சாம்பார் சாதம் --- சமையல் குறிப்புகள்,
சாம்பார் சாதத்திற்கான குறிப்பு கொடுக்கும் முன் அதைப்பற்றி சில வரிகள்.. .. சூடான சாதத்தில் உருக்கிய நெய்யூற்றி, மணமணக்கும் சாம்பாரை ஊற்றி...
https://pettagum.blogspot.com/2013/10/blog-post_4751.html
சாம்பார் சாதத்திற்கான குறிப்பு
கொடுக்கும் முன் அதைப்பற்றி சில வரிகள்.. ..
சூடான சாதத்தில் உருக்கிய
நெய்யூற்றி, மணமணக்கும் சாம்பாரை ஊற்றிப் பிசைந்து சாப்பிடுவதல்ல சாம்பார் சாதம்.
அதற்காக தனியாக மசாலாப்பொருள்கள் தயார் செய்து காய்கறிகளுடன் கலந்து வேக வைத்து,
தனியே வேகவைத்த பருப்பும் அரிசியும் நெய்யுடன் கலந்து செய்வதே சாம்பார் சாதம்.
சிலர் சாம்பார் சாதத்தில் எல்லா விதமான காய்கறிகளும் கலப்பார்கள். முள்ளங்கி
சாம்பார் நிறைய பேருக்கு பிடிக்கும். ஆனால் அது சாம்பாரின் ஒரிஜினல் மணத்தை சற்று
மாற்றி விடும். கத்தரிக்காய் காய்க்கு காய் ருசி மாறுபடும். சரியான ருசியான
கத்தரிக்காய் அமையா விடில் சாம்பாரின் ருசி குறைந்து விடும். முருங்கைக்கீரைக்கும்
முருங்கைக்காய்க்கும் கூட அப்படிப்பட்ட குணம் இருக்கிறது. காரட், பலாக்கொட்டை,
வெண்டைக்காய், முதலிய காய்கள் சாம்பாரின் ருசியை அதிகரிக்கும். பச்சை கொத்துமல்லி
கிள்ளிப்போடுவது கூட, ஜனவரி மாதம் கிடைக்கும் குட்டையான கொத்துமல்லியென்றால்
சாம்பாரின் வாசம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இனி சாம்பார் சாதம் பற்றிய
குறிப்பு:
சாம்பார் சாதம்:
தேவையான பொருள்கள்:பச்சரிசி- 2 கப்
துவரம்பருப்பு- 1 கப்
வெங்காயம்-1
சின்ன வெங்காயம்- 1 கை
பொடியாக அரிந்த தக்காளி- 1 கப்
கீறிய பச்சை மிளகாய்-4
பொடியாக அரிந்த கொத்தமல்லி- கால் கப்
சிறிய பிஞ்சு கத்தரிக்காய்-4
புளி- 2 நெல்லிக்காயளவு
தேவையான உப்பு
எண்ணெய்-3 மேசைக்கரண்டி
நெய்- 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை- சில இலைகள்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
உருளைக்கிழங்கு [ சற்று பெரியது]-1
காரட் [ சற்று பெரியது]-1
பொன்னிறமாக கால் ஸ்பூன் எண்ணெயில்
வறுத்துப்பொடிக்க வேண்டிய பொருள்கள்:
வெந்தயம்- 1 ஸ்பூன், கடுகு- அரை
ஸ்பூன், மிளகாய் வற்றல்-8, தனியா விதை- 4 ஸ்பூன், கடலைப்பருப்பு- 2 ஸ்பூன்,
பொட்டுக்கடலை- 2 ஸ்பூன், மிளகு- 8, பெருங்காயம்- 2 பட்டாணியளவு
செய்முறை:
உருளைக்கிழங்கு, காரட்டை சற்று
பெரிய துருவலாக துருவிக்கொள்ளவும்.வறுப்பதற்கான சாமான்களை
வறுப்பதற்கு முன், கால் ஸ்பூன் எண்ணெயில் முதலில் பெருங்காயத்தை வறுத்து
எடுத்துக்கொண்டு, அதன் பிறகு மற்ற சாமான்களை வறுத்தெடுத்து அதன் பின் பொடிக்கவும்.அரிசியையும் பருப்பையும் நன்கு
கழுவி, 6 கப் நீர் ஊற்றி குக்கரில் 6 விசில் வரை நன்கு வேகவைக்கவும்.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து
சூடாக்கவும்.எண்ணெயை ஊற்றி பொடியாக அரிந்த
வெங்காயம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.நன்கு வதங்கியதும் தக்காளியையும்
கொத்தமல்லி, சிறிய துண்டுகளாய் அரிந்த கத்தரிக்காய்கள் இவற்றைப்போட்டு மஞ்சள்
தூளும் சேர்த்து கறிவேப்பிலையும் சேர்த்து, தக்காளி நன்கு குழைந்து மசியும் வரை
நன்கு வதக்கவும்.அதன் பின் காரட்,
உருளைத்துருவல்கள் சேர்த்து ஒடு பிரட்டு பிரட்டவும்.புளியைக்கரைத்து ஊற்றி சிறிது
உப்பும் சேர்த்து வேக வைக்கவும்.மசாலா சற்று கெட்டியானதும் வெந்த
சாதம், உருக்கிய நெய் சேர்த்து, போதுமான உப்பும் சேர்த்து, குறைந்த தீயில்
அனைத்தும் சேரும் வரை ஐந்து நிமிடங்கள் கிளறவும்.கமகமக்கும் சாம்பார் சாதம்
தயார்!!
இதற்கு தொட்டுக்கொள்ளவென்று தனியாக
எதுவும் தேவையில்லை. அருமையான ஊறுகாய், அப்பளம், வற்றல்கள் போதும்.
Post a Comment