மோடி பலூனை ஊதுவது யார்? இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!!

மோடி பலூனை ஊதுவது யார்? த லைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா, மோடி தயார்! இந்தியா தயாரா? இப்...

மோடி பலூனை ஊதுவது யார்?


லைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா, மோடி தயார்! இந்தியா தயாரா? இப்படி ஊதிப் பெருக்கப்படும் மோடி பலூனுக்குக் காற்று கொடுப்பவர்கள் யார்? இந்தியத் தொழில் துறை மோடியைத் தூக்கிவைத்துக் கொண்டாடக் காரணம் என்ன?
 
ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கும் அந்த உண்மையைத் தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அலுவலகம் (CAG) வீதிக்குக் கொண்டுவந்து இருக்கிறது.
 

லஞ்சம், ஊழல் மற்றும் விதிமீறல் காரணங்களால் 2009 - 2011 இரு நிதியாண்டுகளில் மட்டும் ரூ. 17 ஆயிரம் கோடி குஜராத் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்கிறது தலைமைத் தணிக்கைக் கணக்காயரின் அறிக்கை. 
அரசின் இந்த இழப்புகளைப் பெரும் பகுதி ஏப்பம் விட்டு செரித்திருப்பவை பெருநிறுவனங்கள். குஜராத் மாநில பெட்ரோநெட் நிறுவனத்துக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் இடையேயான எரிவாயு உடன்படிக்கையில் செய்யப்பட்ட விதிமீறல்களால் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 52.27 கோடி பலன் அடைந்துள்ளது. 
இதேபோல, மாநில அரசின் குஜராத் யுர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனம், அதானி பவர் நிறுவனத்துடன் செய்துகொண்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட திமீறல்களால், அதானி நிறுவனம் ரூ.160.26 கோடி பலன் அடைந்துள்ளது. 
சூரத்தில் எஸ்ஸார் உருக்கு நிறுவனம் ஆக்கிரமித்திருந்த 7.24 லட்சம் சதுர மீட்டர் நிலத்தை சதுர மீட்டர் ரூ. 700 என்கிற மட்டி விலைக்கு எஸ்ஸார் நிறுவனத்துக்கே உரித்தாக்கி இருக்கிறது மோடி அரசு. 
இதேபோல், ஃபோர்டு இந்தியா, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்களுக்கு அரசு நிலத்தைக் கொடுத்ததிலும் விதிமீறல்கள் நடந்திருக்கின்றன என்கிறது அந்த அறிக்கை.
 

ஒரு மாநில அரசு மீது ரூ. 17 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு குற்றஞ்சாட்டப்படுவது பெரிய செய்தி. அதுவும் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்றும் தலைசிறந்த நிர்வாகி என்றும் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் ஒருவர் மீதான நாட்டின் உயர்ந்த தணிக்கை அமைப்பின் இந்தக் குற்றச்சாட்டு பெரிய அளவில் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேசிய ஊடகங்கள் இந்தச் செய்தியை இரு பத்திகளுக்குள் அடக்கம் செய்தன.
 

மோடி அரசு மீதான குற்றச்சாட்டுகள் புதிதல்ல. அதானி குழுமத்துடன் மோடி அரசுக்குள்ள தொடர்புகள் தொடர்ந்து விவாதத்தில் இருக்கின்றன. கடந்த ஆண்டு இறுதியில் அரவிந்த் கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய குஜராத் மாநில பெட்ரோலிய நிறுவனம் - ஜியோ குளோபல் நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் கிட்டத்தட்ட இரண்டாம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஞாபகப்படுத்தக் கூடியவை (ஒப்பந்தத்தின்போது வெறும் 64 டாலர் - அன்றைய மதிப்பில் ரூ. 3200 சொத்து மதிப்பைக் கொண்ட ஜியோ குளோபல் நிறுவனம் பின்னர் 10 ஆயிரம் கோடி நிறுவனமானதை அம்பலப்படுத்தினார் கேஜ்ரிவால்). ஆனால், ராபர்ட் வதேராவின் முறைகேடுகளைப் புரட்டி எடுத்த ஊடகங்கள் மோடியின் செய்தியை அன்றோடு அடக்கம் செய்தன.
 

