லாபம் பொங்கும் தேனீ வளர்ப்பு...! -- விவசாயக்குறிப்புக்கள்,

தேன் மழை பொழியுது...தென்னை மகசூல் கூடுது... லாபம் பொங்கும் தேனீ வளர்ப்பு...! ''விவசாயம், கால்நடை வளர்ப்புனு எதைச் செஞ்...


தேன் மழை பொழியுது...தென்னை மகசூல் கூடுது...

லாபம் பொங்கும் தேனீ வளர்ப்பு...!

''விவசாயம், கால்நடை வளர்ப்புனு எதைச் செஞ்சாலும் கவனமா பராமரிச்சாதான் வருமானம் கிடைக்கும். ஆனா, எந்தப் பராமரிப்பும் இல்லாம வருமானம் தர்றது தேனீ வளர்ப்பு மட்டுந்தாங்க. வருமானத்தோட, விளைச்சலையும் கூட்டுற அற்புதத்தைச் செய்யுது தேனீ. இதனால எனக்கு ரெட்டிப்பு சந்தோஷம்'' என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார், ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள கொளத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர்.
தோட்ட வேலையில் முனைப்பாக இருந்த பாஸ்கரைச் சந்தித்தபோது... ''தென்னை, வாழையைத் தவிர மத்த வெள்ளாமையைச் செய்றதில்லை. நாலு ஏக்கர் தென்னந்தோப்புல தேனீப் பெட்டிகளை வெச்சிருக்கேன். 10 வருஷத்துக்கு முன்ன சிவகிரியில இருக்கற தண்டாயுதபாணிதான் தேனீ வளர்க்கப் பயிற்சி கொடுத்தாரு. ஆரம்பத்துல ரெண்டு பெட்டியை வெச்சு, கொஞ்சம், கொஞ்சமா தேன் எடுக்க கத்துகிட்டேன். இப்ப 15 பெட்டி வரைக்கும் வெச்சிருக்கேன். குறைஞ்சது 10 பெட்டிகளுக்கு மேல வெச்சாதான் நல்ல வருமானம் கிடைக்கும். இதுக்கு முதலீடுனு பாத்தா ரொம்ப ரொம்பக் குறைவுதான். 20 ஆயிரம் தேனீக்களோட ஒரு பெட்டி 1,500 ரூபாய்க்குக் கிடைக்குது. பெட்டியை வாங்கிட்டு வந்து தோட்டத்துல வெச்சுட்டாப் போதும். வேற எந்தச் செலவும் இல்லை. தினமும் ஒரு பார்வை பாக்கணும். தினமும் பாக்கலைனாலும் வாரம் ஒரு முறையாவது பெட்டியில எறும்பு, கரையான் ஏறியிருக்கானு பாத்தாப் போதும். அவ்வளவுதான் பராமரிப்பு!'' என்று எளிய முன்னுரையிலேயே எல்லாவற்றையும் புரிய வைத்தவர்,
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் !
''எங்க தோப்புல தேனீ வளர்க்க ஆரம்பிச்சதுல இருந்து விவசாயமும் அருமையா இருக்கு. தேனீக்களோட அயல் மகரந்தச் சேர்க்கை காரணமா.. வாழை உற்பத்தியும் அதிகரிச்சிருக்கு. தென்னை மரமும் முன்னைக் காட்டிலும் இப்ப நல்லா இருக்கு. ஆரம்பத்துல விளையாட்டா ஆரம்பிச்சது. இப்ப வருமானத்தோட, விளைச்சலையும் அதிகரிச்சுருக்கு. என் மனைவி சங்கீதா, மகள் இலக்கியா கூட தேனீக்களை பயப்படாம, பக்குவமா கையாள பழகிட்டாங்க.
என்னைவிட அவங்கதான் தினமும் அதைப் பராமரிக்கறவங்க. சில நேரம் மழை இல்லாம விவசாயம் பொய்ச்சுட்டாலும்... தேனீ வளர்ப்பே அந்த வருஷம் வருமானத்தை சரி பண்ணிடும்'’ என்ற பாஸ்கர், தேனீப் பெட்டிகளை அமைக்கும் முறைகளைப் பற்றி சொல்லத் தொடங்கினார். அதைப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
2 அடுக்குகள்... 11 சட்டங்கள் !
'தேனீ வளர்ப்புப் பெட்டியில் இரண்டு அடுக்குகள் இருக்கும். மேல் அடுக்கில் சதுர வடிவிலான 5 சட்டங்கள் இருக்கும். கீழ் அடுக்கில் 6 சட்டங்கள் இருக்கும். மேல் அடுக்கை தேன் சேகரிக்கவும், கீழ் அடுக்கை, குஞ்சுகள் மற்றும் தேனீக்களுக்காகவும் ஒதுக்க வேண்டும். கீழ் அடுக்கில்தான் தேனீக்கள் அடை கட்டி வசிக்கும். ஒவ்வொரு சட்டமும் 3 சென்டி மீட்டர் இடைவெளியில் இருக்கும். அடைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காகத்தான் இந்த இடைவெளி. இந்தச் சட்டம் மேற்புறமாக உருவி எடுக்கும்படியான அமைப்பில் இருக்கும்.
சட்டம் அடங்கிய ஈரடுக்குப் பெட்டியின் அடிப்புறத்தில் ஒரு 'ஸ்டாண்ட்’ இருக்கும். அந்த ஸ்டாண்டின் அடிப்பகுதியை நிலத்தில் ஊன்றி வைக்க வேண்டும். பெட்டி, நிலத்திலிருந்து 2 அடி உயரத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தான் கொண்டு வரும் தேனை, எளிதாக தேனீக்கள் கூட்டில் வைக்கமுடியும். நாமும் சிரமப்படாமல் சட்டத்தை எடுத்து பெட்டியைப் பராமரிக்க ஏதுவாகவும் இருக்கும். பெட்டியின் அடிப்பாகத்தில் தேனீக்கள் வந்து செல்லும்அளவுக்கு சிறிய துளை இருக்கும். அத்துளையின் முன்தான் காவல்காரத் தேனீக்கள் இருக்கும். பெட்டியின் மேற்புறத்தில் பாலிதீன் பையைக் கொண்டு கட்டிவிட வேண்டும். இது பெட்டிக்கு நிழலைத் தருவதோடு, மழையிலிருந்தும் பாதுகாக்கும். ஒவ்வொரு பெட்டிக்குமான இடைவெளி 5 முதல் 6 அடி இருக்க வேண்டும்.
