா போல் கிள்ளிப் போட்டு வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
இந்த வற்றலை காய்கறி, கூட்டு, வற்றல் குழம்பில் பொரித்து சேர்க்கலாம்.
--------------------------------------------------------------------------------
வேப்பம்பூ வற்றல்
தேவையானவை: வேப்பம் பூ - ஒரு கைப்பிடி அளவு, எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய் - தலா 1, உப்பு - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன்.
செய்முறை: வேப்பம் பூவில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து உப்பு சேர்த்து கலந்து ஒருநாள் வைத்திருக்கவும். மறுநாள் வெயிலில் உலர்த்தி காய்ந்ததும் ஒரு பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும்.
கடாயில் எண்ணெயில் கடுகு, மிளகாய் தாளித்து காய்ந்த வேப்பம் பூவை போட்டு வறுத்து சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிட்டால் பித்தம் குறையும்.
--------------------------------------------------------------------------------
மாங்காய் வற்றல்
தேவையானவை: மாங்காய் - 1, தேவையான அளவு - உப்பு.
செய்முறை: மாங்காயை பெரிய துண்டுகளாக சீவி நறுக்கவும். உப்பு கலந்து நான்கு நாள் ஊறவைத்து வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும்.
புளி சேர்க்காமல் இந்த வற்றலைப் போட்டு குழம்பு வைத்தால் மணமாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
உருளை சிப்ஸ்
தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, மிளகுத்தூள் - கால் ஸ்பூன்.
செய்முறை: உருளைக்கிழங்கை வறுவல் சீவும் கட்டையால் சீவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு உப்பு சேர்த்து சிறிது நேரம் மூடி வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெயில் பொரித்து மிளகுத்தூள் கலந்து கொடுக்கலாம். எண்ணெயும் அதிகம் செலவாகாது.
--------------------------------------------------------------------------------
சர்க்கரைவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
தேவையானவை: சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 2, மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: சர்க்கரைவள்ளிக்கிழங்கை தோல் நீக்கி, சீவி உப்பு சேர்த்து வெந்நீரில் சிறிது நேரம் வைக்கவும். இதை வெயிலில் நன்றாகக் காய வைத்து எடுக்கவும்.
தேவைப்படும் போது கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் காய வைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை போட்டு பொரித்து மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து வைத்து பரிமாறவும்.
லேசான இனிப்பு காரத்துடன் அட்டகாசமாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
ஆல்வள்ளி சிப்ஸ்
தேவையானவை: ஆல்வள்ளிக்கிழங்கு - 2, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, மிள காய்த்தூள் -அரை டீஸ்பூன்.
செய்முறை: ஆல்வள்ளிக்கிழங்கு வறு வல் சீவும் கட்டையில் சீவி வெயிலில் காய வைத்து எடுக்கவும். எண்ணெயை காய வைத்து வறுவலைப் போட்டு பொரித்து உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.அரிதாகக் கிடைக்கக்கூடியது ஆல்வள்ளிக்கிழங்கு. கிடைக்கும்போதே வாங்கி வறுவலாக செய்து வைத்துக் கொள்ளலாம்.
--------------------------------------------------------------------------------
சேனை சிப்ஸ்
தேவையானவை: சேனைக்கிழங்கு - கால் கிலோ, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: சேனைக்கிழங்கின் தோல் நீக்கி, வறுவல் கட்டையில் சீவவும். இதில் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீரில் 10 நிமிடம் போடவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு அரை மணி நேரம் வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
எண்ணெயில் போட்டு பொரித்து மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
கொதிக்கும் தண்ணீரில் போட்டு காய வைப்பதால் சேனை அரிக்காமல் இருக்காமல், வித்தியாசமான சுவையாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
வாழைக்காய் மசால் சிப்ஸ்
தேவையானவை: பூவன் வாழைக்காய் - 6, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயை தோல் சீவி வறுவல் கட்டையில் சீவி, ஒரு மணி நேரம் வெயிலில் காய வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சீவிய வாழைக்காய் துண்டுகளைப் போட்டு வறுத்து மசாலாத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கவும். மசாலாத்தூள் சேர்ப்பதால் வாசனையாக இருக்கும் இந்த வாழைக்காய் சிப்ஸ்!
--------------------------------------------------------------------------------
ஃபிங்கர் சிப்ஸ்
தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, உப்பு - தேவையான அளவு, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: உருளைக்கிழங்கை நீள வாக்கில் நறுக்கி உப்பு சேர்த்து பிசிறி வெயி லில் காய வைத்து எடுக்கவும். இதை எண்ணெயில் வறுத்து, மிளகுத்தூள் கலந்து பரிமாறவும்.
