வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் வருமான வரிச் சலுகைகள்! இளைஞர்களுக்கான சூப்பர் வழிகாட்டி...
வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் வருமான வரிச் சலுகைகள்! இளைஞர்களுக்கான சூப்பர் வழிகாட்டி... இந்தியாவில் வருமான வரிச் செலுத்துபவர்க...

https://pettagum.blogspot.com/2014/10/blog-post_15.html
வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் வருமான வரிச் சலுகைகள்!
இளைஞர்களுக்கான சூப்பர் வழிகாட்டி...
இந்தியாவில்
வருமான வரிச் செலுத்துபவர்களில் பாதிக்கு மேலானவர்கள், வருமான வரிச்
சலுகையை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என ஆன்லைன் மூலம் வரிக் கணக்கு
தாக்கல் செய்ய உதவும் டாக்ஸ்ஸ்பானர் டாட் காம் (Taxspanner.com) நடத்திய
ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுவும், அனைவருக்கும் அதிகம் தெரிந்த 80சி
பிரிவில்கூட முழுமையாக வரிச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது
ஆச்சர்யமான விஷயம்தான்.
வருமான வரிச் சலுகையை அதிகமாகப் பயன்படுத்தாதவர்கள்
பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர்கள் நம் இளைஞர்கள்தான். ஆண்டுக்கு
சுமார் 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் 25-லிருந்து 30 வயது வரை உள்ள
இளைஞர்கள் கடந்த நிதி ஆண்டில் சராசரியாக 12% வருமான வரி கட்டி
இருக்கிறார்கள். இதுவே, 35 வயதானவர்கள் 6% மட்டுமே வரி கட்டி
இருக்கிறார்கள்.
இவ்வளவுக்கும் 25-லிருந்து 30 வயது வரை உள்ள இளைஞர்கள்,
படித்தவர் களாக, கைநிறையச் சம்பளம் வாங்குப வர்களாக இருக்கிறார்கள்.
பணியில் பிஸியாக இருக்கும் இந்த இளைஞர்கள் வருமான வரியைச் சரியாக
பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்க பல காரணங்கள்.
இன்றைய இளைஞர்களில் பலருக்கு பணத்தின் அருமை புரிவதில்லை. லேட்டஸ்ட் செல்போன், புதுப்புது ஆடைகள், பொழுதுபோக்கு, வாகனங்கள் என ஜாலியாக இருப்பது தான் வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். இதனால் சேமிப்பையும் முதலீட்டைப் பற்றியும் அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை.
தவிர, வருமான வரிச் சலுகை பற்றி அவர்களுக்கு யாரும்
தெளிவாகச் சொல்லித் தருவதில்லை. வருமான வரிச் சலுகைகளை சரியாகப்
பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நிறைய லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை
இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துச் சொன்னால், அவர்கள் அதைப் பயன்படுத்திக்
கொள்ள தவறமாட்டார்கள்.
இன்னும் சில இளைஞர்கள் வருமான வரிச் சலுகை பெறுவதற்காக
எந்த முயற்சியும் எடுக்காமல், வரி கட்டுவதைப் பெருமையாக நினைக்கிறார்கள்.
வரி கட்டுவது நமது கடமைதான். ஆனால், அரசாங்கமே நமக்கு அளித்த வரிச்
சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு, அதுபோக உள்ள வரியைக் கட்டுவதே
புத்திசாலித்தனம். இனியாவது இன்றைய இளைஞர்கள் தங்களுக்கான வரிச் சலுகைகளை
சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
பி.எஃப்!
வருமான வரிச் சேமிப்புக்கான முதலீடு ஒன்றும்
கம்பசூத்திரம் இல்லை. அது இரண்டாம் வகுப்பு வாய்ப்பாடு தான். கீழே
சொல்லப்போகிற விஷயங்களைத் தெரிந்துவைத்துக் கொண்டால் போதும், உங்களுக்கான
வருமான வரிச் சலுகையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஓர் இளைஞன் முதல் மாதத்தில் வாங்கும் சம்பளத்தில் இருந்தே எதிர்கால சேமிப்புக்கான தொகை பிடிக்கப்படு கிறது. அதாவது, வாங்கும் சம்பளத்தில் (அடிப்படை மற்றும் பஞ்சப்படி) 12% பிராவிடெண்ட் ஃபண்ட் (பிஎஃப்) ஆகப் பிடிக்கப்படுகிறது. இதே அளவு தொகையை நிறுவனமும் பணியாளரின் பிஎஃப் கணக்கில் செலுத்தும்.
