அரிசியின் விலை
ஆகாயத்தைக் கிழித்துக்கொண்டு செல்வதால் ஏற்படும் கவலை... சுகர் பிராப்ளம்
மக்களிடையே மிகவும் அதிகரித்து வரும் நிலை... இவற்றின் காரணமாக, அரிசி
சாதம் சாப்பிடுவதைக் குறைத்துக் கொண்டு, மாற்றாக கோதுமையைப் பயன்படுத்துவது
சமீப காலங்களில் அதிமாகியுள்ளது. இந்த டிரெண்டுக்கு ஈடு கொடுக்கும்
வகையில் '30 வகை கோதுமை ரெசிபி’களை வழங்குகிறார், ஓய்வுபெற்ற தலைமை
ஆசிரியரும், சமையல் கலையில் அனுபவம் மிக்கவருமான கல்பகம் லஷ்மணன்.
''கோதுமை மாவு, கோதுமை ரவை, கோதுமை குருணை ஆகியவற்றில்
வாய்க்கு ருசியான, வகை வகையான ரெசிபிகளை கொடுத்திருக்கிறேன். இவை உங்கள்
டைனிங் அறையில் குதூகலத்தை குடியேற செய்யும் என்று நம்புகிறேன்'' என்று
கனிவுடன் கூறுகிறார் கல்பகம்.
கோதுமை ஃபலூடா
தேவையானவை:
கோதுமை மாவு - அரை கப், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு
சிறு கரண்டி அளவு, பொடித்த சர்க்கரை - 3 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 10,
மாம்பழக் கூழ் - 2 டேபிள்ஸ்பூன், மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் - 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, பொடித்த முந்திரி - ஒரு டீஸ்பூன், வேஃபர்
பிஸ்கட் - 2
செய்முறை: கோதுமை
மாவை சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக பிசைந்து வைக்கவும். அடுப்பில்
வாயகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் நீர் விட்டு கொதிக்க விடவும். அடுப்பை
'சிம்’மில் வைத்து, ஓமப்பொடி நாழியில் பிசைந்த மாவைப் போட்டு, பரவலாக
கொதி நீரில் நூடுல்ஸ் போல பிழிந்து, வெண்ணெய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
நீரில் வெந்த நூடுல்ஸை வடிகட்டி, ஐஸ் கட்டிகளை மேல் போட்டு அரை மணி நேரம்
அப்படியே வைக்கவும். இதை ஒரு வடிதட்டியில் போட்டு வைக்கவும். ஒரு நீண்ட
கண்ணாடி கிளாஸில் முதலில் வடிகட்டிய நூடுல்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன்
சேர்க்கவும். மேலாக ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். அடுத்து ஃப்ரூட்
ஜாம் இரண்டு டீஸ்பூன் போட்டு, மேலாக ஒரு டீஸ்பூன் சர்க்கரை போடவும்.
அடுத்து மாம்பழக்கூழ் போட்டு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை போடவும். இதன்மேல்
வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து, சிட்டிகை பச்சை ஃபுட் கலர் சேர்க்கவும். மேலாக
முந்திரிப் பொடியை தூவி, வேஃபர் பிஸ்கட்டுடன் பரிமாறவும்.
கோதுமை குருணை புளி உப்புமா
தேவையானவை:
கோதுமை குருணை - ஒரு கப், புளிச்சாறு -அரை டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய்
(சிறியது) - ஒன்று, காய்ந்த மிளகாய் (சிறியது) - ஒன்று, இஞ்சி - சிறிய
துண்டு, தேங்காய் துருவல் - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை
டீஸ்பூன், கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன், ரீஃபைண்ட் ஆயில் - 2
டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை
குருணையை சிறிதளவு எண்ணெயில் வறுத்து ஆற விட்டு மிக்ஸியில் ஒரு சுற்று
சுற்றி எடுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, இரண்டு டீஸ்பூன் எண்ணெய்
விட்டு காய வைத்து, கடுகைப் போட்டு வெடிக்கவிடவும். இத்துடன்
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள்
சேர்த்து சிவக்க வறுக்கவும். இதனுடன் கீறிய பச்சை மிளகாய், பொடியாக
நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் 3 கப் நீர், புளிச்சாறு, உப்பு
சேர்த்து கொதிக்கவிடவும். அடுப்பை ’சிம்’மில் வைத்து, கோதுமை குருணையை
சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள எண்ணெயையும் ஊற்றி உப்புமா
சிறிது தளற ஆனதும், தேங்காய்த் துருவல் சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளிப்
போட்டு கிளறவும். பிறகு அடுப்பை அணைத்து, 10 நிமிடத்துக்குப் பின்னர்
பரிமாறவும். இதற்கு, தக்காளி சட்னி உகந்தது.
கோதுமை பழக்கஞ்சி
தேவையானவை:
கோதுமை மாவு - 2 டீஸ்பூன், பால் - ஒரு கப், பனங்கற்கண்டு - ஒரு
டேபிள்ஸ்பூன், பூரா சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், வாழைப்பழம், ஆப்பிள் -
தலா ஒரு துண்டு, கமலா ஆரஞ்சு சுளைகள் - 4.
செய்முறை: கால்
டம்ளர் வெதுவெதுப்பான பாலில் கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பழங்களை விதை நீக்கி மிக்ஸியில் மசிக்கவும். மீதமுள்ள பாலை நன்றாக கொதிக்க
விட்டு எடுக்கவும். இத்துடன் கரைத்த மாவு, பழக் கூழ், பனங்கற்கண்டு, பூரா
சர்க்கரை சேர்த்துக் கலக்கி பருகக் கொடுக்கவும்.
கோதுமை மாவு குழியப்பம்
தேவையானவை:கோதுமை
மாவு - முக்கால் கப், அரிசி மாவு - கால் கப், பொடித்த வெல்லம் - அரை கப்,
நன்கு பழுத்த பூவன் பழம் - ஒன்று, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், நெய்
- ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: ஒரு
பேஸினில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு, தேங்காய் துருவல், வாழைப்பழத்
துண்டுகளைப் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வெல்லத்தில் ஒரு கப் நீர் ஊற்றி,
நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கோதுமை மாவு கலவையுடன் வெல்லக்
கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலக்கவும். குழிப்
பணியாரக் கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காயவிடவும். பின்பு
அடுப்பை தணித்து, சிறு குழிக்கரண்டியால் மாவை எடுத்து ஒவ்வொரு குழியிலும்
ஊற்றவும். அப்பங்கள் சிவந்ததும் அப்பக் குத்தியால் இதை திருப்பிப் போடவும்.
