டேர்ம் இன்ஷூரன்ஸ்...ஏன், எதற்கு எப்போது அதிகரிக்க வேண்டும்?
டேர்ம் இன்ஷூரன்ஸ்...ஏன், எதற்கு எப்போது அதிகரிக்க வேண்டும்? சமீப காலமாக இன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்பு உணர்வு மக்களிடம் பெருகிவருவதால், ...

https://pettagum.blogspot.com/2014/10/blog-post_58.html
டேர்ம் இன்ஷூரன்ஸ்...ஏன், எதற்கு எப்போது அதிகரிக்க வேண்டும்?
சமீப
காலமாக இன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்பு உணர்வு மக்களிடம் பெருகிவருவதால்,
எங்களுக்கு ‘டேர்ம் இன்ஷூரன்ஸ்தான் வேண்டும்’ என்று இன்ஷூரன்ஸ்
ஏஜென்ட்டுகளிடம் மக்கள் வலியுறுத்தத் தொடங்கிவிட்டார்கள். இந்தத் தகவல்,
டேர்ம் இன்ஷூரன்ஸ் குறித்து மக்களுக்கு இருந்த தவறான புரிதல்
விலகியிருப்பதைக் காட்டுகிறது. இன்ஷூரன்ஸ் என்பது, ஒரு குடும்பத்தில்
வருமானம் ஈட்டக்கூடிய நபர் எதிர்பாராமல் இறக்க நேரிட்டால், அந்தக்
குடும்பம் எந்தவித பொருளாதாரப் பாதிப்பும் அடையாமல் இருக்க வேண்டும்
என்பதற்காக எடுக்கப்படுவது. இது, லாபம் பெறுவதற்காகச் செய்யப் படும்
சேமிப்போ அல்லது முதலீடோ அல்ல என்பதை மக்கள் இப்போது
புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
சரி, பாதுகாப்பு கருதி டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்
கொள்கிறோம். ஆரம்பத்தில் எடுத்த அளவிலேயே டேர்ம் இன்ஷூரன்ஸை கடைசிவரை
தொடரலாமா? கூடாது என்றால் ஏன் கூடாது, எதனால் டேர்ம் இன்ஷூரன்ஸை
அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும், எதன் அடிப்படை யில் அதிகப்படுத்துவது
போன்ற கேள்விகளுடன் நிதி ஆலோசகர் யு.என்.சுபாஷிடம் பேசினோம். அவர் கொடுத்த
விளக்கமான பதில் இங்கே உங்களுக்காக...
பாதுகாப்புக்குத்தான் இன்ஷூரன்ஸ்!
“ஒருவர் பெறும் சம்பளத்தின் அடிப்படையில் 20 மடங்குக்கு
டேர்ம் பிளான் எடுத்துக்கொள்ளும் வாய்ப்புள்ளது. அப்போதுதான் அவர்
இல்லாமல் போனாலும், கிடைக்கும் காப்பீட்டுத் தொகை அவரது
குடும்பத்தாருக்குப் பயனுள்ளதாக இருக்கும். யாருடைய, எதனுடைய
பாதுகாப்புக்கெல்லாம் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம் எனில்,
குடும்பச் செலவுகள், கடன்கள் மற்றும் எதிர்காலத் தேவைகளைக் கணக்கில் கொண்டு
எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் ஆரம்பத்தில் எடுத்த டேர்ம் இன்ஷூரன்ஸ்
காப்பீட்டு அளவை கடைசிவரை அப்படியே தொடரலாமா என்று கேட்டால், கூடாது என்பதே
சரியான பதில். எந்தெந்த காலத்தில் டேர்ம் இன்ஷூரன்ஸை அதிகப்படுத்திக்
கொள்ள வேண்டும் என்பதை இனி சொல்கிறேன்.
அதிகப்படுத்துவது அவசியம்!
“ஒருவர் கல்யாணத்துக்கு முன்பு, கல்யாணத்துக்குப்
பின்பு, ஒரு குழந்தை பிறந்த பிறகு, இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு மற்றும்
இதற்கிடையில் கார் கடன், வீட்டுக் கடன் பெற்றிருந்தால் அந்தச் சமயங்களில்
என ஒருவர் எடுத்திருக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் காப்பீட்டு அளவை அதிகரித்துக்
கொள்வது அவசியம். அப்படி எடுத்தால்தான், ஒரு குடும்பத்தின் அனைத்துத்
தேவைகளையும் பூர்த்தி செய்கிறமாதிரி அமையும்.
கல்யாணத்துக்கு முன்..!