ஓர் இளைஞன் முதல் மாதத்தில் வாங்கும் சம்பளத்தில் இருந்தே எதிர்கால சேமிப்புக்கான தொகை பிடிக்கப்படு கிறது. அதாவது, வாங்கும் சம்பளத்தில் (அடிப்படை மற்றும் பஞ்சப்படி) 12% பிராவிடெண்ட் ஃபண்ட் (பிஎஃப்) ஆகப் பிடிக்கப்படுகிறது. இதே அளவு தொகையை நிறுவனமும் பணியாளரின் பிஎஃப் கணக்கில் செலுத்தும்.
அதிகச் சம்பளம் வாங்கும் சிலர், நிறுவனத்தில் பிஎஃப்
பிடிக்க வேண்டாம்; நிறுவனம் தன் பங்களிப்பாகப் போடும் தொகையையும்
சேர்த்துச் சம்பளமாகத் தந்துவிடுங்கள் என்று எழுதித் தந்துவிடுகிறார்கள்.
இது தவறான அணுகுமுறை. பிஎஃப் என்பது ஓய்வுக்காலத்துக்கான சேமிப்பு
என்பதால், அந்த முதலீட்டை தவிர்ப்பது நல்லதல்ல.
பிஎஃப். முதலீட்டுக்கு வரிச் சலுகை கிடைப்பதோடு, அதில்
சேரும் தொகைக்குக் கூட்டு வட்டியும் வழங்கப் படுகிறது. மேலும், பிஎஃப்
பிடிக்கத் தொடங்கி ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திருமணம், கல்வி, வீடு வாங்க
எனப் பல தேவைக்கு இதிலிருந்து பணம் எடுத்துக்கொள்ள முடியும். மேலும், பணி
நிறைவுக்குப் பிறகு, கோடி ரூபாய்க் கிடைத்தாலும் அதற்கு வரி கட்டத் தேவை
இல்லை. ஒரு சின்ன உதாரணம் மூலம் பார்த்தால், பிஎஃப் தொகை எப்படிப்
பெருகுகிறது என்பதைப் பார்க்கலாம்.
25 வயதான ஒருவரின் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி
சேர்த்து ரூ.25,000-க்கு 12% பிஎஃப் பிடிக்கப்படுகிறது. நிறுவனம் தன்
பங்காக 12% தொகை போடுகிறது. ஆண்டுக்கு 10 சதவிகித சம்பள உயர்வு என்கிற
அடிப்டையில் ஒருவருக்கு 58 வயது வரை பிஎஃப் பிடிக்கப்படுகிறது. இதற்கு
8.75% கூட்டு வட்டி வழங்கப்படுகிறது என்றால், பணி ஓய்வுபெறும்போது மொத்தம்
ரூ.4.10 கோடி கிடைக்கும். இந்தத் தொகைக்கு நீங்கள் வரி எதுவும் கட்டத் தேவை
இல்லை. இளைஞர்களே இனி பிஎஃப் முதலீடு வேண்டாம் என்று
சொல்லமாட்டீர்கள்தானே?
அடுத்து, இளைஞர்கள் வருமான வரி முதலீட்டுக்கான சேமிப்பை ஆரம்பிக்கும்முன் வரிச் சலுகை கிடைக்கும் இரு செலவுகளை அவசியம் மேற்கொண்டாக வேண்டும். அவை, லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான செலவாகும்.
அதிக இன்ஷூரன்ஸ் பாலிசிகள் வேண்டாம்..!
இளைஞர்கள் வரிச் சேமிப்புக்காக அதிகமாக முதலீடு
செய்யவில்லை என்கிற அதேநேரத்தில், தேவை இல்லாமல் அதிக எண்ணிக்கையில் ஆயுள்
காப்பீடு பாலிசியை எடுத்து வைத்திருக்கிறார்கள். இளைஞர்களுக்கு அதிக
நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களின் நண்பர்களில் பலர் இன்ஷூரன்ஸ்
ஏஜென்ட்டுகளாக வேலை பார்க்கிறார்கள் அல்லது பகுதி நேர ஏஜென்ட்டுகளாக
இருக்கிறார்கள். அவர்கள், ‘மச்சி டார்கெட் கம்ப்ளீட் பண்ணனும், ஒரு
இன்ஷூரன்ஸ் பாலிசி போடேன்” என்று கேட்டதும், கொஞ்சமும் யோசிக்காமல் சரி
என்று சொல்லிவிடுவார்கள். இதேபோல் பல நண்பர்கள் கேட்க ஓரிரு ஆண்டுகளில்
கையில் டஜன் கணக்கில் பாலிசிகள். ஆனால், இந்த அனைத்து பாலிசிகளையும்
சேர்த்தால், அவர்களின் ஆயுளுக்குப் போதிய கவரேஜ் இருக்கிறதா என்றால், இல்லை
என்றுதான் சொல்ல வேண்டும்.
