நலம் ! நலமறிய நாவல் கருஊதா நிறத்தில், கண்களைக் கவரும் நாவல் பழம், துவர்ப்பும் இனிப்புமாக நாவுக்குச் சுவையை அள்ளித்த...
நலம் ! நலமறிய நாவல்
கருஊதா நிறத்தில், கண்களைக் கவரும் நாவல் பழம், துவர்ப்பும் இனிப்புமாக
நாவுக்குச் சுவையை அள்ளித்தரும். ஒருகாலத்தில் தள்ளுவண்டிகளில் விற்றபோது
சீண்டுவாரின்றி இருந்தது. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்றதும் விர்ரென
விலை ஏறிவிட்டது. நாவல் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும்தான் நல்லதா?
இந்தப் பழத்தில் ‘குயுமின்’ என்ற ஆல்கலாய்டு இருப்பதால், தோலில்
சுருக்கங்கள் வராமல் தடுத்து, இளமையைத் தக்கவைக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்
அதிகம் என்பதால், செல்கள் புதுப்பித்தலுக்குப் பெரிதும் உதவும். கால்சியம்
இருப்பதால், எலும்புகள் வலுவடையும். ஈறுகளை உறுதியாக்கும். சர்க்கரை
நோயாளிகள் மட்டுமல்ல, சர்க்கரை நோயின் ஆரம்ப நிலை எனப்படும் ப்ரீ டயாபடீஸ்
நிலையில் உள்ளவர்கள், நாவல் பழத்தைச் சாப்பிட்டால் சர்க்கரை அளவைக்
கட்டுக்குள்வைக்கலாம். மூளை பலப்படவும், கல்லீரல் நோய் குணமாகவும், செரிமான
சக்தி அதிகரிக்கவும் நாவல் பழம் உதவுகிறது.
நாவல் பழக் கஷாயம், வாயுத்தொல்லையை நீக்கும். மண்ணீரல் வீக்கம் மற்றும் நாட்பட்ட கழிச்சல் நோயைக் குணப்படுத்தும்.
கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும். ரத்தத்தைச் சுத்திகரித்து, ரத்த விருத்திக்கு உதவும். நீர்ச்சுருக்கைக் குணப்படுத்தும்.
இரண்டு நாவல் பழங்களை உப்பில் போட்டுச் சாப்பிட்டால், தொண்டைக்கட்டுப் பிரச்னை நீங்கும்.
தாகத்தைத் தணிக்கும். பழுக்காத காய்களை நன்றாக உலர்த்திப் பொடித்து, அதை
ஒரு தேக்கரண்டி மோரில் போட்டுக் கலந்து அருந்தினால், வயிற்றுப்போக்கு
குணமாகும்.
நாவல் பழத்தைச் சாப்பிட்ட பின், கொட்டையைத் தூர எறியாமல், நிழலில்
நன்றாக உலர்த்தி, பொடித்து, சலித்துக்கொள்ளவும். தினமும், இந்தப் பொடியை
இரண்டு முதல் நான்கு கிராம் வீதம் தண்ணீரில் கலந்து மூன்று வேளை
அருந்தினால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். பித்தத்தைப்
போக்கும்.
நாவல் இலைக் கொழுந்து, மாவிலைக் கொழுந்து ஆகிய இரண்டையும் சம அளவில்,
எடுத்து மை போல் அரைத்து, தயிர் அல்லது மோரில் கலந்து சாப்பிட்டால்,
வயிற்றுப்போக்கு, ரத்த சீதபேதி ஆகியவை குணமாகும்.
Post a Comment