அப்பங்கள் நன்கு சிவந்து பொன்னிறமானதும் கரண்டியால் எண்ணெயை வடிகட்டி,
வடிதட்டில் போடவும். இதைப் போல் முழு மாவையும் அப்பங்களாக செய்து ஒரு
பேஸினில் போடவும். மேலாக நெய், பொடித்த சர்க்கரை போட்டு நன்றாக குலுக்கி
பரிமாறவும்.
கோதுமை ரவை புட்டு
தேவையானவை:கோதுமை
ரவை - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - அரை கப்,
முந்திரி துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு -
சிறிதளவு.
செய்முறை: கோதுமை
ரவையை சிறிது நெய்யில் சிவக்க வறுத்து எடுக்கவும். அடுப்பில் ஒரு கப் நீரை
கொதிக்கவிட்டு சிறிது ஆறவிடவும். இத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்துக்
கலக்கவும். கோதுமை ரவையை ஒரு பேஸினில் போட்டு, முந்திரி துண்டுகளைச்
சேர்க்கவும். இதில் வெதுவெதுப்பான நீரை தெளித்து பிசிறவும் (ரவை உதிர்
உதிராய் இருக்க வேண்டும்). புட்டுக் குழாயில் சிறிதளவு தேங்காய் துருவலை
சேர்க்கவும். பின்னர் ஒரு டேபிள்ஸ்பூன் கோதுமை ரவை கலவையை சேர்க்கவும்.
மீண்டும் தேங்காய், ரவை என்று போட்டு குழலை நிரப்பி மூடவும். இதை நீர்
விட்டு, மூடிய குக்கரின் வெயிட் போடும் துளையில் செருகவும். புட்டு 15
நிமிடம் ஆவியில் வெந்ததும் எடுத்து, தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்.
குறிப்பு: புட்டுக் குழாயின் உள் நெய் தடவிய பின் புட்டு மாவை நிரப்பவும்
கோதுமை குருணை பாயசம்
தேவையானவை:கோதுமை
குருணை - 2 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு லிட்டர், மில்க் மெய்ட் - 2
டேபிள்ஸ்பூன், சர்க்கரை - அரை கப், நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் -
கால் டீஸ்பூன், முந்திரி, பாதாம் துண்டுகள், திராட்சை (சேர்த்து) - ஒரு
டேபிள்ஸ்பூன், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
செய்முறை: கோதுமை
குருணையுடன் சிறிதளவு நெய் சேர்த்து கடாயில் சிவக்க வறுக்கவும். இத்துடன்
அரை லிட்டர் பால் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். 2 விசில் வந்ததும்
அடுப்பை அணைத்துவிடவும். மீதமுள்ள நெய்யை கடாயில் விட்டு... முந்திரி,
பாதாம், திராட்சையை சிவக்க வறுத்தெடுக்கவும். மீதமுள்ள அரை லிட்டர் பாலை
இதே கடாயில் ஊற்றி, வற்றக் காய்ச்சி, மில்க்மெய்ட் சேர்த்துக் கலக்கவும்.
வெந்த கோதுமை குருணையை இதனுடன் சேர்த்து... சர்க்கரை, ஏலக்காய்த்துள்,
முந்திரி, பாதாம், திராட்சை கேசரி பவுடர் கலந்து, சூடாக அருந்தக்
கொடுக்கவும்.
கோதுமை சிப்ஸ்
தேவையானவை:கோதுமை
மாவு - 2 கப், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், ஓமம் - அரை டீஸ்பூன், சமையல்
சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான
அளவு.
செய்முறை: கோதுமை
மாவை ஒரு பேஸினில் போட்டு, உப்பு, வெண்ணெய், ஓமம், சமையல் சோடா சேர்த்துப்
பிசிறவும். இதில் நீர் தெளித்து, கெட்டியான பூரி மாவு பதத்தில் பிசைந்து
வைக்கவும் அப்பளக்கல்லில் சிறிது எண்ணெய் தடவி சிறிய ஆரஞ்சு சைஸ் அளவில்
பிசைந்த மாவை எடுத்து உருட்டி, வெறும் மாவில் புரட்டவும். இதை
அப்பளக்கல்லில் சப்பாத்தி போல திரட்டவும். பிறகு, கத்தியால் சின்ன பிஸ்கட்
வடிவில் அரை இஞ்ச் துண்டுகளாக 'கட்’ செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய்
விட்டு, காய்ந்ததும் ஒரு கைப்பிடி அளவு சிப்ஸை போட்டு, அடுப்பை 'சிம்’மில்
வைத்து, சிறிது சிவந்ததும் திருப்பிப் போடவும். சிப்ஸ் பொன்னிறமாக,
முறுகலாக ஆனதும், ஒரு வடிதட்டில் எடுக்கவும். இதைப் போல் மீதமுள்ள
மாவையும் சிப்ஸ்களாக செய்து, ஆறவிட்டு, எல்லாவற்றையும் காற்றுப்புகாத
டப்பாவில் சேமித்து பயன்படுத்தவும்.
கோதுமை மாவு சூர்மா
தேவையானவை: கோதுமை
மாவு - ஒரு கப், கொப்பரைத் துருவல் - அரை கப், வெள்ளரி விதை - ஒரு
டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், முந்திரி, பாதாம், பிஸ்தா
துண்டுகள், திராட்சை (சேர்த்து) - 2 டேபிள்ஸ்பூன், பொடித்த சர்க்கரை - 2
டேபிள்ஸ்பூன், நெய் - 4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கடாயில்
ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி, கோதுமை மாவை சிவக்க வறுத்தெடுக்கவும். ஒரு
டேபிள்ஸ்பூன் நெய்யில், முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரி, திராட்சை
ஆகியவற்றை வறுத்து மாவுடன் சேர்க்கவும். சர்க்கரை, ஏலக்காய்த்தூள்,
கொப்பரைத் துருவலை சேர்த்து நன்றாக கலக்கவும். மீதமுள்ள நெய்யை லேசாக
சூடுபடுத்தி, இத்துடன் சேர்த்துக் கலக்கி, சாப்பிட கொடுக்கவும்.
விருப்பப்பட்டால், சிறிதளவு பால் ஊற்றி, இதை உருண்டைகளாக செய்துக் கொடுக்கலாம்.