கோபி என்பவர் கல்யாணத்துக்கு முன் டேர்ம் இன்ஷூரன்ஸ்
எடுத்தார். அவருக்கு அப்போது வயது 25. அன்றைய நிலையில் அவரது ஆண்டு
வருமானம் ரூ.4 லட்சம். இவருடைய குடும்பத்துக்கான ஆண்டுச் செலவு ரூ.1.80
லட்சம். தனது வருமானத்திலிருந்து சேமிப்புக்காக இவர் ஒதுக்கும் தொகை
ஆண்டுக்கு ரூ.1.40 லட்சம். இந்தச் சமயத்தில் கோபி தனது பெயரில் ரூ.63
லட்சம் ரூபாய்க்கு டேர்ம் (வருமானத்திலிருந்து 15-16 மடங்கு) பிளான்
எடுத்துக்கொள்ள வேண்டும்.
கல்யாணத்துக்குப் பின்..!
முதல் குழந்தை மற்றும் கார் கடனுக்குப் பிறகு!
கோபிக்கு 30-வது வயதில் முதல் குழந்தை பிறக்கிறது.
அதேசமயத்தில் காருக்கான தேவை ஏற்படவே, வங்கியில் கடன் பெற்று காரை
வாங்குவதாக வைத்துக்கொள்வோம்.
இப்போது அந்தக் குழந்தையின் எதிர்காலத் தேவைகளையும்
(குழந்தையின் கல்வி மற்றும் திருமணம் - ரூ.15 லட்சம்), காருக்கான கடன்
(ரூ.5 லட்சம்) தொகையையும் கருத்தில் கொண்டு அதற்குத் தகுந்தாற்போல டேர்ம்
இன்ஷூரன்ஸை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அந்தச் சமயத்தில் அவருடைய ஆண்டு
வருமானம் 6.44 லட்சம் ரூபாயாகவும், குடும்பத்துக்கான ஆண்டுச் செலவு 2.89
ரூபாயாகவும், அவருடைய அன்றைய ஆண்டு முதலீடு 2.22 லட்சம் ரூபாயாகவும்
அதிகரித்திருக்கும்.
25–வது வயதிலிருந்து செய்துவந்த முதலீடானது 13.52
லட்சம் ரூபாயாகவும் உயர்ந்திருக்கும். அதனால் தற்போதைய நிலையில் அவருக்குத்
தேவையான டேர்ம் இன்ஷூரன்ஸ் அளவு 1.06 கோடி ரூபாய்.
ஏற்கெனவே 76 லட்சம் ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் இருப்பதால், 30 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸை அதிகப்படுத்திக் கொள்வது நல்லது.
இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு!
கோபியின் 33-வது வயதில் இரண்டாவது குழந்தை பிறப்பதாகக்
கொண்டால், அந்த நேரத்தில் குடும்பத்துக்கான தேவை இன்னும்
அதிகரித்திருக்கும். இந்தச் சமயத்தில் வீட்டுத் தேவைகள், இரு குழந்தைகளின்
எதிர்காலத் தேவைகள், கார் கடன் (தனது 30 வயதில் வாங்கிய கார் கடன் மூன்று
ஆண்டுகள் கழித்து ரூ.2.30 லட்சமாகக் குறைந்திருக்கும்) என எல்லாம் சேர்த்து
மொத்தம் ரூ.1.19 கோடிக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் கோபியிடம் இருக்க வேண்டும்.
ஏற்கெனவே ரூ.1.06 கோடிக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் இருப்பதால், மேலும் ரூ.13
லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸை அதிகப்படுத்திக் கொள்வது அவசியம்.
வீட்டுக் கடன் வாங்கியதற்குப் பிறகு!
கோபியின் 35-வது வயதில் வசிக்கச் சொந்தமாக வீடு இல்லை
என்பதைத் தவிர, மற்ற முதலீடு என அனைத்தும் பூர்த்தியாகி இருக்கிறது.
தற்போது இவருக்கான ஆண்டுச் சம்பளம் ரூ.10.37 லட்சம் என்பதால், ரூ.35
லட்சத்துக்கு வீட்டுக் கடன் பெற்று சொந்தமாக வீட்டை வாங்குகிறார் எனில்,
அந்தக் கடனை அவர் இல்லாதபோது அவரது மனைவி அடைப்பதற்கான முன்னேற்பாட்டை
கோபி செய்துவைக்க வேண்டும்.
அதாவது, அந்த வீட்டுக் கடன் தேவைக்கான டேர்ம்
இன்ஷூரன்ஸையும் கோபி எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது அவரிடம் இருப்பது
ரூ.1.19 கோடிக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ். ஆனால், வீட்டுக் கடனுக்குப் பிறகு
அவருக்குத் தேவைப்படுவது, ரூ.1.48 கோடி. அதனால் ரூ.29 லட்சத்துக்கு டேர்ம்
இன்ஷூரன்ஸை கோபி அதிகரித்துக்கொள்ள வேண்டும். இந்த வயதில் கோபி தனது கார்
கடனை முழுவதுமாகக் கட்டி முடித்திருப்பார்.