மாலையில் டீ காபி யுடன் இந்த சிப்ஸை சாப்பிட அருமையாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
தாமரைக்கிழங்கு சிப்ஸ்
தேவையானவை: தாமரைக்கிழங்கு வற்றல் - ஒரு கப், (வெண்டைக்காய் துண்டுகள் போல இருக்கும். வத்தல், வடகம் விற்கும் கடைகளிலும் கிடைக்கும்.), தயிர் - ஒரு கப், உப்பு - சிறிதளவு.
செய்முறை: தாமரைக்கிழங்கு வற்றலுடன் தயிர், உப்பு சேர்த்து ஊற வைக்கவும். இதை வெயிலில் நன்றாக காய வைத்து எடுக்கவும்.
--------------------------------------------------------------------------------
கோவைக்காய் சிப்ஸ்
தேவையானவை: கோவைக்காய் - கால் கிலோ, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தயிர் - 4 டீஸ்பூன்.
செய்முறை: கோவைக்காயை மெல்லிய துண்டு களாக நறுக்கி மிளகாய்த்தூள், தயிர், உப்பு சேர்த்து கலந்து வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
கோவைக்காயை சமையலில் சேர்க்காதவர்களும், இந்த சிப்ஸை விரும்பி சாப்பிடுவர்.
--------------------------------------------------------------------------------
பாகற்காய் சிப்ஸ்
தேவையானவை: பாகற்காய் - கால் கிலோ, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கெட்டியான புளி கரைசல் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாகற்காயை புளித்தண்ணீர் விட்டு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறி 4 நாள் வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிப்ஸ் இது.
--------------------------------------------------------------------------------
நேந்திரங்காய் இனிப்பு சிப்ஸ்
தேவையானவை: நேந்திரங்காய் - 1, சர்க்கரை - ஒரு கப், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: நேந்திரங்காயை கனமான துண்டுகளாக நறுக்கி வெயிலில் காய வைத்து எடுக்கவும். இரண்டு நாட்கள் கழித்து பயன்படுத்தவும்.
சர்க்கரையை கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும். எண்ணெயில் காய்ந்த நேந்திரங்காயை போட்டு பொரித்து சர்க்கரைப் பாகில் போட்டு எடுத்து பரிமாறவும். வெல்லப்பாகிலும் செய்யலாம்.
--------------------------------------------------------------------------------
சாத வடகம்
தேவையானவை: சாதம் - 2 கப், சாம்பார் வெங்காயம் - 10, காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு, பூண்டுப் பல் - 4.
செய்முறை: சாம்பார் வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். பூண்டுப் பல்லின் தோலை உரித்து நசுக்கிக் கொள்ளவும். இதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், சாதத்தை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து பக்கோடா போல் கிள்ளி போட்டு வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
எண்ணெயில் பொரிக்கும்போதே வெங்காயம், பூண்டு சேர்ந்த கலவையால் சமையலறையே மணக்கும்.
--------------------------------------------------------------------------------
மாவடு தண்ணீர் வடகம்
தேவையானவை: ஊறிய மாவடு தண்ணீர் - ஒரு கப், ஜவ்வரிசி - ஒரு கப், பச்சை மிளகாய் பேஸ்ட் - 2 டீஸ்பூன், உப்பு சிறிதளவு.
செய்முறை: ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து சிறிது தண்ணீர் கலந்து வேக வைத்துக் கொள்ளவும். இதில் மாவடு தண்ணீரை விட்டு பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு சேர்த்து கலக்கவும்.
பிளாஸ்டிக் ஷீட்டில் ஒரு ஸ்பூனால் மாவை மெல்லியதாக விட்டு காய வைத்து எடுக்கவும். எண்ணெயில் பொரித்தால் கமகமக்கும் மாவடு வாசம்.
--------------------------------------------------------------------------------
தக்காளி வடகம்
தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், தக்காளி நான்கு, இஞ்சி - ஒரு சிறு துண்டு, பச்சை மிளகாய் - 2, உப்பு தேவையான அளவு, எலுமிச்சம்பழம் - அரை மூடி.
செய்முறை: ஜவ்வரிசியை முந்தின நாள் இரவே ஊற வைக்கவும். ஜவ்வரிசியுடன் சிறிது தண்ணீர் கலந்து வேக விடவும். வெந்ததும் தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து உப்பு சேர்த்து வெந்த ஜவ்வரிசியுடன் கலக்கவும். இதில், எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்றாகக் கலக்கி, பிளாஸ்டிக் ஷீட்டில் ஸ்பூனால் விட்டு வெயிலில் மூன்று நாள் காய வைத்து எடுக்கவும்.