வெந்தயக்கீரை சப்பாத்தி
தேவையானவை: கோதுமை
மாவு - 2 கப், வெந்தயக் கீரை இலைகள் - ஒரு கப், கொத்தமல்லி - ஒரு
டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால்
டீஸ்பூன், தனியாத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால்
டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, ஓமம் - அரை டீஸ்பூன், ரிஃபைண்ட்
ஆயில் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு
பேஸினில் கோதுமை மாவு, உப்பு, ஓமம், சிறிதளவு எண்ணெய், மிளகாய்த்தூள்,
கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள்
ஆகியவற்றை சேர்க்கவும். வெந்தயக் கீரையை நன்றாகக் கழுவி நீரை வடித்து
பொடியாக நறுக்கவும். கொத்தமல்லியையும் நறுக்கவும். இரண்டையும் மாவுக்
கலவையுடன் சேர்க்கவும். இதில் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாக
மாவு பிசையவும். மாவை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, எலுமிச்சை சைஸ்
உருண்டைகளாகச் செய்யவும். சப்பாத்திக் கல்லில் ஓர் உருண்டையை வைத்து
கைகளால் அழுத்தி பிசைந்து, மேல் மாவு தொட்டு சப்பாத்தி போல பரத்தவும்.
அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து சூடானதும், ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு
பரவவிட்டு சப்பாத்தியை போடவும். சிறிது சிவந்ததும் திருப்பிப் போட்டு
எண்ணெய் ஊற்றவும். சப்பாத்தி நன்றாக சிவந்ததும் எடுத்து, சுத்தமான துணியில்
மூடி வைக்கவும்.
இந்த சப்பாத்தியை 2 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம். தொட்டுக் கொள்ள ஸ்வீட் ஊறுகாய் அல்லது ஜாம் சிறந்தது.
உருளைக்கிழங்கு கேரட் பரோட்டா
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப், உருளைக்கிழங்கு - ஒன்று (வேக வைத்து மசிக்கவும்),
கேரட் - ஒன்று (துருவிக் கொள்ளவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு
டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் -
அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள்- அரை டீஸ்பூன், பிஞ்சு பச்சை மிளகாய் (பொடியாக
நறுக்கவும்) - ஒன்று, துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் -
அரை டீஸ்பூன், சீரகத்தூள், தனியாத்தூள் - தலா கால் டீஸ்பூன், வெண்ணெய் -
ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை
மாவில் சிறிதளவு உப்பு, வெண்ணெய் சேர்த்து, வெதுவெதுப்பான நீர் தெளித்து
கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்
விட்டு, சீரகம் தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட்,
இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள்,
சிறிதளவு உப்பு, சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி
சேர்த்து நன்கு வதக்கி ஆறவிடவும் (இதுதான் பூரணம்).
பிசைந்து வைத்த மாவில் எலுமிச்சை சைஸ் உருண்டை எடுத்து,
நன்கு உருட்டி பிசைந்து வட்டமாக தட்டவும். இதில் சிறு எலுமிச்சை அளவு
பூரணம் வைத்து மூடி, மாவு தொட்டு, பாலிதீன் பேப்பரில் வைத்து பரோட்டாவாக
திரட்டவும். அடுப்பில் குழிவான நான்ஸ்டிக் தவா வைத்து, சூடாக்கி சிறிது
எண்ணெய் ஊற்றவும். பரோட்டாவை போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு, சிவந்ததும்
திருப்பிப் போட்டு, இருபுறமும் சிவந்ததும் எடுக்கவும்.
இதற்கு பூந்தி ராய்தா சிறந்த சைட்டிஷ்.
கோதுமை மாவு தளி வடாம்
தேவையானவை: கோதுமை
மாவு - 2 கப், பச்சை மிளகாய் - ஒன்று, சீரகம் - ஒரு டீஸ்பூன், சமையல் சோடா
- ஒரு சிட்டிகை, வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை
மாவில் உப்பு, சமையல் சோடா சேர்த்துக் கலக்கவும். பச்சை மிளகாயை
மிக்ஸியின் சின்ன ஜாரில் அரைத்து இத்துடன் சேர்க்கவும். மாவை நீர் சேர்த்து
தோசை மாவு பதத்தில் கட்டியில்லாமல் கரைக்கவும். இதை இரண்டு பாத்திரங்களில்
சமமாக எடுத்துக் கொள்ளவும். ஒன்றில் சீரகமும் மற்றதில் எள்ளையும்
சேர்த்துக் கலக்கவும். தளி வடாம் செய்யும் தட்டுக்களில் சிறிது எண்ணெயை
தடவி ஒரு டேபிள்ஸ்பூன் மாவை வட்டமாகப் பரத்தவும். இதேபோல் எல்லா
தட்டுகளிலும் ஊற்றி ஸ்டாண்டில் பொருத்தி குக்கரில் வைத்து 15 நிமிடம் வேக
விட்டு, வெளியே எடுக்கவும். பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி, வேக வைத்த
வடாம்களை இரண்டு நாள் காயவிடவும். பிறகு, திருப்பிப் போட்டு நன்றாக
காய்ந்ததும் எடுத்துப் பொரிக்கவும்.
கோதுமை உருண்டை
தேவையானவை: கோதுமை
மாவு - 2 கப், பொடித்த வெல்லம் - அரை கப், முந்திரி, பாதாம் துண்டுகள் -
ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை
டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கோதுமை
மாவை ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் சிவக்க வறுத்தெடுக்கவும். முந்திரி,
பாதாமை சிறிது நெய்யில் வறுத்து, சூட்டுடன் தேங்காய் துருவலை கலந்து
வைக்கவும். வெல்லத்தை கால் கப் நீரில் கரைத்து வடிகட்டி இரண்டு கம்பி
பதத்தில் பாகு காய்ச்ச வும். இத்துடன் கோதுமை மாவு, முந்திரி, பாதாம்
துண்டுகள், தேங்காய் துருவல், மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்துக்
கலந்து, சிறிது ஆறவிட்டு உருண்டைகள் பிடிக்கவும் (சிறிதளவு பால் சேர்த்தும்
பிடிக்கலாம்).