இது தனி உலகம் !
ராணித் தேனீ, வேலைக்காரத் தேனீ, ஆண் தேனீ என்று மூன்று வகைகள் உள்ள தேனீ குடும்பம், ஒவ்வொரு பெட்டியிலும் இருக்கும். ஒவ்வொரு வகை தேனீயும் ஒவ்வொரு வேலையைச் செய்யும். ராணித் தேனீக்கு... இளம் தேனீக்களின் தலைப்பகுதியில் உற்பத்தி ஆகும் 'ராயல் ஜெல்லியை’ தின்று, முட்டை வைப்பது மட்டும்தான் வேலை. இது வாழ்வில் ஒரே முறைதான் ஆண் தேனீயுடன் உறவு கொள்ளும். இதன் ஆயுள் காலம் மூன்று ஆண்டுகள். ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ மட்டும்தான் இருக்கும். அடைகட்டுவது, இளம் தேனீக்களைப் பராமரிப்பது, மகரந்தம் இருக்கும் திசையைக் காட்டுவது, தேன் சேகரிப்பது போன்ற வேலைகளை வேலைக்காரத் தேனீக்கள் செய்யும். இவற்றின் ஆயுள் காலம் நான்கு முதல் ஆறு மாதங்கள். இவற்றின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். இனப்பெருக்கத்துக்கு மட்டும் பயன்படும் ஆண் தேனீக்களின் ஆயுட்காலம் 2 முதல் 4 மாதங்கள். ஒவ்வொரு பெட்டியிலும் பத்துக்கும் மேற்பட்ட ஆண் தேனீக்கள் இருக்கும்.
பட்டத்து ராணி !
ராணித் தேனீ, 14-15 நாட்களிலும்; வேலைக்காரத் தேனீ, 21 நாட்களிலும்; ஆண் தேனீ, 24 நாட்களிலும் முட்டையில் இருந்து வெளியில் வரும். வெளிவந்ததுமே ராணித் தேனீ பறக்க ஆரம்பித்துவிடும். ஒரு பெட்டியில் உள்ள ராணித் தேனீக்கு வயதாகிவிட்டால், கூட்டில் உள்ள ஒரு தேனீயைத் தேர்ந்தெடுத்து, அடுத்த ராணித் தேனீயாக பதவியில் அமர வைக்கும் வகையில் ராயல் ஜெல்லிகளைக் கொடுத்து வேலைக்கார தேனீக்கள் வளர்க்க ஆரம்பிக்கும். வயதான ராணித் தேனீ இறந்துவிட்டால், இளம் ராணித் தேனீ பதவிக்கு வரும்.
எதிரிகள் உஷார் !
தேனீ வளர்ப்பில் முக்கியமான விஷயம்... தேன் அடையில ராணித் தேனீ இருப்பதைக் கண்காணிப்பதுதான். அடிக்கடி அதைப் பரிசோதிக்க வேண்டும். அடையில் உள்ள அறைகளில் பெரிய அறைதான் ராணித் தேனீயின் அறை. அங்கே அது இல்லைஎன்றால் வேறு பெட்டியில இருந்து ஒரு ராணித் தேனீயைப் பிடித்து வைக்க வேண்டும். பல்லி, ஓணான், கதண்டு, சிலந்தி ஆகியவை தேனீக்களின் முக்கிய எதிரிகள். இவை பெட்டிக்குள் போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அடை உள்ள சட்டத்தை ஒரு குழந்தையைத் தூக்குவது போல பக்குவமாக பொறுமையாகத் தூக்கினால்... தேனீக்கள் நம்மைக் கொட்டாது.
தொழில்நுட்பங்களைப் பக்குவமாக விவரித்த பாஸ்கர் நிறைவாக, ''ஒரு தேனீப் பெட்டியிலிருந்து வருஷத்துக்கு 10 கிலோ தேன் கிடைக்கும். என்கிட்ட இருக்குற 15 பெட்டிகள்ல இருந்து 150 கிலோ அளவுக்கு தேன் கிடைக்குது. ஒரு கிலோ 300 ரூபாய்னு விற்பனை பண்றேன். ஆக, பெருசா எந்த செலவும் இல்லாம... நாலு ஏக்கர் தென்னைக்கு நடுவுல தேனீ வளர்க்கறதால வருஷத்துக்கு 45 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. தென்னையில கிடைக்கற வருமானம் தனி! வேற என்ன வேணும் நமக்கு!'' என்று உற்சாகமாகக் கேட்டு விடைகொடுத்தார்.
பாஸ்கர் சொல்லும் 'வருமானக் கணக்கு'க்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ரகுராமன். ''நான் 5 ஏக்கர்ல விவசாயம் செய்றேன். ஏழு வருஷமா தேனீ வளர்ப்பையும் செஞ்சுட்டு வர்றேன். மொத்தமா 5 ஏக்கர்ல விவசாயம் செஞ்சு கிடைக்கற லாபத்தைவிட, தேனீ வளர்ப்புலதான் அதிக லாபம் கிடைக்குது'' என்கிறார், உறுதியான குரலில்!   
தொடர்புக்கு,
பாஸ்கர், செல்போன்: 99425-81333
தண்டாயுதபாணி, செல்போன்: 94433-41679
பரமானந்தம், செல்போன்: 94888-50363.
பூச்சியியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.
தொலைபேசி: 0422-6611214,414.

