பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை, எவரையும்
பற்றிக்கொள்ளும் சர்க்கரை நோய். இந்த நோய் ஏற்படுத்தும் நேரடிப்
பாதிப்பைவிடவும், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற துணை நோய்கள்
மூலம்தான் ஆபத்துகள் அதிகம். 'நமக்கு ஏன் வரப்போகிறது சர்க்கரை நோய்’ என்ற
மிதமிஞ்சிய அலட்சியத்தால், விழிப்பு உணர்வு இன்றி பலர் இந்த நோயின்
கோரப்பிடியில் சிக்கிவிடுகிறார்கள். வளரும் தலைமுறையினருக்கு இப்போதே
சர்க்கரை நோய் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தி, சர்க்கரை நோயாளிகளின்
எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் இந்த ஆண்டு உலக சர்க்கரை நோய் விழிப்பு
உணர்வு தினம் கொண்டாடப்படுகிறது.
சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் அன்புராஜன் சர்க்கரை நோய் பற்றி விரிவாகப் பேசினார்.
''ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பது, உடலில்
தேவைக்கு குறைவாக இன்சுலின் சுரப்பது அல்லது கணையத்தில் உற்பத்தியாகும்
இன்சுலினை, உடல் திசுக்கள் சரிவரப் பயன்படுத்தாமல் இருப்பதால் சர்க்கரை
நோய் ஏற்படுகிறது. இதனை 'டைப் ஒன், டைப் டூ, டைப் த்ரீ’ என மூன்று
வகைகளாகப் பிரித்து, ஒவ்வொரு வகைக்கும் ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும்.
டைப் - ஒன் சர்க்கரை நோய் குழந்தைகளுக்கு
ஏற்படக்கூடியது. இவர்களுக்குத் தேவையான அளவு இன்சுலின் சுரக்காது அல்லது
இன்சுலின் முற்றிலும் சுரக்காமல் போகும். அதனால், ஆயுள் முழுக்க இவர்கள்
உடலில் இன்சுலினைச் செலுத்தி ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த
வேண்டும்.

டைப் - 2, பெரியவர்களுக்கு ஏற்படக்கூடியது. ஆனால், இன்றோ வாழ்க்கைமுறை மாறுபாடு காரணமாக 25 வயதினருக்குக்கூட வருகிறது.
டைப் - 3 வகை, கர்ப்பக்கால பெண்களுக்கு வரக்கூடியது.
பிரசவம் முடிந்ததும் நோய் தானாகவே மறையலாம். அல்லது பிறக்கும்
குழந்தையையும் சேர்த்துப் பாதிக்கலாம்.
வயது, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால்
அளவு அதிகரிப்பு, மன அழுத்தம், உணவுக் க்கட்டுப்பாடு இன்மை, இதய நோயாளிகள்,
தைராய்டு மற்றும் ஹார்மோன் சுரப்பில் குறைபாடு போன்றவற்றால் சர்க்கரை நோய்
வரலாம். புற்றுநோய், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும்
ஸ்டிராய்டு மருந்தின் பக்கவிளைவாக சர்க்கரை நோய் ஏற்படக்கூடும்.
உடற்பயிற்சி எதுவுமே இல்லாமல் சோம்பிக்கிடப்பவர்களின்
வீட்டு வாசல் படியிலேயே சர்க்கரை நோய் காத்துக் கிடக்கிறது. அடிக்கடி
சிறுநீர் கழிப்பது, அதிகப் பசி, அதிக தாகம், உடல் எடை வேகமாகக் குறைவது,
உடல் சோர்வு, பார்வைக் குறைபாடு, கை மற்றும் கால்களில் உணர்ச்சி இல்லாத
நிலைமை, புண்கள் குணமடையக் காலதாமதம், கால் பாதத்தில் எரிச்சல் ஏற்படுவது,
பிறப்பு உறுப்பில் அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படுவது போன்றவை இந்த நோயின்
மிக முக்கிய அறிகுறிகள்.
இந்த நோயால் நேரடிப் பாதிப்பு எதுவும் கிடையாது என்றாலும், பிற உறுப்புகளின் செயலை