கோதுமை ஜிலேபி
தேவையானவை: கோதுமை
மாவு - கால் கப், மைதா மாவு - கால் கப், இனிப்பில்லா கோவா - அரை கப்,
புளித்த தயிர் - 2 டேபிள்ஸ்பூன், கேசரி பவுடர் - 2 சிட்டிகை, சர்க்கரை - 2
கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், ரோஸ் எசன்ஸ் - சிறிதளவு, சமையல்
சோடா - ஒரு சிட்டிகை, ரெடிமேட் தேங்காய் துருவல் - சிறிதளவு, எண்ணெய்
பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: கோதுமை
மாவு, மைதா மாவு, கோவா, தயிர், சமையல் சோடா சேர்த்து தண்ணீர் விட்டு
கெட்டி இட்லி மாவு பதத்தில் கரைத்து 2 மணி நேர ஊறவிடவும். பரந்த, குழிவான
நான் ஸ்டிக் தவாவில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். சிறு கண்ணுடைய
கொட்டாங்குச்சியை சுத்தம் செய்து, ஒரு கண்ணில் துளையிட்டுக் கொள்ளவும்.
சுட்டு விரலால் கொட்டாங்குச்சி துளையை மூடிக் கொண்டு ஒரு கரண்டி ஜிலேபி
மாவை கொட்டாங்குச்சியில் ஊற்றவும். பின்பு எண்ணெயில் இதை வட்டமாக பிழிந்து
சிறிது மொறுமொறுப்பாக வடிதட்டில் எடுத்து வடிகட்டவும். மற்றொரு கடாயில்
சர்க்கரை, அரை கப் நீர் விட்டு பிசுக்கு பதத்தில் பாகு காய்ச்சவும். இதில்
ஒரு டீஸ்பூன் பாலை விட்டால், அழுக்கு நுரைத்து வரும். அதை வெளியே
எடுத்துவிடவும். பாகில் ஏலக்காய்த்தூள், எசன்ஸ், கேசரி பவுடர் கலந்து
அடுப்பை அணைக்கவும். ஜிலேபியை இதில் சூட்டுடன் அமுக்கி, ஒரு தட்டில்
அடுக்கி, மேலாக ரெடிமேட் தேங்காய் துருவலை தூவவும்.
கோதுமை சமோசா
தேவையானவை: கோதுமை
மாவு - முக்கால் கப், மைதா மாவு - கால் கப், வெண்ணெய் அல்லது சூடான
எண்ணெய் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - சிறு துண்டு, வேக
வைத்த உருளைக்கிழங்கு - 2, பச்சைப் பட்டாணி - ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், நறுக்கிய
கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள், சாட் மசாலாத்தூள் - தலா
அரை டீஸ்பூன், அம்சூர் பொடி (மாங்காய் பொடி) - கால் டீஸ்பூன், சோம்பு
- அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை
மாவுடன் மைதா மாவு, சிறிதளவு உப்பு, வெண்ணெய் சேர்த்துக் கலந்து தண்ணீர்
தெளித்துக் கெட்டியாக பிசைந்து, 30 நிமிடம் ஊறவிடவும். வேக வைத்த
உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். பட்டாணியை சிறிதளவு
தண்ணீரில் வேக வைத்து எடுக்கவும். இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக
நறுக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காயவிட்டு, சோம்பை
சேர்க்கவும். அது சிவந்ததும் இஞ்சி, பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
இத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சாட் மசாலாத்தூள், கரம்
மசாலாத்தூள், அம்சூர் பொடி கலந்து... கொத்தமல்லி, மசித்த உருளைக்கிழங்கு
சேர்த்துக் கிளறி கீழே இறக்கவும். உருளை கலவையை சிறு எலுமிச்சை அளவு
உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிசைந்த கோதுமை மாவில் பெரிய எலுமிச்சை
சைஸ் உருண்டை எடுத்து, வெறும் மாவு தொட்டு உள்ளங்கை அளவுக்கு வட்டமாக
பரத்தவும். இதை 2 அரை வட்ட துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு துண்டை
பேப்பர் கோன் (பொட்டலம்) போல செய்து கொள்ளவும். இதில் இதில் உருளைக் கலவை
உருண்டையை வைத்து, சிறிது தண்ணீர் தொட்டு விளிம்புகளை ஒட்டிக் கொள்ளவும்.
இது போல் எல்லா சமோசாக்களையும் செய்து வைக்கவும். எண்ணெயை காய வைத்து
சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரிக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள ஸ்வீட்
புதினா சட்னி, கார சட்னி ஏற்றது.
கோதுமை ரவா தோசை
தேவையானவை: கோதுமை
மாவு - முக்கால் கப், அரிசி மாவு - கால் கப், ரவை - அரை கப், புளித்த மோர்
- ஒரு கரண்டி, சீரகம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா
ஒன்று, இஞ்சி - சிறு துண்டு, கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை -
ஒரு ஆர்க்கு, ரிஃபைண்ட் ஆயில் - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, உப்பு, சீரகம், மோர்,
பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி,
கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் விட்டு, தோசை மாவை விட நீர்க்கக் கரைத்துக்
கொள்ளவும். அடுப்பில் நான்ஸ்டிக் தோசைக்கல்லைப் போட்டு சூடானதும். சிறிது
எண்ணெயை தடவி, மாவை விளிம்பிலிருந்து வட்டமாக உள்புறம் ஊற்றவும். ஒரு
டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விட்டு, தோசை சிவந்ததும் திருப்பிப் போட்டு,
முறுகலாக எடுத்துப் பரிமாறவும்.
கோதுமை வெஜிடபிள் கஞ்சி
தேவையானவை:
கோதுமை மாவு - 2 டீஸ்பூன், பால் - ஒரு கப், கேரட் - ஒரு துண்டு, பச்சைப்
பட்டாணி - ஒரு டேபிள்ஸ்பூன், பிஞ்சு கோஸ் இலை - ஒன்று, சர்க்கரை - கால்
டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை: கேரட்,
கோஸை தோல், நரம்பு நீக்கவும். அரை கப் தண்ணீரில் சிட்டிகை உப்பு சேர்த்து,
அதில் கேரட், பட்டாணி, கோஸ் சேர்த்து நன்றாக வேகவிடவும். இதை மிக்ஸியில்
அரைத்துக் கொள்ளவும். கால் டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 2 டீஸ்பூன் கோதுமை
மாவை கலக்கவும். மீதமுள்ள பாலைக் கொதிக்கவிட்டு, சர்க்கரை, கோதுமை மாவு
கலவை, அரைத்த வெஜிடபிள் கலந்து பருகக் கொடுக்கவும்.