காரணம், நண்பர்களின் வற்புறுத்த லால்
எடுக்கப்பட்டிருக்கும் அனைத்து பாலிசிகளும் ஆயுள் காப்பீடு கவரேஜ் மற்றும்
முதிர்வு தொகை கொண்ட எண்டோவ்மென்ட் பாலிசிகள் அல்லது பங்குச் சந்தை சார்ந்த
யூலிப் பாலிசி களாக இருக்கின்றன. இவற்றுக்குப் பதில் முற்றிலும்
இன்ஷூரன்ஸ் கவரேஜ் அளிக்கும் (முதிர்வு தொகை எதுவும் இல்லா) டேர்ம் பிளான்
எடுத்திருந்தால், பிரீமியம் மிகவும் குறைவாக இருக்கும், அதிக கவரேஜும்
கிடைக்கும்.
அடுத்து முக்கியமான விஷயம், எவ்வளவு தொகைக்கு ஆயுள்
இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்கிற விவரம் பலருக்கு தெரிவதில்லை.
எண்டோவ்மென்ட் பாலிசிகள் முதலீட்டுத் திட்டமாகப் பார்க்கப்படுவதால், அதில்
ஒருவரால் பிரீமியம் கட்டக் கூடிய அளவுக்குப் பாலிசிகள் விற்பனை
செய்யப்படுகின்றன. இதற்கு வருமான ஆதாரம் எதுவும் கேட்கப்படுவதில்லை.
மேலும், மருத்துவப் பரிசோதனையும் பெரிதாகக் கிடையாது.
டேர்ம் பிளான் பாலிசியில் அப்படி இல்லை. பாலிசி எடுப்பவருக்கான வருமான
ஆதாரம் மற்றும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
வேலைக்குச் சேர்ந்து 2 ஆண்டுகள் ஆன 25 வயது இளைஞரின்
மாத சம்பளம் 40,000 ரூபாய் என்றால், அவரின் ஆண்டுச் சம்பளம் ரூ.4.80
லட்சம். ஆண்டுச் சம்பளத்தைப்போல் குறைந்தபட்சம் சுமார் 10 மடங்குக்கு
அதாவது, 48 லட்சம் ரூபாய்க்கு லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்வது
நல்லது.
அவர் 50 லட்சம் ரூபாய்க்கு எண்டோவ்மென்ட் பாலிசி எடுத்தால், ஆண்டு
பிரீமியம் ஏறக்குறைய ரூ.2.38 லட்சம் கட்ட வேண்டியிருக்கும். இதுவே, அவர்
டேர்ம் பிளான் எடுத்தால், ஆண்டு பிரீமியமாக ரூ.15,000 மட்டும் கட்டினால்
போதும். அதுவே, ஆன்லைனில் டேர்ம் பிளான் எடுத்தால் பிரீமியம் ரூ.5,150
மட்டுமே.
ஆயுள் காப்பீடு குறித்து இளைஞர் களிடம் இருக்கும் தவறான
கருத்து ஒன்று மாற்றப்பட வேண்டும். நான்தான் நல்ல ஆரோக்கியமாக
இருக்கிறேனே, நான் சாலையில் நன்றாகக் கவனித்துதானே வாகனம் ஓட்டுகிறேன்,
நான் ஏன் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்கிறார்கள்.
சாலையில் நீங்கள் சரியாகத்தான் வாகனம் ஓட்டி செல்கிறீர்கள். பின்னால் வரும்
வாகனம் அல்லது எதிரில் வரும் வாகனம் நிலைத் தடுமாறி இடித்து, உங்களுக்கு
ஏதாவது ஆகிவிட்டால், உங்களை நம்பி இருக்கும் பெற்றோர், மனைவி மற்றும்
தம்பி, தங்கைகளின் எதிர்காலம் என்னாவது?
ஆயுள் காப்பீடு பாலிசிக்கு கட்டும் பிரீமியத்தில்
நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின் கீழ் ஓராண்டில் ரூ.1.5 லட்சம்
வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும்.