முடக்கிப்போடும்
ஆபத்து இருக்கிறது. பார்வை பாதிப்பு, மூளைப் பக்கவாதம், ரத்தக்
குழாய்களில் அடைப்பு ஏற்படுதல், நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுதல்,
சிறுநீரகச் செயல் இழப்பு போன்ற விளைவுகள் ஏற்படலாம் என்பதால் கூடுதல்
கவனத்துடன் இருக்க வேண்டும்.
காரணமே இல்லாமல் இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு
இருந்தாலும், தடுப்பு நடவடிக்கையாக உடற்பயிற்சி மற்றும் சாப்பாட்டு
விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தலாம். தேவையான அளவுக்கு ஓய்வு
எடுக்கலாம். ஆனாலும் நோய் வந்துவிட்டால் இன்சுலின் செலுத்துவது, உடல்
திசுக்களின் திறனை மேம்படுத்த மாத்திரைகள் கொடுப்பது போன்ற சிகிச்சைகளைத்
தொடர்ந்து எடுக்க வேண்டியது இருக்கும். மொத்தத்தில், கட்டுப்பாட்டுடன்
நடந்து கொள்பவர்கள் மட்டுமே, சர்க்கரை நோய் என்பது ஒரு நோயல்ல என்பதைப்
புரிந்துகொள்வார்கள்'' என்றார் டாக்டர் அன்புராஜன்.
''பொதுவாக சர்க்கரை நோயாளிகள் அதோடு இணைந்து வாழக்
கற்றுக் கொண்டால், எந்தச் சிக்கலும் இருக்காது'' என்றார், சித்த
மருத்துவரான மைக்கேல் ஜெயராஜ்.
''சர்க்கரை நோய்க்கு உணவுக் கட்டுப்பாடு மிகவும்
முக்கியம். கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கக்கூடிய அரிசி, கிழங்கு வகைகளைத்
தவிர்க்க வேண்டும். அதே சமயம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல்
போய் விடக் கூடாது என்பதால், கீரை வகைகள், காய், கனிகளை உணவில் சேர்த்துக்
கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு, நாவல் பழம் நல்லது. ஆப்பிள், பப்பாளி
போன்ற பழங்களை மிகக் குறைவாகச் சேர்க்கலாம். இனிப்பு வகைகளை அறவே தவிர்க்க
வேண்டும். காலையில் பெரிய நெல்லிக்காயைச் சாறு எடுத்துக் குடிப்பதும்
நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும்'' என்கிறார் மைக்கேல் ஜெயராஜ்
நம்பிக்கையோடு.
- பி.ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்
சர்க்கரை நோயாளிகளின் கவனத்துக்கு...
சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டிய, செய்யக்கூடாதவை பற்றி சித்த மருத்துவரான மைக்கேல் ஜெயராஜ் கூறும் ஆலோசனைகள்:

டாக்டரின் பரிந்துரை இல்லாமல் சுய மருத்துவம் செய்துகொண்டால், அது உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

உணவுக்கு முன்பும் உணவுக்கு பின்பும் உடலில் இருக்கும் குளுக்கோஸின் அளவை கணக்கிட்டு, அதற்கு ஏற்ப மருத்துவம் செய்யப்பட வேண்டும்.

டாக்டர்கள் கொடுக்கும் மருந்து மாத்திரைகள் குறிப்பிட்ட நேரத்தில் எடுக்க வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்து, மாத்திரையின் அளவை கூட்டவோ, குறைக்கவோ கூடாது.

சர்க்கரை
நோய்க்கான மாத்திரைகளை எடுக்கும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு
அதிகமாகக் குறையும்போது வாய் குழறல், தலைச் சுற்றல், பார்வைக் குறைவு,
தலைவலி, இதயத்துடிப்பு அதிகரிப்பு, வேர்வை அதிகரிப்பு, அதிக எரிச்சல், மன
உளைச்சல், மயக்கம் ஏற்படலாம். அதனால், எப்போதும் கையில் குளுக்கோஸ்,
இனிப்புகளை வைத்துக்கொள்வது நல்லது.

தங்களது நோய் குறித்த விவரம், அதற்கான மருந்து விவரங்கள் குறித்த அட்டையை எப்போதும் பையில் வைத்திருக்க வேண்டும்.

காலில்
சிறிய புண் ஏற்பட்டால்கூட அது உடல் உறுப்பை அகற்றும் அளவுக்கு, சிக்கலை
ஏற்படுத்திவிடும். பாதங்களைக் கவனமாகப் பாதுகாப்பது அவசியம்.

புகையும், போதையும் சர்க்கரை நோயாளிகளுக்குக் கடும் பகையாளிகள். இந்தப் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது.
இனிப்பு குறித்த கசப்புச் செய்தி!
இந்தியர்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் சர்க்கரை நோய்
முக்கிய இடத்தைப் பிடித்து இருக்கிறது. 2025-ல், 25 கோடி இந்தியர்கள்
சர்க்கரை நோயாளிகளாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்படுகிறது. இப்போது,
உலகில் உள்ள ஐந்து சர்க்கரை நோயாளிகளில் ஒருவர் இந்தியர். உலகம்
முழுவதிலும், 10 வினாடி நேரத்தில் ஒரு சர்க்கரை நோயாளி மரணம் அடைகிறார்.
அதே 10 வினாடியில் புதிதாக ஒரு சர்க்கரை நோயாளி அடையாளம் காணப்படுகிறார்
என்பது வருந்தத்தக்க விஷயம்.
Post a Comment