கோதுமை அல்வா
தேவையானவை: சம்பா
கோதுமை - ஒரு கப், சர்க்கரை - இரண்டரை கப், நெய் - அரை கப், ரிஃபைண்ட்
ஆயில் - கால் கப், எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை
டீஸ்பூன், கேசரி பவுடர் - 2 சிட்டிகை, முந்திரி, பதாம், பிஸ்தா துண்டுகளின்
கலவை - ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன், பாதாம் எசன்ஸ்
(விருப்பப்பட்டால்) - சில சொட்டுகள்.
செய்முறை: கோதுமையைக்
கழுவி முதல் நாள் இரவே நீரில் ஊற வைக்கவும். மறுநாள் நீரை வடித்து,
கிரைண்டர் அல்லது மிக்ஸியில் சேர்த்து சிறிது சிறிதாக நீர் விட்டு நன்றாக
அரைக்கவும். இதை எடுத்து சிறு கண்ணுள்ள வடிதட்டியில் போட்டு கரண்டியால்
அழுத்தி பாலை வடிக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை
வடிகட்டவும். இது போல் மூன்று நான்கு முறை பாலை வடித்து எடுத்து, இரண்டு
மணி நேரம் தனியாக வைக்கவும். பாலின் மேலாக நீர் தெளிந்திருக்கும். இதை பால்
சிதறாமல் வடிகட்டவும். மீண்டும் அரை மணி நேரம் வைத்திருந்து, மேலே
தெளியும் நீரை வடித்துவிடவும். முந்திரி, பதாம், பிஸ்தா துண்டுகளின் கலவையை
சிறிதளவு நெய்யில் வறுத்தெடுக்கவும். எண்ணெய் - நெய்யைக் கலந்து
கொள்ளவும்.
நான்ஸ்டிக் கடாயில் சர்க்கரை, கோதுமைப்பால், ஒரு கரண்டி
எண்ணெய் - நெய் கலவை சேர்த்துக் கிளறவும். கோதுமைப்பால் கெட்டியாக
வரும்போது மீண்டும் எண்ணெய் - நெய் கலவை சேர்த்துக் கிளறவும். கோதுமைப்
பால் கெட்டியாகி கடாயில் ஒட்டாமல் வரும்போது, சிறிதளவு தண்ணீரில் கரைத்த
கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் பிரிந்து வரும் வரை வரை
கிளறவும். முந்திரி, பதாம், பிஸ்தா, வெள்ளரி விதை, எலுமிச்சைச் சாறு
சேர்த்து நன்கு கிளறி, அல்வா கையில் ஒட்டாமல் உருண்டு வரும்போது அடுப்பை
அணைக்கவும். விருப்பப்பட்டால் பாதாம் எசன்ஸ் கலக்கவும். நெய் தடவிய தட்டில்
பரத்தி சுடச்சுடவோ... ஆறிய பிறகு துண்டுகளாக்கியோ பரிமாறவும்.
கோதுமை தட்டை
தேவையானவை: கோதுமை
மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், ஊற வைத்த கடலைப்பருப்பு -
ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு
டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு
பேஸினில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், கடலைப்பருப்பு,
பெருங்காயத்தூள், வெண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு
பூரி மாவு பதத்தில் பிசையவும். ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் சிறு எலுமிச்சை
அளவு மாவை உருட்டி, உள்ளங்கை அளவு மெல்லிதாக தட்டி, காய வைத்த எண்ணெயில்
பொரித்தெடுக்கவும்.
கலர்ஃபுல் ஸ்வீட் சிப்ஸ்
தேவையானவை: கோதுமை
மாவு - 2 கப், ரவை - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை, செர்ரி, கேசரி ஃபுட்
கலர்கள் - தலா ஒரு சிட்டிகை, சமையல் சோடா - கால் டீஸ்பூன், பொடித்த
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், சிட்ரிக் ஆஸிட் - அரை டீஸ்பூன், நன்றாக பொடித்த
முந்திரி - 2 டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிக்க
தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
கோதுமை மாவுடன் ரவை, சமையல் சோடா, வெண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு, பொடித்த
சர்க்கரை, சிட்ரிக் ஆஸிட், முந்திரிப் பொடி சேர்த்து நீர் தெளித்து
கெட்டியாக பிசைந்து நான்கு பகுதிகளாக பிரிக்கவும். ஒன்றில் பச்சை,
அடுத்ததில் கேசரி, அடுத்து செர்ரி கலர் சேர்த்து... நான்காவதை வெண்மையாக
விட்டு மீண்டும் பிசைந்து கொள்ளவும். அடுப்பில் எண்ணெயை காயவிட்டு
'சிம்’மில் வைக்கவும். முதலில் வெள்ளை மாவை உருட்டி மேல் மாவு தொட்டு
பரத்தி, சதுரமாக 'கட்’ செய்து, காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறத்தில்
வறுத்து எடுக்கவும். பிறகு மீதமுள்ள மூன்று கலர் மாவுகளையும் முக்கோணம்,
டைமண்ட், செவ்வகம் என்று வெவ்வேறு வடிவங்களில் 'கட்’ செய்து பொரிக்கவும்.
ஆறியதும் எல்லாவற்றையும் காற்றுப்புகாத டப்பாவில் சேர்த்து பயன்படுத்தவும்.
கோதுமை ரவை டோக்ளா
தேவையானவை: கோதுமை
ரவை - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, கொத்தமல்லி
(நறுக்கியது) - ஒரு டேபிள்ஸ்பூன், புளித்த தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், ஈனோ
ஃப்ரூட்சால்ட் பிளெயின் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு - அரை
டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பொடித்த
சர்க்கரை - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை
ரவையை சிறிது எண்ணெயில் லேசாக வறுத்தெடுக்கவும். இஞ்சியை தோல் சீவி, பச்சை
மிளகாயை காம்பு நீக்கி ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கோதுமை ரவையை ஒரு பேஸினில் போட்டு... உப்பு, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது,
கொத்தமல்லி, ஈனோ ஃப்ரூட் சால்ட், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சீரகம்
சேர்க்கவும். இதனுடன் தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டி இட்லி மாவு
பதத்தில் கரைக்கவும். இதை அரை மணிநேரம் ஊறவிடவும். ஒரு இஞ்ச் குழிவுள்ள
வட்ட தட்டில் எண்ணெய் தடவி, கரைத்த மாவை பரப்பவும். இட்லி பாத்திரத்தில்
இதை 15 நிமிடம் ஆவியில் வேகவிடவும். பின்பு வெளியே எடுக்கவும். கடுகை
எண்ணெயில் வெடிக்க விட்டு இதன் மேலே பரவலாக போடவும். கொத்தமல்லி, தேங்காய்
துருவலையும் பரவலாக தூவவும். பொடித்த சர்க்கரையில் சிறிது தண்ணீர்,
எலுமிச்சைச் சாறு கலந்து மேலாக ஊற்றவும். கோதுமை ரவை டோக்ளா தயார்.
