டிப்ஸ்... டிப்ஸ்...! வா சகிகள் அனுப்பிய டிப்ஸ்களை தேர்ந்தெடுத்து, செய்து பார்த்து, தொகுத்து வழங்கியவர்: விஜயலட்சுமி ராமாமிர்தம் பா...
டிப்ஸ்... டிப்ஸ்...!
வாசகிகள் அனுப்பிய டிப்ஸ்களை தேர்ந்தெடுத்து, செய்து பார்த்து, தொகுத்து வழங்கியவர்: விஜயலட்சுமி ராமாமிர்தம்

பாகற்காயில்
கசப்பு தெரியாமல் இருக்க ஒரு யோசனை... காய்களை நீளவாக்கில் இரண்டாக
நறுக்கி, விதைகளை நீக்கி, உள் பக்கம் உப்பைத் தடவி கொஞ்ச நேரம் அப்படியே
வையுங்கள். பிறகு, காய்களைக் கழுவிவிட்டு சமைத்தால் கசப்பு மிகவும்
குறைந்துவிடும்.

வெள்ளை
மற்றும் மஞ்சள் பூசணிக்காய் துண்டுகளை ஒரு வாரம் வரை பாதுகாக்க வேண்டுமா?
காய்களைத் தோல் நீக்கிவிட்டு, விதையுள்ள மென்மையான மேல் பாகத்தையும்
களைந்து, சதை பாகத்தைத் துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். அகலமான பாத்திரத்தில்
நீர் நிரப்பி, அதில் பூசணித் துண்டுகளை மூழ்கவிட்டு, பாத்திரத்தை மூடாமல்,
ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். பல நாட்கள் அப்படியே இருக்கும்.

அடை
அதிக கரகரப்புடன் இருக்க வேண்டும் என்றால், பாசிப்பருப்பை அதிகமாகச்
சேர்க்கவும். அதாவது, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு தலா ஒரு கப்பும்,
பாசிப்பருப்பு இரண்டு கப்பும், தேவையான அரிசி, மிளகாய், உப்பு,
பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, மிதமான தீயில் அடை
சுட்டால் மொறுமொறு அடை தயார்.

வாழைப்பூவை
ஆய்ந்ததும், மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால் அழகாக
உதிர்உதிராகி விடும். பிறகு, பொரியல் செய்வது சுலபம். பொடியாக நறுக்கும்
நேரமும் மிச்சம்.

சாம்பார்
செய்ய துவரம்பருப்பு வேகவைக்கும்போது, அதிலேயே ஒரு தக்காளி, ஒரு
வெங்காயம், 2 பச்சை மிளகாய் ஆகியவற்றை இரண்டாக நறுக்கிப் போட்டு
வேகவிடுங்கள். வெந்த பருப்பிலிருந்து, காய்களை எடுத்துவிட்டு, பருப்பைக்
கடைந்து, கொதிக்கும் சாம்பாரில் விட்டு, கூடவே பருப்பிலிருந்து எடுத்த
காய்களையும் அதில் போட்டு, கொதிக்கவிட்டால் சாம்பார் அருமையான சுவையுடன்
அமையும்.

போளி
செய்ய ஒரு வித்தியாசமான, எளிய ரெசிப்பி இதோ..! இரண்டு கப் துருவிய கேரட்,
ஒரு கப் துருவிய வெல்லம், ஒரு ஸ்பூன் ஏலக்காய்த்தூள்... இவற்றை நன்கு
கலந்து, (தேவையானால் பூரணம் பதம் வரும் வரை சோள மாவு கலந்து ) பிசைந்து,
போளிகள் செய்தால், சத்தான போளிகள் விரைவில் தயார்.
Post a Comment