காலத்தே செய்! நேரம் பொன்னானது, பொன் கொடுத்தாலும் நேரம் வராது --- பெட்டகம் சிந்தனை,
விடாது ஓடும் கடிகார முட்கள். 1, 2, 3 என்று தினம் தினம் காலையில் கிழிக்கப்படும் நாட்காட்டியின் தாள்கள்… மார்ச், ஏப்ரல், மே என்று சு...

விடாது ஓடும் கடிகார முட்கள்.
1, 2, 3 என்று தினம் தினம் காலையில் கிழிக்கப்படும் நாட்காட்டியின் தாள்கள்…
மார்ச், ஏப்ரல், மே என்று சுருட்டப்படும் மாத நாட்காட்டிகள்…
காற்றில் கரையும் கற்பூரமாய் நேரம் தானாகக் கரைந்து நம் கண் முன்பாகவே காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. 2007, 2008, 2009, 2010 அடுத்தது, அடுத்தது என்று எத்தனை புத்தாண்டுகள் நம்மை விட்டு உருண்டோடிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில் வருடங்களைக் கூட்டுவது முக்கியமல்ல.
வருடங்களுக்கு உயிர் கொடுப்பது தானே முக்கியம்… கொஞ்சம் திருப்பிப் பார்க்கையில் ஆச்சரியமாய் இருக்கின்றது. கூடவே அச்சமாகவும் இருக்கின்றது. நேரம் செலுத்தப்பட்ட அம்பைப் போன்றது. அது திரும்ப வராது என்பார்கள். உண்மைதான் நேரம் பணத்தைவிட உயர்ந்தது. ஆம் அந்தப் பணத்தையே நேரம்தானே சம்பாதித்தும் தருகிறது. இன்னும் ஒரு நிமிடம் தாமதமாயிருந்தால் இந்தக் குழந்தையை காப்பாற்றி இருக்க முடியாது டாக்டர் சொல்வார். உயிரைப் போல அந்த ஒரு நிமிடம் அவ்வளவு அருமையானது. ஒரு மணிக்கு 60 நிமிடங்கள், ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இது உலகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானது.
அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் வெற்றியின் ரகசியம் மறைந்திருக்கிறது. நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவது என்பது அட்டவணையால் சாத்தியமில்லை. எப்போது நாம் உள்ளுணர்வுடன் செயல்களைச் செய்கிறோமோ அப்போது தேவையற்ற செயல்கள் நம்மிடமிருந்து தானாக உதிர்ந்து விடுகின்றன. உள்ளுணர்வுடன் செயற்படுவோமானால் ஒரு மணி நேரத்தில் செய்கிற செயல் அரை மணி நேரத்தில் முடிந்துவிடும்.
ஒரு மனிதனின் ஆயுளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் கழிந்துவிடுகிறது. பத்தில் ஒரு பங்கு உண்பதிலும், மற்றொரு பங்கு கழிவறையிலும் கழிந்து விடுகிறது. இன்னொரு பங்கு நேரம் உறவினர் மற்றும் நண்பர்களிடம் அரட்டை அடிப்பதிலும் பொழுது போக்குவதிலும் காணாமல் போகிறது.
இப்படி எழுபது சதவீதம் கைவிட்டுப் போக மிச்சமிருப்பது முப்பது சதவீதம். இதில் தான் வேலை பார்த்ததாக வேண்டும். கனவுகளை நனவாக்க வேண்டும். அதைத்தாண்டிப் புதிய பல சாதனைகளை நிகழ்த்தியாக வேண்டும். இதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு இலக்கைத் தீர்மானித்துச் செயற்படுத்தும் போது எந்தச் செயலும் வெற்றியில்தான் முடியும்.
வாழ்க்கையில் வெற்றிபெற எல்லா வசதிகளும் இருந்தும் பலர் வெற்றி பெற முடியாமல் போவதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான் ‘காலத்தே செய்’ என்று கேள்விப்பட்டிருக்கிறோமே அதுதான் காலத்தில் மதிப்புமிக்கது இளமைக்காலம் பல இளைஞர்களின் கண் போன போக்கில் கால்கள் போய்க்கொண்டிருக்கின்றன. களியாட்டங்களில் ஈடுபட்டுக் காலத்தைக் காலமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். ‘அன்பான இளைஞனே இப்படி இருக்கலாமா?’ என்று கேட்டால்… ‘நீங்கள்தானே சொன்னீர்கள் காலத்தே செய் என்று இப்போது எங்களின் காலம்.
இப்போது செய்யாமல் வயதான பிறகா செய்ய முடியும் என்று தத்துவார்த்தமாய் பதில் சொல்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான அர்த்தத்தை சாதுரியமாக எடுத்துக்கொள்கிறார்கள். ‘காலத்தே செய் என்பதற்கு அது அர்த்தமல்ல. எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அதாவது காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பார்களே அதுதான் பொருள்.