இதை விருப்பப்படி துண்டுகள் செய்து, புதினா ஸ்வீட் சட்னியுடன் பரிமாறலாம்.
கோதுமை வெல்ல தோசை
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப், அரிசி மாவு, வெல்லம் (பொடித்தது) - தலா அரை கப்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
ரிஃபைண்ட் ஆயில் - கால் கப், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: வெல்லத்தை
ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் கோதுமை மாவு,
அரிசி மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்துக் கலந்து,
தோசை மாவை பதத்தில் கரைக்கவும். அடுப்பில் சிறிது குழிவான நான்ஸ்டிக்
தவாவைப் போட்டு சூடாக்கவும். இதில் துளி எண்ணெயை தடவி, ஒரு கரண்டி மாவை
ஊற்றி (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்) மெல்லிய தோசையாக வார்க்கவும்.
சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, சிவந்ததும் தோசையை திருப்பிப் போடவும்.
இருபுறமும் சிவந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
கோதுமை மாவு நேந்திரங்காய் பஜ்ஜி
தேவையானவை: முற்றிய
நேந்திரங்காய் - 2, கோதுமை மாவு, மைதா மாவு - தலா அரை கப், சோள மாவு - ஒரு
டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்,
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, துருவிய வெங்காயம் - ஒரு டீஸ்பூன், பொடியாக
நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நேந்திரங்காய்களின்
காம்பை வெட்டி, நீள வாக்கில் கீறி, தோலை உரிக்கவும். இதை இரண்டாக
நறுக்கவும். பிறகு நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கோதுமை மாவு, மைதா மாவு, சமையல் சோடா, சோள மாவு, கேசரி பவுடர், உப்பு,
துருவிய வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து இட்லி
மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காய வைத்து,
நேந்திரங்காய்த் துண்டுகளை மாவில் முக்கி இரண்டு, மூன்றாக போடவும். பஜ்ஜி
உப்பி சிவந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
இதற்கு சாஸ், சட்னி சிறந்த சைட் டிஷ்.
கோதுமை காக்ரா
தேவையானவை: கோதுமை
மாவு - ஒன்றரை கப், ரவை - கால் கப், சீரகம் அல்லது ஓமம் - அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், சமையல் சோடா - கால் டீஸ்பூன், கரம்
மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை
மாவுடன் ரவை, சீரகம் அல்லது ஓமம், மிளகாய்த்தூள். சமையல் சோடா, கரம்
மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து, வெதுவெதுப்பான நீர்
விட்டு கலந்து கெட்டியாக பிசையவும். இதை அரை மணி நேரம் ஊறவிடவும். மீண்டும்
பிசைந்து சிறு எலுமிச்சை சைஸ் உருண்டைகளாக செய்யவும். இதை கைகளால் நன்றாக
உருட்டி, வெறும் மாவு தொட்டு எண்ணெய் தடவிய சப்பாத்திக் கல்லில் மெல்லிதாக 6
இஞ்ச் விட்டத்துக்கு பரத்தவும். இதை சூடான நான்ஸ்டிக் தவாவில் போட்டு
சுழற்றி, திருப்பிப் போடவும். இதில் குமிழ்கள் தோன்றி சிவப்பானதும் எடுத்து
வைக்கவும். இது எண்ணெய் சேர்க்காத சுட்ட அப்பளங்களைப் போல் இருக்கும்.
ஆறவிட்டு பிளாஸ்டிக் ஜிப்லாக் கவரில் போட்டு வைத்தால், ஒரு வாரம் வரை
கெடாது. இதை நெய், ஜாம், சாஸ் தொட்டு சாப்பிடலாம்.
வெஜிடபிள் சப்பாத்தி ரோல்
தேவையானவை: கோதுமை
மாவு - ஒன்றரை கப், கோஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உருளைக்கிழங்கு -
ஒன்று, பச்சைப் பட்டாணி - ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய வெங்காயம் - ஒரு
டேபிள்ஸ்பூன், கேரட் - ஒன்று (துருவிக் கொள்ளவும்), மிளகாய்த்தூள் - அரை
டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்,
துருவிய பனீர் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு
டேபிள்ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை
மாவுடன் சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, வெது வெதுப்பான நீர்
சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேக
வைத்து, தோல் உரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும். பட்டாணியையும் வேக
வைத்து மசித்துக் கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு,
சீரகத்தை சிவக்கவிடவும். இதில் துருவிய கோஸ், வெங்காயம், கேரட் சேர்த்து
நன்றாக வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கு, பட்டாணி, கொத்தமல்லி,
மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து நன்றாக
கிளறி கீழே இறக்கவும். இதுதான் பூரணம்.
பிசைந்த மாவில் பெரிய எலுமிச்சை சைஸ் மாவு எடுத்து
பிசைந்து எண்ணெய் தடவிய சப்பாத்திக்கல்லில் வைத்து பரத்தவும். திரட்டிய
சப்பாத்தியில் கால் பாகம் தவிர்த்து, நடுவில் 2 டீஸ்பூன் பூரணத்தை வைத்து
உருட்டும் வகையில் நீளமாக பரத்தவும். சப்பாத்தியின் நாற்புறமும் தண்ணீர்
தொட்டு தடவி, சப்பாத்தியை ரோலாக உருட்டி, விளிம்புகளை ஒட்டிவிடவும்.
மீதமுள்ள ஒரு ஸ்பூன் நெய்யுடன், சிறிதளவு எண்ணெயை கலக்கவும். குழிவான தவாவை
சூடாக்கி, ரோலை வைத்து சுற்றிலும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் - நெய் கலவையை
ஊற்றவும். ரோலின் அடிபாகம் சிவந்ததும் திருப்பிப் போடவும். ரோல் நன்றாக
சிவந்ததும், மேலாக பனீர் தூவியோ அல்லது பனீரை ரோலின் உள்ளே வைத்தோ சூடாக
பரிமாறவும்.
