5 சிம்பிள் சிறுதானிய ஸ்நாக்ஸ்!
5 சிம்பிள் சிறுதானிய ஸ்நாக்ஸ்! ‘ஏ தாவது நொறுக்குத் தீனி இருக்கா?’ என, தகர டின்னுக்குள் கையைவிட்டு, முறுக்கை ...

அனைவரும் விரும்பிச் சாப்பிடும் ஸ்நாக்ஸ் வகைகளை, வீட்டிலேயே, பாரம்பரியமான சிறுதானியத்தில் செய்தால், சுவையுடன் சத்தும் சேர்ந்து, உடலுக்கு நன்மை தரும். சிறுதானியத்தில் சில ஸ்நாக்ஸ் வகைகளைச் செய்துகாட்டுகிறார், அருந்தானிய உணவகத்தின் செஃப் புஷ்பா. அவற்றின் பலன்களைக் கூறுகிறார், அரசு சித்த மருத்துவர் க.அன்பரசு.
செய்முறை: சோளத்தை அரைத்து மாவாக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன், தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்த் தூள், சீரகத் தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு, நல்ல பதமாகப் பிசைய வேண்டும். பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, ஒரு வெள்ளைத் துணியில் பிழிந்து, வெயிலில் காயவைத்து, பிறகு எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்க வேண்டும். அருமையான சோள முறுக்கு தயார்!
பலன்கள்: சோளத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், ரத்தசோகை இருப்பவர்களுக்கு நல்லது. பீட்டாகரோட்டின் இருப்பதால், கண்ணுக்கு நல்லது. சிறுநீரைப் பெருக்கும். உடலுக்கும் ஆரோக்கியத்தைத் தரும். மூலநோய் இருப்பவர்கள் தவிர்க்கவும்.
செய்முறை: கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ள வேண்டும். இதில் உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, கெட்டிப் பதத்தில் பிசைய வேண்டும். மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதனுடன், பொட்டுக்கடலை, வேர்க்கடலை பொரித்த அவல் சேர்த்தால், சுவையான கேழ்வரகு மிக்ஸர் ரெடி!
பலன்கள்: கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயாமின், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளன. தோல் அலர்ஜியை நீக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். உடலுக்கு வலிமையைத் தரும்.
செய்முறை: வரகு அரிசியை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவுடன், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து, நன்றாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு, இந்த சேவு போடும் சிறிய அளவிலான ஓட்டை உள்ள அச்சில் போட்டு, எண்ணெயில் பிழிய வேண்டும். பொன் நிறமாக வந்தவுடன் எடுத்துவிட வேண்டும். காரம் தேவைப்படுவோர், எண்ணெயில் இருந்து சேவை எடுத்தவுடன், அதில் மசாலாவைத் தூவிக்கொள்ளலாம்.
பலன்கள்: அரிசி, கோதுமையைவிட வரகில் நார்ச்சத்து அதிகம். மாவுச்சத்தும் குறைவு. புரதச்சத்து, இரும்பு, கால்சியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள், பி வைட்டமின் இதில் இருப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும்.
செய்முறை: மிதமான சூட்டில் தினையை லேசாக வறுத்து அரைக்க வேண்டும். பனை வெல்லத்தைப் பாகு காய்ச்சி, அரைத்த மாவில் ஊற்றிப் பாசிப்பருப்பு மாவு சேர்த்துப் பிசைய வேண்டும். இதில் தேனை கலந்தும் நன்றாகப் பிசையவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரி, திராட்சையைப் போட்டு வறுக்கவும். இந்த வறுவலை, பிசைந்த மாவுடன் சேர்த்து, நன்றாகப் பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையான தினை லட்டு ரெடி.
பலன்கள்: உடலுக்கு வலிமையைத் தரும். வாயுத் தொந்தரவை நீக்கும். தாய்மார்கள் சாப்பிட்டுவந்தால், உடல் சோர்வு நீங்கும்.
செய்முறை: கம்பில் தண்ணீர் ஊற்றி, கெட்டியாக மாவு போல் அரைத்துக்கொள்ளவும். அரைக்கும்போது தேங்காய் சேர்க்கவும். அரைத்த மாவில், சின்ன வெங்காயம், சீரகத் தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கிக்கொள்ளவும். பிறகு, அரைத்த மாவை சிறு உருண்டையாகப் பிடித்து, கையில் வைத்து வடை அளவுக்குத் தட்டி, காயும் எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக வந்தவுடன் எடுக்கவும்.
பலன்கள்: வயிறு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும். அஜீரணக் கோளாறைச் சரிசெய்யும். உடல் சூட்டைத் தணிக்கும். இதயத்தை வலுவாக்கி, நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி தரும்.
Post a Comment