இதேபோல்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் குறித்த அவர்களின்
பார்வையும் தவறானதாக இருக்கிறது. நான்தான் நல்ல திடகாத்திரமாக இருக்கிறேனே,
எனக்கு எதுக்கு மருத்துவ பாலிசி என்கிறார்கள்.
இன்றைக்கு உணவுப் பழக்கம் மாற்றம் மற்றும் பாரம்பரிய
காரணங் களால் 25 வயது இளைஞனுக்குக்கூட மாரடைப்பு வந்து, ஆளை சாய்த்து
விடுகிறது. மேலும், சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை
எடுத்துக்கொள்ளவும் இந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி உதவுகிறது.
பொதுவாக,
ஒருவரின் ஆண்டு வருமானத்தைப்போல் 1.5 மடங்குக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி
எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். இருந்தாலும் வசிக்கும் நகரம்,
அங்குள்ள மருத்துவச் செலவையும், ஒருவருக்குப் பாரம்பரியமாக ஏற்படக்கூடிய
பாதிப்பையும் கவனித்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது.
உதாரணத்துக்கு, திருநெல்வேலியில் வசிப்பவர் சென்னையில் வசிப்பவரைவிடக்
குறைவான தொகைக்கு பாலிசி எடுத்துக் கொண்டால் போதும்.
லைஃப் இன்ஷூரன்ஸ் என்பது வருமானம் ஈட்டும்
நபர்களுக்கானது என்பதால், அந்த பாலிசியை வேலை பார்க்கும் இளைஞர்கள் மட்டும்
எடுத்துக் கொண்டால் போதும்.
ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பது குடும்பத்தில் உள்ள
அனைவருக்கும் அவசியம் எடுக்க வேண்டிய பாலிசியாகும். அம்மா, அப்பா, சகோதர
சகோதரிகளுக்கு மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள்
கையிலிருந்து தான் செலவு செய்யவேண்டி இருக்கும். அவர்களுக்கும் சேர்த்து
ஹெல்த் பாலிசி எடுக்கப்பட்டிருக்கும்பட்சத்தில் சில ஆயிரம் ரூபாய்
பிரீமியத்தில் லட்சம் ரூபாய்க்கான மருத்துவச் சிகிச்சையைப் பெற்றுவிட
முடியும்.
குடும்பத்தினருக்கு எடுக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்
பாலிசிக்கான பிரீமியத் தொகையை வரிதாரர் தனது சம்பளத் திலிருந்து
கழித்துக்கொள்ள முடியும். தனிநபர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு
சேர்த்து ஆண்டுக்கு கட்டும் பிரீமியத்தில் 15,000 ரூபாய் வரைக்கும் வரிச்
சலுகை கிடைக்கும்.
வரிதாரர் அவரது பெற்றோருக்கு கட்டும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்
பிரீமியத் தொகைக்குத் தனியாக ரூ.15,000 வரைக்கும் (மூத்த குடிமக்களாக
இருந்தால் 20,000 வரை) வரிச் சலுகை பெற முடியும்.
குடும்ப
உறுப்பினர்களுக்குச் செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு (ஹெல்த்
செக்கப்) ஓராண்டில் ரூ. 5000 வரை வரிச் சலுகை பெறலாம். இது 15,000 ரூபாய்
வரம்புக்குள்ளே வரும்.
கல்விக் கடன் வட்டி..!
இளைஞர்கள் அவர்களின் மேல் படிப்புக்குக் கல்விக் கடன்
வாங்கித் திரும்பக் கட்டிவந்தால், அதற்கான வட்டிக்கு வரிச் சலுகை பெற
முடியும். அடுத்து, இரு பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு வரிச் சலுகை
இருக்கிறது. இது 80சி பிரிவின் கீழ் வரும். 25 முதல் 35 வயதுக்குக்கு
உட்பட்ட இளைஞர் ஒருவரின் ஆண்டு வருமானம் ஓராண்டில் 2.5 லட்சம் ரூபாயைத்
தாண்டும் போது, அவர் வருமான வரி கட்ட வேண்டி இருக்கும். பிஎஃப், லைஃப்
மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத் தொகைகள், பிள்ளைகளின் கல்விச் செலவு,
கல்விக் கடன் வட்டி போன்றவைக் கழிக்கப்பட்ட பிறகும் வருமானம் ரூ.2.5 லட்சம்
ரூபாய்க்கு மேல் இருக்கும்பட்சத்தில், வரிச் சலுகைக்கான முதலீட்டின் மீது
பார்வையைச் செலுத்தலாம்.