இழந்த பணத்தை இரட்டிப்பாகச் சாம்பாதிக்கலாம். ஆனால் இழந்த காலத்தை ஒருபோதும் திரும்பச் சாம்பாதிக்க முடியாது. அதிலும் இளமைக் காலம் மதிப்பிலும் மதிப்புமிக்கது. இந்தக் காலத்தைச் சிலர் வெட்டுக் கிளியாக வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் மட்டுமே தேனியாக இருந்து தேனாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இது என்ன வெட்டுக்கிளி. தேனீ. புதிராக இருக்கிறது என்கிறீர்களா?… இதோ ஒரு நிகழ்வு பூச்செடிகள் நிறைந்திருக்கின்ற பூச்சோலை பூத்திருக்கிற பூக்களில் தேன் எடுப்பதற்காகப் பறந்து வந்தது ஒரு தேனீ. அங்கே ஏற்கனவே ஒரு வெட்டுக்கிளி அந்தச் செடியின் இலைகளைக் கத்தரித்து விழுங்கிக்கொண்டிருந்தது. அப்போது அந்த வெட்டுக்கிளி தேனீயிடம் சொன்னது. ‘இந்தச் செடியால் நாம் இருவரும் பயன்பெறுகிறோம். இவை இல்லாமல் இருந்தால் நாமிருவருமே செத்துப் போய்விடுவோம் என்றது.
தேனீ அதற்குப் பதில் சொன்னது உண்மைதான். ஆனால் நீ இந்தச் செடியைச் சுரண்டுகிறாய், நானோ இந்தச் செடியை மகரந்தச் சேர்க்கையால் செழிக்கச் செய்கிறேன். இது பூத்துக்காய்த்து வளம் கொழிக்க எனது இறகு என்னும் சிறகுகளால் விசிறி வீசுகிறேன். என் நாக்குகளால் வேறொரு பூவின் மகரந்தத்தை அட்சதையாகத் தூவுகிறேன் என்றது.
வெட்டுக்கிளியும் தேனீயும் கற்றுத் தருகிற வாழ்க்கைப் பாடம் ஒன்று உண்டு. நேரச் செடியின் கிளைகளில் சிலர் வெட்டுக் கிளியாக இருக்கின்றார்கள். ஆம் இவர்கள் நேரத்தை அழிக்கின்றார்கள். சிலர் தேனீக்களாக இருக்கின்றார்கள். இவர்கள் நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்கித் தேனைப் பருகுகின்றார்கள்.
இளமையிலிருந்தே நேரத்தைப் புத்திசாலித்தனமாகப் புரிந்து பயன்படுத்துபவர்களுக்கு செழுமையான எதிர்கால வாழ்க்கை பரிசாகக் கிடைக்கும். நேற்று என்ன நடந்தது. இன்றைக்கு என்ன நடக்கப் போகிறதோ நாளை என்ன நடக்குமோ? என்பதை விட வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த நிமிடம்தான் நிஜமானது.
நேரத்தின் அருமை நமக்குத் தெரிய வேண்டுமானால் வாழ்க்கையில் சிலரைச் சந்திக்க வேண்டும்; ஓர் ஆண்டின் அருமையை உணர வேண்டுமானால், 5 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றதால் பரீட்சையில் தோல்வியுற்ற ஒரு மாணவனைச் சந்திக்க வேண்டும். அவன் கத்துவான், கதறுவான் ஒரு சிறு கவனக் குறைவால் மீண்டும் படித்த பாடங்களையே ஆண்டு முழுக்கப் படிப்பது எவ்வளவு பெரிய கசப்பு என்று! ஒரு மாதத்தின் அருமையை உணர வேண்டுமானால் குறைப் பிரசவமாகக் குழந்தை பெற்ற தாய்மார்களைக் கேட்க வேண்டும். குறைப் பிரசவக் குழந்தைகளைத்தான் காப்பாற்றுவதில் எவ்வளவு இடர்பாடுகள்!
ஓரிரு மாதங்கள் தள்ளிப் பிறந்திருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்.
ஒரு வாரத்தின் அருமையை உணர வாரப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைக் கேட்க வேண்டும்.
ஒரு நாளில் அருமையை உணரத் தினக் கூலிகள், அன்றாடங் காய்ச்சிகள், சாலையோர நடைபாதைக் கடைக்காரர்கள், தள்ளு வண்டி வியாபாரிகளைக் கேட்க வேண்டும். வேலை நிறுத்தம் என்கிற பெயரால் தேவையில்லாமல் கதவை இழுத்துச் சாத்துகிற பலர் இருக்கின்றார்கள். அனைத்தும் செயற்படாமல் போகின்றபோது கூடவே வருமானமும் போய்விடுகிறது.
வியாபாரத்தை வைத்தும் அன்றன்று கிடைக்கிற கூலியை வைத்தும் பிழைக்கிறவர்கள். வேலை நாட்களில் வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொள்ள வேண்டியது தான். இவர்களைக் கேளுங்கள். ஒரு நாளின் அருமையைப் பற்றி விலாவாரியாகச் சொல்வார்கள்.
ஒரு மணி நேரத்தின் அருமையை உணர வேண்டுமா? மருத்துவரைக் கேளுங்கள்.