கலர்ஃபுல் டேஸ்ட்டி பூரி
தேவையானவை: கோதுமை
மாவு (தலை வடித்து) - 3 கப், ரவை - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 2
டீஸ்பூன், ஓமம், வெள்ளை எள், சீரகம் - தலா அரை டீஸ்பூன், பாலக் இலைகள் -
10, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய கேரட் - அரை
கப், துருவிய பீட்ரூட் - கால் கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம்
மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை
மாவு, ரவையை கலந்து நான்கு பகுதிகளாக, நான்கு குழிவான பேஸினில் போடவும்.
ஒவ்வொரு பகுதியுடனும் சிறிதளவு உப்பு, வெண்ணெய் சேர்க்கவும். பாலக்,
கொத்தமல்லியை கழுவி எடுக்கவும். கொதி நீரில் பாலக்கை போட்டு, உடனே எடுத்து
நீரை வடிகட்டவும். இதை கொத்தமல்லியுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக
அரைக்கவும். இதை ஒரு பகுதி மாவில் தேவைக்கேற்ப சேர்த்து, எள் சேர்த்து பூரி
மாவாக பிசைந்து வைக்கவும். கேரட்டை சிறு கண்ணுள்ள துருவலில் துருவி,
சீரகத்துடன் சேர்த்து, ஒரு பகுதி மாவில் சேர்த்து சிறிது நீர் தெளித்து
கெட்டியாக பிசையவும். பீட்ரூட்டை கழுவி, தோல்சீவி சிறு கண்ணுள்ள துருவலில்
துருவி ஒரு பகுதி மாவில் சேர்த்து, ஓமம் சேர்த்து நீர் தெளித்து கெட்டியாக
பிசைந்து கொள்ளவும். மீதமுள்ள மாவில் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள்
சேர்த்து நீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காய
விடவும், ஒவ்வொரு நிற மாவையையும் பூரிகளாக திரட்டி பொரித்தெடுக்கவும்
(தேவைக்கேற்ப அடுப்பை தணித்து பூரிகளைப் பொரிக்கவும்).
இதனை உருளை மசாலாவுடன் பரிமாறவும்.
முள்ளங்கி ஸ்டஃப்டு பரோட்டா
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப், முள்ளங்கி தேவைக்கேற்ப, இஞ்சித் துருவல் - ஒரு
டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் -
ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால்
டீஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - கால் கப், ஒரு லிட்டர்
பால் கவர் - 2, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை
மாவில் சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நீர் தெளித்து
கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதை ஒரு ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
முள்ளங்கியின் தண்டு நுனியை நறுக்கிவிட்டு, நன்றாக சுத்தம் செய்யவும். இதை
சிறு கண்ணுள்ள துருவலில் தேய்த்து துருவிக் கொள்ளவும். இத்துடன் சிறிது
உப்பு சேர்த்து பிசிறி 10 நிமிடம் ஊறவிடவும். பின்பு இதன் நீரை
ஒட்டப்பிழிந்து ஒரு பேஸினில் போடவும். இதனுடன் கடலை மாவு, மிளகாய்த்தூள்,
சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சித் துருவல், கொத்தமல்லி சேர்த்துக்
கலந்து நன்கு பிசிறி, சிறு எலுமிச்சை சைஸ் உருண்டைகளாக செய்து வைக்கவும்.
பிசைந்து வைத்த கோதுமை மாவில் பெரிய எலுமிச்சை சைஸ்
உருண்டை செய்து நன்கு பிசைந்து, எண்ணெய் தடவிய பாலிதீன் பேப்பரில் வைத்துத்
தட்டிக் கொள்ளவும். இதன் நடுவில் முள்ளங்கி பூரணம் வைத்து நீர் தொட்டு
உருட்டிக் கொள்ளவும். இதை வெறும் மாவு தொட்டு சிறிது தட்டி, பின் பாலிதீன்
பேப்பரின் நடுவில் வைத்து, மேலாக மற்றொரு பாலிதீன் பேப்பரை வைத்து, பூரணம்
வெளிவராமல் குழவியால் கவனமாக பரோட்டோ திரட்டிக் கொள்ளவும். பிறகு,
பாலிதீன் பேப்பர்களிலிருந்து எடுத்து, அடுப்பில் நான்ஸ்டிக் தவாவைப் போட்டு
சூடாக்கி, ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பரோட்டாவை கவனமாக அதில் போட்டு
மேலாக சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறத்தில் எடுக்கவும்.
பூந்தி ராய்தா அல்லது வெள்ளரி ராய்தா இதற்கு ஏற்ற சைட் டிஷ்.
கலர்ஃபுல் கோதுமை பரோட்டா
தேவையானவை: கோதுமை
மாவு - ஒன்றரை கப், தேங்காய் துருவல் - அரை கப், வெல்லம் - அரை கப்,
துருவிய கேரட் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பால் - அரை கப்,
நெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கோதுமை
மாவுடன் பால், சிறிதளவு நெய், உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து
வைக்கவும். கேரட்டைக் கழுவி, தோல் நீக்கி, சிறு கண் உள்ள துருவலில்
துருவிக் கொள்ளவும். அடுப்பில் நான்ஸ்டிக் கடாயை வைத்து ஒரு டீஸ்பூன் நெய்
ஊற்றி கேரட்டை சிறிது நேரம் வதக்கவும். இத்துடன் துருவிய தேங்காய்
சேர்த்து, லேசாக வதக்கி... பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக்
கிளறவும். பூரணம் கடாயில் ஒட்டாமல் சுருளும்போது எடுத்து ஆறவிடவும். இதை
பெரிய நெல்லிக்காய் சைஸ் உருண்டைகளாகப் பிடிக்கவும்.
பிசைந்து வைத்த கோதுமை மாவில் எலுமிச்சை அளவு மாவு
எடுத்து கைகளால் உருட்டிப் பிசைந்து, வெறும் மாவு தொட்டு உள்ளங்கை சைஸில்
பரத்தவும். நடுவில் பூரணம் வைத்து நன்கு பொதிந்து ஒட்டவும். இதை நெய் தடவிய
இரண்டு பாலிதீன் பேப்பர்களுக்கு நடுவில் வைத்து பூரணம் வெளிவராதபடி நன்கு
பரத்தி... பாலிதீன் பேப்பரிலிருந்து தனியே எடுத்து... அடுப்பில் நான்
ஸ்டிக் தவா வைத்து, சிறிது நெய் தடவி, பரோட்டாவை போடவும். சுற்றிலும் நெய்
ஊற்றி, சிவந்ததும் கவனமாக திருப்பிப் போட்டு, சிறிதளவு நெய் விட்டு
முறுகலாக எடுத்து, சூடாக பரிமாறவும்.