பங்குச் சந்தையில் பணம்..!
இளைஞர்கள் என்கிறபோது அவர்கள் கணிசமாக ரிஸ்க்
எடுக்கலாம். அந்தவகையில் அவர்கள் பங்குச் சந்தை சேமிப்பு திட்டமான
இஎல்எஸ்எஸ் என்கிற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீட்டை
மேற்கொள்ளலாம். இதில் மாதம் 500 ரூபாய்கூட முதலீடு செய்ய லாம்.
மூன்றாண்டுகளுக்கு முதலீட்டை எடுக்க முடியாது. இதன்மூலம் கிடைக்கும்
டிவிடெண்ட் மற்றும் மூன்றாண்டு கழித்து யூனிட்களை விற்கும்போது கிடைக்கும்
மூலதன ஆதாயம் எதற்கும் வரி கட்டத் தேவை இருக்காது.
இதைவிடக் கூடுதலாக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும்,
பங்குச் சந்தையில் முதல்முறையாக முதலீடு செய்யும் இளைஞர்கள் ராஜீவ் காந்தி
பங்குச் சந்தை சேமிப்பு திட்டத்தின் (ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ்
ஸ்கீம்) கீழ் வருமான வரிச் சலுகை பெற முடியும். ஆண்டு வருமானம் 12 லட்சம்
ரூபாய்க்குக் கீழ் உள்ளவர்கள் ரூ. 50,000 முதலீடு செய்தால், அதில் பாதி
25,000 ரூபாய்க்கு வரிச் சலுகை பெற முடியும்.
பட்டியல் இடப்பட்ட நிறுவனப்
பங்குகளில் (குறிப்பாக, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் இடம்
பெற்றிருக்கும்) முதலீடு செய்யும்போது இந்தச் சலுகை கிடைக்கும்.
இவை தவிர, முக்கியப் பங்குகளில் முதலீடு செய்யும்
மியூச்சுவல் பண்டுகள் செய்யும் முதலீட்டுக்கும் இந்தத் திட்டம் மூலம் வரிச்
சலுகை பெற முடியும். இந்த முதலீட்டையும் மூன்றாண்டுகளுக்கு எடுக்க
முடியாது.
ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்கிறவர்கள்,
சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் போக விருப்பத்தின் அடிப்படையில்
அதிகபட்சம் அதே அளவுக்கு விபிஎஃப் பிடிக்கச் சொல்லலாம். இந்தத் தொகைக்கும்
வரிச் சலுகை உண்டு.
மேலும், ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், ஐந்தாண்டு
தேசிய சேமிப்புப் பத்திரம் (என்எஸ்சி - வட்டி 8.5%), 15 ஆண்டு பப்ளிக்
பிராவிடெண்ட் ஃபண்ட் (பிபிஎஃப்- வட்டி 8.70%) ஆகியவற்றிலும் முதலீடு செய்து
வரிச் சலுகை பெறலாம். இதில் பிபிஎஃப் முதலீட்டில் வட்டிக்கு வரி கிடையாது.
எஃப்டி மற்றும் என்எஸ்சி முதலீட்டில் வட்டி வருமானத்துக்கு வரிச் செலுத்த
வேண்டும். உங்களின் முதலீடு எப்போது தேவை என்பதைப் பொறுத்து முதலீட்டு
வகையைத் தேர்வு செய்யவும்.
இப்படி முதலீடு செய்து வைத்திருக்கும் பட்சத்தில்
3-லிருந்து ஐந்து ஆண்டுகள் லாக்கின் முடிந்தபிறகு உங்களின் எந்தத்
தேவைக்கும் இந்தத் தொகையை எடுத்துக்கொள்ள முடியும்.
வீட்டுக் கடன்!
வாடகை வீட்டில் இருந்தால், அந்த வாடகையை நிபந்தனைக்கு
உட்பட்டு வரி கட்டும்முன் வருமானத்தில் கழித்துக்கொள்ள முடியும்.
அதேநேரத்தில், சொந்த வீடு வேண்டும்; கணிசமான தொகை வரியாக மிச்சமாக வேண்டும்
என்று நினைக்கிற இளைஞர்கள் வீட்டுக் கடன் மூலம் வீடு அல்லது அடுக்குமாடிக்
குடியிருப்பு வாங்கலாம். ஏற்கெனவே இடம் இருந்தால் அதில் வீடு கட்ட
வீட்டுக் கடன் வாங்கலாம்.