மகசூலைக் கூட்டும் மகரந்தச் சேர்க்கை !
தேனீ வளர்ப்பு தொடர்பாக விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுத்து வருபவர் ஈரோடு மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த தண்டாயுதபாணி. ''10 வயசுல இருந்தே தேனீக்கள் மேல எனக்கு ஆர்வம். பொழுதுபோக்கா தெரிஞ்சுக்கிட்ட விஷயந்தான் இப்ப எனக்கு சோறு போடுது. தேனீ வளர்ப்புல நான் கத்துக்கிட்ட விஷயங்கள மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுத்திருக்கேன். பயிர்களுக்கு இடையில ஊடுபயிர் சாகுபடி செய்ற மாதிரி தேனீ வளர்ப்பையும் செஞ்சா... மகசூலையும் கூட்டி, தனி வருமானத்தையும் கொடுக்கிற வள்ளல்கள்தான், தேனீக்கள்.
உதாரணமா, சூரியகாந்திச் செடியில மகரந்தச் சேர்க்கைக்காக ஒவ்வொரு பூவையும் காகிதம் அல்லது துணியை வெச்சு உரசி விட்டு, மகரந்தத்தைக் காத்துல பரவ விடுவாங்க. ஆனா, அந்தத் தோட்டத்துல தேனீக்களை வளத்தா இந்த வேலையை நாம செய்ய வேண்டியதில்லை. அதை தேனீக்கள் செஞ்சுடும். இதனால, உடல் உழைப்பும் நேரமும் நமக்கு மிச்சம். மகசூல் அதிகரிக்கிறதோட தேன் மூலமா கூடுதல் வருமானமும் கிடைக்கும். ஆரம்பத்துலயே அதிகளவுல முதலீடு செய்யாம... 10 பெட்டிகளை மட்டும் வாங்கி, ஆரம்பிக்கணும். கொஞ்சம் தொழில்நுட்பங்களை அனுபவ ரீதியா தெரிஞ்சுக்கிட்டா... இந்த பெட்டிகள்ல இருந்து நாமளே அடுத்தடுத்தப் பெட்டிகளை உருவாக்கிக்க முடியும். விவசாயிகள் மட்டும்தானு இல்லை. நகரத்துல இருக்கறவங்ககூட தேனீக்களை வளர்த்து வருமானம் பாக்கலாம்' என்று நம்பிக்கையூட்டுகிறார், தண்டாயுதபாணி.

