வாட்டர் ஹீட்டர்... ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே குளிக்கணும்!
காலையில்
எழுந்தவுடன் ஒரு குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரும் வெந்நீர் வைத்து
குளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். முன்பெல்லாம் விறகு அடுப்பு,
பாய்லர் மூலம் தண்ணீரை சூடுபடுத்திக் கொண்டிருந்தனர். பின்னர் கேஸ்
அடுப்பில் வெந்நீர் வைப்பது சுலபமாக இருந்தாலும், கேஸ் தட்டுப்பாடு, கேஸ்
விலை ஏற்றம் என சிக்கல் எழுந்தது. தீர்வாக, ஸ்விட்சைத் தட்டினால் வெந்நீர்
ரெடி என்கிற வாட்டர் ஹீட்டர் கான்செப்ட் மக்களை ஈர்த்தது. ஆனால், வாட்டர்
ஹீட்டர்களினால் ஆங்காங்கே நிகழும் மரணங்கள், மக்களுக்கு அதைப்
பயன்படுத்துவது குறித்த தயக்கத்தையும், அச்சத்தையும் தருகிறது.

''சரியான
வொயரிங் மற்றும் முறையான பராமரிப்பு தந்தால் போதும்... வாட்டர் ஹீட்டரால்
எந்தப் பிரச்னையும் இல்லை, பயப்படவும் தேவையில்லை!'' என்கிறார், சென்னையைச்
சேர்ந்த, 20 வருட அனுபவமிக்க எலெக்ட்ரீஷியன் ஜான் பிரான்சிஸ்.
''வீடு கட்டும்போதே வொயரிங் சரியா இருக்கானு பார்த்து,
வொயரிங் செய்யறப்போ எர்த் சரியா இருக்கானு செக் செய்துகிட்டா வாட்டர்
ஹீட்டர் மட்டுமில்ல... எந்த மின் சாதனத்திலும் ஷாக் பத்தின பயம்
தேவையில்லை!'' என்றவர், ஹீட்டர் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேசினார்.
''வீடு கட்டும்போதே வெயில், மழையில் இருந்து அது
பாதுகாப்பா இருக்கிறபடி பார்த்துப் பார்த்துக் கட்டுற மாதிரி, 100
சதவிகிதம் மின்சாரப் பாதுகாப்போடும் இருக்கானு சரிபார்க்க வேண்டியது
கட்டாயம். வீட்டுக்கு 'இஎல்சிபி’னு (ELCB) சொல்லக்
கூடிய சர்க்யூட் பிரேக்கரை கண்டிப்பா பொருத்தணும். அப்படிப் பொருத்தப்படுற
வீடுகளில் எந்த இடத்துல எர்த் லீக்கேஜ் ஆனாலும், மின்சாரம்
துண்டிக்கப்பட்டுடும். குறிப்பா, பாத்ரூம்ல எலெக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர்
பயன்படுத்துறப்ப, மின்கசிவால ஷாக் வந்தா... இந்த சர்க்யூட் பிரேக்கர்
மின்சாரத்தை நிறுத்திடும்.
வொயரிங் செய்யும்போது கண்டிப்பா ஃபேஸ்,
நியூட்ரல், எர்த் என்ற மூன்று வகையான வொயர்களுடன் வொயரிங் செய்வது அவசியம்.
இந்த மூன்றில் எது பழுதானாலும் அது பாதிப்பை ஏற்படுத்த வழிவகுக்கும்.
வாட்டர் ஹீட்டருக்கு சரியான வொயரிங் செய்த பிறகு, 20 ஆர்ம்ஸ் ஸ்விட்ச்களையே
பயன்படுத்தணும். வாட்டர் ஹீட்டருக்கான பிளக் பாயின்ட் பாத்ரூம்
உள்ளே இருந்தாலும், ஸ்விட்சை வெளியில்தான்
வைக்கணும். ஈரக் கையுடன் ஸ்விட்ச் போடக் கூடாது. கண்டிப்பா ஸ்விட்ச் ஆஃப்
செய்த பிறகே குளிக்கணும்'' என்றவர், ஹீட்டர் பராமரிப்பு குறித்துப்
பேசினார்.