ஆனால், அடுத்த 40-வது வயதில் சம்பளம் அதிகரிப்பு,
வீட்டுத் தேவைகள் அதிகரிப்பு மற்றும் வீட்டுக் கடன் பாக்கி போன்றவற்றால்
டேர்ம் இன்ஷூரன்ஸ் தேவையும் அதிகரிக்கும். அதனால் ஏற்கெனவே
எடுத்துவைத்திருக்கும் ரூ.1.48 கோடியுடன் ரூ.20 லட்சம் அதிகரித்து, ரூ.1.68
கோடிக்கு டேர்ம் இன்ஷூரன்ஸை வைத்துக்கொள்வது நல்லது.
அதேசமயத்தில், அவர் வருடா வருடம் செய்துவந்த முதலீடு
ரூ.93.57 லட்சமாக வளர்ந்திருக்கும். அதற்கடுத்து கோபியின் 45-வது வயதிலும்
சம்பள உயர்வு மற்றும் தேவை உயர்வு காரணமாகவும், வீட்டுக் கடன் இருப்பதாலும்
டேர்ம் இன்ஷூரன்ஸ் தேவையானது அதிகரித்திருக்கும். தற்போது அவரிடம் ரூ.1.71
கோடிக்கு டேர்ம் காப்பீடு இருக்க வேண்டும் என்பதால், ஏற்கெனவே இருக்கும்
இன்ஷூரன்ஸ் தொகையில் ரூ.3 லட்சத்துக்கு அதிகரித்துக் கொள்வது நல்லது.
இந்த வருடத்தில் கோபியின் முதலீட்டின் மீதான வருமானம்
ரூ.1.97 கோடியாக வளர்ந்திருக்கும். இந்த முதலீடு கோபியின் 50-வது வயதில்
ரூ.3.94 கோடியாகவும், 55-வது வயதில் ரூ.7.57 கோடியாகவும் வளர்ந்திருக்கும்.
காரணம், அந்த வயதில் அவரது ஆண்டு வருமானம் ரூ.69.79 லட்சமாகவும், ஆண்டு
முதலீடு ரூ.24.42 லட்சமாகவும் இருந்திருக்கும்.
முதலீட்டின் மீதான வளர்ச்சி!
ஆனால், கோபிக்கு தனது 50-வது வயதில் வீட்டுக் கடன்
ரூ.15 லட்சமாகக் குறைந்திருக்கும் என்பதாலும், அதேசமயத்தில் முதலீட்டின்
மீதான வருமானம் ரூ.3.94 கோடியாக வளர்ந் திருக்கும் என்பதாலும் டேர்ம்
இன்ஷூரன்ஸ் அளவைஅதற்கு முன்பிருந்த ரூ.1.71 கோடியிலிருந்து ரூ.1.26
கோடியாகக் குறைத்துக் கொள்ளலாம். தேவையில்லாமல் இன்ஷூரன்ஸுக்கான
பிரீமியத்தைக் கட்டவேண்டிய அவசியமில்லை.
55-வது வயதுக்குப் பிறகு செய்துவந்த முதலீட்டில்
கிடைத்த வருமானமே ரூ.7.57 கோடியாக இருப்பதால், இந்தச் சமயத்தில் டேர்ம்
இன்ஷூரன்ஸ் என்பது கோபிக்குத் தேவையில்லாத ஒன்று. அதனால் இதுவரை எடுத்துள்ள
அனைத்து பாலிசிகளையும் நிறுத்திக் கொண்டு, கிடைத்திருக்கும் முதலீட்டு
வருமானத்தை 10% வருமானம் தரக்கூடிய ஃபண்டுகளில் முதலீடு செய்து, அதன்மூலம்
கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஓய்வுக்காலத்தை நிம்மதியாகக் கழிக்கலாம்.
இதற்கிடையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கோபிக்கு அசம்பாவிதம்
நடந்திருக்கும்பட்சத்தில், அப்போது அவர் எடுத்துவைத்திருந்த காப்பீட்டுத்
தொகையை அவரது மனைவி பெற்று அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு
வாழ்க்கையை வழிநடத்தலாம்.
டேர்ம் இன்ஷூரன்ஸை அதிகரிக்கும் தொகைக்குத் தனியாக
டேர்ம் பிளான் களைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால், புதிய பாலிசிகள்
எடுக்கும்போது ஏற்கெனவே இருக்கும் பாலிசி குறித்த விவரங்களை இன்ஷூரன்ஸ்
நிறுவனத்திடம் மறைக்காமல் சொல்வது நல்லது. அப்போதுதான் க்ளைம் செய்யும்போது
சிக்கல் இல்லாமல் இருக்கும்” என்றார்.
ஏற்கெனவே டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தவர்கள் இதைக் கவனிக்கலாமே!
Post a Comment