நான் வளர்ச்சியின் பிரதிநிதி என்கிறார் மோடி. ஆனால், எது வளர்ச்சி என்பதற்கு நம்மிடம் சரியான வரையறைகள் இல்லை. குஜராத் அரசு சமூகத் துறைகளில் ஒழுங்காகச் செயல்படவில்லை என்பது தொடர்ந்து அவ்வப்போது வெவ்வேறு புள்ளிவிவரங்கள் வாயிலாக வெளிவந்துகொண்டிருக்கும் ஓர் உண்மை. 
2011-ல் வெளியான மத்தியத் திட்டக் குழு அறிக்கை குஜராத் மாநிலத்தில் நிலவும் வறுமையை வெளிக்கொண்டுவந்தது - மாநிலத்தில் 44.6 சதவிகிதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்கள். 2012-ல் வெளியான தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அறிக்கை தண்ணீர் விஷயத்தில் அரசு காட்டும் அலட்சியத்தைப் பட்டியலிட்டது. “குடிநீர்க் கொள்கை சரியாக வரையறுக்கப்படவில்லை. தேசிய நதி நீர்ப் பாதுகாப்புத் திட்டம், எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆற்றுநீர் மாசுபடுவது சம்பந்தமாக அரசு அக்கறை காட்டவில்லை. சபர்மதி ஆற்று நீரைத் தூய்மைப்படுத்தும் திட்டமும் முறையாகக் கண்காணிக்கப்படவில்லை” என்று கடந்த ஆண்டு அறிக்கை சொன்னது. குஜராத்தில் நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 6 மீட்டர் கீழே செல்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் 30 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைத்த இடங்களில், இப்போது தண்ணீருக்கு 152 மீட்டருக்கும் கீழே செல்ல வேண்டியிருக்கிறது. அரசு இந்தப் பிரச்சினையில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் சூழலியலாளர்கள். முந்தைய அரசுகளைப் போலவே இந்தப் பிரச்சினையை மோடி அரசும் அலட்சியப்படுத்துகிறது.
 

குஜராத் மக்கள்தொகையில் 10 சதவிகிதம் வகிக்கும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக்கூட கடந்த தேர்தலில் மோடி நிறுத்தவில்லை என்பது இந்தக் கட்டுரைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கலாம். ஆனால், நகர்ப்புற முஸ்லிம்கள் ஏழைகளாக உலவும் 4 மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று என்பது இந்தக் கட்டுரையோடு தொடர்புடையது. மோடி தன்னுடைய வளர்ச்சியின் அடையாளமாகக் கொண்டாடிய சனாந்த் தொகுதியில் (டாடா நானோ ஆலை அமைக்கப்பட்ட இடம்) பாஜக தோற்றது இந்தக் கட்டுரையோடு தொடர்புடையது.
 

குஜராத்தை வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பேசும் பலரும் தட்டாமல் குறிப்பிடுவது குஜராத்தின் எரிசக்தித் துறை வளர்ச்சி. உண்மையில், மோடி அரசின் பல முறைகேடுகள் குடிகொண்டிருக்கும் துறை இது. மின்சார உற்பத்தியில் குஜராத் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று குரல் கொடுப்போர் பலர் பேசாத ஒரு விஷயம், குஜராத்தின் மொத்த மின் உற்பத்தித் திறனான 16,945 மெகா வாட்டில் தனியார் பங்களிப்பு மட்டும் 6,864 மெகாவாட் என்பது. அதாவது, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு தனியாருடையது. தவிர, நாட்டிலேயே மின்சாரத்தை அதிக விலைக்கு விற்கும் மாநிலங்களில் ஒன்று குஜராத். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கான குறைந்தபட்ச தேவை 50 யூனிட். குஜராத்தில் வறுமைக்கோட்டுக் கீழ் வாழும் ஒரு குடும்பமே இந்த மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.95 கொடுக்க வேண்டும். தமிழகத்துடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட மூன்று மடங்கு இது (தமிழகத்தில் ஒரு யூனிட் ரூ. 1.10) . நாட்டிலேயே சூரிய மின் சக்தியை முன்னெடுப்பதிலும் குஜராத் முன்னணியில் இருக்கிறது. ஆனால், வால்மார்ட்டும் மான்சாண்டோவும் அந்தச் சூரிய மின் சக்தி உபகரணங்களின் பின்னணியில் இருக்கின்றன; சூழலுக்குப் பெரும் நஞ்சான கேட்மியம் டெலுராய்டைக் காற்றிலும் நிலத்திலும் நீரிலும் எதிர் காலத்தில் குஜராத் சுமக்க இந்தத் திட்டம் வழிவகுக்கும் என்கிறார் மின்சாரம் தொடர்பாகத் தொடர்ந்து பேசி வரும் சமூகச் செயல்பாட்டாளர் காந்தி. குஜராத் தொடர்பாக ஊதப்படும் ஒவ்வொரு துறையின் வளர்ச்சியின் பின்னணியிலும் இப்படி சங்கடப்படுத்தும் உண்மைகள் உண்டு. எப்படி ஏனைய இந்திய மாநிலங்களின் வளர்ச்சிக் கதைகளுக்குப் பின்னணியிலும் சங்கடப்படுத்தும் உண்மைகள் உண்டோ அப்படி. ஆனால், குஜராத்தில் மட்டும் இந்தச் சங்கதிகள் ஒரு நாள் செய்தியோடு அடக்கமாகிவிடுகின்றன. ஏன்?
 

