விஷக்கடிகளுக்கு வீட்டு வைத்தியம்!
விஷக்கடிகளுக்கு வீட்டு வைத்தியம்! கி ராமம், நகரம் வித்தியாசமில்லாமல் சில ஜீவராசிகள் மனிதர்களுடன் இரண்டற கலந்து வாழ்ந்து வருகின்றன. அ...
https://pettagum.blogspot.com/2014/12/blog-post_2.html
விஷக்கடிகளுக்கு வீட்டு வைத்தியம்!
கிராமம்,
நகரம் வித்தியாசமில்லாமல் சில ஜீவராசிகள் மனிதர்களுடன் இரண்டற கலந்து
வாழ்ந்து வருகின்றன. அழையா விருந்தாளிகளாக வந்து நம் இல்லத்திலேயே
தங்கிவிடும். அவை, அவ்வப்போது கொடுக்கும் சிறுதொல்லைகளை சமாளிக்கும் எளிய
வழிமுறைகள் இதோ...
பல்லி!
பல்லி கடிப்பது அரிதான ஒன்று. அப்படி கடித்தால், அவுரி
இலை மற்றும் அதன் வேர் ஆகியவற்றை 50 கிராம் எடுத்து, 500 மில்லி தண்ணீரில்
போட்டு 100 மில்லி அளவுக்கு சுண்டும் வரை காய்ச்சி, தினமும் 25 மில்லி
வீதம் நான்கு நாட்கள் குடித்து வந்தால் விஷம் குறையும்.
பூச்சிக் கடி!
சில நேரங்களில் பெயர் தெரியாத பூச்சிகள் கடித்துவிடும்.
எந்த பூச்சி கடித்தாலும், வெதுவெதுப்பான நீரில், மக்காச்சோளமாவு, சமையல்
சோடா இரண்டையும் சேர்த்துக் கலந்து, பூச்சிக் கடித்த இடத்தில் தடவினால்...
விஷம் இறங்கும்.
அரணைக் கடி!
அரணை கடிப்பதைவிட நக்கிச் சென்றுவிடும். இதுவே விஷம்
என்பார்கள். இதற்கு சீமை அகத்தி இலையை விழுதாக அரைத்து, தேங்காய் எண்ணெயில்
குழைத்து கடிவாயில் பூசி வந்தால் விஷம் குறையும்.
தேனீ, குளவி!
தேனீ, குளவி கொட்டினால் மாங்காய் காம்பில் இருந்து
வழியும் பாலை கடிவாயில் தடவினால் விஷம் இறங்கும். அல்லது கடிவாயில்
சுண்ணாம்பு தடவினால் வீக்கம் குறைந்து விஷமும் இறங்கும்.
தேள் கடி!
20 மிளகுடன், தேங்காய் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக
மென்று தின்றுவந்தால் தேள்கடி விஷம் குறையும். அல்லது வெள்ளைப் பூண்டை
அரைத்து கடிவாயில் தடவினால் விஷம் குறையும். புளியைக் கரைத்து சிறிது
குடித்துவிட்டு, தேள் கொட்டிய இடத்தில் தடவினால் விஷம் இறங்கும். தேன்,
எலுமிச்சைச் சாறு இரண்டையும் குழைத்து கடிவாயில் தடவினாலும் விஷம்
இறங்கும்.
கம்பளிப்பூச்சி!
கம்பளிப்பூச்சியின் ரோமம் உடலில் பட்ட இடத்தில்
நல்லெண்ணெய் தடவினால் வீக்கம், அரிப்பு நீங்கும். அல்லது முருங்கை இலையை
அரைத்து பற்று போட்டாலும் அரிப்பு குறையும். வெற்றிலையை சாறு வரும்
அளவுக்கு அழுத்தி தேய்த்தாலும் அரிப்பு குறையும்.
பூரான்!
வெற்றிலைச் சாற்றில் மிளகை நான்கு மணி நேரம் ஊறவைத்து,
அதை எடுத்து காயவைத்து சாப்பிட்டு வந்தால், பூரான் கடி விஷம் குறையும்.
துளசி இலைகளைக் காயவைத்து பொடி செய்து, 5 மிளகு சேர்த்து மென்று தின்றால்
பூரான் விஷம் குறையும்.
விஷக்கடி வலி நீங்க!
கரிசலாங்கண்ணி இலையை ஆட்டுப்பாலில் அரைத்து கொடுத்தால், விஷக்கடியால் ஏற்படும் வலி குறையும்.
மேற்சொன்ன எந்த ஜந்து கடித்தாலும் நாட்டுத் தக்காளி,
மணத்தக்காளி செடிகளின் இலைகளையும் இடித்து சாறு பிழிந்து, அதில் 200 மில்லி
தினமும் குடித்து வந்தால் விஷம் குறையும். விஷ ஜந்துக்கள் எது
கடித்தாலும், உடனடியாக கடிவாயில் சுண்ணாம்பைத் தடவி, எட்டு மிளகை வாயில்
போட்டு மென்று விழுங்குவது முதல் உதவியாக இருக்கும்.
நாய், பூனை, பாம்பு!
நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகள் கடித்தால், உடனடியாக
வெங்காயம், உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து கடிபட்ட இடத்தில் தடவினால்
விஷம் குறையும். எலி கடிக்கும் இதே வைத்தியம் பலன் கொடுக்கும். இந்த முதல்
உதவியைச் செய்தபிறகு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை எடுப்பது
நல்லது. சாதாரண பாம்புகள் கடித்தால், சுண்ணாம்பை தடவி, எட்டு மிளகை வாயில்
போட்டு மென்று விழுங்குவதே போதுமானதாக இருக்கும். விஷப்பாம்புகள் என்றால்,
உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது.
Post a Comment