கோதுமை ரவை வெஜிடபிள் உப்புமா
தேவையானவை: கோதுமை
ரவை - ஒரு கப், பச்சைப் பட்டாணி - ஒரு டேபிள்ஸ்பூன், கேரட், வெங்காயம்,
குடமிளகாய் (சிறியது), பச்சை மிளகாய் - தலா ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி -
ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கடுகு - கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் -
ஒன்று, முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால்
டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு (விருப்பப்பட்டால்) - அரை டீஸ்பூன், ரிஃபைண்ட்
ஆயில் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில்
சிறிதளவு எண்ணெய் விட்டு கோதுமை ரவையை சிவக்க வறுத்தெடுக்கவும். அதே
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகை வெடிக்கவிடவும். இத்துடன்
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, காய்ந்த மிளகாயை சேர்த்து
சிவக்க வறுக்கவும். பொடியாக நறுக்கிய கேரட், வெங்காயம்,
குடமிளகாயை மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். பிறகு, நறுக்கிய
பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, நன்கு வதங்கியவுடன் மூன்று கப் தண்ணீர்,
உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து
ரவையை சிறிது சிறிதாக சேர்த்துக் கலக்கவும். மீதமுள்ள எண்ணெயையும்
சேர்த்து, ரவை நன்றாக வெந்ததும் கிளறி கீழே இறக்கவும். எலுமிச்சைச் சாறு,
கொத்தமல்லி சேர்த்து சூடாக பரிமாறவும்.
கோதுமை தோசை
தேவையானவை:
கோதுமை மாவு - முக்கால் கப், அரிசி மாவு - கால் கப், சீரகம் - அரை
டீஸ்பூன், புளித்த மோர் - கால் கப், வெங்காயம் - ஒன்று, இஞ்சி - சிறு
துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கோதுமை
மாவு, அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு... புளித்த மோர், சீரகம்,
உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி
சேர்த்து, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். அடுப்பில்
குழிவான நான்ஸ்டிக் தவாவை காயவிட்டு, ஒரு கரண்டி மாவை விளிம்பிலிருந்து
நடுவாக ஊற்றி, இடைவெளியை மாவால் பரத்தி, ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும்
விடவும். தோசை சிவந்ததும் எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.
பதிர் பேணி
தேவையானவை:
கோதுமை ரவை - ஒரு கப், நெய், அரிசி மாவு - தலா 2 டேபிள்ஸ்பூன், பால் -
ஒரு லிட்டர், மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன், பாதாம், பிஸ்தா, முந்திரி
துண்டுகள் (சேர்த்து) - 2 டேபிள்ஸ்பூன், பாதாம் எசன்ஸ் - சில துளிகள்,
ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் - தலா ஒரு சிட்டிகை, சர்க்கரை, ரிஃபைண்ட்
ஆயில் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: கோதுமை
ரவையுடன் உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, தண்ணீர் தெளித்து,
கெட்டியாக பூரி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும். ஒரு கிண்ணத்தில் நெய்,
அரிசி மாவை நன்கு குழைத்து வைக்கவும். பாலை அடுப்பில் வைத்து முக்கால்
பாகமாக காய்ச்சி, மில்க் மெய்ட், சர்க்கரை கலந்து கொதிக்கவிட்டு
இறக்கவும். இத்துடன் பாதாம் எசன்ஸ், ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்து
ஒன்றிரண்டாக பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி துண்டுகள், கேசரி பவுடர்
சேர்த்துக் கலக்கவும். ரவையை நன்றாக அடித்து பிசைந்து,மொத்தத்தையும் பெரிய
அப்பளக் கல்லில் பரத்தவும். இதன் மேல் குழைத்த நெய் - அரிசி மாவு கலவையை
தடவவும். இதை இரண்டாக மடித்து மீண்டும். நெய் கலவையை தடவவும். இதே போல்
மாவு காலியாகும் வரை ஒவ்வொரு மடிப்பிலும் தடவி வைக்கவும். பிசைந்த ரவையில்
ஒரு எலுமிச்சை சைஸ் உருண்டை செய்து அப்பளக் குழவியால் பெரிய பூரிகளாக
திரட்டவும். அடுப்பில் எண்ணெயை காய வைத்து, ஒவ்வொரு பூரியாக போட்டு
எடுத்து, வடிதட்டியில் எடுக்க வும். பூரியை ஒரு அகல பிளேட்டில் வைத்து பால்
கலவையை மேலாக ஊற்றவும்.
ஆச்சி கிச்சன் ராணி
ப்ரான் பால்ஸ் ரசம்
தேவையானவை: ப்ரான்
(இறால்) - கால் கிலோ, ஆச்சி ரசப் பொடி - 25 கிராம், ஆச்சி மஞ்சள்தூள் -
ஒரு சிட்டிகை, தக்காளி - 2, கடலைப்பருப்பு - 100 கிராம், புளி - சிறிதளவு,
வெங்காயம் - 3, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, சோம்பு,
பட்டை - சிறிதளவு, பூண்டுப் பல் - 4, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம்,
இஞ்சி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். ப்ரானை சுத்தம் செய்து ஆச்சி
மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நீர் விட்டு வேக வைக்கவும். வெந்தவுடன் அந்த
நீரை வடிகட்டி தனியே வைக்கவும். கடலைப்பருப்பை ஊற வைத்து, ப்ரானை சேர்த்து
அரைக்கவும். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, சோம்பு, பட்டை,
உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இதை சிறுசிறு உருண்டைகளாக செய்து
எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து தனியே வைக்கவும்.
புளியைக் கரைத்துக் கொள்ளவும். தக்காளியை மிக்ஸியில்
அரைத்து புளிக் கரைசலுடன் நன்கு கலக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்
விட்டு கடுகு, கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு தாளித்து... புளிக் கரைசல்,
சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள், ப்ரான் வேக வைத்த தண்ணீர் கலந்து
கொதிக்கவிடவும். ஆச்சி ரசப்பொடியை சேர்த்து, கொதிக்க விட்டு, பொரித்து
வைத்த ப்ரான் உருண்டைகளைப் போட்டு இறக்கி, கொத்தமல்லியை தூவினால்... ப்ரான்
பால்ஸ் ரசம் ரெடி!
Post a Comment