ஒரு மணி நேரம் முந்திக்கொண்டு வந்திருந்தால் இந்த உயிரை நான் காப்பாற்றியிருப்பேன் என்று விபத்தில் சிக்கியவர்களை விபத்து நடந்த நேரம் முதல் மருத்துவர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் வரை இருக்கிற நேரத்தை ஆங்கிலத்தில் என்று அழைக்கும் வழக்கு மருத்துவ உலகில் உண்டு. இந்தத் தங்க நேரத்துக்குள் அடிபட்டவரைக் கொண்டுபோய்ச் சேர்க்க முடியாமல் போனதால் எத்தனையோ பேர் தங்களது இன்னுயிரை இழந்துவிட்டார்கள். பத்து நிமிடத்தின் அருமையைக் காதலிக்கிறார்கள் அல்லவா, அவர்களைக் கேட்க வேண்டும்.
இவள் பேரூந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருப்பாள், அவனோ நேரத்துக்கு வரமாட்டான். பார்க்கிறவர்கள் அவளை ஏற இறங்கப் பார்ப்பார்கள். இது ஏன் பஸ்ஸிலேயும், ஏறாமல் வீட்டுக்கும் போகாமல் இங்கேயே நிக்குது’ என்று யோசிப்பார்கள். அந்தக் கணங்கள் இவளுக்கு ரணங்களாக இருக்கும். இந்த உண்மையை மற்றவர்களால் உணர முடியாது. காதலிக்கிறவர்களுக்குத்தான் பத்து நிமிடத்தின் அருமை தெரியும்.
ஒரு நிமிடத்தின் அருமையை உணர, புகையிரதத்தைக் கோட்டைவிட்டார்கள் அல்லவா அவர்களைக் கேளுங்கள். இப்பதான் வந்தேன். அதற்குள் அது புறப்பட்டுவிட்டது என்பார்கள் பரிதாபமாக. ரயிலின் கடைசிப் பெட்டியைப் பார்த்து பரிதாபமாக ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள்.
ஒரு விநாடியின் அருமையை உணர வேண்டுமானால் சாலையில் விபத்தைச் சந்தித்தவர்களைக் கேட்க வேண்டும். இப்படித் திரும்பிப் பார்ப்பதற்குள் என்னை அடிச்சுத் தூக்கிட்டான் என்பார்கள்.
சிலர் இதைச் சொல்வதற்குக் கூட இருக்கமாட்டார்கள் போய்ச் சேர்ந்து விடுவார்கள்!
மில்லி செக்கன் என்று ஒரு அளவு உண்டு. பலருக்கு இதைப் பற்றித் தெரியாது.
இதைப் பற்றியெல்லாம் கவலைப்படும் நிலைமையிலும் இவர்கள் இல்லை. அண்மையில் ஆசியத் தடகளத்தில் ஜோதிர்மாயி தங்கம் வென்றது விநாடி இடைவெளிகளில் இல்லை. விநாடியில் நூறில் சில பங்குகளில் தான். பி. டி. உசா நாலாவது ஓடி வந்ததும் விநாடி இடைவெளிகளில் இல்லை. விநாடியில் நூறில் சில பங்குகளில்தான்.
எண்ணிப் பாருங்கள் 4 ஆண்டுகள் பயிற்சி செய்து இப்படிச் சுண்டுகிற நேரத்தின் ஒரு பகுதியில் தங்கப் பதக்கத்தை இழந்தால் அவர்களது மனநிலை எப்படி இருக்கும். என்ன இப்படி உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகிறேன் என்று பார்க்கிறீர்களா? இன்னும் இருக்கிறது. அதுதான் மைக்ரோ செக்கன். இந்தக் குறைந்த நேரத்தில் அமெரிக்காவில் இருக்கிற ஒரு சூப்பர் கம்பியூட்டர். ஒரு கோடியே 60 இலட்சம் கணக்குகளைக் கணித்து முடித்துவிடுகிறது.
இப்போது எங்கு பார்த்தாலும் ‘நனோ’ என்ற சொல் பிரபலமடைந்து வருகிறது. அதேபோல நனோ செக்கனிலான கணிப்புகளும் பிரபலமடைந்து வருகின்றன.
இனிமேல் எந்த ஒரு நேர அளவீட்டையும் இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க நாம் கற்றுக்கொண்டுவிட்டால் நம்மை மிஞ்ச வேறு யாரும் கிடையாது.
ஆங்கிலக் கவிஞர் லாங்பெலோ… ‘கடந்து போன காலத்துக்காக வருந்திப் புலம்பாதீர்கள். அது மீண்டும் வருவதில்லை. கையில் இருப்பது இன்றைய பொழுது! அச்சமின்றி துணிவோடு அணுகுங்கள் எதிர்காலத்தை’ என்பார்.
காலையில் கண் விழித்து எழும்போது உங்கள் கைகளில் புதிதான 24 மணி நேரம் கிடைக்கிறது. அதை விரயமாக்கி விடாமல் கவனமாகப் பயன்படுத்துங்கள். நீங்கள் ஆசைப்பட்டு செய்யும் செயலுக்கு அதிக நேரத்தை ஒதுக்குங்கள். அது உங்களை மேலே உயர்த்தும்.
Post a Comment