நம்முடைய முதலாளிகளுக்கு இன்று மோடி தேவைப்படுகிறார். மன்மோகன் சிங் அரசு பன்னாட்டு நிறுவனங்களின் கையாள் என்று நாம் குற்றஞ்சாட்டுகிறோம், ஆனால், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் மன்மோகன் சிங் போதுமானவராக இல்லை அல்லது அவருடைய தேவைக்கான காலம் முடிந்துவிட்டது. இப்போது அவர்களுடைய தேவை இன்னும் துரிதமாகவும் துணிச்சலாகவும் சுதந்திரமாகச் செயல்படும் ஒருவர்தான். முக்கியமாக, இந்தியாவில் முதலீடு செய்ய சட்டரீதியாக மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் சின்னச் சின்ன நடைமுறைகளைக்கூட உடைத்து எறியவும் இந்திய வனங்களில் புகுந்து சூறையாட ஏதுவாக அங்குள்ள எதிர்ப்புகளை வேர் அறுக்கவும் ஓர் ஆள் தேவைப்படுகிறார். இந்தியாவில் செம்மையான செயல்பாட்டுக்கு கார்ப்பரேட் துறைதான் முன்னோடி என்பதை வெளிப்படையாகச் சொல்லும் மோடி அதற்குச் சரியான தேர்வாக இருப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். குஜராத்தில் ஒரு நிறுவனம் நினைத்தவுடன் தொழில் தொடங்குவதற்கான எல்லாச் சாத்தியங்களையும் ஓடியாடிச் செய்யும் மோடி அதற்குப் பொருத்தமானவர் என்று அவர்களும் நம்புகிறார்கள். மத்திய அரசு இப்போது முன்மொழிந்திருக்கும் தேசிய முதலீட்டு வாரியத்துக்கு முன்னோடி மோடியின் குஜராத் பாணிதான். உங்கள் ஊரில், ரூ. 1000 கோடிக்கு மேல் ஒரு தொழிலை ஆரம்பிப்பது என்று ஒரு பன்னாட்டு நிறுவனம் முடிவெடுத்துவிட்டால் போதும். உள்ளூர் மக்கள் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு எதைப் பற்றியும் அந்நிறுவனம் கவலைப்பட வேண்டியது இல்லை. தேசிய முதலீட்டு வாரியத்தின் அனுமதி மட்டும் அதற்குப் போதும். யாரும் அந்த நிறுவனத்தைக் கேள்வி கேட்க முடியாது . . . உள்ளூர் மக்களில் தொடங்கி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் வரை எவரும் கேள்வி கேட்க முடியாது. இப்படி ஓர் அணுகுமுறையைத்தான் அரசிடமிருந்து எல்லா விஷயங்களிலும் முதலாளிகள் எதிர்பார்க்கிறார்கள். காங்கிரஸ் அதைச் செய்கிறது. ஆனால், தாமதமாகச் செய்கிறது. யோசித்து இழுத்தடித்துச் செய்கிறது. முதலாளிகள் துணிச்சலான துரித சேவையை விரும்புகிறார்கள். காங்கிரஸுக்குக் காலம் கடந்து கொண்டிருக்கிறது.
 
இந்தக் கட்டுரையை எழுதும் நாளில் குஜராத்தின் கப்ரதா பகுதி கிராம மக்கள் அதிகாலை 3.30 மணிக்கே எழுந்து 5 கி.மீ. தூரம் நடந்து வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள் - இரு குடங்கள் குடிநீருக்காக. “கப்ரதா பகுதியில் உள்ள முப்பது சொச்ச கிராம மக்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. எவ்வளவோ பேசிப் பார்த்தாயிற்று அரசாங்கத்திடம்; ஒன்றும் நடக்கவில்லை’’ என்கிறார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான ஜிட்டு சௌத்ரி. மக்கள் தண்ணீருக்காகக் கிடையாய்க் கிடக்கிறார்கள். அவர்கள் கிடக்கட்டும்! முதலாளிகள் முடிவெடுத்துவிட்டார்கள். மோடிக்காகக் காத்திருக்கிறது இந்தியா!

Related

இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! 795826569583148895

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item