இன்றைய
நிலையில் பெரும்பாலான வர்கள் 58 வயது வரை வேலை பார்க்க விரும்புவதில்லை.
அதற்கு முன்பே பணியிலிருந்து ஓய்வுபெற்று, மீதமுள்ள காலத்தில் தங்களுக்குப்
பிடித்தமாதிரி சேவை செய்ய அல்லது நிம்மதியாக கழிக்க விரும்புகிறார்கள்.
இப்படி விரும்புகிறவர்களில் சிலர் மட்டுமே அதற்கான திட்டமிடலை செய்து
தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். பலர் சரியான திட்டமிடல் இல்லாமல்
ஆசைப் படுவதோடு நின்றுவிடுகிறார்கள். ஐம்பது வயதில் ஓய்வுபெற என்ன செய்ய
வேண்டும், எந்தமாதிரியான திட்டமிடல் வேண்டும் என நிதி ஆலோசகர்
யு.என்.சுபாஷிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
இளமையிலேயே திட்ட மிடுங்கள்!
''கல்வி பயில வாழ்நாளின் பெரும் பகுதியை செலவு
செய்யும் நாம், அடுத்ததாக வேலைக்குச் சென்று அல்லது தொழில் செய்து
சம்பாதிப்பதிலேயே அதிக காலத்தைக் கழித்துவிடுகிறோம். இதற்கிடையில்
கிடைக்கும் நேரத்தில் ஓய்வு, குடும்பத்தாருடன் கொண்டாட்டம், குதூகலம்.
ஆனால், நம் ஓய்வுக்காலத்துக்கு எந்த நிதியும் சேர்த்துவைக்காமல், பிற்பாடு
கஷ்டப்படுகிறோம். பணி ஓய்வுக்கு முன்பாகவே ஓய்வுபெற விரும்புபவர்கள்
செய்யவேண்டிய முதல் விஷயம், சம்பாதிக்க ஆரம்பிக்கும்போதே, அதாவது, இளம்
வயதிலேயே ஓய்வுக் காலத்துக்கான சேமிப்பைத் தொடங்க வேண்டும். ஏனெனில்
ஓய்வுக்காலம் என்பது நீண்டகாலம் என்பதால், அதற்கு தேவையான முதலீட்டுக்கும்
கால அவகாசம் கிடைக்கும். சிறு துளி பெருவெள்ளம் என்பதுபோல, சிறுக சிறுக
சேமிக்கவும் ஏதுவாக இருக்கும்.

உதாரணத்துக்கு, 25 வயதுள்ள ஒருவர் 40,000 ரூபாய்
சம்பாதிப்பதாகக் கொள்வோம். 20,000 ரூபாயை குடும்பச் செலவுக்காக
எடுத்துக்கொண்டால், மீதி அவரிடம் சேமிப்புக்காக 20,000 ரூபாய் இருக்கும்.
இந்த 20,000 ரூபாயில் 43% தொகையை, அதாவது 8,500 ரூபாயைத் தனது 50வது
வயதுவரை தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டை சம்பளம்
உயரும்போது வருடா வருடம் 10% அதிகரித்து வர வேண்டும் என்பதும் கட்டாயம்.
ஏறக்குறைய 14% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி
ஃபண்டு களில் 8,500 ரூபாயை இப்படி முதலீடு செய்தால், முதலீட்டு
முதிர்வின்போது 4.31 கோடி ரூபாய் கிடைக்கும். இந்தத் தொகை மூலம்
அன்றைக்குத் தேவைப்படும் மாதாந்திர செலவு 1.37 லட்சம் ரூபாயை எளிதாக ஈட்ட
முடியும்.
அதே 30,40 வயது வரை உள்ள ஒருவர் அன்று வரை
ஓய்வுக்காலத்துக்கு முதலீடு எதுவும் இல்லாதபட்சத்தில் தனது சம்பாத்தியம்
அதிகமாக இருந்தால் மட்டுமே முன்னதாகவே ஓய்வு பெறுவது குறித்து யோசிக்க
வேண்டும். ஏனெனில், அன்றைய நிலையில் அவர் குடும்பச் செலவு போக
மீதமிருக்கும் தொகையில் பெரும் பகுதியை ஓய்வுக்காலத்துக்காக முதலீடு
செய்தாக வேண்டும்
.
தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்!