--------------------------------------------------------------------------------
பூசணி அவல் வடகம்
தேவையானவை: பூசணிக்காய் கீத்து - 1, அவல் - இரண்டு கப், பச்சை மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூசணிக்காயை பொடியாக நறுக்கி, அவலுடன் சேர்க்கவும். பச்சை மிளகாய், உப்பை அரைத்து பூசணி கலவையில் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
இதை பக்கோடாவாகக் கிள்ளி போட்டு வெயிலில் காய வைத்து எடுக்கவும். மொறு மொறுப்புடன் அருமையாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
மூலிகை வடகம்
தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், வெற்றிலை - 2, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டுப்பல், பச்சை மிளகாய் - தலா 2, ஓமம் - ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை இரவே ஊற வைத்து மறுநாள் தண்ணீர் கலந்து வேக வைக்கவும். வெற்றிலை + பூண்டு இஞ்சி, ஓமம், பச்சை மிளகாய் இவற்றை அரைத்து, வெந்த ஜவ்வரிசியுடன் கலக்கவும்.
ஒரு ப்ளாஸ்டிக் ஷீட்டில் ஜவ்வரிசி கலவையை ஸ்பூனால் எடுத்து விட்டு வெயிலில் காய வைத்து எடுக்கவும். நல்ல ஜீரணத்தை கொடுக்கும் மூலிகை வடகம் இது.
--------------------------------------------------------------------------------
பூண்டு வடகம்
தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு, எலுமிச்சைசாறு - சிறிதளவு.
செய்முறை: ஜவ்வரிசியை இரவே ஊற வைத்து காலையில் தண்ணீர் விட்டு கூழைப் போல் காய்ச்சவும். பூண்டு, பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து அரைத்து நன்றாகக் கலந்து வெந்ததும் இறக்கவும். எலுமிச்சை சாறு விட்டு கலந்து ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் ஸ்பூனால் கூழை எடுத்து வட்டமாக விட்டு காய வைத்து எடுக்கவும்.
முத்து முத்தாக பார்க்கவே அசத்தலாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
புதினா வடகம்
தேவையானவை: ஜவ்வரிசி - முக்கால் கப், புதினா - ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு, எலுமிச்சம்பழம் - அரை மூடி.
செய்முறை: ஜவ்வரிசியை இரவே ஊற வைக்கவும். மறுநாள் தண்ணீர் சேர்த்து கெட்டியாக வேக விடவும். புதினா, பச்சை மிளகாயில் உப்பு சேர்த்து அரைத்து வெந்து கொண்டிருக்கும் ஜவ்வரிசியில் போட்டு கிளறி எலுமிச்சம்பழம் பிழிந்து நன்றாகக் கலக்கவும்.
பிளாஸ்டிக் ஷீட்டில் மாவை ஒரு ஸ்பூனால் எடுத்து விட்டு காய வைத்து எடுக்கவும். புதினா சுவையில் சூப்பராக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
வெங்காய வடகம்
தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், சின்ன வெங்காயம் - 20, பச்சை மிளகாய் - 4, எலுமிச்சம்பழம் - 1, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை இரவே ஊற வைத்து தண்ணீர் சேர்த்து கலந்து கெட்டியாக கிளறவும். வெங்காயத்தை தோல் உரித்து பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். இதில் எலுமிச்சம்பழத்தை பிழிந்து நன்றாக கலக்கி, கிள்ளிப் போட்டு வெயிலில் காய வைக்கவும். வெங்காய பக்கோடாவைப் போல் டேஸ்டாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
இஞ்சி வடகம்
தேவையானவை: இஞ்சி - ஒரு துண்டு, ஜவ்வரிசி, அவல் - தலா ஒரு கப், பார்லி - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, எலுமிச்சம்பழம் - அரை மூடி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியுடன் அவல், பார்லி சேர்த்து முந்தின நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறி வேகவிடவும். இஞ்சியுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து, எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து கலக்கவும்.
இதை கரண்டியால் விட்டு வெயிலில் காய வைக்கவும்.
--------------------------------------------------------------------------------
மசால் வடகம்
தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு, எலுமிச்சைசாறு - சிறிதளவு.
செய்முறை: ஜவ்வரிசியை ஊற வைத்து தண்ணீர்விட்டு கரைத்து கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சைமிளகாய், உப்பை அரைத்து விட்டு நன்றாகக் கிளறி வேகவிட்டு இறக்கவும். இதில் எலுமிச்சைசாறைப் பிழிந்து கலக்கவும்.
மாவை கிள்ளி போட்டு வெயிலில் காய வைத்து எடுக்கவும். மசாலா வாசனையுடன் நன்றாக இருக்கும்.
Post a Comment