அடுக்குத் தேனீக்கள் !
அடுக்குத் தேனீக்களை வளர்க்கும் முறைகளைப் பற்றி, திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையைச் சேர்ந்த தேனீ வளர்ப்புப் பயிற்சியாளர் பரமானந்தம் சொன்ன தகவல்கள்...
''அடுக்குத் தேனீக்கள் அடங்கியப் பெட்டிகள், பலரிடமும் விலைக்குக் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். அல்லது பெட்டியைத் தயார் செய்துகொண்டு... கரையான் புற்று, மரப்பொந்து, பாறை இடுக்குகள் ஆகிய இடங்களில் இருக்கும் அடுக்குத் தேனீக்களை எடுத்து, பெட்டியில் வைத்தும் வளர்க்கலாம். நாம் சேகரித்து வரும் தேன் அடையை, தேன் பெட்டியிலிருக்கும் சட்டத்தில் வாழைநார் கொண்டு முதலில் கட்ட வேண்டும். பிறகு, வெள்ளை நிற துணியைப் பயன்படுத்தி, ராணித் தேனீ உள்ள தேனீக் கூட்டத்தைச் சேகரித்து வந்து, பெட்டியில் வைக்க வேண்டும் (வேறு நிற துணிகளைப் பயன்படுத்தினால், தேனீக்கள் ஓடிவிடும்). ராணித் தேனீயைப் பெட்டிக்குள் வைத்துவிட்டால், வேலைக்காரத் தேனீக்கள் வந்து சேர்ந்துவிடும். ராணித் தேனீயைப் பெட்டியின் கீழ்ப்பகுதியில் இருக்கும் குஞ்சுகளின் அறையில் வைத்து விடலாம்.
தேன் அடை வைக்கப்பட்ட 10 முதல் 15 நாட்களில் சட்டங்களில் மெழுகு பிடித்து வளர்ந்து விடும். குஞ்சுகளின் அறை நிரம்பிய பிறகு, முட்டைகள் குறைவாக இருக்கும் ஒரு அடையை எடுத்து, இரண்டாக வெட்டி, தேன் அறையில் உள்ள இரண்டு சட்டங்களில் கட்டி வைக்க வேண்டும். இதன் மூலம் மற்ற சட்டங்களிலும் தேனீக்கள் அடையை உருவாக்கிவிடும். பூக்களின் சீசனைப் பொருத்து... 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை, ஒவ்வொரு பெட்டியில் இருந்தும் அரை கிலோ முதல் 3 கிலோ வரை தேன் எடுக்க முடியும்.
ஏக்கருக்கு 75 தேனீப் பெட்டிகள் !
பொதுவாக, இந்தியத் தேனீக்கள் சுமார் 3 முதல் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குச் சென்று தேன் சேகரிக்கும் குணமுடையவை. இவற்றை 10 அடிக்கு ஒரு பெட்டி வீதம் வைத்து வளர்க்கலாம். தென்னை, பாக்கு மரத்தோப்புகளாக இருந்தால், ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 5 பெட்டி முதல் 75 பெட்டிகள் வரை வைக்கலாம். இதன் மூலம் மகரந்தச் சேர்க்கை அதிகரிக்கும். தேனீப் பெட்டிகளை நிழல் பகுதியில் வைப்பது நல்லது. தென்னை மற்றும் பாக்கு மட்டைகளை பெட்டி மீது வைக்க வேண்டும். இதன் மூலம் மழை மற்றும் வெயிலிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதோடு, தேனீக்களுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
மாதம் 2 அறுவடை !
தேன் சேகரிப்பதற்கு பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட, கையால் இயக்கும் புகைபோக்கியில் காய்ந்த தென்னை நாரினைத் தீயிட்டுக் கொளுத்தி, புகையை தேன் அடை மீது ஊதி விட்டால்... தேனீக்கள் விலகி விடும். பிறகு, தேனைப் பிழிந்தெடுக்க பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட டிரம்மில் அடையை வைத்து, கைப்பிடியைச் சுற்றினால், தேன் வடிந்து டிரம்மில் சேகரமாகும்.
மூன்று ஆண்டுகளுக்குக் கெடாது !
அடையில் இருந்து சேகரித்த தேனை சூடுபடுத்தா விட்டால், இரண்டு மூன்று மாதங்களில் புளித்து விடும். அதனால், வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை வைத்து சூடாக்கி, அதனுள் சிறிய பாத்திரத்தில் தேனை ஊற்றி சூடாக்க வேண்டும். கொதிக்க வைத்த தேனில், மேல்பகுதியில் இருக்கும் நுரையை எடுத்துவிட்டு, சுத்தமான துணியில் வடிகட்டினால், இறந்துபோன தேனீக்கள், மெழுகு, பூ, இலை என தேவையில்லாதக் கழிவுகள் தங்கிவிடும். பிறகு, தேனை ஆறவைத்து... கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றலாம். இது 3 ஆண்டுகளுக்குக் கெட்டுப்போகாது. எக்காரணம் கொண்டும் குளிர்சாதனப்பெட்டியில் தேனை வைக்ககூடாது'' என்றார், பரமானந்தம்.