கல்
பலமானதா அல்லது தண்ணீர் பலமானதா என்று கேட்டால், எல்லோரின் பதிலும் கல்
என்பதாகவே இருக்கும். ஆனால், அந்தப் பலம்வாய்ந்த கல்லின் மீதும் நீரானது
விழுந்து கொண்டே இருந்தால், அந்தக் கல்லும் உடைந்துவிடும் என்பதை யாராலும்
மறுக்க முடியாது. அதுபோலத்தான்
50 வயதில் ஓய்வுபெற நினைப்பவர்களும் ஆரம்பித்த
முதலீட்டை தொடர்ந்து செய்துகொண்டே வரவேண்டும். இடையில் வரும் நிதி
குறிக்கிட்டால் ஓய்வுக்கால முதலீட்டை நிறுத்துவது கூடாது.
சம்பாதிப்பவர்களுக்கு வருடத்துக்கு ஒருமுறை சம்பள
உயர்வு என்பது கட்டாயம் இருக்கும். நம்மில் பலர் ஒவ்வொரு வருடமும் சம்பளம்
உயரும் போது செலவை அதிகப்படுத்துகிறோமே தவிர, சேமிப்பை அதிகரிப்பதில்
கோட்டை விட்டுவிடுகிறோம். ஓய்வுக்கால சேமிப்பைப் பொறுத்தவரை, முதலீட்டில்
ஒழுக்கமாக இருந்தே ஆக வேண்டும்.
சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்!
50 வயதில் ஓய்வை இலக்காகக் கொண்டவர்கள் சிக்கனத்தைக்
கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம். சுற்றத்தாரைப் பார்த்து பந்தாவுக்காக
வாழ்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. சிக்கனத்தைக் குழந்தைகளின் திருமணம்
மற்றும் அவர்களின் கல்வியி லும்கூடக் காட்டுவது அவசியமே. ஏனெனில்,
குழந்தைகளின் கல்விக்கும், திருமணத்துக்கும் பிளான் பி என்கிற ஆப்ஷன்
இருக்கிறது. அதாவது, கல்விக் கடன் மற்றும் சிக்கனமான திருமணம் போன்ற
திட்டங்கள்.
ஆனால், ஒருவரின் ஓய்வுக்கால தேவைக்கு மாற்றாக வேறெந்த
திட்டத்தையும் நம்மால் தீட்டிவிட முடியாது. ஆனால், நம்மில்
பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு குழந்தைகளின் கல்வி மற்றும்
திருமணத்துக்காக அதிகமாகச் செலவு செய்துவிட்டு, ஓய்வுக்காலத்தில் அவர்களை
நம்பி வாழ்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்று நினைப்பதே. இந்த இடத்தில்,
'பெற்றுப் போட்ட பிரம்மாக்களே ஒன்று முதல் பத்து வயது வரை குழந்தைகளுக்கு
நீங்கள் வேலைக்காரர்கள், பதினைந்து வயது வரை குழந்தைகள் உங்களுக்கு
வேலைக்காரர்கள். பதினாறு முதல் பாகம் பிரிக்கும் வரை தோழர்கள். பிறகு
தூரத்து உறவினர்கள்’ என்கிற வைரமுத்துவின் கவிதை வரிகளை
ஞாபகப்படுத்துகிறேன்.
சரியான முதலீட்டுத் திட்டம்!
ஓய்வுக்காலத்துக்காக ஆர்.டி போட்டி ருக்கேன். எஃப்டில்
பணம் சேர்க்கிறேன் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. இளம்வயதிலேயே ஓய்வுக்கால
முதலீட்டை ஆரம்பித்துவிடுவதால், தாராளமாக ரிஸ்க் எடுக்கலாம். அதனால்
ஈக்விட்டி திட்டங்களைத் தேர்வு செய்வது உத்தமம். நாம் தேர்வு செய்யும்
முதலீட்டுத் திட்டங்கள் சிறப்பாக அமைந்துவிட்டால், இலக்கை அடைவதும்
எளிதாகிவிடும்.
கடன் இல்லாமல் பார்த்துக்கொள்க!
50 வயதில் ஓய்வுபெற நினைப்பதால், பெரும்பாலும் கடன்
இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில் ஓய்வுக்குப்பிறகும் கடன்
இருக்கும்படியானால் நிம்மதியான ஓய்வுக்காலத்தை இழந்து தவிக்கும் நிலையே
உருவாகும். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் அவசரத் தேவை களுக்காகக் கடன்
வாங்கிவிட்டேன் என்று சொல்வார்கள். அவசரத் தேவைக்கான நிதி ஒதுக்குதல்
என்கிற திட்டமே இதுமாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்காகத்தான்
என்பதை மறக்க வேண்டாம்' என்று முடித்தார் யு.என்.சுபாஷ்.
ஆக, மேலே சொன்ன ஐந்து விஷயங்களைக் கடைப்பிடிப்பவர்கள் நிச்சயமாக தங்களுடைய 50 வயதில் ஓய்வுக்காலத்தை நிச்சயமாக்கிக் கொள்ளலாம்.
Post a Comment