இப்படி வாங்கும் கடனில் திரும்பச் செலுத்தும் கடனில்
அசல் தொகையில் நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின் கீழ் ஓராண்டில் ரூ.1.5
லட்சம் வரை வரிச் சலுகை பெறலாம். திரும்பக் கட்டும் வட்டியில் ரூ.2 லட்சம்
தனியாக வரிச் சலுகை (பிரிவு 24) கிடைக்கும்.
இளைஞர் ஒருவரால் தற்போது வாங்கும் சம்பளத்தில் நகரத்துக்குள் வீடு வாங்க முடியவில்லை. அவர் புறநகரில் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி, அதனை வாடகைக்குவிட்டால், திரும்பக் கட்டும் அசலில் ரூ. 1.5 லட்சம் மற்றும் முழு வட்டிக்கும் வரிச் சலுகை பெற முடியும்.
அதேநேரத்தில், வீட்டு வாடகையை வருமானமாகக் காட்டி இருப்பது அவசியம். இந்த இளைஞர் நகருக்குள் வாடகை வீட்டில் இருக்கும்பட்சத்தில் வீட்டு வாடகைபடி சலுகை மூலமும் வரியை மிச்சப்படுத்த முடியும்.
மேல்படிப்புக்கு!
வரிதாரர் மற்றும் அவரது துணை (கணவன்/ மனைவி)
மேல்படிப்புக்கு கடன் வாங்கினால், திரும்பக் கட்டும் வட்டிக்கு எட்டு
ஆண்டுகள் வரிச் சலுகை பெற முடியும். இளைஞர்கள் இப்படிச் செய்யும்போது வரிச்
சலுகை கிடைப்பதோடு, மேல்படிப்பு முடித்து அலுவலகத்தில்
அடுத்தகட்டத்துக்கும் போக வழி கிடைக்கும்.
இளைஞர்கள் கொஞ்சம் திட்டமிட்டால் வருமான வரியை கணிசமாக
மிச்சப்படுத்த முடியும். இது வரியைச் சேமிப்பதற்கான முதலீடு என்பதோடு,
எதிர்காலத் தேவைகளான சொந்த வீடு, கார் போன்றவற்றை வாங்கவும், பிள்ளைகள்
கல்வி, திருமணச் செலவு மற்றும் ஓய்வுக்காலத் தேவைக்கு உதவுவதாக இருக்கும்.
எளிமையான முதலீட்டு நடைமுறைகள்..!
வருமான வரி முதலீட்டுக்காக இளைஞர்கள் எங்கும் அலையத்
தேவையில்லை. இருந்த இடத்திலேயே ஆன்லைன் மூலம் முதலீட்டை மேற்கொண்டுவிட
முடியும்.
இன்ஷூரன்ஸ் / மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்டுகளை போனில் அழைத்தால்
போதும் அவர்கள், உங்கள் அலுவலகம் அல்லது வீடு தேடி வந்து முதலீட்டுக்கான
அனைத்து வேலைகளையும் முடித்துத் தந்துவிடுவார்கள். இசிஎஸ் கொடுத்துவிட்
டால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்தே முதலீட்டுக்கான பணம் சென்றுவிடும்.
ஏஜென்ட்டுகளிடம் எந்தத் திட்டம் சிறந்தது என்று
கேட்பதைத் தவிர்ப்பது நல்லது. முதலீட்டுக்கான திட்டங்களை தேர்வு செய்வது
நீங்களாக இருக்க வேண்டும்.
உயருகிறது இந்தியாவின் ஜிடிபி!
2013-ம் ஆண்டில் 1.88 டிரில்லியனாக இருந்த இந்தியாவின்
மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பானது, நடப்பு நிதி ஆண்டில் இரண்டு
டிரில்லியன் டாலராக (ஒரு டிரில்லியன் என்பது 1,000 பில்லியன்) உயரும்
தருவாயில் இருக்கிறது. இது இன்னும் ஐந்து ஆண்டுகளில், அதாவது 2019-ல்
மூன்று டிரில்லியன் டாலரை தாண்டும் என்று சர்வதேச நிதி ஆணையம்
(International Monetary Fund) அமைப்பானது சமீபத்திய ஆய்வறிக்கையில்
தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மிகப் பெரிய பொருளாதார நாடுகளின்
தரவரிசையில் பத்தாவது இடத்தில் இருந்துவரும் இந்தியா 2019-ல் ஏழாவது
இடத்துக்கு முன்னேறும் என்றும் தெரிவித்துள்ளது.
Post a Comment