 மாதந்தோறும் பயிற்சி வகுப்புகள் !
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்புப் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இதைப் பற்றி பேசிய, பூச்சியியல் துறை பேராசிரியர் உமாபதி, ''தமிழ்நாட்டில் நிலவக்கூடிய தட்பவெட்ப நிலையில் பல்வேறு விதமான பூக்கள் பூக்கின்றன. அவற்றில் உற்பத்தியாகும் தேனைச் சேகரிக்க... இந்தியத் தேனீ மற்றும் இத்தாலியத் தேனீ வளர்ப்பு ஆகியவை பற்றி பயிற்சிகள் கொடுக்கிறோம். மாதம்தோறும், 6-ம் தேதி இந்தப் பயிற்சி நடக்கும். அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாக இருந்தால், அதற்கு அடுத்த வேலை நாளில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இதற்கான கட்டணம் 150 ரூபாய்.
எழுதப் படிக்க தெரிந்தவர்களுக்கு, தொலைதூரக் கல்வி மூலம் 'தேனீ வளர்ப்பு’ பற்றி 6 மாத காலச் சான்றிதழ் வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இதற்கு கட்டணம் 1,500 ரூபாய். விவசாயிகள் திருப்தி அடையும் அளவுக்கு, தேனீ வளர்ப்பு முறைகள், பராமரிப்பு முறைகள், தேன் எடுக்கும் முறை... என்று அனைத்தையும் கற்றுக்கொடுக் கிறோம்'' என்றார்.

Related

விவசாயக்குறிப்புக்கள் 5066269090210481344

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item