''வாட்டர் டேங்கில் தண்ணீர் இருக்கா என்பதை சரிபார்த்த
பின் ஹீட்டரை ஆன் செய்வது அவசியம். ஒருவேளை தண்ணீர் இல்லாமல் காலியாக
இருக்கும் வாட்டர் ஹீட்டரை ஆன் செய்யும்போது, எலிமென்ட் தானாக சூடேறி
பழுதாகிடும். இதனால் ஷாக் அடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். அதேபோல்
உப்பு நீரைப் பயன்படுத்துபவர்கள் குறைந்தது ஆறு மாதத்துக்கு ஒரு முறையும்,
நல்ல நீரைப் பயன்படுத்துபவர்கள் வருடத்துக்கு ஒரு முறையும் வாட்டர் ஹீட்டரை
சர்வீஸ் செய்வது அவசியம்'' என்றார் வலியுறுத்தி.
சோலார் வாட்டர் ஹீட்டர்
மின்சாரமே
தேவை இல்லை, எலெக்ட்ரிக் ஷாக் இல்லை, கரன்ட் பில் தொல்லை இல்லை என்ற
வகையில் தற்போது பரவலாகி வருகிறது சோலார் வாட்டர் ஹீட்டர்கள். இது குறித்த
தகவல்களை தருகிறார், ராஜபாளையத்தில் உள்ள 'எஸ்எஸ்ஜி பவர்' நிறுவனத்தின்
நிர்வாக இயக்குநர் முத்துக்குமார்.
''100 சதவிகிதம் எலெக்ட்ரிக் ஷாக் ஏற்பட வாய்ப்பில்லை
என்பது, சோலார் வாட்டர் ஹீட்டரின் சிறப்பு. இதை பராமரிக்கிறதும் ரொம்ப
சுலபம். ஒரு முறை இதை மாடியில் பொருத்திட்டு, 5 வருஷத்துக்கு ஒரு முறை
சர்வீஸ் செய்தா போதும். உப்புத் தண்ணியா இருந்தா உயர் ரக ஸ்டெயின் லெஸ்
ஸ்டீல் பொருத்திய டாங்குகளை கொண்ட வாட்டர் ஹீட்டர்களை பயன்படுத்துறது
கூடுதல் ஆயுளைக் கொடுக்கும்.
'மின்சாரம் இருக்கா, இல்லையா', மின்சாரக்
கட்டணம், ஷாக்னு எந்தக் கவலையும் இல்லை. ஒரு குடும்பத்துல நாலு பேர்
இருக்காங்கனா, சராசரியா 100 லிட்டர் கொள்ளளவு உள்ள வாட்டர் ஹீட்டர்கள்
போதுமானதா இருக்கும். மழைக்காலத்தில் வெந்நீர் சற்று சூடு குறைவா வரும்.
அந்தச் சமயங்களில் தேவைப்பட்டா மின்சாரத்தில் இயங்கக்கூடிய எலிமென்ட்களை
சோலார் டாங்கில் பொருத்தியும் பயன்படுத்திக்கலாம்.
வீட்டு மாடியில் 5க்கு 5
அடி இடம் இருந்தா போதும், 13 - 15 ஆயிரம் ரூபாயில் பாதுகாப்பான வாட்டர்
ஹீட்டர்களை பொருத்தி, ஷாக்கிலிருந்தும் கரன்ட் பில்லில் இருந்தும்
தப்பிக்கலாம்!'' என்கிறார் முத்துக்குமார்!
வெந்நீர் குளியல் சுகமானதாக மட்டுமல்ல, பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டியது அவசியம்!
Post a Comment